பக்கங்கள்

30 செப்டம்பர் 2012

இடம்பெயர் மக்கள் என யாரும் இல்லை என்கிறார் கோத்தபாய!

யுத்த இடம்பெயர் மக்கள் யாரும் கிடையாது என சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கு யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சகல மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர்,200க்கும் குறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளே தற்போது புனர்வாழ்வு பெற்று வருகின்றனர்,விரைவில் இந்த முன்னாள் போராளிகளும்  சமூகத்துடன் மீள இணைக்கப்படுவார்கள் எனவும்  கோத்தபாய  குறிப்பிட்டுள்ளார். முன்னாள் போராளிகளின் குடும்ப உறுப்பினர்களை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 80 வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட கோத்தபாய  யுத்த வலயங்களில் 6000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 7000 வீடுகள் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும்  தெரிவித்துள்ளார். போலியான பிரச்சாரங்களை மேற்கொள்ளாது நேரடியாக வடக்கிற்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிடுமாறும் கோதபாய தெரிவித்துள்ளார்.

29 செப்டம்பர் 2012

தமிழீழத்தை கைவிடுங்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் திடீர் அழுத்தம்!

ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள தமிழீழத்தினை கைவிடுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில சர்வதேச நாடுகள் கொடுக்கப்பட்ட அழுத்தம் தோல்வியில் முடிந்துள்ளது. இலங்கைத் தீவின் இனநெருக்கடிக்கு தீர்வுகாணும் பொருட்டு தமிழீழம் எனும் நிலைப்பாட்டினை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள் இந்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தென்னாபிரிக்கா மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் உலகத் தமிழர் பேரவையுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் குறித்த இவ்விரு நாடுகளுமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு இந்த அழுத்தத்தினை கொடுத்ததாக தெரியவருகின்றது. தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கான இறுதித்தீர்வாக அமையுமென்பதனை குறித்த நாடுகளுக்கு உறுதிபடத் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு சுதந்திர தமிழீழத்தினை வென்றெடுப்பதற்கான விடுதலைப்பாதையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழர்களின் பேராதரவுடன் செல்லுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தனது உத்தியோகபூர்வ அரச அமர்வுகளில் தமிழீழத் தேசியக் கொடியினை வெளிக்கொண்டுள்ளதோடு தமிழர் தாயகத்தில் அன்று நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசின் தொடர்சியாக உருப்பெற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்க சனநாயக வழிமுறையூடாக சர்வதேச அங்கீகாரத்தினை கோரியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

-நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-

அநாதைகளாக சுடலைக்குள் தள்ளிவிட்டுள்ளனர்!

அநாதைகளாக சுடலைக்குள் தள்ளிவிட்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளதாகஅரச அதிபர் கூறுகிறார்அநாதைகள் போல காட்டுப் பகுதிக்குள் சுடலைக்குள் தள்ளிவிட்டு இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. அவ்வாறு இருக்கும் போது அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் கூறியிருப்பது வேதனைக் குரியது. அவர் கூறுவதில் உண்மை இல்லை என சூரியபுரம் காட்டுப் பகுதியில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்டு கேப்பாபிலவுக் கிராமத்தைச் சேர்ந்த 110 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் சூரியபுரம் காட்டுப்பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் இந்த மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சூரியபுரத்தில் காட்டு பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பஸ்தர் ஒருவர், முகாமிலிருந்து எங்களை மந்தைகள் போல் ஏற்றிவந்து இந்த காட்டுப் பகுதியில் அநாதரவாக விட்டுள்ளனர். எமக்கு தற்காலிக வீடுகள் அமைப்பதற்கு தடி தண்டுகளோ ஏனைய வசதிகளோ வழங்கப்படவில்லை. முகாமில் இருந்து கொண்டு வந்த தடிகளைப் பயன்படுத்தி தறப்பாள்களை கட்டி அதற்குள் பலத்த சிரமத்தின் மத்தியில் வாழ்கின்றோம். மின்சாரம் இல்லை. அதேவேளை விளக்குகளும் இல்லை. வெறும் மண்ணெண்ணெய் மட்டும் வழங்குகின்றனர். இதனை வைத்து நாம் என்ன செய்வது. குடிதண்ணீர் வசதியில்லை. மலசலகூட வசதி செய்து தரப்படவில்லை. இளம் பெண்கள் உட்பட இயற்கைக் கடன்களைக் கழிப்தற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் உடமைகள் நனைந்து விடுகின்றன. நாம் இங்கு கொண்டு வந்துவிடப்பட்டு நான்கு நாள்கள் கடந்த நிலையிலும் எந்த ஒரு அரச அதிகாரிகளும் எம்மை வந்து பார்க்கவில்லை. இவ்வாறு இருக்கையில் எமக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வேடிக்கையானது மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அங்குள்ள இளம் குடும்பப் பெண் ஒருவர் தெரிவிக்கையில் நாம் காட்டுப் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்கின்றோம். எனது வீட்டுக்குப் பின்புறம் பெரும் காடு. அப் பகுதியில் இரவு பகல் என்று பாராது இராணுவத்தினர் வந்த வண்ணம் உள்ளனர். தனிமையில் இருக்க முடியவில்லை. அடிக்கடி இராணுவப் புலனாய்வாளர்கள் சுற்றிச் சுற்றி வருகின்றனர். எமது வீடுகள் தூரத் தூர இருப்பதால் தனிமையில் இருக்கும் போது என்ன நடைபெறுமோ தெரியாது அச்சமாக உள்ளது. இதேவேளை ஒழுங்கான வீடு இல்லாத காரணத்தால் வீட்டுப் பொருள்களைப் பாதுகாக்க முடியாதுள்ளது என தெரிவித்துள்ளார்.

