பக்கங்கள்

31 அக்டோபர் 2010

அமெரிக்கத் தமிழர்கள் ஒபாமாவுக்கு தொடர்ந்து ஆதரவு!

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என அந்நாட்டில் வாழும் தமிழர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் இரண்டாண்டு காலப் பகுதியில் பராக் ஒபாமா இலங்கை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இலங்கைத் தமிழருக்கு ஆதரவளிக்கக் கூடும் என எதிர்பார்க்க முடியாதென அமெரிக்கத் தமிழர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க அரசாங்கம் இலங்கையின் மீது கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்கத் தமிழர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தற்போது சூடானில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைப் போன்றே இலங்கையிலும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் பராக் ஒபாமாவின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து திருப்தி அடைய முடியாதெனத் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலையில் சீனர்களிடையே மோதல்!

கல்பிட்டி, நுரைச்சோலையில் அமைக்கப்படுகின்ற அனல் மின்னிலையத்தில் சீனத் தொழிலாளர்கள் வேலை செய்வது தெரிந்ததே. இந்தத் தொழிலாளர்களிடையே மோதல் வெடித்ததை அடுத்து ஒரு சீனருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மின்னிலையத்தின் பணிகள் ஐந்து சீன ஒப்பந்ததாரர்களால் முன்னெடுக்கப்படுகிறது. எனவே வெவ்வேறு ஒப்பந்ததாரர்களுக்கு இடையிலான தொழிலாளர்களிடையே இம்மோதல் வெடித்தது.
கடந்த 11 மாதங்களாக தனது தொழிலாளர்களுக்கு ஒரு சீன ஒப்பந்ததாரர் சம்பளம் வழங்கவில்லை. எனவே இந்தத் தொழிலாளர்கள் நேற்று சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆனால் பிற சீனத் தொழிலாளர்கள் இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து கோஷ்டி மோதல் ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள சீனத் தொழிலாளர் புத்தளம் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

30 அக்டோபர் 2010

கண் பார்வை இழந்தவர்களுக்கு அசின் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்!

இலங்கையில் அசின் நடத்திய இலவச கண்சிகிச்சை முகாமில் பங்கேற்று பார்வையிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டுமென அசினுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நஷ்ட ஈடு தராவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை அசின் சமீபத்தில் ரெடி இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றார். அப்போது படப்பிடிப்போடு நில்லாமல், இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அவரது மனைவி ஷிராந்தி ஆகியோரின் விருந்தினராக அலரி மாளிகையில் தங்கினார். மேலும் இலங்கை அரசின் நல்லெண்ணத் தூதராக, வட மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகள், தமிழர் அடைத்து வைக்கப்பட்டுள்ள முள்வேலி முகாம்களையும் பார்வையிட்டார்., 'தமிழர்களை இலங்கை அரசு சிறப்பாக பார்த்துக் கொள்வதாகவும், அங்குள்ள தமிழர்கள் விஜய், சூர்யா போன்ற தமிழ் ஹீரோக்களைப் பார்க்க ஆவலுடன் இருப்ப'தாகவும் தெரிவித்தார்.
மேலும் வவுனினியா உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஏற்பாடு செய்திருந்த இலவச கண் சிகிச்சை முகாம்களுக்கான மொத்த செலவையும் தாமே ஏற்பதாகவும் அறிவித்தார். 10 ஆயிரம் தமிழர்களுக்கு கண்சிகிச்சை தருவதாகவும், அதற்காகும் செலவை முழுவதுமாக ஏற்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இது தமிழர் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது.
நடிகர்- நடிகைகள் இலங்கை செல்லக்கூடாது என்று நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட திரைப்பட துறையின் கூட்டு நடவடிக்கை குழுவை மீறி அசின் இலங்கை சென்றது தவறு என்றும், பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே அரசின் போர்க்குற்றத்தை மறைக்கும் செயல்களில் ஒன்று அசினின் இலங்கை விசிட் என்றும் விமர்சிக்கப்பட்டது.
நடிகர் சங்கத்திடம் அசின் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சங்கத்தின் தலைவர் சரத்குமார் பகிரங்கமாக அசினை ஆதரிப்பதால், இதுவரை அசின் மன்னிப்பு கேட்கவில்லை.
பார்வை இழப்பு:
இந்த நிலையில் இலங்கையில், அசின் செலவில் நடந்த முகாமில் சிகிச்சை பெற்ற 10 பேர் முற்றாக பார்வை இழந்துள்ளனர். அவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அசின் மீது வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குருமூர்த்தி சார்பில் வக்கீல் பாலமுருகன் கொச்சியில் உள்ள அசின் வீட்டு முகவரிக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளார்.
அதில், "இலங்கையில் தமிழர்களுக்காக கண் சிகிச்சை முகாம் நடத்தினீர்கள். இலங்கை அரசிடம் தனிப்பட்ட ஆதாயத்துக்காகவும், விளம்பரத்துக்காகவுமே இதனைச் செயதுள்ளீர்கள். அந்த முகாமில் கண் அறுவை செய்து கொண்ட 10 பேர் பார்வை இழந்தனர். மேலும் 12 பேருக்கு வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கு நீங்களும் (அசினும்) சிகிச்சை அளித்த மருத்துவ குழுவும் பொறுப்பு ஏற்கவேண்டும். தவறுக்காக அசின் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். அதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். நோட்டீஸ் கிடைத்த ஒரு வாரத்துக்குள் இதை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் சட்டப்படி வழக்கு தொடரப்படும்.
உங்களுடைய கவனக்குறைவாலும், பொறுப்பற்ற தலைமையாலுமே பார்வை இழப்பு சம்பவம் நடந்துள்ளது..." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணாநிதி ஏன் பயப்படுகிறார்?-ஜெயலலிதா.

காவிரிப் பிரச்னை தொடர்பாக இரு மாநில உறவு பாதிக்கும் வகையில் கர்நாடக அமைச்சர் பேட்டியளிக்கும்போது, தமிழக முதல்வர் கருணாநிதி மட்டும் பயப்படுவது ஏன் என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை:
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "பத்திரிகைகளிலே வரும் செய்திகளை வைத்துக் கொண்டு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. பத்திரிகைகளிலே வரும் செய்திகளினால் – நான் சொல்கிற பதில்களினால் – இரண்டு மாநிலங்களுக்கும் இடையிலே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு நான் இடம் தர விரும்பவில்லை" என்று முதல்வர் கருணாநிதி பதில் அளித்திருக்கிறார்.
கர்நாடக மாநில அமைச்சர், இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவு பாதிக்கும் அளவில் துணிந்து பேட்டி அளிக்கும் போது, கருணாநிதி மட்டும் ஏன் பயப்படுகிறார்?
காவிரிப் பிரச்சினை என்பது தமிழகத்தின் உயிர்நாடி. இது குறித்த நிகழ்வுகளை எல்லாம் முன்கூட்டியே தெரிந்து, அதற்கேற்றாற்போல் நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்வர், "நீங்கள் சொல்கிற செய்திகளையெல்லாம் நான் பத்திரிகைகளிலே பார்க்கவில்லை; பார்த்த பிறகு சொல்கிறேன்" என்று கூறியிருப்பது சரியல்ல.
காவிரியில் உரிய அளவு நீர் திறந்துவிடப்படாத காரணத்தால் தமிழகத்தில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பா சாகுபடியும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே இல்லாமல் போய்விடும்.
எனவே, தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக எடுக்க வேண்டும்..."
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தனித்தமிழ் மாவட்டம் இருக்கக் கூடாதென்பதில் அரசு குறி!

இலங்கை அரசாங்கம் எந்தவொரு மாவட்டமும் தனித் தமிழ் மாவட்டமாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. இதற்கேற்ப திட்டமிடப்பட்ட வகையில் இராணுவக் குடியிருப்புக்களை நிறுவி வருகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைச் செயலரும் பேச்சாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோப்பாய் தொகுதிக்கான செயற்குழு அங்குரார்ப்பண நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே அந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலரும் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்தக் கருத்தினை தெரிவித்தார்.
யாழ்ப்பாண புகையிரதநிலையத்தில் நூற்றைம்பது சிங்கள மக்கள் கொண்டுவந்து விடப்பட்டுள்ளனர். இவர்கள் வரமுன்னரே புகையிரத நிலையத்தில் அவர்களுக்கான மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுவிட்டன.
அரசாங்கம் உலகத்தில் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, தான் நினைத்ததை செய்து முடிக்கவேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் தமிழ் மண்ணையும் மக்களையும் காக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமே சுமத்தப்பட்டுள்ளது என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

29 அக்டோபர் 2010

தமிழர் மீது இனத்துவேசம்,பிரிட்டன் பிரஜை கைது!

இலங்கைத் தமிழர் ஒருவர் மீது இனத் துவேசத்தை கக்கிய பிரித்தானிய பிரஜை ஒருவர் வடமேற்கு லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். Sefton Council ஊழியரான Christina Crispin (வயது 47) என்பவரே Merseyside நகரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் ஆவார்.
பொலிஸ் விசாரணை முடிவடையும் வரை இவர் கவுன்சிலால் வேலையில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் 11 ஆம் திகதி South Sefton நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜராக்க உள்ளனர்.
Supersaver என்கிற கடையின் Bootle நகரத்தில் உள்ள கிளை ஒன்றுக்கு இவர் கடந்த 16 ஆம் திகதி சென்றிருக்கின்றார். ஒரு கான் Lager ரக பியரை வாங்கி இருக்கின்றார். ஆனால் அதை தவறுதலாக கடையின் தரையில் போட்டு விட்டார்.
அக்கடையில் சிப்பந்தியாக கடமையாற்றும் இலங்கைத் தமிழர் ஒருவர் எதிர்காலத்தில் கூடை ஒன்றை பயன்படுத்தும்படி அப்போது ஆலோசனை கூறி இருக்கின்றார். அப்போதே இப்பெண் இனத் துவேசத்தை கக்கி இருக்கின்றார். இவரின் அட்டகாசங்கள் கடையில் பொருத்தப்பட்டிருந்த கமராவில் பதிவாகி உள்ளன.
பொலிஸாருக்கு கடை முகாமையாளர் உடனடியாக தொலைபேசி மூலம் அறிவித்தார். இதையடுத்தே இப்பெண்ணுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமையை பாதுகாக்கவே நீதிமன்றத்தை நாடினோம்.

