பக்கங்கள்

10 ஜூலை 2021

இலங்கை இராணுவ ஆடசியை நோக்கி நகர்வதாக சுகாஷ் கண்டனம்!

இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் ஜனநாயக படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு கல்லூரி சட்டமூலத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் அகிம்சை முறையில் எதிர்ப்பு தெரிவிக்க முற்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய பொதுச் செயலாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியாதைக்குரிய ஜோசப் ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டு முறையற்ற விதத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். இந்தக் கைதையும் தனிமைப்படுத்தல் செயற்பாட்டையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கை பாராளுமன்றத்தில் இருக்கின்ற சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு கல்லூரி சட்டமூலம் என்பது இலங்கையை சட்டரீதியாக இராணுவ மயப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு வழிவகுக்கின்ற ஒரு சட்டமூலம். இந்த சட்டமூலத்தை ஜனநாயக வழியிலே எதிர்த்த இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய ஜோசப் ஸ்டாலின் அவர்கள் ஒரு சட்டமூலத்திற்கு ஜனநாயக வழியிலே கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எதிர்ப்பு தெரிவித்தமைக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் உட்படுத்தப்பட்டு தற்சமயம் கேப்பாப்பிலவு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டதாகக்கூறி அடைக்கப்பட்டிருக்கிறார். உண்மையில் இது ஒரு கடத்தல் பாணியிலேதான் அவருடைய தனிமைப்படுத்தல் அமைந்திருக்கிறது என்பது கசப்பான உண்மை. குறித்த சட்ட மூலமானது ஒரு பல்கலைக்கழகத்தை இராணுவ மயப்படுத்தி அந்தப் பல்கலைக்கழகத்தில் வெளியேறுகின்றவர்களை இராணுவ மயமாக்கலுக்கு உட்படுத்தி அதற்கு பழக்கப்படுத்தி வெளியேற்றுகின்ற செயற்பாட்டிற்கு அனுமதிக்கின்ற ஒரு சட்டமூலமே இதுவாகும். இந்தக் கல்லூரி இலங்கையினுடைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்பது அவதானிக்கப்பட வேண்டிய விடயம். ஆகவே இது ஒரு தனியான சட்டத்தின்கீழ் ஆளப்படுகின்ற ஒரு கல்லூரியாக இருக்கிறது. இதனுடைய தாற்பரியத்தை உணர்ந்து ஜோசப் ஸ்டாலின் அவர்களும் சகோதர மொழி பேசுகின்ற நபர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தார்கள். அதற்காக அவர்கள் கைது செய்யப்பட்ட முறையே ஜனநாயகத்திற்கு முரணானதாக இருந்தது . கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதும் நீதிமன்றத்தினால் இவர்களை தனிமைப் படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. நீதிமன்றத்தினுடைய அனுமதியையும் மீறி நீதிமன்றத்தினுடைய கட்டளையையும் பெறாமல் எந்தவித பி.சி.ஆர் பரிசோதனையோ அல்லது ஆன்டிஜன் பரிசோதனையோ மேற்கொள்ளாமல் இவர்கள் கைது செய்யப்பட்டு தற்பொழுது கேப்பாபிலவு வான்படை முகாமிலே அடைக்கப்பட்டிருக்கிறார். அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாது முறையற்ற விதத்தில் இந்த தனிமைப்படுத்தலானது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இவருடைய கைது ஒரு ஜனநாயக படுகொலை அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஏனென்றால் இலங்கை ராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது,கோட்டாபய அரசினுடைய எதேச்சதிகார சர்வாதிகார ஆட்சி எல்லை மீறிக்கொண்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தின் ஊடாக இராணுவ மயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தை உற்பத்தி செய்கின்ற பிரசவிக்கின்றதாகவே இந்த சட்டமூலம் அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

07 ஜூலை 2021

தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கை மக்களுக்கு இல்லை-சபையில் கஜேந்திரகுமார்!

தமிழ் மக்கள் வலுக்கட்டாயமாக காணமால் ஆக்கப்பட்டமை குறித்து தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலத்தில் திருத்தங்களை செய்ய எடுக்கும் முயற்சியை நான் வரவேற்கின்றேன். 17 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை, குறிப்பாக அரசியல் அமைப்பு சபை இயக்கத்தில் இருக்கவே இல்லை. இப்போதும் இந்த சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றமை முக்கியமானது, ஆனால் நீதிமன்ற சுயாதீனம் என்ற விடயத்தில் சந்தேகம் உள்ளது. அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலயத்தை பொறுத்தவரை இந்த பிரேரணை வந்தபோது தற்போதைய அரசாங்கம் மிக மோசமாக விமர்சித்தது. இந்த பிரேரணையை அரசாங்கம் நிராகரிப்பதாக கூறியது. முன்னைய அரசாங்கமும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இருந்து விடுபட இதனை பயன்படுத்திக்கொண்டது. எவ்வாறு இருப்பினும் காணமால் ஆக்கப்பட்டோருக்கான காரியாலயம் மிகவும் முக்கியமானதாகும். இதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பின் பக்கம் இருந்து இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. இறுதியாக அவர்கள் வாக்குமூலம் கொடுப்பதை நிராகரிக்கும் நிலைமை உருவாகியது. அதேபோல் இராணுவத்தை தண்டிக்க இடமளிக்க மாட்டோம் என சிங்கள அரசியல் வாதிகள் கூறிக்கொண்டிருந்தனர். அவ்வாறு இருந்தால் எவ்வாறு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும். தமிழ் மக்கள் வலுக்கட்டாயமாக காணமால் ஆக்கப்பட்டமை குறித்து தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. முன்னைய அரசாங்கமும் இதனை சாதகமாக பயன்படுத்தி நெருக்கடியில் இருந்து தப்பிக்கவே முயற்சி செய்தது. இப்போதுள்ள அரசாங்கமும் அவ்வாறான நடவடிக்கையே முன்னெடுத்து வருகின்றது. இறுதி யுத்தத்தில் மிக மோசமான அழிவுகள் ஏற்பட்டது. இராணுவ அதிகாரிகள்தான் அதனை செய்தனர் என்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் குற்றம் இடம்பெற்றதை உறுதிப்படுத்தும் நிலைமை இருந்தும் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியாது 12 ஆண்டுகள் கடந்துள்ளது. இது இனியும் தொடர்ந்தால் குற்றவாளிகள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றார்.

06 ஜூலை 2021

நாரந்தனை வடக்கும் முடக்கப்பட்டது!

இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களின் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் படைத்தளபதி தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நாரந்தனை வடமேற்கு பிரதேசமும், மாத்தறை மாவட்டத்தில், உயன வத்த, உயன வத்த வடக்கு பிரதேசங்களும், களுத்துறை மாவட்டத்தில், புஹாபுடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மலபடவத்த பிரதேசமுமே முடக்கப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.