புதிய நகர்வில் விடுதலைப் புலிகள்: - கொழும்பு நாளேடு

ஜெனிவாவில் நவம்பர் மாதம் முதலாம் நாள் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ள நிலையில், அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் புதிய நகர்வு ஒன்றில் விடுதலைப் புலிகள் இறங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா நிபுணர்குழுவின் பரிந்துரைக்கு அமைய, அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி பிரித்தானியாவைத் தளமாக கொண்டியங்கும் உலகத்தமிழர் பேரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை மற்றொரு விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பான அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கை குழுவும், இதுதொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளேடு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த அமைப்பு நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ளது. அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி அண்மையில் 31 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கு கடிதம் எழுதியதன் பின்னணியிலும் இந்த அமைப்பே இருந்ததாகவும் கொழும்பு ஆங்கில நாளேடு குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே, தென்னாபிரிக்கா மற்றும் சுவிற்சர்லாந்து அரசாங்கத் தரப்புகளுடன் உலகத் தமிழர் பேரவை பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 23, 24ம் நாள்களில் இந்தச் சந்திப்புகள், இடம்பெற்றுள்ளன. வண. இமானுவல் அடிகளார் தலைமையிலான, உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு தென்னாபிரிக்க மற்றும் சுவிற்சர்லாந்து அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்த ஆராயப்பட்டதாகவும், போரின் போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் தேடுவதற்கு அனைத்துலக போர்க்குற்ற விசாரணையே ஒரே வழி என்று வலியுறுத்தப்பட்டதாகவும் உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

28 செப்டம்பர் 2012

கிளிநொச்சி மக்கள் ஐ.நாவுக்கு அவசர மகஜர்!