விகிதாசார பிரதிநிதித்துவ அரசியல் முறையில் கைவைக்கும் உத்தேச உள்ளூராட்சி திருத்த சட்ட மூலமானது இரு பெரும் கட்சிகள் மாத்திரம் தங்களுக்கிடையில் ஆசனங்களைப் பகிர்ந்து கொள்ளவே வழிவகுப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது அதனைத் தடுத்து நிறுத்தி சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கிலேயே நீதிமன்றத்தை நாட வேண்டி ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
உத்தேச உள்ளுராட்சி திருத்த சட்ட மூலத்தை எதிர்த்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கருத்து வெளியிடுகையிலேயே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
குறித்த சட்ட மூலமானது சிறுபான்மை மக்களையும் சிறிய கட்சிகளையும் பாதிக்கும் வகையிலேயே வரையப்பட்டுள்ளமையும் இதன் மூலம் இரு பெரும் கட்சிகள் மாத்திரமே நன்மையடையப் போவதும் மிகத் தெளிவான விடயங்களாகும். ஆனாலும் துரதிஷ்டவசமாக சிறுபான்மை மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்டவர்களே இதனை நிறைவேற்றுவதற்குத் துணை போவதானது கவலைக்குரிய விடயமாகும்.
குறிப்பாக ஸ்ரீP லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரப் தனது அரசியல் சாணக்கியத்தாலும் முஸ்லிம் சமூகத்தின் வாக்குப் பலத்தினாலும் பெற்றுக் கொடுத்த 5 வீத வெட்டுப்புள்ளி குறைப்பின் நன்மைகளை எதிர்காலத்தில் அனுபவிக்க முடியாத துரதிஷ்ட நிலைக்கு இட்டுச் செல்லும் இச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு அக் கட்சியே இன்று துணை போயிருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
நாட்டிலுள்ள சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர்தான் இதனை பாராளுமன்றத்தில் சட்டமாக்க முடியும் என ஏற்கனவே அளிக்கப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறிப்பிடுகிறது. அத்துடன் இந்த சட்ட மூலமானது சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளினதும் சுயாதீனக் குழுக்களினதும் தேர்தல்களில் போட்டியிடும் அடிப்படை உரிமையை பாதிப்பதுடன் மக்களின் வாக்குரிமையையும் கேள்விக்குட்படுத்துகிறது.
வட்டார எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வது தொடர்பாக குறிப்பிடும் இச் சட்ட மூலத்தில் அதனை தீர்மானிக்கும் அதிகாரம் தனியான ஒரு அமைச்சருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளமை சந்தேகங்களை தோற்றுவிக்கிறது. அந்தந்த பிரதேசங்களில் வாழுகின்ற மக்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பொறுப்பையும் அதிகாரத்தையும் தனி மனிதர் ஒருவரின் கையில் ஒப்படைப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். அரசியலமைப்பின் பிரகாரம் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் எல்லை நிர்ணய ஆணைக்குழு இருக்கத்தக்கதாக அதனையும் மீறி அமைச்சர் ஒருவருக்கு அதிகாரம் வழங்கப்படுவதன் மர்மம் என்ன என்று கேட்க விரும்புகிறோம். இது விடயத்தில் அவ்வப்பிரதேச மக்களினதும் இனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்களின் சம்மதத்துடனேயே எல்லை மீள்நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இச் சட்ட மூலம் நடைமுறைக்கு வருமானால் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஆபத்துக்கள் குறைவு எனும் வாதம் முன்வைக்கப்பட்டாலும் கூட வடக்குக் கிழக்குக்கு வெளியே சிதறி வாழும் சிறுபான்மை மக்களின் ஒட்டுமொத்த அரசியல் பிரதிநிதித்துவமும் இதன் மூலம் இல்லாதொழிக்கப்படுகிறது என்பதையும் இங்கு கவனத்திற் கொள்வது அவசியமாகும்.
இச் சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வரப்படுமானால் இது தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக நலன்களை முன்னிறுத்தி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்க விரும்புகிறோம். இதுவிடயமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் நாம் தீர்மானித்துள்ளோம்.
எமது இயக்கம் காத்தான்குடியை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தாலும் கூட முழு நாட்டிலும் சிதறி வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் அரசியல் நலன்களைப் பாதிக்கும் இவ் விடயத்தின் பாரதூரத்தை உணர்த்துவதற்காகவும் அது தொடர்பில் நீதிமன்றத்திடமிருந்து நியாயமான தீர்ப்பு ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே வழக்குத் தொடர்ந்துள்ளோம் என்றார்.

28 அக்டோபர் 2010

மாணவிகள் மீது பலாத்காரத்திற்கு முற்பட்ட பொலிசார்.

ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ள பொலிசார் நேற்று இரவு அப் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் மூவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற சம்பவம் காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் கொதித்தெழுந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று நண்பகல் தொடக்கம் ரஜரட்டைப் பல்கலைக்கழகம் முற்று முழுதாகப் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நானூறுக்கும் அதிகமான பொலிசார் கலகமடுக்கும் உபகரணங்கள் சகிதமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து இடங்களிலும் பரவிக் காணப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில் நேற்றிரவு விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த மூன்று மாணவிகளை அங்கு காவலுக்கு இருந்த பொலிசார் கையைப் பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளனர்.
எனினும் மாணவிகள் மூவரும்; ஒன்றாகச் சேர்ந்து போராடி தம்மைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்கள். ஆயினும் சம்பவத்துக்கு முகம் கொடுத்த மாணவிகளில் ஒருவர் பெருமளவில் மனப்பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதுடன், பல்கலைக்கழக படிப்பையே வேண்டாம் என்று உதறித்தள்ளி விட்டு இன்று காலையே வீடு திரும்பி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடயமறிந்த மாணவர்கள் கொதித்தெழுந்து பொலிசாருக்கெதிரான பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக மேலும் அறியப்படுகின்றது.

தமிழ் நாட்டு வியாபாரிகள் யாழில் கடத்தல்!

இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்து இயங்குவதாகக் கூறப்படும் ஆயுததாரிகள் தமிழ் நாட்டிலிருந்து வந்த வியாபாரிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து வந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக யாழிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த 20 வியாபாரிகள் இவ்வாறு வெள்ளை வான் கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை காலை நடந்துள்ளது. நேற்று மாலை வரை இவ்வியாபாரிகள் எந்தவொரு நீதிமன்றிலும் அல்லது போலீஸ் நிலையத்திலும் ஆஜர் செய்யப்படவில்லை. அவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் கிடைக்கவில்லை.
இலங்கை குடிவரவுத் துறையினரின் அனுமதி பெற்றே இந்த வியாபாரிகள் தமது புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். கஸ்தூரியார் வீதிச் சந்தி மற்றும் கன்னாதிட்டி வீதிச் சந்தி ஆகியவற்றில் உள்ள லொட்ஜ்களில் தங்கியிருந்த இவர்கள், தாம் கொண்டுவந்திருந்த புடைவைகளை சைக்கிள்களில் கட்டி கிராமம் கிராமமாகச் சென்று விற்று வந்துள்ளனர்.
கடந்த காலத்தில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு ஏ9 சாலை திறக்கப்பட்டிருந்த போதும்கூட, தமிழ்நாட்டு வியாபாரிகள் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

27 அக்டோபர் 2010

சர்வாதிகாரத்துக்கு எதிராக டிசம்பர் 10ஆம் திகதி போராட்டம்!

சர்வாதிகாரிகளின் சூதாட்ட பூமியாக இலங்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் என்றுமே இல்லாத அளவிற்கு படுமோசமான அட க்குமுறைகள் மேலோங்கிய ஜனநாயக விரோத ஆட்சி தற்போதைய நடை முறையிலுள்ளது. எனவே எதிர்காலச் சந்ததியினருக்காக நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது என்று சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் பேரணி தெரிவித்துள்ளது.
காலத்தை வீணடிக்காது சர்வாதிகாரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க அனைவரும் பேதமின்றி செயற்பட முன்வர வேண்டும்.அடுத்த மாதம் தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று ஒரு இலட்சம் பேரை தலைநகருக்கு அழைத்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும். அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து போராட்டங்களை கைவிடப் போவதில்லை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க கட்டிடத் தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கூறுகையில்,
17ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கம் உத்தேச திருத்தத்தில் 18ஆவது திருத்தங்களின் ஊடாக சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்து விட்டது. எனவே நாட்டை சர்வாதிகாரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது. முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா நாட்டில் என்றுமே இல்லாத அளவிற்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். எனவே நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையை கருத்தில் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டியுள்ளது. சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக ஜனநாயக ரீதியில் சுவரொட்டிகள் கூட ஒட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் சுவரொட்டிகளை ஒட்டினால் சூழல் மாசடைவதாகவும் அரசாங்கத்தின் சுவரொட்டிகளுக்கு சூழல் பாதுகாக்கப்படுவதாகவும் கூறப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக அரசாங்கத்திடம் மண்டியிடப் போவதில்லை. கூடுதலான சிறைக் கூடங்களையும் புலனாய்வு பிரிவுகளையும் அமைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எதனை நோக்கி பயணிக்கின்றது என்பது தெளிவாகியுள்ளது என்றார்.
மங்களசமரவீர எம்.பி
இங்கு உரையாற்றிய மங்கள சமரவீர எம்.பி. கூறுகையில்,
ஜனநாயகத்தின் மரண வீடு கடந்த செப்டம்பர் மாதம் எட்டாம் திகதியே இடம்பெற்றது. 18ஆவது திருத்தத்தின் ஊடாக அரசாங்கம் ஜனநாயகத்தை கொலை செய்துவிட்டது. பொது மக்களை ஏமாற்றி தலைகளின் எண்ணிக்கையினை பாராளுமன்றத்தில் அதிகரித்துக் கொண்டு மிகவும் கீழ்த்தரமான முறையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொண்டு குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கான பின்னணியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசாங்க பயணத்தை உடன் நிறுத்த வேண்டும்.
இதற்கு பாரிய எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி போராட வேண்டும். மிக விரைவில் நாடு தழுவிய ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனக் கூறினார்.

தமிழ்நாட்டிலுள்ள ஈழ அகதி தற்கொலை முயற்சி!

தமிழ்நாடு, பூந்தமல்லியிலுள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த ஈழ அகதி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். ரமணன் என்பவரே 24 தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு இவ்வாறு தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் பி.பி.சி இடம் தெரிவித்தார். தற்போது ரமணன் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈழ அகதிகளில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பானவர்கள் மற்றும் குறிப்பிட்ட சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களை கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ள பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு ஆகிய முகாம்களில் தடுத்து வைத்துள்ளனர். இவ்வாறாக சுமார் 30 பேர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களைக் கடத்திச் செல்ல முற்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டே ரமணனும் பூந்தமல்லியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தனது பெற்றோருடன் மீளச்சேர தன்னை விடுவிக்க வேண்டும் என்று ரமணன் முன்னர் மேன்முறையீடு செய்திருந்தார். ஆனால் அந்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் என்றும் அவரது வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.
பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 30 பேரையும் உடனடியாக விடுவிக்கவேண்டிய தேவையையே இந்த தற்கொலை முயற்சி காண்பிப்பதாக ரமணனின் வக்கீல் சுட்டிக்காட்டியுள்ளார்.

26 அக்டோபர் 2010

தேசியத் தலைவர் பூமிப்பந்தில் வாழ்கிறார்.-வைக்கோ.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் பூமிப் பந்தில் எங்கோ ஓர் இடத்தில் உயிருடன் இருக்கின்றார் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்து உள்ளார்.புலிகள் தலைவர் இறந்து விட்டார் என்று இந்திய அரசு சில வாரங்களுக்கு முன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனால் புரட்சிக் கவிஞர் காசி.ஆனந்தனின் தமிழ் எங்கள் உயிரினும் மேலாகும் என்கிற பாடல் ஒலிப் பேழை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே வைகோ இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

தாயார் பார்வதி அம்மாளின் உடல்நிலை மோசமடைந்து வருகுறது!

தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாளின் உடல்நிலைமை மோசமடைந்து வருவதாகவும், அவர் தனது பிள்ளைகளை பார்க்க விரும்புவதாகவும், வைத்தியசாலை தாதிமார்களை அழைத்து தினமும் கண்ணீர் வடிப்பதாகவும், இன்றைய தினம் அவரை நேரில் சென்று பார்வையிட்ட தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது உடல் நிலை ஆபத்தானதொரு நிலையிலோ, சுகதேக நிலையிலோ இல்லாமல் இரண்டுக்கும் நடுவே மாறிமாறி இருப்பதாகவும் திண்ம உணவுகளை விடுத்து திரவ உணவுகளையே அதிகம் உட்க்கொள்கின்றார் என வைத்தியர்கள் தெரிவிப்பதாகவும், அம்மையார் பிள்ளைகள் பார்க்க விரும்புவதாகவும் ஆனாலும் அவர்கள் வந்தால் அவர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்று எண்ணியும் இருநிலை மனப் போராட்டத்திற்கு அவர் உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

25 அக்டோபர் 2010

தமிழினப் படுகொலையை விசாரித்து தீர்வை பெற்றுத்தர வேண்டும்!

