நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
30 ஆகஸ்ட் 2020
யாழ்,மருத்துவமனையின் நான்காம் மாடியிலிருந்து விழுந்து பெண் மரணம்!
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் ஒருவர் நான்காம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பது விசாரணைகளின் பின்னரே தெரிய வருமென யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பளையைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் பணியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நான்காம் மாடியின் 17ஆம் நோயாளர் விடுதியிலிருந்தே குறித்தப் பெண் விழுந்து உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
29 ஆகஸ்ட் 2020
இனப்பிரச்சனைக்கு சரியான மருந்து சமஷ்டி என்கிறார் விக்கினேஸ்வரன்!
அமைச்சர் உதய கம்மன்பில வரலாற்றைப் படித்து விட்டு தன்னோடு விவாதத்துக்கு வர வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இடைக்கால கணக்கு அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“எனது நண்பர் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு கூறுவது என்னவென்றால் அவரின் வரலாற்று குறிப்புகள் காலங்கடந்தவை. அவர் வரலாற்றை படித்துவிட்டு வரவேண்டும்.
நான் பிரிவினைவாதத்தை கேட்கவில்லை பல்வகைத்தன்மையில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றே கூறுகிறேன். நாட்டின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே சரியான மருந்து .
எனது உரை தொடர்பில் நேர்மையாகவும், தொழில்முறையாகவும் நடந்துக்கொண்ட நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன்.
அரசாங்கம் சமர்ப்பித்துள்ள இடைக்கால கணக்கு அறிக்கை தொடர்பில் நான் எதனையும் கூறப்போவதில்லை. எந்தவொரு அரசாங்கமும் தமிழ் மக்களை துயரத்திலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. பொருளாதார உதவிகள் வழங்கப்படவில்லை. முதலமைச்சருக்கான நிதி கூட மறுக்கப்பட்டது. அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. எங்களது மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் கிடைத்திருக்கிறது. நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இதுவே பொன்னான தருனம். யுத்தத்தை வெல்வது இலகு. ஆனால் சமாதானத்தை வெல்வது கடினமானது. சமாதானமே உண்மையான வெற்றி.
“ஒருமித்த” நாட்டுக்குப் பதிலாக “ஐக்கிய” நாட்டை கட்டியெழுப்புவதன் மூலம், 10 ட்ரில்லியன் சர்வதேச கடன் இருக்கின்றபோதிலுங் கூட, இந்த நாட்டை இந்த உலகின் சொர்க்க பூமியாக உங்களால் மாற்ற முடியும்.
இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு சரியான மருந்து சமஷ்டி முறைமையே ஆகும். தயவுசெய்து இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள். ஆபத்தை உணரும்போது, தீக்கோழி தனது தலையை மணலில் புதைத்துக் கொள்வதுபோல பிரச்சினைகள் இருக்கும்போது அவை இல்லை என்று கூறி அவற்றில் இருந்து விலகி ஓடுவது முட்டாள்த்தனமானது.” எனவும் தெரிவித்தார்.
28 ஆகஸ்ட் 2020
அவதானமாகவே இருக்கிறேன் என பொன்சேகாவிற்கு கஜேந்திரகுமார் பதில்!
பேசும் விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.
சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என சரத்பொன்சேகா நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியமை குறித்தே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து கஜேந்திரகுமார் சபையில் உரையாற்றுகையில், “சபை அமர்வில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எனது பெயரைக் குறிப்பிட்டமை தொடர்பாக கருத்துக்கூற விரும்புகிறேன்.
அவர், நான் பேசிய விடயங்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எனக்கு சில அறிவுரைகளை வழங்கியதுடன், அதனூடாகவே இன நல்லிணக்கம் பேணப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நான் பேசிய விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறேன் என்பதை அவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் குறிப்பிட்ட விடயங்களின் அளவீடுகள் தொடர்பாக நான் பிரக்ஞையுடன் இருக்கிறேன். குறிப்பாக இவர் என்னை காரணப்படுத்துவதை நான் விசேடமாக அவதானித்தேன்.