தமிழ் இனத்தினதும் சர்வதேச சமூகத்தினதும் எதிர்பார்ப்புகளான நல்லிணக்கம், பகை மறப்பு, மீளுருவாக்கம், மனித உரிமைகள் காப்பு, அதிகாரப் பகிர்வு என்பவற்றைப் புறந்தள்ளி தேசிய இன மான தமிழ் இனத்தை ஒடுக்குவதற்காக தமிழர்களின் நிலத்தையும் அரசு அபகரித்து வைத்திருக்கிறது. எனவே ஐ.நாவும் சர்வதேசமும் உடனடியாகச் செயற்பட்டு இந்த நில அபகரிப்பைத் தடுத்து நிறுத்துவதுடன் தமிழ் மக்களின் அமைதியான, சுதந்திரமான, மனித உரிமைகள் தழுவிய வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. செயலர் பான் கீமூனுக்குக் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அவசர மனு ஒன்றை நேற்று வியாழக்கிழமை அனுப்பி வைத்துள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐ.நா தூதரகத்தில் வன்னிக்கான வதிவிடப் பிரதிநிதி விக்ரோரியாவிடம் நேற்று இந்த மனு கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக் காரணமாக சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத நிலையில் உள்ள பரவிப் பாஞ்சான், மருதநகர், கிருஷ்ணபுரம், இரணைதீவு, இயக்கச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து இந்த மனுவைக் கையளித்துள்ளனர். இந்த மனுவின் பிரதி ஒன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக நில ஆக்கிரமிப்புக்கும் இன ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். இந்த நிலை 2009ஆம் ஆண்டு அரசு புலிகள் இறுதிப் போரின் பின்னர் அதி தீவிரத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலப்பறிப்பும், நில ஆக்கிரமிப்பும் திட்டமிட்ட முறையில் அரசால் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கு முழுமையும் இந்த நடவடிக்கைகள் அரசால் மிகச் செறிவாக மேற்கொள்ளப்படுகிறது. குடிமக்களுக்குச் சொந்தமாக வாழ்விடங்கள் அபகரிக்கப்படுவதுடன் சொந்தக் காணிகளில் மீளக்குடியேற முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பல கிராமங்களில் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளின் நிமித்தம் பாதிக்கப்பட்ட மக்கள் 2012.09.27 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று கூடிய நாம் எமது மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளை, கவலைகளை, கண்டனங்களை, மீளக்குடியேறுவதற்கான எமது உரிமையை இந்த மனுவில் ஊடாகத் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம். சரித்திரபூர்வமாகத் தமிழர்கள் வாழ்ந்த நிலங்களும், அவர்களுடைய வளங்களும் அரசாலும், அரச படைகளாலும் பலவந்தமாகப் பறிக்கப்பட்டு வருகிறன. இந்தப் பிரதேசத்தில் வாழுகின்ற குடிசன எண்ணிக்கைக்குப் பொருத்தமற்ற விகிதாசாரத்தில் அதிகரித்த இராணுவப் படையணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தகைய படைச் செறிவு அதிகரிப்பு எமது மக்களின் நாளாந்த வாழ்க்கையை அச்சுறுத்துவதாக அமைவதுடன் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தின் தலையீட்டுக்கும் வழிகோலியுள்ளது. தேசிய பாதுகாப்பு, அபிவிருத்தி என்கின்ற கருத்து நிலைப்பாடுகளுக்கூடாக படைத்துறைப் பரவலாக்கலையும், நில அபகரிப்பையும் அரசு நியாயப்படுத்தி வருகிறது. தமிழ்ச் சமூகத்தினதும் சர்வதேவ சமூகத்தினதும் எதிர்பார்ப்புகளான நல்லிணக்கம், பகைமறப்பு, மீளுருவாக்கம், மனித உரிமைகள் காப்பு, அதிகாரப் பகிர்வு என்பவற்றைப் புறந்தள்ளியவாறு தேசிய இனம் ஒன்றை ஒடுக்குவதற்கான நவீன தந்திரோபாயங்களுடன் தமிழ் இனத்தையும் அவர்களின் நிலத்தையும் அரசு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. தமிழ்ச் சமூகம் நம்பிக்கையோடு ஏற்றிருக்கின்ற ஜெனீவாத் தீர்மானத்தை மதிப்பதில்லை என்ற அதிகார மமதையோடும் அரசியல் மற்றும் சிவில் சமூகங்களின் மீதான அச்சுறுத்தல்களை அதிகரித்தவாறும் அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் பேணாநிலை தொடர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே கிளிநொச்சி மாவட்டத்தின் பின்வரும் இடங்களில் எங்களுடைய காணிகளில் மீளக்குடியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீளக்குடியேறுவதற்கு எமக்குள்ள உரிமையை உறுதிப்படுத்தும் அதேவேளை தமிழ் மக்களுடைய அமைதியானதும், சுதந்திரமானதும், மனித உரிமைகள் தழுவியதுமான வாழ்வியல் ஒன்றைக் கட்டமைப்பதற்கு சர்வதேச சமூகம் தனது சர்வதேச கடப்பாடுகளை வலுவான முறையில் செயற்படுத்துமாறு வலியுறுத்தி அந்த மனுவைத் தங்களுக்கு முன்னளிக்கின்றோம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