இலங்கையில் கடந்த 60 வருடங்களாக இடம்பெற்ற தமிழினப் படுகொலை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வை சர்வதேசம் பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித் துள்ளது.யாழ்ப்பாணம் காங்கிரஸ் இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அம் முன்னணி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ் தேசிய மக் கள் முன்னணியின் தலைவர் எஸ்.வரதராஜன்,முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் மற்றும் திருலோகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் கடந்த 60 வருடங்களாக இலங்கை அரசு தமிழ் இனத்துக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொண்டு வரும் இனப்படு கொலை தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றை சர்வதேசம் நடத்த வேண்டும்.
தண்டனையால் தீர்வு கிடைக்காது
தற்போது இலங்கை அரசுக்கு எதிராக பல சர்வதேச நாடுகள் செயற்படுகின்றன. இந் நாடுகள் இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் அக்கறையாகவுள்ளன.அவ்வாறு போர்க்குற்றம் தொடர்பில் விசா ரணை நடத்தப்பட்டால் அதற்கு பின்னணி யாக இருந்த இலங்கை அரசுக்கு சர்வதேச நீதிமன்றால் தண்டனை வழங்கப்படும். இதனால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுக் கிடைக்கப் போவதில்லை.
ஆனால் இலங்கையில் நடைபெற்றது திட்டமிடப்பட்ட இனப் படுகொலை என சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் ஒருமித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் மூலமே சர்வதேசம் தமிழினத்தை பாதுகாப்பதற்கு நிரந்தர அரசியல் தீர் வொன்றை இலங்கை அரசிடம் பெற்றுக் கொடுப்பார்கள். எனவே 60 வருடங்களாக நடைபெற்று வரும் தமிழ் மக்களை திட்டமிட்டு அழிக்கும் இனப் படுகொலை தொடர்பில் விரிவான ஆவணம் ஒன்றை நாம் தயாரிக்க வேண்டும்.
இப் பணியினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சமூகத்திடம் எமது இனத்தை திட்ட மிட்டு அளிக்கும் இலங்கை அரசின் இனப் படுகொலையை நிரூபிக்க முடியும்.
இவ்வாறு நடைபெற்ற இனப் படுகொலை யின் ஒரு பகுதியே போர்க் குற்றம் என் பதை சர்வதேசத்திற்கு சுட்டிக்காட்ட வேண்டும். தற்போது இலங்கை அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்களுக்கு எதிராக ஐ.நாவும் சர்வதேச நாடுகளும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை திசைத்திருப்பவோ ஜனாதி பதி மகிந்த ராஜபக்­வினால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இனப் படுகொலையை தமிழ்த் தேசத்தின் மீது மேற்கொண்டது இலங்கை அரசே ஆகும் அத்தகைய இனப்படுகொலையை மேற் கொண்ட இலங்கை அரசு, தான் மேற் கொண்ட இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளை தானே நடத்த முற்படுவது கேலிக்குரியதாகும்.
அவ்வாறு நடத்தினால் கூட அந்த விசாரணைகள் நீதி நியாயம் வழங்கும் வகையில் பக்க சார்பற்றதாக இருக்க முடியாதென்பதே உண்மையாகும். இதனை நிரூபிப்பதற்கு கடந்த அறுபது வருடங்களாக அளவுக்கதிகமான சான்றுகள் உள்ளன.கடந்த காலங்களில் இனப்பிரச்சினை யோடு தொடர்புபட்ட விதத்தில் பல்வேறு கார ணங்களுக்காக இலங்கை அரசாங்கத்தி னால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகள் காலத்தை இழுத் தடித்து, எந்த வித பலனையும் தராத ஏமாற்றும் முயற்சிகளாகவே நடந்து முடிந்தன.
மேலும் சிங்கள அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவாறு மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பாக சாட்சியங்களை அளிக்கக் கூடிய பாதுகாப்பான சூழல் இல்லை. இன்னமும் கடத்தல், கொலைகள், கொலை மிரட்டல்கள் என்பன தொடர்ச்சியாக இடம் பெற்று வருவது இந்த அச்ச சூழலை வெளிப்படுத்துகின்றது. அத்துடன் ஆணைக்குழுவுக்கு இனப்படு கொலை சம்பந்தமாகவோ அல்லது குறைந்த பட்சம் போர் குற்றங்கள் இடம் பெற்றமை தொடர்பாகவோ விசாரணை மேற் கொள்வதற்கான ஆணை எதுவும் வழங்கப் பட்டிருக்கவில்லை.
நிலைமை இவ்வாறு இருக்க கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத் திற்கான ஆணைக்குழுவை நியமிப்பதன் மூலம் இனப் படுகொலை அல்லது குறைந்த பட்சம் போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக் குழுக்கள் ஏற்படுத்தப்படு வத னை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையி லேயே அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலை பற்றிய விசாரணைகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் நடைபெறுமாயின் அந்த விசா ரணைகள் நேர்மையாகவோ தமிழ் மக்க ளுக்கு பலன் தருவதாகவோ அமைய மாட் டாது என்பதோடு தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையை மூடி மறைப்பதற்கே வழி வகுக்கும்.
சாட்சியம் அளிப்பதில்லை
எனவே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிப்பதில்லை என தீர்மானித்துள்ளது. அத்துடன் இந்த ஆணைக்குழுவுக்கு ஏனைய தமிழ் அரசி யல் கட்சிகள் சாட்சியமளிக்குமாயின் அது இனப்படு கொலையை மூடி மறைக்கும் செயற்பாட்டிற்கு துணை போவதாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்ட விரும்புகின் றோம். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற, இடம் பெற்று வரும் இனப்படுகொலையை விசாரிப் பதற்காக சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கு வலியுறுத்துவதுடன் அவ்வாறான விசாரணை ஒன்று இடம்பெற்றால் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றும் உறுதி அளிக்கிறது.

மகிந்தவின் அம்புலிமாமா கதை-மனோகணேசன்.

அரசியல் தீர்வை தராமல் தவிர்ப்பதற்கு ஜனாதிபதி சொல்லும் அம்புலி மாமா கதைத்தான் தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மை என்பதாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
போருக்கு முன்னரும், போரின் போதும் பயங்கரவாதத்தை காரணங்காட்டி அரசியல் தீர்வு ஒத்திவைக்கப்பட்டது. இன்று போர் முடிந்த பின்னர் தமிழ் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது என்ற காரணத்தை கண்டுபிடித்து காட்டி அரசியல் தீர்வு மறுக்கப்படுகின்றது.
இது அம்புலி மாமா புத்தகத்தில் வரும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் விக்ரமாதித்தன் கதையை நினைவுப்படுத்துகின்றது. போர் காலகட்டத்தில் இலங்கை அரசிற்கு உறுதுணையாக தமிழக அரசும், இந்திய அரசும் இருந்தது அனைவரும் அறிந்த பகிரங்க உண்மையாகும்.
இந்த துணையிருப்பிற்கு நிபந்தனையாக அரசியல் தீர்வை போர் முடிந்தவுடன் நடைமுறை படுத்துவோம் என இலங்கை அரசு உறுதியளித்திருந்ததும் பகிரங்க உண்மையாகும் என்றும் மனோகணேசன் கூறினார்.

24 அக்டோபர் 2010

கஞ்சா கலந்த லேகியப் பைக்கற்றுகளுடன் வர்த்தகர் மூவர் கைது!

கல்முனையில் கஞ்சா கலந்த 5500 மதன கோகன அபின் லேகிய பக்கற்றுகளை விற்பனை செய்த 3 வர்த்தகர்களை நேற்று மாலை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.கல்முனை பொதுச் சந்தைக்குள் இரு வர்த்தக நிலையங்களைச் சுற்றிவளைத்த போதே இவ் வர்த்தக நிலையங்களிலிருந்து இப் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார்.
220 பெட்டிகளில் குறித்த மதன லேகியங்கள் அடைத்து வைகப்பட்டிருந்ததாகவும் இதன் பெறுமதி சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் எனவும் அவர் தெரிவித்தார்.கைது செய்யப்பட்டவர்கள் கல்முனை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் களுவாஞ்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சர்வதேச அழைப்புகளின் எண்ணிக்கை கூடியுள்ளதாம்!

இலங்கையிலிருந்து மேற்கொள்ளும் சர்வதேச அழைப்புகளுக்கான அரசாங்க வரிகள் குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சர்வதேச அழைப்புகளை மேற்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுக்காற்று நிலையப் பணிப்பாளர் அனுஷா பல்பிட்ட தெரிவித்தார். கிட்டத்தட்ட 30 வீதத்தால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனை அடுத்து இணைய அழைப்பு மற்றும் தொலைபேசி வலையமைப்புகளுக்கு ஊடாக எடுக்கப்படும் அழைப்புகளுக்கு இடையிலான கட்டண வித்தியாசங்களும் குறைக்கப்பட்டுள்ளன என்றார்.
இதேவேளை சட்டவிரோதமான இணைய அழைப்புகளைப் பயன்படுத்துபவர்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் தாம் எடுப்பதாகத் தெரிவித்த அவர், இணையச் சேவையை வழங்குபவர்கள் தமது விவரங்களைத் தம்மிடம் பதிவு செய்து கொள்ளவேண்டும் எனவும் கூறினார்.

23 அக்டோபர் 2010

மண்டைதீவில் வெடி பொருட்களுடன் இளைஞர்கள் கைதாம்!

மிகவும் சக்தி வாய்ந்த வெடிபொருளுடன் யாழ்.மண்டைதீவு பிரதேசத்தில் இரு தமிழ் இளைஞர்கள் இன்று காலையில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இவ்விளைஞர்கள் தங்கி இருந்த வீட்டை இரகசிய தகவல்கள் ஒன்றின் அடிப்படையில் முற்றுகையிட்டு பொலிஸார் கைதை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞர்களின் உடைமையில் இருந்து ஒரு கிலோ எடையுடைய வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாவும் இருவரும் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் தடுப்புக் காவலில் தற்பொழுது வைக்கப்பட்டிருப்பதாவும் அறியப்படுகிறது.

திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள்!

சோழ காலத்திய தமிழ் அகர வரிசைகளைத் தெளிவாகக் காண்பிக்கும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கல் திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் கட்டப்படும் கிரிக்கெட் விளையாட்டரங்குக்காக நிலத்தைத் தோண்டியபோதே இக்கற்பாளம் எடுக்கப்பட்டுள்ளது. சிவன் கோயிலுக்குச் செல்லும் கோணேஸ்வரம் சாலையின் வலது பக்கத்தில் உள்ள பாதையின் ஒரு பகுதியாகவுள்ள நிலத்தில், அதேநேரம் கோணேஸ்வரர் தீர்த்தமாடச் செல்லும் பகுதிக்கு அருகில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பட்ட காலத்தில் மேற்படி இடத்தில் சங்கமித்த பௌத்த ஓய்வுநிலையம் ஒன்றும் பௌத்த விகாரை ஒன்றும் கட்டப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மேற்படி கற்பாளத்தை திருகோணமலை போலீசார் எடுத்துச் சென்று, தற்போது கொழும்பிலுள்ள தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்திடம் அனுப்பியுள்ளனர். ஆனால் இந்தக் கற்பாளத்தின் பாதுகாப்புக் குறித்துக் கவலை எழும்பியுள்ளது. ஏனெனில் கொழும்பு தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தில் தமிழ் அதிகாரிகள் எவருமே இல்லை என்பதை தமிழ் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மூதூரில் வெடிச் சம்பவம்: ஒரு குழந்தை பலி!

இன்று காலையில் மூதூரிலுள்ள வட்டம பகுதியில் தவறுதலான வெடிச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மூதூர் கடனீரேரிக்கு அருகில் நடந்த இச்சம்பவத்தில் மூன்றுக்கும் ஒன்பதுக்கும் இடைப்பட்ட வயதான ஐந்து சிறுவர்கள் காயமடைந்தனர். மூதூர் கடற்கரையில் பிளாஸ்டிக் பை ஒன்றினுள் இருந்த இரும்பாலான ஒரு பொருளை எடுத்து இச்சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோதே அது வெடித்துள்ளது. மோட்டார் குண்டு ஒன்றின் பாகமாக அப்பொருள் இருக்கச் சந்தர்ப்பம் உள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.
காயப்பட்ட ஐந்து சிறுவர்களும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். ஆனால் அங்கும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் எட்டு வயதான சிறுவன் ஒருவன் பலியாகி விட்டார்.

22 அக்டோபர் 2010

புலிகளிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தை தமிழர்களிடம் ஒப்படைக்கவும்!

