பக்கங்கள்

21 நவம்பர் 2021

கனடா கூட்டத்தில் பதற்றம் பொலிஸ் பாதுகாப்புடன் தப்பினார் சுமந்திரன்!

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்ற கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிகழ்வு இடைநிறுத்தப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் சுமந்திரன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்க பயணத்தை அடுத்து. கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொண்டுள்ளார். இவர்கள் நேற்று கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், கலந்துரையாடல் நடக்கும் மண்டபத்துக்கு வெளியே நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக குறித்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து,45 நிமிடம் தாமதமாகி குறைவான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் ஆரம்பமாகியது. இதன்போது,கூட்டத்தில் மக்கள் தமது கேள்விகளை வாய்மொழியாக கேட்க முற்பட்ட போது அதனை எழுத்துமூலமாக எழுதி தருமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த நிலையில் அங்கு சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.பல பகுதிகளிலிருந்தும் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள மக்கள் தம்மால் எழுத்துமூலமாக கேள்விகளை வினவ முடியாதென தெரிவித்த நிலையில், வாய்மொழியாக கேள்விகளை கேட்க பின்னர் ஏற்பாட்டாளர்கள் அனுமதித்துள்ளதுடன்,குறைந்தளவிலான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் இடம்பெற்றது.இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டம் இடம்பெற்ற மண்டபத்திற்குள் நுழைந்து சுமந்திரனை அங்கிருந்து வெளியேறுமாறு குழப்பத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சுமந்திரனை பொலிசாரின் பாதுகாப்புடன், மண்டபத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.என செய்திகள் தெரிவிக்கின்றன.

13 நவம்பர் 2021

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம்!

13-11-2021 மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம். எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 27 திகதிவரையான காலப்பகுதி தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான வாரமாகும். அக்காலப்பகுதி தமிழ் மக்களின் விடிவுக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரச் செல்வங்களை நினைவு கூரும் நாட்களாகும். இந்நாட்கள் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து மறைக்கப்படமுடியாததும், திசைதிருப்பப்பட முடியாததுமாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகும். இனவிடுதலை நோக்கிய, ஆயுதப் போராட்டம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டதன் பின்னணியையும், தமிழ் மக்கள் ஆயுதமேந்தியதன் நியாயத்தன்மைகளையும், அதிலிருந்த தியாகங்களையும், அடுத்த சந்ததியினரும் தேடிப்பார்க்கக்கூடியவாறு வரலாற்றுக் கடத்திகளாகவும் இருக்கக் கூடிய நாட்களாகும். இந்நாட்கள் இறந்தவர்களை நினைவுகூருகின்ற சாதாரண நாட்களுமல்ல. தமிழின விடுதலைக்காக வித்தாகிப்போன வீரமறவர்கள், தமிழர் தாயகக் கனவோடு துயில்கொள்வதாகக் கருதி, தமிழினத்தின் விடுதலை இலக்கு திசை மாறாமல் செல்ல, தமிழ்த் தேச மக்கள் சபதம் செய்யும், தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆணிவேரான நாட்களாகும். எனவே இறந்தவர்களை நினைவு கூருவது என்கின்ற சொல்லாடல் ஊடாகவும், வேறுநாட்களைக் குறிப்பிட்டும், சாதாரண மரணங்களோடு, தமிழின விடுதலைக்காக வித்தாகிப் போனவர்களின் தியாகங்களையும் இணைத்து, வட கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் மன்றம் மதிப்பீடு செய்து பொதுமைப்படுத்துவதென்பது, மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், தமிழ்த் தேசிய தாகம் கொண்டவர்களிடத்தில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்திய செயற்பாடாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. தமிழ்த் தேசிய அரசியலுக்காக தம்மைத் தியாகம் செய்த ஆயர்கள், குருக்களை உருவாக்கித் தந்த கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை நினைவு கூரும் நாட்களாக நவம்பர் 20ம் திகதியை பொதுமைப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முடிவு ஆரோக்கியமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். கெடுபிடிகள் நிறைந்த சிறிலங்கா அரச இயந்திரத்தால், மாவீரர்களை நினைவுகூர்வதற்கு பல்வேறு வழிகளிலும் தடைகளை ஏற்படுத்த முற்படும் வேளையில், தமிழின தாயக விடுதலைக்காக வித்தாகிப்போன மாவீரர்களின் வாரத்தை, நவம்பர் 21-27 திகதிவரை நினைவிருத்தும்வகையிலும், வடக்குக் கிழக்குத் தழிழர் தாயகமெங்கும் நவம்பர் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணியொலி எழுப்பி வரலாற்றைக் கடத்துவதுமே வரவேற்கத்தக்க விடயமாக அமையும் என்பதையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். எனவே ஆயர்மன்றமானது தமது முடிவை பரிசீலனைசெய்து அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உரிமையுடனும் பணிவன்புடனும் கேட்டுக்கொள்கின்றோம். 
நன்றி!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
தலைவர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

செல்வராசா கஜேந்திரன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம்.

நன்றி!முகநூல் சுகாஷ்.