27 செப்டம்பர் 2012

காணி சுவீகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

வட பகுதியில் தமிழர்களின் காணிகளை இராணுவத் தேவைக்காக சுவீகரிப்பதை கைவிடக்கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதன்போது, காணாமல் போனோரை மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், இரணைத்தீவு, மருதநகர், பரவிப்பாஞ்சான் ஆகிய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பினர். அத்துடன் பரவிப்பாஞ்சானில் வாழவிடு, எங்கள் கிராமங்களில் வாழவிடு, எமது கிராமங்களில் இருந்து இராணுவமே வெளியேறு, காணாமல்போனோர் தொடர்பில் பதில்சொல் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், காணாமல் போனோரின் உறவினர்கள், மீள்குடியேற்றப்பட்டாத கிராம மக்கள் மற்றும் பொதுமக்களுடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன், வினோ நோகதாரலிங்கம் ஆகியோரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் மனோ கணேசன் மற்றும் அக்கட்சியின் ஊடக செயலாளர் பாஸ்கரா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரன் வவுனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதன், பாண்டியன்குளம் பிரதேச சபையின் உபதலைவர் எஸ்.செந்தூரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு வழங்குவதற்கான மகஜரொன்றினையும் மீள்குடியேற்றப்பட்டாத கிராம மக்களின் சார்பில் சிலர் கிளிநொச்சி ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய உத்தியோகஸ்தர்களிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்குளியில் பூசகர் ஒருவர் அடித்துக்கொலை!

மோதர - மட்டக்குளி - தொட்டுபொல வீதியில் பூசகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (26) இரவு 8 மணியளவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக மோதர பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர் 21 வயதுடைய இளைஞராவார். இவர் வசித்து வந்த வீட்டில் தனியார் ஆலயம் ஒன்று இயங்கியதாகவும் அதில் குறித்த இளைஞரும் அவரது தந்தையும் பூஜை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் இளைஞரின் வீட்டுக்குள் நுழைந்து கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார். கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மோதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிள்ளையான் ஆறாயிரத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றதாக கருணா தெரிவிப்பு!

பிள்ளையான் ஆறாயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றதாக கருணா கூறியுள்ளார்?முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆறாயிரத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரியிடம் முறையிட்டுள்ளார். கொழும்பில் உள்ள உயர் அதிகாரிகள் சிலரின் உத்தரவுக்கு ஏற்ப மட்டக்களப்பு செயலக அதிகாரிகள் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் விருப்பு வாக்குகளை 22ஆயிரமாக அதிகரித்ததாகவும் முரளிதரன் கூறியுள்ளார். விருப்பு வாக்குகள் அதிகரிக்கப்பட்ட விடயத்தை ஊடகவியளலாளர்களிடம் கூற வேண்டாம் என தனக்கு நெருக்கமான அதிகாரிகள் வலியுறுத்தியதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியதாக இராஜதந்திரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு தகவல் ஒன்று கூறுகின்றது.

26 செப்டம்பர் 2012

ஐ.நா வரை சென்றது கேப்பாபிலவு!

newsசொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் நிர்க்கதியாகி உள்ள கேப்பாபிலவு மக்கள் குறித்து உடன் கவனம் செலுத்தி அவர்களுக்கான தீர்வை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்தை கேட்டுள்ளது. 'மனிக் பாம்' முகாம் மூடப்பட்டமையானது இலங்கை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கணிக்கப்படுகிறது. எனினும், இன்னும் பலர் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாத நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கான உடனடித் தீர்வொன்று கண்டுபிடிக்கப்படவேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான 'மனிக்பாம்' முகாமை மூடியதை வரவேற்கும் ஐக்கிய நாடுகள் சபை, யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களைப்பற்றிய அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான மனிதாபிமான இணைப்பாளர் சுபினாய் நந்தி, வன்னியில் இடம்பெயர்ந்தவர்களில் 346 பேர் இன்னும் தங்களது சொந்த இடங்களான கேப்பாபிலவு, மந்துவில் ஆகிய பகுதிகளில் செல்லமுடியாத நிலையில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். 'இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், 'மனிக் பாம்' முகாம் மூடப்பட்டமையானது இலங்கை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கணிக்கப்படுகிறது. எனினும், இன்னும் பலர் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாத நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளனர். இதற்கான உடனடித் தீர்வொன்று கண்டுபிடிக்கப்படவேண்டும்'' என அவர் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'மனிக் பாம்' முகாமிலிருந்து வடபகுதியின் முல்லைத்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த 346 பேர் (110 குடும்பங்கள்) வெளியேறியுள்ள போதிலும், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லமுடியாத நிலையில் உள்ளனர். அதற்குப் பதிலாக அவர்கள் அரச காணிகளில் குடியேற்றப்பட்டுள்ளனர். தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லமுடியுமா அல்லது அவ்வாறு செல்லமுடியாத பட்சத்தில் தங்களுக்கு உரிய நட்டஈடுகள் கிடைக்குமா என்ற அங்கலாய்ப்புடன் உள்ள அவர்களுக்கு எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகியுள்ளது. யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்காகக் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள தீர்வுகளை இலங்கை அரசு வழங்கவேண்டும் என நந்தி மேலும் தெரிவித்தார். 'இடம்பெயர்ந்த மக்கள் இலங்கையில் எந்தப் பாகத்திலும் குடியேற அனுமதிக்கப்படலாம். எனினும், தங்கள் சொந்த இடங்களைவிட்டு வேறு இடங்களில் குடியேற்றப்படுபவர்களுக்கு அவர்கள் குடியேறும் காணிகளின் சட்டபூர்வமான உரித்துடைமை வழங்கப்படவேண்டும் என்பதே நல்லிணக்க செயற்பாட்டின் பிரதான அம்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் காங்கிரஸாரின் வீடுகள் மீது குண்டுத்தாக்குதல்!