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் வசமிருந்த 110 கிலோகிராம் தங்கத்தைத் தாம் கைப்பற்றியுள்ளதாக அரசு அறிவித்துள்ளதோடு, அத்தங்கத்தை இலங்கை மத்திய வங்கியிடம் கையளிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தத் தங்கத்தின் சொந்தக்காரர்கள் தமிழ்ப் பொதுமக்களே எனக் கூறியுள்ள பொதுமக்கள் உரிமை அமைப்பொன்று, அத்தங்கத்தை அதன் சொந்தக்காரர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
மேற்படி தங்கத்தின் பெறுமதி 490 மில்லியன் ரூபா என்று அரசின் பிரதம கொரடா தினேஷ் குணவர்த்தன கடந்த புதன்கிழமை அன்று பாராளுமன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த தங்கத்தின் சொந்தக்காரர்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பது அரசாங்கத்தின் கடமை என்று மனோ கணேசன் பி.பி.சி இடம் தெரிவித்துள்ளார். புலிகளிடம்தான் அத்தங்கம் இருந்தது என்றாலும் அதன் உண்மையான உரிமையாளர்கள் பொதுமக்களே. இத்தங்கத்தை அடகு வைத்ததற்கான ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றிய இராணுவம் அதை அரச ஊடகங்களில் காட்சிப்படுத்தியமையையும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாரவிலவில் மர்மப் படகு!

மாரவிலவிலுள்ள மொதராவெல்லப் பகுதிக் கடற்கரையில் ஒரு மர்மப் படகைக் கண்டுபிடித்துள்ளதாக மாரவிலப் போலீசார் தெரிவித்துள்ளனர். இன்று காலையில் அப்படகைக் கண்ட போலீசார் அப்படகிலிருந்து பல மீன்பிடி வலைகள் மற்றும் ஒரு நங்கூரம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர். குறித்த படகுக்கு சஜித் லக்மல் என்று பெயரிடப்பட்டுள்ளதாம்.
மேலும் ட்ரோலர் படகுகளில் பொதுவாக இணைக்கப்பட்டிருக்கும் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் செய்மதி உபகரணம் போன்றவை அப்படகில் இருக்கவில்லை எனவும் போலீஸ் அறிவித்துள்ளது. ஆனால் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குறித்த படகு கடந்த மூன்று நாட்களாகக் கடலில் மிதந்துகொண்டிருந்ததைக் கண்டுள்ளனராம்.

21 அக்டோபர் 2010

மண்டைதீவில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியுள்ள சடலம்!

மண்டைதீவிலுள்ள இலங்கைக் கடற்படை முகாமுக்கு அருகாக சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இச்சடலத்தை ஊர்காவற்றுறைப் போலீசார் மீட்டுள்ளனர். இச்சடலம் ஆணுடையதா அல்லது பெண்ணுடையதா என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு அழுகி உருக்குலைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, யாழ்ப்பாணத் தீவுப் பகுதிகளில் காணாமல் போயுள்ளவர்கள் குறித்த எவ்வித முறைப்பாடுகளும் அண்மையில் தமக்குக் கிடைக்கவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது. இச்சடலம் புதன்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டு, தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் சவக்கிடங்கில் போடப்பட்டுள்ளது.
மண்டைதீவுப் பகுதியானது முற்றுமுழுதாக இலங்கைக் கடற்படையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியாகும். ஆனால் தீவுப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எவரும் இச்சடலம் குறித்து உரிமை கோர முன்வரவில்லை என்பதால் இது யாழ்ப்பாணம் அல்லது வன்னிப் பகுதிக்குச் சேர்ந்த ஒருவரின் சடலமாக இருக்கலாம் எனப்படுகிறது.

இரண்டு சிம் அட்டைகளுக்கு மேல் எவரும் வைத்திருக்க முடியாது - பாதுகாப்பு அமைச்சு.

ஒரு தனி நபரொருவர் வைத்திருக்கக் கூடிய சிம் கார்ட்டுகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சும் இலங்கை தொலைத்தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழுவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்கேற்ப இனிவரும் காலங்களில் பெரும்பாலும் ஒருவருக்கு இரண்டு சிம் கார்ட்டுகளை மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் பயன்படுத்தப்படும் சிம்கார்டுகள் அனைத் தும் அதன் உரிமையாளர்களின் பூரண விபரங்களுடன் பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய் யப்பட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
சர்வதேச அழைப்புக்களை சட்டவிரோதமாகப் பெற்று விநியோகிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் உண்மைக் காரணம் அதுவல்ல என்று தெரியவருகின்றது. அண்மையில் கிளிநொச்சியில் மாவீரர் தினத்திற்கு அழைப்பு விடுத்ததாகக் கூறிக் கைது செய்யப்பட்டவர் வைத்திருந்த சிம் கார்ட் தென்னிலங்கை முகவரியில் பதியப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.
அதுமாத்திரமன்றி அவர் இரண்டுக்கும் மேற்பட்ட சிம்கார்ட்களை வைத்திருந்தமை யும் விசாரணைகளின் போது தெரியவந்திருந்தது. எனவே புலிகளுடன் தொடர்புடைய அனைவரும் தத்தமது தொடர்புகளுக்கு ரகசிய இலக்கம் ஒன்றை பயன்படுத்தி வருவதாக அரசாங்கம் சந்தேகம் கொண்டுள்ளது.
ஏனெனில் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் முகவரியில் பதியப்படும் அனைத்து சிம்கார்ட்டுகளும் விசேட ஏற்பாட்டின் கீழ் அர சாங்கத்தால் கண்காணிக்கப்படுகின்றன. அப்படியிருக்கையில் சிலர் தென்னிலங்கை முக வரியைக் கொடுத்து பதிந்துள்ள சிம்கார்ட்டுக் களை வடக்கில் பயன்படுத்தி வருவதன் மூலம் அதனை அரசாங்கத்தால் கண்காணிக்க முடியாது போய்விடுகிறது. எனவே குறித்தஇரண்டு விடயங்களையும் கட்டுப்படுத்த வேண்டுமாயின் ஒருவருக்கு இரண்டு சிம்கார்ட்டுக்களை மட்டுமே பயன்படுத்த அனுமதிப்பதுடன் ஒருவரின் பெயரில் பதிந்துள்ள சிம்கார்ட்டை இன்னொருவர் பயன்படுத்தினால் கடும் தண்டனை விதிப்பதன் மூலமும் சந்தேகத்துக்கிடமானவர்களை கண்காணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஐ.நா நிபுணர் குழுவுக்கு சாட்சியம் கொடுங்கள்: வேண்டுகோள்!

ஜூன் 22ம் திகதி ஐ.நா ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியது. இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயுமாறு இக் குழுவுக்குப் பணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிபுணர்கள் குழு எல்லாத் தமிழர்களிடம் இருந்து சாட்சியங்களையும், ஆதாரங்களையும், மேலதிக விபரங்களையும் பெறவிரும்புவதாக தெரிவித்துள்ளது. நீங்கள் டிசம்பர் 15ம் திகதிவரை அவர்களை தொடர்புகொள்ள முடியும். 10 பக்கங்களுக்கு மிகைப்படாமல் உங்கள் சாட்சியங்களையும், ஆதாரங்களையும், அல்லது பாதிப்படைந்த விதத்தையும் நீங்கள் அவர்களுக்கு அனுப்பிவைக்க முடியும். நிபுணர் குழுவிற்கு தமிழர்கள் தமது சாட்சியங்களை அனுப்பிவைக்க தவறினால், சிங்களவர்கள் அனுப்பும் பொய்யான ஆதாரங்களே அவர்களுக்கு கிடைக்கப்பெறும் என்பதை எவரும் மறக்கவேண்டாம்.
நமக்கு என்ன, என தமிழர்கள் நினைத்து, வெறுமனவே சும்மா இருந்து விடவேண்டாம். எம்மாலான எல்லா முயற்சிகளையும் நாம் செய்துகொண்டே இருப்போம். அதற்கான பலன் விரைவில் கிடைக்கும். நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது உங்கள் உறவினர் கொல்லப்பட்டு, அல்லது காணாமல் போயிருந்தாலோ, இல்லையேல் பாலியல் துன்பத்திற்கு உள்ளாகியிருந்தாலே ஐ,நா நிபுணர்கள் குழுவிற்கு உடனே தெரிவியுங்கள். அதற்கான மின்னஞ்சல் முகவரி கீழே தரப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதுவது கடினமாக இருந்தால் உங்கள் நகரங்களில் உள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொள்ளுங்கள். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடமையை ஒவ்வொரு தமிழர்களும் செய்யவேண்டும் என அதிர்வு இணையம் அனைத்து தமிழர்களையும் வேண்டி நிற்கிறது.
உங்களால் அனுப்பப்படும் எல்லாவிதமான தகவல்களும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும் எனவும், அதுவும் ஐ.நா வின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பாதுகாக்கப்படும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது. எனவே உலகத் தமிழர்கள் அனைவரும் விரைந்துசெயற்பட்டு, உங்கள் சாட்சிகளை உடனே ஐ.நா நிபுணர் குழுவுக்கு அனுப்பிவைக்கவும் என நாம் தாழ்மையாக வேண்டி நிற்கிறோம். பிரித்தானியா வாழ் மக்கள் உங்களுக்கு ஆங்கிலத்தில் கடிதத்தை எழுதுவதில் சிக்கல் இருந்தால், அருகில் உள்ள பிரித்தானிய தமிழர் பேரவை அலுவலகத்தோடு, அல்லது உறுப்பினர்களோடு தொடர்புகொள்ளவும். அவர்கள் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருவார்கள்.

panelofexpertsregistry@un.org

POSTAL ADDRESS - UNITED NATIONS,
N.Y. 10017
USA.

20 அக்டோபர் 2010

த.தே.கூட்டமைப்பை மீண்டும் அழைக்க தமிழ் கட்சிகளின் அரங்கம் தீர்மானம் - சிவாஜிலிங்கம்.

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.தற்போது நாடு திரும்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை அடுத்த வாரமளவில் தமிழ் கட்சிகளின் அரங்கப் பிரதி நிதிகள் சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் அடுத்த கூட்டம் இம்மாதம் 30ஆம் திகதி ஈ.பி.டி.பி.யின் கொழும்பு அலுவலகத்தில்இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கு பொதுவான தீர்வொன்றை முன்வைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.ஈ.பி.டி.பி., தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி, புளொட், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈ.பி. ஆர்.எல்.எப்.பத்மநாபா அணி, ரெலோ ஆகிய கட்சிகள் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுமிகளை ஒப்படைக்க மன்னார் மாவட்ட நீதிபதி உத்தரவு!

மன்னார் முருங்கன் பகுதியில் உள்ள என் இரட்சகர் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் இருவர் மீது குறித்த சிறுவர் இல்லத்தினை நடத்தி வந்த போதகரால் பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உற்படுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் குறித்த சிறுவர் இல்லம் நோற்று மூடப்பட்டதோடு அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 18 சிறுவர்களில் 16 சிறுவர்கள் இன்று மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளினூடாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யுட்சன் பெற்றோர் உள்ள 8 சிறுமிகளை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறும் 6 சிறுமிகளை மன்னாரில் உள்ள பாதுகாப்பான சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறும் சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
உத்தரவிற்கமைவாக சிறுமிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளில் ஒருவர் மன்னார் வைத்திய சாலையிலும் மற்றைய சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.குறித்த போதகரை மன்னார் பொலிஸார் தேடி வருகின்ற நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.

எனது மகனின் படுகொலைக்கு பொறுப்பானவர்கள் அரசில் அங்கம் வகிக்கின்றார்கள்!