ஏனெனில், இவர் இராணுவத் தளபதியாக செயற்பட்ட காலங்களில் இலங்கை சிங்கள மரம் என்றும் ஏனையவர்கள் அனைவரும் அந்த சிங்கள மரத்தின் மீதான கொடிகள் மற்றும் சிறிய உயிரினங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான கடுமையான வார்த்தைகள், பொதுவுடைமையாளராக இல்லாத அல்லது இனவாதியாக இருக்கக்கூடிய நபர்களிடம் இருந்தே வெளிவருகிறது. ஒருவேளை அவர் தனது பதவியை இழந்த பின்னர் அல்லது சிறையில் இருந்த பின்னர் மாறியிருக்கலாம். ஆனால், அவர் எனக்கு இந்த அறிவுரையினை வழங்கியமையை மிகமுக்கியமாகப் பார்க்கிறேன்.
வடக்கு கிழக்கு பகுதிகள் இலங்கையில் யுத்தத்தினை எதிர்கொண்ட, பாரிய அளவில் அழிவுகளைச் சந்தித்த பகுதிகள். 32 வருடங்களாக நாம் போரை எதிர்கொண்டோம்.
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாகவும் ஜெனரல் பொன்சேகாவாகவும் இருந்த அக்காலப்பகுதியில், வடக்கு கிழக்கு முழு பொருளாதார தடையின் கீழ் இருந்தது. அக்காலப்பகுதியில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. வடக்கு கிழக்குப் பகுதிகள் எதிர்கொண்ட நிலை இதுவே.
32 வருடங்கள் முழுமையான அழிவுக்குப் பிறகு அந்தப் பகுதிகளை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுவது முற்றிலும் பொருத்தமற்றது. 32 வருடங்களுக்கு மேலாக பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்ட மக்களை, இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் சம அளவாக போட்டியிட எதிர்பார்ப்பது சாத்தியமற்றது”எனவும் தெரிவித்தார்.
22 ஆகஸ்ட் 2020
இறையாண்மையை காரணம் காட்டி இனப்படுகொலையை மறைக்க முடியாது!
இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. அவ்வாறு இருக்கையில் இறையாண்மையை முதன்மைப்படுத்தி போர் குற்றங்களை மறைக்கவோ சர்வதேச பொறுப்புக்களை கைவிடவோ முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் பேசும் போதே இதனை தெரிவித்தார்.
“இலங்கை என்பது தேசிய நாடு. இங்கு இரு தேசிய இனங்கள் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. இவ்விரு இனங்களின் உரிமைகள் சமமானது. அரசியல் அமைப்பு ரீதியில் இந்த உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகின்றது.
இந்த ஆட்சியில் உள்ள தமிழ் தலைமைகள் தமது தேர்தல் கொள்கையில் தமிழர் தேசம் தலைநிமிர என பிரசாரம் செய்துள்ளனர். அப்படியென்றால் தமிழர் தேசம் பலமடைய வேண்டும் என்ற ஏகமனதான நிலைப்பாடு வடக்கு கிழக்கு மக்களால் விரும்பப்பட்டுள்ளது.
அந்த ஏகமனதான தீர்மானம் நிராகரிக்கப்பட முடியாது. தமிழ் மக்களுக்கு இந்த உரிமைகள் தடைகளின்றி வழங்கப்பட வேண்டும். அதேபோல் ஜனாதிபதி இறையாண்மை குறித்தும் பேசியுள்ளார். இந்த நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். அது சரியானதே, ஆனால் அந்த இறையாண்மை நிச்சயமாக சமரசத்திற்கு உற்படுத்தப்பட வேண்டும்.
இந்நாட்டில் யுத்தமொன்று இடம்பெற்றது. இந்த யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக ஒட்டுமொத்த உலகமுமே கூறுகின்றது. சர்வதேச மட்டத்தை உள்ளடக்கிய பிரதான விடயங்களை அரசாங்கம் பாதுகாக்க தவறிவிட்டது. போற்குற்றத்தில் இன்றைய பிரதான கட்சி மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. எனவே இறையாண்மையை முதன்மைப்படுத்தி இந்த விடயங்களை மறைக்கவோ சர்வதேச பொறுப்புக்களை கைவிடவோ முடியாது. மிக மோசமான போர் குற்றங்களை எக்காரணம் கொண்டும் மறைக்க முடியாது.
ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் பல நல்ல விடயங்கள் உள்ளது, வேறுநாட்டு மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவது தடுக்கப்படுவது, காணி இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறும் விடயங்கள் அனைத்துமே முக்கியமானதான விடயமாகும்.
அதேபோல் வடக்கு கிழக்கு பூமி கடந்த முப்பது ஆண்டுகள் யுத்தத்திற்கு முகங்கொடுதுள்ளது என்பதை ஜனாதிபதி மறந்துவிடக்கூடாது. இந்த முப்பது ஆண்டுகால யுத்தத்தினால் வடக்கு கிழக்கு மக்கள் முப்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளனர். அவர்களை சமமாக நடத்த வேண்டும், அவர்களை நிராகரிக்க முடியாது. அவர்களின் பொருளாதாரத்தை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
07 ஆகஸ்ட் 2020
மாமனிதர் ரவிராஜ்ஜின் முகம் கறுப்புத் துணியால் போர்த்தப்பட்டது!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் இ.ரவிராஜின் உருவ சிலையின் முக பகுதி கறுப்பு துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் இ.ரவிராஜின் பாரியார் சசிகலா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்யப்பட்டு திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் என சமூக வலைத்தளங்களில் குற்றசாட்டுகள் எழுந்ததையடுத்து, சசிகலாவும் தான் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலையே இன்றைய தினம் காலை சாவகச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள மாமனிதர் இ.ரவிராஜின் உருவ சிலையின் முக பகுதி கறுப்பு துணியினால் மூடப்பட்டுள்ளதுடன், கைகள் மற்றும் கால்கள் சிவப்பு மஞ்சள் துணியினால் கட்டப்பட்டுள்ளன.
03 ஆகஸ்ட் 2020
கள்ள வாக்குச் சீட்டுடன் நால்வர் கைது!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மாதிரி வாக்குச்சீட்டுக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மாதிரி வாக்குச்சீட்டுடன் கட்சி ஆதரவாளர்கள் நடமாடுவதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஒருவரும் கட்சியின் ஆதரவாளர் ஒருவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவருமாக நால்வர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
02 ஆகஸ்ட் 2020
சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க கோரிக்கை!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் கஜேந்திரகுமாரின் கட்சியை ஆதரிக்கின்றோம் எனினும் போராட்டத்தை அரசியல் மயப்படுத்தவில்லை என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல்போன உறவினர்களின் இணைப்பாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.வவுனியாவில் இன்றயதினம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைக் கண்டுபிடிப்பதற்கான தொடர்ச்சியான போராட்டம் இன்று 1261வது நாளாக தொடர்ககிறது.இந்த நாளில் நாங்கள் எதிர்வரும் தேர்தலில் பார்வையாளர்களாக இருக்கமுடியாது.
எங்கள் அரசியலில் ஆகஸ்ட் 5 தேர்தலில் எதுவும் நடக்கட்டும் என்றும் பார்த்துகொண்டிருக்க விட முடியாது.காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் தமிழர்களைக் கண்டுபிடிப்பது ஒரு அரசியல் விவகாரம். அதை தமிழ் தேசிய கொள்கை உள்ள அரசியல்வாதிகளால் தான் தீர்க்க முடியும்.
இது சர்வதேச தலையீட்டின் மூலம் தான் தீர்க்கமுடியும். கடந்த 11 ஆண்டுகளில், இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தோல்வியுற்றது. நாம் தலைமையை மாற்ற வேண்டிய நேரம் இது.
எங்களுக்கு இப்போது இரண்டு மாற்றுதலைமகள் உள்ளன. ஒருவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்.