முஸ்லிம் காங்கிரஸ் உப தலைவர் மற்றும் அக்கட்சியின் மாநகரசபை உறுப்பினர் ஒருவரது வீடுகளின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.45 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். கல்முனை சாய்ந்தமருது முதலாம் பிரிவு, ஒராமிக் பாசா வீதியிறுள்ள முஸ்லிம் காங்கிரஸின் உப தலைவர் அப்துல் மஜித் மற்றும் சாய்ந்தமருது மூன்றாம் பிரிவு, மாவடி வீதியில் அமைந்துள்ள அக்கட்சியின் மாநகர சபை உறுப்பினர் பிரதோஷ் ஆகியோரது வீடுகளின் மீதே பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலின் காரணமாக இவர்களது வீடுகளிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

25 செப்டம்பர் 2012

தமிழ் ஊடகங்களையும் புலம்பெயர் தமிழரையும் சாடுகிறார் பிள்ளையான்!

நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் உணர்ச்சிகரமான பேச்சில் மயங்கி அவர்களுக்கு வாக்களித்துள்ளதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பட்டுள்ளார். இதேவேளை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்பது போல கிழக்கு மாகாணத்தில் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை வழங்க அரசியலமைப்பு திட்டத்தில் இடமுண்டா? என ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் சுழற்சி முறை முதலமைச்சர் திட்டமானது அபிவிருத்தி வேலைகளை பாதிக்கும் என்பதால் அது பொருத்தமானதல்ல எனவும் அவர் எடுத்துரைத்துள்ளார். நடைபெற்ற கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் தான் முதலமைச்சராக வரவேண்டும் என்ற நோக்கிலேயே போட்டியிட்டதாகவும், தனக்கு 15 ஆயிரம் வாக்குகள் இன்னும் மேலதிகமாக கிடைத்து, தமது கட்சி சார்பில் மூவர் வெற்றி பெற்றிருந்தால் நிச்சியமாக தான்தான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பேன் எனவும் கூறினார். அதன் அடிப்படையில் கிழக்கு மாகாண மக்கள் அரசியலைப் புரிந்து கொள்ளவில்லை என தான் கவலையடைவதாகவும், இந்த பின்னடைவை ஒரு தற்காகலிக பின்னடைவாகவே பார்ப்பதாகவும், எதிர்காலத்தில் வெற்றிப்பயணத்தை தொடர்வோம் எனவும் பிள்ளையான் நம்பிக்கை வெளியிட்டார்.

குடும்பஸ்தரை ஏமாற்றிய சிறுவர்கள்; மதுவைக் குடித்து உடைமைகளை பறிகொடுத்தார்!

மறைவிடம் ஒன்றில் நின்று மதுபானம் வாங்கித் தருமாறு சிறுவர்கள் கோரிய நிலையில் அவற்றை வாங்கிக் கொடுத்தவர் உடைமைகளை இழந்தார். இந்தச் சம்பவம் அண்மையில் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் இடம்பெற்றது. வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவரிடம் மறைவிடம் ஒன்றில் நின்ற சிறுவர்கள் தமக்கு மதுபானம் வாங்கித் தருமாறு கேட்டுள்ளனர். அவர்களிடம் பணம் பெற்று மதுபானம் வாங்கிக் கொடுத்தபோது தம்முடன் குடிக்க வருமாறு சிறுவர்கள் கோரியுள்ளனர். இவர்களின் "அன்புத் தொல்லையை" மீறமுடியாமல் அவர்கள் கொடுத்த மதுவை அருந்திய சில நிமிட நேரத்தில் குறித்த நபர் மயக்கமானார். மறுநாள் காலையில் அவ்வழியே சென்ற ஒருவர் அவரைத் தட்டி எழுப்பியபோதுதான் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணம் ஆகியவை திருடப்பட்டமை தெரியவந்தது. மதுவின் தாக்கத்தால் பல மணிநேரம் கண்விழிக்க முடியாத நிலை ஏற்பட்டது. சாவகச்சேரி வடக்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டது.