எனது மகனின் படுகொலைக்குப் பொறுப்பானவர்கள் தற்போது அரசில் அங்கம் வகிக்கின்றார்கள். ஆகவே அரசு படுகொலையாளிகளைக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவது இல்லை.”
2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி ஊடகவியலாளர் நிமலராஜன் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 10 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் இப்படுகொலையை மேற்கொண்டவர்கள் இன்னமும் கைது செய்யப்படவே இல்லை.
நிமலராஜனின் பெற்றோர், குடும்பத்தினர் தற்போது கனடாவில் வசிக்கின்றார்கள். இந்நிலையில் நிமலராஜனின் தந்தை ஜி.மயில்வாகனம் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொலைகாரர்களுக்கு தண்டனையில் இருந்து விலக்களிக்கும் கலாசாரம் இன்றும் தொடர்கின்றது. கடந்த 10 வருடங்களில் எந்தவொரு ஊடகவியலாளர்களுமே நிமலராஜன் அளவுக்கு யாழ்ப்பாண தமிழ் மக்களின் பேரவலங்களை வெளிப்படுத்தவில்லை.
யாழ்ப்பாண மக்களுக்காக ஒலித்த ஒரேயொரு சுதந்திரமான குரல் எனது மகனின் உடையது. அதை நசுக்குவதில் கொலையாளிகள் வெற்றி கண்டு விட்டார்கள்.”

19 அக்டோபர் 2010

சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்தவர் மீது தாக்குதல்!

யாழ்.அராலி தெற்கு பிரதேசத்தில் வைத்து பாடசாலை மாணவியான 13 வயதுச் சிறுமி ஒருவருடன் நேற்று காலை பாலியல் உறவு கொள்ள முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் பிரதேசவாசிகளிடம் கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்டார்.
சிறுமி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் தரம் -08 பயில்பவர். இவர் தனியார் வகுப்பு ஒன்றுக்கு சென்று விட்டு காலை 11.15 மணியளவில் வீதியால் நடந்து வந்து கொண்டிருந்தார்.
இரு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் தவக்குமார் (வயது 26) என்பவர் வீதியில் சிறுமிக்காக காத்திருக்கின்றார். சிறுமியை அழைத்துக் கொண்டு சென்றிருக்கின்றார். இதனை அப்பகுதி இளைஞர்கள் சிலர் அவதானித்தனர்.
இருவரையும் பின் தொடர்ந்து சென்றனர். தவக்குமார் சன நடமாட்டம் குறைந்த வீதி வழியே சிறுமியை கூட்டிச் சென்று ஆட்கள் இல்லாத வீடு ஒன்றில் வைத்து பாலியல் உறவு கொள்ள முயன்றிருக்கின்றார். பின் தொடர்ந்து வந்திருந்த இளைஞர்கள் உள்ளே புகுந்து தவக்குமாரை பிடித்து, அடித்து வெளியே இழுத்து வந்தனர்.
சம்பவத்தை அறிந்து அவ்விடத்தில் கூடிய பிரதேசவாசிகளும் தவக்குமாரை நையப் புடைத்தார்கள். தவக்குமாரை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொலிஸாரிடம் கையளித்தனர். சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பிரதேசவாசிகளின் தாக்குதலில் படுகாயம் அடைந்த தவக்குமார் யாழ்.போதனா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்தால் அவமானம் தாங்க முடியாத சிறுமி வீட்டில் மருந்துகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்.
மகளை கத்திமுனையில் பலாத்காரமாக அழைத்துச் சென்று தவக்குமார் கற்பழிக்க முயன்றார் என்று சிறுமியின் தந்தை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

தனிநாடு என்ற கோரிக்கையை முதல் முதல் வைத்த நவரட்ணம்.

தமிழீழம் என்ற கோரிக்கையை முதன்முதலில் முன்வைத்த வி. நவரட்ணம் ஐயா அவர்களின் நூறாவது பிறந்தநாள் 2010, ஒக்ரோபர் 18 ஆம் திகதியான நேற்றாகும். இவரே 1960 ஆம் ஆண்டுகளின் இறுதியில் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் நிறுவுனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு 95 வயதாக இருந்தபோது 2005 ஆம் ஆண்டும் ஜூலை மாதத்தில் தமிழ்நெட் இணையத்தளம் இவரைப் பேட்டி கண்டிருந்தது. ஆனால் இவர் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி காலமானார். மேற்படி 2005 ஆம் ஆண்டின் பேட்டியில், தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே அரசாங்கத்தின் கீழ் வாழ முடியாது, தமிழர்களுக்கென்று தனிநாடு மட்டுமே இதற்கான தீர்வு என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.
இவரது கட்சி 1970 ஆம் ஆண்டின் தேர்தலில் போட்டியிட்டபோது சிறியளவு ஆதரவே இருந்தது. ஆனால் சில வருடங்களுக்குள்ளாகவே இவரது கட்சிக்கு தமிழர்கள் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தன. 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது இவரது கட்சிக் கொள்கையின் நகல் என்றும் நவரட்ணம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
நவரட்ணம் அவர்கள் 1910 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 18 ஆம் திகதியன்று ஊர்காவற்றுறையிலுள்ள கரம்பனில் பிறந்தார். இவர் இலங்கை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று 58 ஆண்டுகளாக சட்டத்தரணியாக இருந்தார், 1963 முதல் 1970 ஆம் ஆண்டு வரையில் ஊர்காவற்றுறை தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவராவார்.
தந்தை செல்வா தலைமையில் 1949 ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சி உருவாக்கப்பட்டபோது திரு நவரட்ணம் மற்றும் டாக்டர் ஈ.எம்.வி நாகநாதன் ஆகியோர் அக்கட்சியின் கூட்டு செயலாளர்களாக இருந்தார்கள். ஆனால் 1970 ஆம் ஆண்டில் தனிக் கட்சி உருவாக்கித் தேர்தலில் நின்றபோது அவரது கட்சி உறுப்பினர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவினர். ஆனால் ஆறு ஆண்டுகளுக்குள் நவரட்ணம் அவர்களின் அரசியலை அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஆதரித்தன.
1991 ஆம் ஆண்டில் இவர் கனடா, மொன்றியலில் இருந்த காலகட்டத்தில் "தமின் இனத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் " (“The Fall and Rise of The Tamil Nation” என்ற நூலை எழுதினார். இதன் இரண்டாம் பதிப்பு 1995 இல் வெளிவந்தது. தமிழர் இறைமை என்பது பேரம் பேச முடியாதது என்பது இந்நூலின் முக்கிய கருவாகும்.
2005 ஆம் ஆண்டு பேட்டியின்போது, சுதந்திரத்தின் ஒருதலைப் பட்சமான பிரேரணையை ஈழத் தமிழர்கள் முன்மொழிய வேண்டும் என்று தனது கருத்தைத் தெரிவித்தார். சிறி லங்கா என்பது இலங்கை அல்ல. 1972 ஆம் ஆண்டு சட்டத்துடன் வந்த சிறி லங்கா என்பது சட்டவிரோதமானது. சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த அனைத்து அரசியலமைப்புக்களும் தமிழர்களை அடிமைப்படுத்தும் நோக்குடனேயே அமைக்கப்பட்டன என்றார் அவர்.
மேலும் அவரது கருத்துக்கள் சில வருமாறு:
ஒஸ்லோவில் எதுவுமே நடக்கப் போவதில்லை. பிரபாகரன் வஞ்சிக்கப்படுவார் என்று நான் எண்ணவில்லை. இடைக்கால சுயாட்சி அமைப்பால் சிலவற்றை சாதிக்கலாம் என்று விடுதலைப் புலிகள் எண்ணியிருக்கலாம். ஆனால் இதன்மூலம் எதுவுமே நடக்கப்போவதில்லை என்பதே எனது கருத்தாகும். சில குறுக்குவழிகள் இருக்கக்கூடும் என்று இந்த நடைமுறையில் ஈடுபட்டுள்ளவர்கள் நினைக்கக்கூடும். ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. கடந்த காலங்களில் எத்தனை ஒப்பந்தங்கள் போடப்பட்டன? ஆனால் ஒன்றுகூட அமுலுக்கு வரவில்லை. புலிகள் இப்போது ஒரு வரிசையில் செல்கிறார்கள். எனக்கு இதுபற்றி பெரிதாக விளங்கவில்லை. ஆனால் எதுவும் சாதகமாக இருக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.
மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் எதிலும் ஈடுபடுவதிலும் அர்த்தமில்லை. அவை அனைத்துமே தமிழர்களை ஏமாற்றவே உள்ளன. நாங்கள் சமஷ்டி ஆட்சியைக் கேட்டோம். ஆனால் இதுகுறித்து நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளுமே தோல்வி கண்டன. ஆகவேதான் நான் தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்தேன்.
உடனிருக்க வேண்டிய தேவை இருப்பின், சிங்கள் மற்றும் தமிழ் இன நாடுகள் இருதரப்பு ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் கூட்டுக்குழு போன்ற தொடர்ச்சியான சூழ்ச்சிப் பொறிகள் எவையும் இருக்கக்கூடாது. இந்தியா அல்லது பிற நாடுகள் எவையுமே எங்களது அபிலாஷைகள் குறித்து எமக்கு கட்டளையிடக்கூடாது. நாங்களே எங்கள் தேவைகளைக் கவனிக்க வேண்டும்.
இந்தியா பற்றிக் கூறியுள்ள நவரட்ணம் அவர்கள், இரண்டு இந்தியாக்கள் உள்ளன. புதுடில்லி இந்தியாவிலிருந்து வேறுபட்டது. புதுடில்லிக்கு தனது நண்பர்கள் யார் என்பது தெரியாது. தமிழர்களை அடிமைப்படுத்தி தனக்கு நன்மைகளை அடையலாம் என அது நினைக்கிறது என்றார். இந்தியாவின் முக்கிய ஊடகங்கள் எழுதுபவற்றை வாசிக்கும்போது எனது இரத்தம் கொதிக்கிறது.
சர்வதேச சமூகத்துக்கும் சிங்கள அரசியல் போக்கு குறித்து அவ்வளவாகத் தெரியாது. அண்மையிலேயே அவை ஓரளவுக்கு உணரத் தொடங்கியுள்ளன. சர்வதேசம் கடந்த கால வரலாற்றை உற்றுக்கவனிக்க வேண்டும். ஆனால் உலகை ஏமாற்றக் கூடிய அளவுக்கு சில தமிழர்கள் சிங்கள அரசாங்கத்துடன் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது சிங்களத்துக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாகும்.
இப்போக்கு திருச்செல்வத்துடன் தொடங்கியது. சந்திரிக்காவுடன் லக்ஷ்மன் கதிர்காமர் தமிழர்களுக்கு எதிரான போக்கைக் காட்டினார். கதிர்காமர் தன்னை ஒரு மனிதராகப் பார்க்கும்படியும், ஒரு தமிழராக முத்திரை குற்ற வேண்டாம் என்றும் உலகுக்குக் கூறினார். இவர் ஊர்காவற்றுறை, மண்கும்பானில் பிறந்து யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பயின்றவர். இவரது தமையனாரான ராஜன் கதிர்காமர் ஒருதடவை இலங்கைக் கடற்படைத் தளபதியாக இருந்தவர்.
ராஜன் கதிர்காமர் வித்தியாசமாக யோசித்தார். இவர் யாழ்ப்பாணத் தீவுகள் ஏழையும் சூழவுள்ள கடலை ஆழப்படுத்தி அங்கு ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தை உருவாக்க எண்ணினார். இவர் ஒரு தமிழராக உணர்ந்து செயற்பட்டார்.
நீலன் திருச்செல்வத்தின் தந்தையாரான திருச்செல்வம் 1965 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் தாம் ஒரு அமைச்சர் பதவியைப் பெற்று, டட்லி சேனாநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய உடனுமே தமிழர்கள் ஏமாற்றப்படத் தொடங்கிவிட்டனர் என்று நான் நம்புகிறேன். இது 1968 இல் உறுதிப்படுத்தப்பட்டது.
திருச்செல்வம் திருகோணமலையை விட்டுக்கொடுத்தார். அமிர்தலிங்கம் சேருவவிலவை விட்டுக்கொடுத்தார். இவர்கள் எல்லாம் சிங்கள மயமாக்கலுக்கு உதவி செய்தார்கள்.
செல்வநாயகம் உட்பட சமஷ்டிக் கட்சித் தலைவர்கள் எவருமே 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புக் கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை.
சேர் பொன் ராமநாதன் தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதை உணர்ந்தார். ஆனால் அவரது சொந்த மருமகன் மகாதேவாவோ அல்லது அவரது மருமகன் நடேசபிள்ளையோ இதை உணர்ந்து கொள்ளவில்லை. பின்னர் ஜி.ஜி பொன்னம்பலம் இந்த வரிசை அரசியலுக்குள் இழுக்கப்பட்டார். அவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு தமிழர்களாகியமை பிரச்சனையாகியது.
இதன்மூலம் ஏதாவது ஒன்று சாத்தியமில்லை என்றால் அதைப்பற்றி மறந்துவிட வேண்டும் என்று இந்த அரசியல் தலைவர்களில் சிலர் தமிழர்களுக்கு புத்திமதி கூறினர். தமிழர்களின் உரிமைகளுக்கு எதிராக இவர்கள் இவ்வாறு கூறினர்.
பிரபாகரனின் அரசியலில் இதுபோன்ற ஒத்துழைப்பு அநீதிகள் இடம்பெறவில்லை.
சமாதானப் பேச்சுக்களின் போர்வையில் இழுப்பதே சிங்கள தலைவர்களின் தந்திரமாகும். பிரபாகரனின் காலத்தின் பிறகு அல்லது அவருக்கு வயதானவுடன் தமது விருப்புக்களுக்கு உடன்படச் செய்வதன் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்ற அவர்கள் விரும்பினர். வயதானவுடன் சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்த பொன்னம்பலம் மற்றும் சுந்தரலிங்கம் போலவே அவர்கள் பிரபாகரனையும் எண்ணினர். 'எவ்வளவு காலத்துக்குத்தான் பிரபாகரன் இருக்க முடியும். இவருக்குப் பின்னர் ஒரு பிரபாகரன் வரமாட்டார்' என்பதே சிங்களத்தின் வாதம் என்றார் நவரட்ணம் அவர்கள்.

