பக்கங்கள்

23 ஏப்ரல் 2011

அரியாலையில் மரணித்த சிங்கள சிப்பாயின் மரணத்தில் சந்தேகம்!

அரியாலை, மாம்பழம் சந்திக்கு அருகில் உள்ள காவலரண் ஒன்றில் நேற்றுமுன்தினம் இரவு பணியில் இருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்காயத்துக்குள்ளான சிப்பாய் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அவரது மரணம் தற்கொலையாக இருக்கவேண்டும் எனப் படைத்தரப்பினரால் தெரிவிக்கப்பட்ட போதும் அவருக்கு ஏற்பட்ட காயத்தின் அடிப்படையில் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்புகள் தெரிவித்தன.
மகியங்கணையைச் சேர்ந்த 25 வயதான சமரக்கோன் ரவீந்திரகுமார என்ற சிப்பாயின் மரணத்திலேயே சந்தேகம் எழுந்துள்ளது.யாழ்.பதில் நீதிவான் மு.திருநாவுக்கரசு சம்பவ இடத்திலும் யாழ். போதனா வைத்தியசாலையிலும் விசாரணைகளை நடத்தினார்.
பிரஸ்தாப சிப்பாய் காவலரண் ஒன்றில் பணியாற்றினார். அந்தக் காவலரணில் இருவர் மட்டுமே தங்க வசதியுண்டு. நேற்றுமுன்தினம் இரவு நீண்ட நேரம் தனது காதலியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை இரு வரும் பரிமாறிக்கொண்டனர். பின்னர் காவலரணுக்கு முன்பாக உள்ள வாழை இலையில் காதலிக்கு கடிதம் எழுதியுள்ளார். இவரின் மரணம் தற்கொலையாகவே இருக்க வேண்டும் என படைத்தரப்பினர் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
ரி56 ரகத் துப்பாக்கி மூலமே தற்கொலை செய்துள்ளார் எனவும் படையினர் கூறியுள்ளனர்.அங்குள்ள சூழலைக் கருத்தில் எடுத்து ஆராய்ந்து பார்த்தால் ரி56 ரகத் துப்பாக்கி மூலம் அவர் தன்னைத் தானே சுடக் கூடிய நிலை காணவில்லை. அவரது முதுகுப் பக்கத்தின் ஊடாகச் சென்ற சன்னம் வயிற்றுப் பகுதி ஊடாக வெளி வந்துள்ளது என வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். விசாரணை செய்த நீதிவான் குடும்பத்தவர் வந்தபின் பிரேத பரிசோதனை செய்யும்படியும் காவலரணில் உள்ள ரி56 ரகத்துப் பாக்கியிலுள்ள கைவிரல் அடையாளங்களைச் சோதனை செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.அதுவரை தீர்ப்பை பதில் நீதிவான் ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.