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பெண்கள்,சிறுவர்கள் கண்ணீர்!

newsபலத்த எதிப்புக்கும் மத்தியில் செட்டிகுளம் நலன்புரி முகாமில் தங்கி யிருந்த கேப்பாபிலவு, மந்துவில் கிராமங்களைச் சேர்ந்த 361 குடும்பங்களும் நேற்றுத் திங்கட்கிழமை இராணுவத்தினரால் பலத்த பாதுகாப்புடன் வற்றாப்பளைக்கு கொண்டுவரப்பட்டனர்.பலவந்தமாக இந்தக் குடும்பங்கள் முல் லைத்தீவு மாவட்டத்தின் கைவேலி மற்றும் வற்றாப்பளை மகா வித்தியாலயம் ஆகிய இடங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றித் தங்கவைக்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லா மையால் தாம் அங்கு பெரும் அவலப்பட்டுக் கொண்டிருந்ததாக அந்த மக்கள் உதயனுக்குத் தெரிவித்தனர். நேற்றுக்காலை செட்டி குளம் நலன்புரி நிலையத் துக்குச் சென்ற இராணு வத்தினரும் அரச அதிகாரி களும் அங்கிருந்த மக் களை வெளியேற்றுவதற் கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அங் கிருந்த மக்கள் பஸ்களில் ஏற்றப்பட்டார்கள். அவர்களுடைய பொருள்கள் அனைத்தும் லொறிகளில் ஏற்றப்பட்டன. முதலில் மந்துவில் கிராமத்தைச் சேர்ந்த குடும் பங்கள் அங்கிருந்து பிற்பகல் ஒரு மணியளவில் முல்லைத்தீவு நோக்கிக் கொண்டு செல்லப்பட் டன. இந்தக் குடும்பங்கள் புதுக்குடியிருப்பு கைவேலி என்ற இடத்தில் மர நிழல்களின் கீழ் நேற்று மாலை 5 மணியளவில் இறக்கிவிடப்பட்டன. அந்தக் குடும்பங்கள் தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் மர நிழல்களிலேயே தமது பொழுதைக் கழித்தன. இந்த மக்களுக்கான உணவு வசதிகளை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஏனைய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாமையால் அந்தக் குடும்பங்கள் பெரும் நிர்க்கதியான நிலையில் அவலப்பட்டுக் கொண்டிருந்தன. இதன்பின்னர் பிற்பகல் 1.30 மணியளவில் கேப்பாபுலவு கிராமத்தைச் சேர்ந்த 110 குடும்பங்கள் செட்டிகுளம் முகாமில் இருந்து ஏற்றிவரப்பட்டன. இந்த மக்கள் வற்றாப்பளை மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கும் உணவு வசதி மாத்திரமே ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஏனைய அடிப்படை வசதிகள் இல்லாமையால் அங்கு பெண்களும், சிறுவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தம்மை சொந்த இடங்களான கேப்பாபுலவு, மந்துவில் பகுதிகளில் இன்று குடியமர்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினர் தம்மிடம் கூறியதாக அந்த மக்கள் தெரிவித்தனர். செட்டிகுளம் அகதி முகாமில் இருந்து மக்களை வெளியேற்றிய பின்னர் அங்கிருந்த அனைத்துக் கட்டடங்களையும் படையினர் தகர்த்து நிர்மூலமாக்கியதாக மக்கள் தெரிவித்தனர்.

24 செப்டம்பர் 2012

இலங்கை சிறையில் தமிழக மீனவர் மரணம்!

இலங்கை சிறையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களில் ஒருவரான தங்கராஜ் உயிரிழந்துள்ளார். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேர் ஓராண்டுக்கு முன்பு போதைப் பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்ய இந்திய தூதரகம் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இவர்கள் மீதான வழக்கு விசாரணையின் போது இலங்கை போலீசார் வாய்தா வாங்கிக் கொண்டே வந்தனர். இந்த நிலையில் இன்று முற்பகல் திடீரென ஐந்து மீனவர்களில் ஒருவரான தங்கராஜ் என்பவர் உயிரிழந்திருப்பதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். மீனவர் தங்கராஜின் மரணம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழருக்கு விரோதமான நிபந்தனைகளை விதித்தது முஸ்லிம் காங்கிரஸ்? – போட்டுடைத்தார் ஹசன் அலி