18 அக்டோபர் 2010

த.தே.கூட்டமைப்பினருடன் ஜனாதிபதி விரைவில் சந்திப்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்களை மகிந்த ராஜபக்ச விரைவில் சந்திக்கவுள்ளதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே பீரிஸ் மேற்படி தகவலை தெரிவித்துள்ளார். எனினும் மகிந்த உடனான சந்திப்புத் தொடர்பில் தமக்கு எந்தவித அறிவித்தலும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவ்வாறான அழைப்பு விடுக்கப்படும் சந்தர்ப் பத்தில் அது தொடர்பில் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த இருவர் கைதாம்!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் கிளிநொச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இரு நபர்களைத் தாம் கைது செய்துள்ளதாக இலங்கை போலீஸ் தெரிவித்துள்ளது. கணவனும் மனைவியுமான இவர்கள் இருவரும் புலிகளின் மாவீரர் தின நாளைக் கொண்டாடத் தயாராகுமாறு தங்களது நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் விசுவமடுவைச் சேர்ந்தவர்கள். இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெயர்ந்து பின்னர் அண்மையில்தான் மீளக்குடியமர்ந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் திகதியன்று கொண்டாடப்படும் மாவீரர் தினத்துக்கே மக்கள் தயாராகுமாறு இவர்கள் இருவரும் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது.

17 அக்டோபர் 2010

வெள்ளவத்தைக் கடற்கரையில் இரு சடலங்கள்!

வெள்ளவத்தைக் கடற்கரையில் இரு சடலங்கள் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளன. ஆண்களின் இவ்விரு சடலங்களும் தற்போது களுபோவில மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல் தந்துள்ளது. இச்சடலங்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
மேற்படி இருவரின் மரணங்கள் தொடர்பிலும், சடலத்தை அடையாளம் காணுவது தொடர்பிலும் வெள்ளவத்தைப் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கப்பம் பெற வந்த படையதிகாரி மடக்கிப்பிடிப்பு!

கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல தங்க நகை வியாபாரி ஒருவரை கடத்தி 50 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய இராணுவ மேஜர் உட்பட மூவர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டனர்.
இவ்வர்த்தகரையும், மகனையும் கடந்த புதன்கிழமை இக்கும்பல் கடத்தியது. மகனைப் பாடசாலைக்கு இவ்வர்த்தகர் வாகனத்தில் கொண்டு சென்று கொண்டிருந்தபோது கடத்தல் இடம்பெற்றது.
ஆனால் மகனைப் பின்னர் விடுவித்தனர். 50 மில்லியன் ரூபாயை கப்பமாக தந்து விட்டு செல்லலாம் என்று வர்த்தகருக்கு கூறினர். கப்பம் பணத்தை எடுத்து வர வேண்டும் என்று குடும்பத்தினரிடம் சொல்ல வேண்டும் என்றனர்.
ஆனால் அவ்வளவு பணத்தை திரட்ட குடும்பத்தினரால் முடியாது என்றும் அவரை விடுவிக்கும் பட்சத்தில் பணத்தை ஒழுங்கி பண்ணித் தந்து விடுவார் என்று வர்த்தகர் இக்கடத்தல்காரர்களுக்கு கூறி இருக்கின்றார். வாக்குறுதி வழங்கி இருக்கின்றார்.
நம்பிக்கையின் அடிப்படையில் கடத்தல்காரர்கள் நேற்று இவரை விடுவித்தனர். இக்கடத்தல் குறித்து பொலிஸுக்கோ, வெளியாட்களுக்கோ சொல்லக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தும் இருந்தனர். விடுதலையான வர்த்தகர் இன்று பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருந்து கடத்தல்காரர்களுடன் தொலைபேசியில் பேசினார்.
வைத்தியசாலையின் மேல்மாடிக்கு வந்து பணத்தைப் பெற்றுச் செல்லலாம் என்று கூறி இருக்கின்றார். மேஜர் உட்பட ஐவர் வந்தனர். இருவர் வைத்தியசாலையில் வாசலில் நின்றனர். இருவர் மின்சார படிக்கட்டு வாசலில் நின்றனர்.
மேஜர் மாடிக்கு சென்று பணத்தைப் பெற்றுக் கொண்டார். சிவில் உடையில் தயாராக நின்ற பொலிஸார் மேஜரைப் பிடித்துக் கொண்டனர். மின்சார படிக்கட்டின் வாசலில் நின்ற இருவரும்கூட பொலிஸாரிடம் பிடிபட்டனர்.
ஆனால் வாகனத்தில் வெளியே காத்திருந்த இருவர் தப்பிச் சென்று விட்டனர். தப்பிச் சென்றவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்ய பொலிஸார் உடன் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இக்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இவ்வர்த்தகரை முன்னரும் கடத்தி இருக்கின்றனர். அப்போது 20 மில்லியன் ரூபாய் கப்பம் பெற்று இருக்கின்றார்கள்.

16 அக்டோபர் 2010

இலங்கை தொடர்பில் மூனின் பேச்சாளர் மெத்தனப்போக்கு!

இலங்கை தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கி மிகவும் தாமதமாக பதில்களை வழங்கி வருகின்றார் என்று ஐ.நா. செயல்பாடுகள் குறித்து செய்திகளை வெளியிடும் "இன்னர் சிட்டி பிரஸ்" பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.
செய்தியாளர் சந்திப்புக்களின்போது இலங்கை தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க பேச்சாளர் 24 மணித்தியாலங்கள் கூட தாமதிக்கின்றார் என்று அது சுட்டிக்காட்டி உள்ளது. ஆயினும் உரிய பதில்களை வழங்காமல் சமாளிக்கின்றார் என்றும் இன்னர் சிட்டி பிரஸ் சாடி உள்ளது.

மணல் ஏற்றும் ஈ.பி.டி.பியினரைத் தடுத்த குடத்தனை மக்கள்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனைப் பகுதியிலிருந்து ஈ.பி.டி.பி இனருக்குச் சொந்தமான மகேஸ்வரி பண்ட்ஸ் நிறுவனமானது சட்ட விரோதமாக மணலை அகழ்ந்து சென்று விற்று வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இவ்வாறு மணல் அகழ்வதற்கு வந்த லொறிகளையும், நபர்களையும் தடுத்து குடத்தனை மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஈ.பி.டி.பி இனரின் மணல் அகழ்வு காரணமாக கடல்நீர் குடத்தனை ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதைத் தடுக்காவிட்டால் விளைவு இன்னும் மோசமாகும் நிலைமை ஏற்படும் என்று எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும், மகேஸ்வரி பண்ட்ஸ் நிறுவனமானது இலங்கை ராணுவம் மற்றும் ஈ.பி.டி.பி இனருடன் இணைந்து செயற்படுகிறது. மேற்படி எதிர்ப்பை அடுத்து சம்பவ இடத்துக்கு இராணுவம் மற்றும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுடன் வந்த அந்நிறுவனத்தார் இரண்டு நாட்களுக்கு மண் அகழ்வை நிறுத்த சம்மதிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் இம்மண் அகழ்வை முற்றாக நிறுத்தும்வரை தாம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

15 அக்டோபர் 2010

ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஓர் அன்புமடல்!

அன்புக்குரிய ஹோட்டல் உரிமையாளர்களுக்கு வணக்கம். அவசரமாக கடிதம் எழுதுவதற்காக மன்னிக்கவும். கால சூழ்நிலையும் எங்கள் கலா சாரம் தொடர்பில் சமகாலத்தில் பேசப்படும் பயங் கரமான சொல்லாடல்களும் இக்கடிதத்தை அவசரமாக எழுதத் தூண்டியுள்ளன.
யாழ்ப்பாணக் கலாசாரம் மிகவும் இறுக்கமான தென்பதை நீங்கள் அறிவீர்கள். அதேநேரம் எங்கள் கலாசாரத்தை, பண்பாட்டுக் கோலங் களை உடைத்தெறிந்து தமிழினத்தை நிர்மூல மாக்குவதற்கான சதித்திட்டங்களும் ஒருபுறத்தே நடப்பதைக் காணமுடிகின்றது.
இதற்கெல்லாம் எண்ணெய் ஊற்றுவதாக கையடக்கத் தொலைபேசிகளும் இணையத் தளங்களின் பயன்பாடுகளும், ஆபாச இறுவெட்டு களும் உதவுகின்றன. இந்நிலையில் யாழ்ப்பா ணத்தில் உள்ள விடுதிகள் சிலவும் கலாசார சீரழி வுக்கு உதவுவதான குற்றச்சாட்டுக்களும்,அது தொடர்பான சம்பவங்களும் மக்கள் மத் தியில் பேசப்படுவதை நீங்கள் அறியாமல் இருக் கலாம். அதேநேரம் பேசப்படும் தகவல்கள் யாவும் சரி யானவை என்ற முடிபுக்கும் நாம் வரவில்லை.
இருந்தும் ஹோட்டல்களுக்கும் கலாசாரப் பாதுகாப்பிற்குமிடையில் நெருங்கிய தொடர் உண்டு என்பதை நீங்கள் மறக்கவும், மறுக்கவும் மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.அந்த வகையில் மேன்மைக்குரிய யாழ்ப் பாண தமிழ்ப் பண்பாட்டை கட்டிக்காக்கும் பணி யில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஹோட்டல்கள் ஈடுபடவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
இறுக்கமான கட்டுப்பாடு-கடுமையான தண்ட னை- உரிமை தொடர்பான நினைப்பு என்ற ஒரு பண்பாட்டுக்கோலத்துக்குள் இருந்த தமிழினம் இன்று கட்டவிழ்ந்து எப்படியும் நடக்கலாம்; எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளலாம்; துரையப்பா விளையாட்டரங்கில் நடக்கும் கூழிசையில் கலந்து கூத்தாடலாம் என்ற நிலைமை வந்து விட்டது. இந்த நிலைமையின் அடுத்த கட்டம் ஹோட்டலிலே குடியிருப்பு என்பதாக அமையும்.
ஆகையினால்தான் இந்தக்கடிதத்தை அவச ரமாக எழுதுகின்றோம். அன்புக்குரிய ஹோட் டல் உரிமையாளர்களே! எல்லாமிழந்த தமிழி னம் தனது கெளரவத்தை, கலாசாரத்தை, பண் பாட்டு விழுமியத்தை இழக்கவில்லை என்று உலகம் சொல்லும்படியாக எங்கள் கலாசாரத் தை கட்டிக்காக்க உங்கள் பரிபூரண ஒத்துழைப்புத் தேவை. இதை நீங்கள் செய்வீர்கள் என நம்பலாம்.
அதேசமயம் கலாசாரப் பிறழ்வுகளுக்கு எதி ராக அருவுருவ மேனியர்களாய் இளைஞர்கள் ஒன்று சேரவேண்டிய கட்டாயம் வந்துவிட்ட தென்றே எண்ணத்தோன்றுகிறது.