கஜேந்திரகுமாரின் தலைமையைப் பார்க்கும்போது, அவர் கட்சியில் மூன்று இளம் வழக்கறிஞர்கள்,அவர்கள் அதிக ஆற்றல் கொண்டவர்கள்,மிகவும் நெகிழக்கூடியவர், சர்வதேச அரசியல் மற்றும் ஐ.நா. நடைமுறைகளில் மிகவும் அறிவுள்ளவர்கள்.
அவர்களை வாங்க முடியாது,அவர்கள் மிகவும் நேர்மையானவர்கள் . அவர்களை நீதிமன்றத்திலும் பிரச்சாரங்களிலும் நாங்கள் பார்க்கும் போது, அவர்கள் நல்ல விவாதக்காரர்கள் என்று தெரிகிறது.
எனவே தமிழர்களின் அரசியல் விருப்பத்தை தீர்மானிக்க பொது வாக்கெடுப்புக்கும் சர்வதேச விசாரணைக்கும் யாரையும் ஒப்புக் கொள்ளக்கூடிய விவாதத்தை முன் வைக்க ஆற்றல் கொண்டவர்கள்.
அவர்கள் தமிழ் தேசியவாதிகள்,அவர்கள் ஸ்ரீலங்கா இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பவர்கள் தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்திற்காக என்ன விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பவர்கள்.
அவர்கள் தமிழர் தாயகத்தில் பொருளாதார வளர்ச்சிக்காக பல திட்டங்களை கொண்டுள்ளவர்கள் அதைச் செய்ய தமிழ் புலம்பெயர்ந்தோர் வளங்களைக் கொண்டு வருவதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள். அவர்கள் எம்.பி.க்களாக வந்தால், அவர்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தமிழர்களுக்கு நன்கொடையாக வழங்க விரும்புகிறார்கள்.அவர்கள் இலங்கையுடன் பேச விரும்பவில்லை, ஆனால் அமெரிக்கா அல்லது இந்தியா மதிப்பீட்டாளர்களாக வந்தால்,இந்த வல்லரசுகளுக்கு முன்னால் இலங்கையுடன் பேசுவதை அவர்கள் கருத்தில் கொள்ளலாம் என்கிறார்கள்.
பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகத்திற்காக தமிழர் தாயகத்தில் உள்ள வளங்களை பகிர்ந்து கொள்ள அமெரிக்கா அல்லது இந்தியாவுடன் பேரம் பேச அவர்கள் தயாராக உள்ளனர்.எனவே கஜேந்திரகுமாரின் கட்சியை ஆதரிக்க விரும்புகிறோம். ஆகவே ஆகஸ்ட் 5 ஆம் தேதி சைக்கிளுக்கு வாக்களிக்கவும்,தமிழ் தேசியத்தை பாதுகாக்கவும் கோருகிறோம் என்றார்.
இதேவேளை குறித்த போராட்டத்தில் அரசியல் கலப்பு ஏற்பட்டுள்ளதா என்று ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு அரசியல் கலப்பு எதுவும் இல்லை சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுபவர்கள் நாம் எதிர்பார்க்கும் பொறிமுறையில் செல்வதால் அவர்களை ஆதரிக்கின்றோம் என்றார்,வெளிப்படையாக இவ்வாறான பதாதைகளை காட்சிப்படுத்தி போராட்டத்தை மேற்கொள்வது தாய்மார்களது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதுபோல இல்லையா என்று கேட்டதற்கு. ஒரு கொச்சைப்படுத்தலும் இல்லை இத்தனை நாட்கள் போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம். எங்கள் போராட்டம் தொடர்பான விடயங்களை யார் முன்னெடுக்கின்றார்கள் என ஆராய்ந்த பின்னரே இந்த முடிவினை எடுத்துள்ளோம் என்று மேலும் தெரிவித்தார்.காணாமல் போனோர் போரட்டம் மேற்கொள்ளும் பந்தலை அரசியல் மேடையாக பாவிக்கின்றீர்களா என்று கேட்டதற்கு அப்படி எதுவும் இல்லை. இலங்கை பிரச்சனையாக இதனை வைத்திருக்க நினைப்பவர்களே அப்படி தெரிவிக்கின்றனர் என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)