கிழக்கு மாகாணசபையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விதித்த நிபந்தனைகள், இன ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்று அந்தக் கட்சி ஒப்புக் கொண்டுள்ளது. கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அழைப்பை நிராகரித்து விட்டு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு அளித்திருந்தது. கிழக்கில் ஆளும்கட்சிக்கு ஆதரவு அளிப்பதற்கு எடுத்த முடிவுக்கான காரணங்கள் குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று கொழும்பில் ஒழுங்கு செய்திருந்தது. இந்தச் செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்ளவில்லை. இங்கு கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச் செயலர் ஹசன் அலி, "கிழக்கு மாகாண முதல்வராக பதவியேற்றுள்ள நஜீப் அப்துல் மஜீத், இரண்டரை ஆண்டுகளின் பின் பதவி விலகி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அந்தப் பதவியைப் பெறுவதற்கு வழிவிட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்துடன் எழுத்துமூல உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் எனவும், தமிழர் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் எமது கட்சி யோசனை தெரிவித்துள்ளது. இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் பதவியை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கத் தவறினால், கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்குவது குறித்து புதிய தீர்மானத்தை மேற்கொள்வோம். கிழக்கு மாகாணசபையில் ஆதரவளிப்பதற்கு, வேறு பல முக்கிய நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன ஒற்றுமையின்மை ஏற்படலாம் என்பதால் தற்போது அவற்றை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை." என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மனிக்பாமுக்கு மூடுவிழா; கேப்பாபுலவு மக்கள் நிர்க்கதிக்குள்!

வவுனியா மனிக்பாம் நலன்புரி நிலையத்துக்கு மூடுவிழா செய்வதற்காக அங்கு தங்கியிருந்த கேப்பாப்புலவு மக்களை நிர்ப்பந்தித்து அரசு வெளியேற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேப்பாப்புலவுப் பகுதியில் இன்னமும் படைத்தளங்கள் விலக்கப்படாததோடு, கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கையும் பூர்த்தியாகாத நிலையிலேயே அந்தப் பகுதி மக்களை முகாமில் இருந்து வெளியேற்றி வேறு இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. "இலங்கையில் நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு அவற்றில் தங்கியிருந்த மக்கள் அனைவரும் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர் என்று சர்வதேசத்துக்கு காட்டுவதற்காகவே இவ்வாறு நாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றோம்'' என்று பாதிக்கப்பட்ட மக்கள் நேற்றிரவு "உதய'னுக்குத் தெரிவித்தனர். ஜெனிவாவில் நடை பெற்றுவரும் மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கையில் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளில் ஒன்றாக மீள்குடியமர்வு முற்றுப்பெற்று விட்டது. என்று காட்டுவதற்காகவும் இந்தப் பலவந்த வெளியேற்றம் நடைபெறுவதாகவும் மக்கள் சந்தேகிக்கின்றனர். மனிக்பாம் முகாமில் தங்கியுள்ள கேப்பாப்புலவைச் சொந்த இடமாகக் கொண்ட மக்கள் தமது சொந்த ஊரில் மீள்குடியமர அனுமதி மறுக்கப்பட்டிருந்தனர். எனினும் அவர்களை சீனியாமோட்டை என்ற இடத்தில் தற்காலிகமாக குடியமர்த்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. எனினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களை சொந்த இடத்தில் குடியேற்றுமாறு மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நலன்புரி நிலையத்துக்கு வந்த முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட குழுவொன்று, முகாமில் இருந்து மக்கள் அனைவரும் கட்டாயம் வெளியேற வேண்டும் எனவும் 25ஆம் திகதி முதல் முகாம் மூடப்படவுள்ளதால் அதற்குப் பின்னர் முகாமில் தங்கியுள்ளோருக்கு எந்தவித உதவிகளும் வழங்கப்பட மாட்டாது எனவும் கண்டிப்பான தொனியில் அறிவுறுத்தியதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இருமாதங்களின் பின்னர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது மக்களுக்கு உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் வேறு வழியின்றி நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறி தற்காலிக இடங்களில் குடியேறுவதற்காக நேற்று இரவிரவாகப் பொருள்களை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பொருள்களை ஏற்றுவதற்கான வாகன வசதிகளைக் கூட அரசு பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. தமது சொந்தச் செலவிலேயே வாகனங்களை வாடகைக்கு அமர்த்திப் பொருள்களை பொதுமக்கள் ஏற்றினர். "நாங்கள் எங்களுடைய சொந்த நிலத்தில் மீள்குடியமர்த்துமாறு பலமுறை போராடியும் பார்த்துவிட்டோம். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. முகாமில் இப்போது எஞ்சியிருப்பவர்களில் நிறையப்பேர் ஆண் துணை இல்லாதவர்கள். இதைப் பயன்படுத்தி இப்போது முகாம் பகுதியில் திருட்டுகளும் அதிகரித்துவிட்டன. இனி முகாமில் தங்கியிருந்தால் எந்தவித உதவியும் கிடைக்காது. பட்டினியால் நாங்கள் சாக வேண்டியதுதான். எனவேதான் வேறுவழியின்றித் தற்காலிக இடத்திலாவது தங்கியிருக்க முடிவெடுத்துள்ளோம்.'' என்று முகாம் வாசி ஒருவர் கவலையுடன் தெரிவித்தார். மீள்குடியமர்வுக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கண்ணிவெடி அகற்றல் பூர்த்தியாவில்லை என்று கூறி நிர்க்கதியாக விடப்பட்ட மந்துவில், மல்லிகைத்தீவு மக்களைப்போலத் தாமும் நிர்க்கதிக்கு உள்ளாக வேண்டி வருமோ என்று கேப்பாபுலவு மக்களும் அச்சம் தெரிவித்தனர். நலன்புரி நிலையங்கள் மூடப்படவுள்ளதால் அங்கு பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சி, கேபிள் அன்ரனா, தொலைத்தொடர்பு சாதனங்கள், தளபாடங்கள் என்பவற்றைத் தங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக அரச அதிகாரிகள் எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை கேப்பாபுலவு மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக அறிக்கை ஒன்றை உடன் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பணிப்புரைக்கு அமைவாகவே அந்தப் பகுதியைச் சேர்ந்த 314 குடும்பங்களையும் வேறு இடங்களிலாவது மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் இருமாதங்களுக்குள் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 361 குடும்பங்களே முகாமில் தங்கியுள்ளதாக அரச தரப்புக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