மட்டக்களப்பில் விடுலைப்புலிகளின் இரகசிய முகாம்...?

மட்டக்களப்பு தொப்பிகலை பிரதேசத்தின் அலியாஓடை பகுதியில் விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கொண்ட இரகசிய முகாம் ஒன்று அமைந்துள்ளதாக விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
புலிகளால் குறித்த முகாமுக்கு போ சிக்ஸ் என்று பெயரிடப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகின்றது. விடுதலைப் புலிகள் கிழக்கில் பலமாகச் செயற்பட்ட காலத்தில் அந்த முகாம் அருணா குமாரப்பன் நியூட்டன் மற்றும் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போ சிக்ஸ் முகாமில் ஏராளமான புலி உறுப்பினர்கள் தங்கியிருந்ததுடன் முகாமிலும் அதனைச் சுற்றிய பகுதியிலும் பெருமளவான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் விசேட அதிரடிப்படை புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு மேலாக முகாமைச் சுற்றிலும் கொடிய முதலைகளைக் கொண்ட நீர் அகழி அமைந்திருப்பதன் காரணமாகவும் அப்பிரதேசத்தில் காணப்படும் மலைக்குகைகள் காரணமாகவும் கிழக்கை விடுவிக்கும் இராணுவ நடவடிக்கையின் போது இராணுவத்தினரால் குறித்த முகாமை கைப்பற்ற முடியாது போயிருந்தது.
ஆயினும் அரசாங்கம் அதனை வெளிக்குத் தெரியா வண்ணம் மூடிமறைத்திருந்தது.
புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து குறித்த முகாமில் இருக்கும் புலி உறுப்பினர்களுடன் அரசாங்கத்தின் இன்றைய பிரதியமைச்சர் ஒருவர் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாகவும் தற்போது அவர்கள் அனைவரும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருவதாகவும் அதிரடிப்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் உட்பட கிழக்கில் அரச ஆதரவுடன் செயற்படும் ஆயுதக்குழுக்களுக்கும் அங்கு வைத்தே ஆயுதப் பயிற்சியளிக்கப்படுவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
போ சிக்ஸ் மூகாம் தொடர்பான தகவல்கள் கசியத் தொடங்கிய காரணத்தால் அப்பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்த விசேட அதிரடிப்படையினரை விலக்கி விட்டு அப்பிரதேசத்தை முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசாங்கம் உடனடி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகின்றது.

14 அக்டோபர் 2010

மஹிந்தவுக்கு எதிராக போராட்டம் நடத்திய வைகோ கைது!

புதுடில்லியில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு இன்றாகும். அவ்விழாவில் கௌரவ விருந்தினராக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கிறார். பல லட்சம் இலங்கைத் தமிழர்களின் உயிர்களைக் குடித்த மஹிந்தவுக்கு இந்த கௌரவமா என்று அவருக்கு எதிராக கறுப்புக் கொடிப் போராட்டத்தை நடத்திய ம.தி.மு.க செயலாளர் வைகோவை போலீஸ் கைது செய்துள்ளது. இவ்வெதிர்புப் போராட்டத்தில் மஹிந்தவின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டுள்ளன என்று போலீஸ் தெரிவித்தது.
கைதான வைகோ பத்திரிகை நிருபர்களிடம் பேசியபோது, போர்க்குற்றவாளியான மஹிந்த ராஜபக்ஷவை விசாரணை செய்வதற்காக ஐக்கிய நாடுகளின் முன்னிலையில் கொண்டுசெல்லும் வரை தமது கட்சியின் போராட்டம் தொடர்ந்து வலுப்பெறும் எனத் தெரிவித்தார். மிக முக்கியத்துவம் வாய்ந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் மஹிந்தவை அழைத்துள்ளமை இலட்சக்கணக்கான தமிழர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மஹிந்தவுக்கு எதிரான சுலோகங்களைக் கூறி அவரின் கொடும்பாவிகளையும் எரிக்க முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பெரியார் திராவிடக் கழக தொண்டர்களும்கூட இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் சில தொண்டர்களும் கைதாகியுள்ளனர்.

கட்சியிலிருந்து ஏன் விலக்கக்கூடாது?

கட்சி நிலைப்பாடுகளுக்கு எதிராக அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ள நீங்கள் ஏன் கட்சியிலிருந்து விலக்கப்படக்கூடாது என்பது தொடர்பில் எழுத்து மூலம் விளக்கமளிக்கும்படி கேட்டு ஜனநாயக மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரனால் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கட்சி கட்டுப்பாட்டை மீறி சொந்த முடிவின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 05ம் திகதி அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட பிரபா கணேசனின் கட்சி அங்கத்துவம் அன்றைய தினமே கட்சித் தலைவர் மனோ கணேசனினால் இடை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி கூடிய முன்னணியின் அரசியற்குழு கட்சித் தலைவரின் முடிவை ஏகமனதாக அங்கீகரித்ததுடன், கட்சியில் வகித்துவந்த பதவியிலிருந்தும் பிரபா கணேசனை நீக்கியது. இது தொடர்பில் பிரபா கணேசனுக்கு எழுத்து மூலமாக கட்சி பொதுச்செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட பதிவு தபால் கடிதத்திற்கு இதுவரையில் பிரபா கணேசன் பதில் அளிக்கவில்லை. அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்ததைபோல் அவர் அரசாங்கத்தரப்பில் இருந்து வெளியேற வில்லை. மாறாக 18ம் திருத்தத்திற்கு ஆதரவாக அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களித்துள்ளார். இந்நிலையில் கட்சியின் ஒழுக்காற்றுக்குழுவின் முடிவின்படி கட்சி அங்கத்துவத்திலிருந்து ஏன் நீக்கப்படக்கூடாது என்பது தொடர்பில் எதிர்வரும் 14 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி கேட்டு பிரபா கணேசனுக்கு இன்று கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலின்போது ஜனநாயக மக்கள் முன்னணி கூட்டு சேர்ந்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பிரபா கணேசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியதாவது,
ஐதேக தனது கட்சியிலிருந்து அரசு தரப்பிற்கு தாவியுள்ள அல்லது இனிமேலும் செல்வதற்கு இருக்கின்ற தமது உறுப்பினர்கள் தொடர்பிலே, எத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது தொடர்பில் இதுவரையில் தெளிவில்லை. எமது கட்சியிலிருந்து அரசிற்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கட்சி மாற்றம் நடைபெற்ற தினத்திலேயே நாம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே இது தொடர்பாக ஐதேக பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்மை கேட்டுக்கொண்டார் என்பதைவிட, இது எமது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையாகும்.
கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் அமோக ஆதரவை பெற்றக்கட்சி எமது கட்சியாகும். இது கொழும்பில் நடைபெற்ற மாநகரசபை, மாகாணசபை, பாராளுமன்ற தேர்தல்களில் தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எமது கட்சியின் வேட்பாளராக ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டதன் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவான பிரபா கணேசன் எம்பி கட்சியின் நிலைப்பாட்டை மீறி வெற்றிலைச் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துடன் தன்னிச்சையாக இந்த இணைந்துகொண்டுள்ளார். அத்துடன், தன்னை வளர்த்துவிட்ட கட்சியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அவர் இன்று ஈடுபட்டுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசுடன் இணைந்துகொண்டுள்ளார்கள். ஆளுகின்ற அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதற்கு இக்கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடுகளை நாம் ஒரு கட்சி என்ற முறையிலே எதிர்கின்றோம். ஆனால் கட்சிகள் என்ற முறையில் தங்களது தீர்மானங்களை எடுப்பதற்கு இக்கட்சிகளுக்கு இருக்கின்ற உரிமைகளை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளையில் எமது கட்சியிலிருந்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்தும், ஐதேகவிலிருந்தும் அரசுடன் இணைந்துகொண்டவர்கள் தங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய கட்சிகளின் முடிவுகளுக்கு மாறாகவே நடந்துகொண்டுள்ளார்கள். அத்துடன் அரசுடன் இணைந்துகொண்டுள்ள தங்களது கட்சித்தாவல்களை நியாயப்படுத்துவதற்காக தங்களை வளர்த்துவிட்ட கட்சிகளுக்கும், கட்சித் தலைமைகளுக்கும் எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த அடிப்படை உண்மைகளை தமிழ் மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள் என நான் நம்புகின்றேன்.
எமது கட்சியிலிருந்து சொந்த முடிவின் அடிப்படையில் அரசுடன் இணைந்துகொண்டுள்ள பிரபா கணேசன் எம்பிக்கு எமது பொதுச்செயலாளரினால் கடந்த ஆகஸ்ட் 09ம் திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை. இது அவரது உதாசீன போக்கை தெளிவாக எடுத்துகாட்டுகின்றது. அத்துடன் தான் வேறு ஒரு கட்சியை அமைக்கப்போவதாகவும் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளார். தனது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக தான் எடுத்த தனிப்பட்ட முடிவுகளை திருத்தி கொள்வதற்கு பிரபா கணேசன் எம்பிக்கு வழங்கப்பட்ட அவகாசம் போதுமானதாகும். இந்நிலையில் எமது கட்சியின் நிலைப்பாடுகளை உதாசீனம் செய்து தன்னிச்சையாக ஒழுங்கை மீறுபவர்கள் மீது உறுதியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. கட்சியை உதாசீனம் செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தொடர்பில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் இடம் கிடையாது.

பொஸ்பரஸ் எரி குண்டின் கொடூரத் தாக்கம்! உடலே விகாரமாக மாறிப் போனவரின் இன்றைய நிலை!

வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்று முடிந்த இறுதி யுத்தத்தில் அரச படையினரால் பயன்படுத்தப்பட்ட பொஸ்பரஸ் இரசாயன எரிகுண்டின் கோர விளைவுகளிலிருந்து இன்னமும் மீள முடியாமல் தவிக்கிறார் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து வரதராஜன்(வயது43) .
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு உதவி அரச அதிபர் பிரிவுக்கு உட்பட்ட சன்னார் மீள்குடியேற்றக் கிராமத்தில் தற்போது வசிக்கின்றார்.
இவரின் உடல் முழுவதும் இரசாயன எரிகுண்டால் ஏற்பட்ட வடுக்களும், காயங்களும் காட்சி தருகின்றன. இரசாயன எரிகுண்டுத் தாக்குதலில் மட்டுமன்றி கிளைமோர் தாக்குதலில் கூட சிக்கி இருக்கின்றார்.
இவற்றால் கைகளிலும், கால்களிலும் கூடுதலான பாதிப்புக்கள். சொந்தமாக எந்த வேலையையும் செய்ய முடியாத நிலையில் உள்ளார்.
இரணைப் பாலை என்கிற இடத்தில் 18-12-2008 அன்று இடம்பெற்ற எறிகணை வீச்சில் இவரின் மனைவி செல்வமலர் (வயது 37 ) கண் முன்னே இறந்தார். வரதராஜா கடந்த கால யுத்தத்தால் உடல் ரீதியாக மட்டுமன்றி உளரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார் என்பது வெளிப்படை. சொந்தமாக வேலை செய்ய முடியாத தகப்பன். தாயோ இறந்து விட்டார். மூன்று குழந்தைகளுமோ சிறுவர்கள். வசிகரன் (வயது-14), தானோஜா (வயது-13), ஜயசுதன் (வயது-09).
இக்குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை மிகவும் துன்பங்கள் நிறைந்தது. பிள்ளைகளின் எதிர்காலம் வெறும் சூனியமாகவே இது வரை தெரிகின்றது.
அரசோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ எவ்விதமான உதவியையும் இதுவரை செய்யவில்லை என்று கவலையுடன் கூறுகின்றார் வரதராஜன்.

13 அக்டோபர் 2010

செவ்வரத்தை இலையில் அனுமன் முகம்!

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு கிராமத்தில் விபுலானந்தா மத்திய கல்லூரிக்கு அருகில் உள்ள வீட்டு வளவு ஒன்றில் செவ்வரத்தை மர இலையில் அனுமான் முகத்தையொத்த வடிவம் காணப்பட்டது.
அதனைப் பார்க்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அவ்விலையை இங்கு காண்கிறீர்கள்.

திருகோணமலையில் சிறைக்கைதி தற்கொலை!

திருகோணமலை சிறைச்சாலையின் மேல்மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மேலிருந்து குதித்துத் தற்கொலை செய்துள்ளார். இத்தகவலை திருகோணமலை துறைமுக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர் 62 வயதான கருணாரட்ண என்றும் இவர் திக்வலவிலுள்ள சியம்பலபே என்ற இடத்தைச் சேர்ந்தவர்.
இச்சம்பவம் பற்றிக் கருத்துக் கூறிய சிறைச்சாலை வட்டாரங்கள், குறித்த கைதி மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளது. எனினும் விசாரணைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

12 அக்டோபர் 2010

யாழ்ப்பாணப் பெண் சென்னையில் கைது!

சட்ட விரோத புகலிட தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 28 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாமினி என இனங்காணப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இவர் புழல் சிறையில் வைக்கப்பட்ட பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 30 வருட காலம் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நோர்வே போன்ற நாடுகளுக்கு சட்ட விரோதமாக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இலங்கை மார்க்கமாகச் செல்வதிலும் சிரமம் உள்ளதால் அநேகமானவர்கள் இந்தியாவிலிருந்து மேற்படி நாடுகளுக்குச் செல்கின்றனர். கியூ பிரிவு பொலிஸார் கைதான பெண் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர் எது செய்தாலும் எங்களுக்கு இனிப்புத்தான்!

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீமான், விரைவில் சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவருவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
புலிக்காக உறுமக்கூடியவர் என்பதால் அவர் மீது சட்டம் கரண்ட் போல் பாய்ந்திருக்கிறது. இப்போது அவர் சிறையிலிருந்து வெளியே வருவது நடக்காத காரியம் என்று ஒரு தரப்பும், இல்லையில்லை விரைவில் தடைகளை உடைத்துவிட்டு வெளியே வருவார் என்று இன்னொரு தரப்பும் வாதாடிக் கொண்டிருக்க, இம்மாதம் 24 ந் தேதி நீதிமன்றத்திற்கு வருகிறார் சீமான்.
அன்றே அவர் விடுதலை செய்யப்படலாம் என்ற நம்பிக்கையும் அவரது தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. அப்படி விடுதலை செய்யப்பட்டால் அவர் முன்னிலும் வேகமாக முழங்குவாரா ? அல்லது விஜய்யின் “பகலவன்” பட வேலைகளில் இறங்குவாரா ? என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் சீமான் ரசிகர்கள். அவர் எது செய்தாலும் அது எங்களுக்கு இனிப்பான செய்திதான் என்கின்றனர் சீமான் ரசிகர்கள்.

பிரிட்டனில் இலங்கையர்கள் கைது!

குடிவரவுக் குற்றங்கள் புரிந்ததாக இரு இலங்கையர்கள் உட்பட ஐவர் பிரிட்டனில் கைதாகியுள்ளதாக இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையர்கள் என நம்பப்படும் 25 பேரும் கைதாகியுள்ளனராம். குடிவரவுக் குற்றங்கள் பலவற்றின்கீழ் சஸக்ஸ் மற்றும் சுரே ஆகியவை உட்பட பல பகுதிகளின் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, பிரிட்டனின் சட்டவிரோதமாகத் தங்கி வேலை செய்துவரும் நபர்களையும் அங்கிருந்து வெளியேற்றுவதற்கு பிரிட்டன் முயல்வதாகக் கூறப்படுகிறது. இதற்காக செப்ரம்பர் மாத இறுதியில் 21 இடங்களில் பாரிய தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

11 அக்டோபர் 2010

வெளிநாடுகளிலுள்ள ஈழ அகதிகளைத் திருப்பி அனுப்ப யு.என்.எச்.சி.ஆர். ஆய்வு!

வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழ அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது குறித்துத் தாம் கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஐ.நா தூதரகத்தின் இலங்கைத் துணைப் பிரதிநிதி ஜெனீபர் பெகோனிஸ் கூறியுள்ளார். தற்போது இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில் மலேசியா, ஹொங்கொங் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது குறித்து தாம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் தற்போது 71,654 ஈழ அகதிகள் 112 முகாம்களில் தங்கியுள்ளனர். 32,467 அகதிகள் முகாம்களுக்கு வெளியேயும் தங்கியுள்ளனர் எனப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து 1280 அகதிகள் தாமே விரும்பி இலங்கைக்குத் திரும்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இலங்கை திரும்பும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் யு.என்.எச்.சி.ஆர் கூறியுள்ளது.
ஆனால் நீண்ட காலமாக வெளிநாடுகளில் தங்கியுள்ள அகதிகள் மீளவும் இலங்கை திரும்பச் சம்மதிப்பார்களா என்றும் ஜெனீபர் பெகோனிஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார். தமது புள்ளி விவரப்படி 64 நாடுகளில் மொத்தமாக 146,086 இலங்கையர்கள் அகதிகளாகப் பதிவு செய்துள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

விண்வெளிக்குச் சென்றுவர விமானம் தயார்!

விடுமுறைக்கு இந்தியா இலங்கை செல்வதுபோல இனி விண்வெளிக்கும் சென்றுவரலாம். ஆம் VIRGIN ATLANTIC நிறுவனம் தற்போது இதற்கான விசேட விமானத்தை வடிவமைத்து அதனை வெள்ளோட்டம் விடவும் தயாராகிவிட்டது. VIRGIN ATLANTIC நிறுவனத்தின் உரிமையாளர் ரிச்சாட் பிரான்சன் அவர்கள் இது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இவ்விமானம் வடிவமைக்கப்பட்டதில் இருந்து பலர் தமது விண்வெளிக்கான பயண முன் பதிவுகளை ஆரம்பித்துள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பூமிக்கு வெளியே இவ் விமானம் பறப்பில் ஈடுபட்டு பின்னர் பூமியை வந்தடையும் எனவும் மிகவும் பாதுகாப்பாகவும் நேர்த்தியாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி விண்வெளியில் செல்லும் இவ்விமானத்தில் இருந்து பூமியின் பூகோளத்தை அவதானிக்க முடிவதோடு, முதல் முறையாக புவி ஈர்ப்பு சக்தியற்ற அண்டவெளியில் நாம் மிதக்கும் அனுபவமும் எமக்குக் கிடைக்கும். ஆசனப் பட்டிகளை விலக்கி, விமானத்தினுள் மிதக்கவும் முடியும். இவ்வாறானதொரு அனுபவம் பூமியில் மனிதர்களுக்கு வாய்ப்பது மிக அபூர்வம் என்று சொல்லப்படும் இக் கால கட்டத்தில், பெரும் செல்வந்தர்கள் தற்போது இந்த அனுபவத்தை பெரும் பணம் செலுத்தி அனுபவிக்க உள்ளனர். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், அதில் ஒரு சிறு திருத்தம், பணம் விண்வெளிவரை பாய்கிறது....

10 அக்டோபர் 2010

எனது கணவருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜே.ஆரிடம் ஒரு போதும் கேட்கவில்லை-சந்திரிகா.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவிடம் தனது கணவர் விஜயகுமாரதுங்கவுக்கு மன்னிப்பு அளிக்குமாறு தான் ஒருபோதும் கேட்டிருக்கவில்லை எனவும் சட்டரீதியான தீர்வையே தான் நாடியிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் விமல் வீரவன்ச,கெஹலியரம்புக்வெல தெரிவித்திருந்ததற்கு முரணான விதத்தில் சந்திரிகாவின் கருத்து அமைந்துள்ளது.நான் மன்னிப்புக் கேட்டதாக அமைச்சர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டமை அப்பட்டமான பொய் என்று திருமதி குமாரதுங்க கூறியதாக டெய்லிமிரர் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச,முன்னாள் இராணுவத்தளபதியின் பாரியாரான அனோமா பொன்சேகா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தனது கணவனுக்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்க வேண்டும் என்றும் ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் அவரை ஏமாற்றுவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் கூறியிருந்தார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தனது கணவன் விஜயகுமாரதுங்கவுக்காக திருமதி குமாரதுங்க மன்னிப்பு வழங்குமாறு கேட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
ஐ.தே.க. ஆட்சியின்போது நக்ஸலைட் குற்றச்சாட்டுகளுக்காக குமாரதுங்க சிறைவைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பாகவே திருமதி குமாரதுங்க மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.

எனது கணவரை மீட்டுத்தாருங்கள்-திருமதி இளந்திரையன்.

எனது கணவர் எங்கோ உயிருடன் இருக்கின்றார். அவரைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.” இப்படி தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கோரி உள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவப் பேச்சாளராக இருந்த இளந்திரையன் அல்லது மார்ஷல் எனப்படும் இராசையா சிவரூபனின் மனைவி வனிதா சிவரூபன்.
அவர் நேற்று மட்டக்களப்பில் வைத்து ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்கினார்.
அவர் அச்சாட்சியத்தில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:-
காயப்பட்டிருந்த எனது கணவரை கடந்த வருடம் மே 17 ஆம் திகதி இராணுவத்தினர் சிகிச்சைக்கென அழைத்துச் சென்றனர். அவர் அழைத்துச் செல்லப்பட்டு நாட்களின் பின் எங்களைச் சந்திக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறி இருவர் வந்திருந்தனர்.
அப்போது நானும், குழந்தைகளும் வவுனியா அகதி முகாமில் தங்கி இருந்தோம். கணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் அவரிடம் அழைத்துச் செல்ல வந்திருந்தனர் என்றும் கூறினார்கள்.
ஆயினும் நாம் அவர்களின் அழைப்பை ஏற்கவில்லை. கணவரைச் சென்று பார்க்கவில்லை. அதன் பின் கணவர் குறித்து எந்தத் தகவலுமே இல்லை. ஆனால் அவர் எங்கோ உயிருடன் இருக்கின்றார். அவரைக் கண்டுபிடித்து மீட்டுத் தாருங்கள்.
இதே நேரம் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களில் ஒருவரான கிருஷ்ணபிள்ளை பிரபாகரனின் மனைவி பொபித்தா பிரபாகரன் சாட்சியம் வழங்குகையில்,
நாம் இடம்பெயர்ந்து ஏனைய பொதுமக்களுடன் வட்டுவால் என்ற இடத்தை அடைந்திருந்தபோது இராணுவத்தினர் விசாரணைக்கு என்று கூறி பொதுமக்கள் முன்னிலையில் கணவரை அழைத்துச் சென்றனர், ஆனால் இன்று வரை அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லை என்றார்.

09 அக்டோபர் 2010

தனக்காக மன்னிப்புக் கோர வேண்டாமென பொன்சேகா தெரிவிப்பு.

ஜனநாயகத் தேசிய முன்னணித் தலைவர் சரத் பொன்சேகா தனது மனைவி, மக்களிடம் தனக்காக எவரிடமும் மன்னிப்பு கோர வேண்டாம் எனக் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெலிக்கடை சிறைச்சாலையில் சரத் பொன்சேகாவை நேற்று பார்வையிடச் சென்ற போது, தம்மிடம் இவ்வாறு சரத் பொன்சேகா கூறியதாக ஊடகங்களிடம் அனோமா தெரிவித்தார்.
எந்தத் தவறையும் தான் செய்யவில்லை என்றும், எவரும் தனக்காக மன்னிப்பு கோரத் தேவையில்லை என்றும் சரத் பொன்சேகா தம்மிடம் கூறியுள்ளதாக அனோமா மேலும் தெரிவித்தார்.