23 செப்டம்பர் 2012

தீவகத்தில் கரையொதுங்கும் சடலங்கள்!

யாழ் குடா நாட்டின் தீவகப் பகுதியில் தொடர்ச்சியாக நான்கு இனந்தெரியாத சட லங் கள் மீட்கப்பட்டுள்ளன. இவை தலை துண்டிக்கப்பட்டும், கால்கள் துண்டிக்கப்பட்டும் காணப்பட்டன.. யாழ்.வேலணை சாட்டிக் கடற்கரையில் இனம் தெரியாத இரு ஆண்களின் சட ல ங் கள் மீட்கப்பட்டுள்ளன. புங்குடு தீ வுப் பகுதியில் இனந்தெரியாத ஆண்கள் இரு வரின் சடலங்களும் மீட்க ப்பட்டு ள் ளன. இந்த இனந்தெரியாத நான்கு ஆண்களின் சட லங்களும் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறை யில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவி க் க ப் ப டு கி றது.ஆனால் இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. இந்த சடலங்கள் தமிழக மீனவர்களினதா? அல்லது காணாமல் போன தமிழர்களின் சடலங்களா? இவர்களைக் கொன்றவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லாமல் யாழில் சடலங்கள் இருக்கின்றன. சில நாட்களின் பின்னர் அரச அடக்கத்தில் இவை அடக்கம் செய்யப்பட்டுவிடும். கொலைகாரர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள், பெற்றவர்களின்,உறவினர்களின் நிலையோ???

யாழில் முதலீட்டை மேற்கொள்வதற்கு மதுரை வர்த்தர்களுக்கு அழைப்பு.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட யாழ்பாணத்தில் தொழில் ஆரம்பிப்பதற்கு மதுரை வர்த்தர்களுக்கு, யாழ் வர்த்தகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க உறுப்பினர்கள், முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன் தலைமையில், கொழும்பு சென்றனர். அங்கு, சிலோன் வர்த்தக சங்க பிரதிநிதிகளை சந்தித்தனர். வர்த்தக வளர்ச்சி, தொழில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் வேளாண்மை உற்பத்திப் பொருட்களின், தொழில் வணிக மேம்பாட்டுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. காய்கறி, பழங்களை, பலநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, பேக்கிங் செய்யும் தொழிற்சாலைகளை மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் துவக்கவும், கொழும்புவில் ஹோட்டல் கட்டுவதற்கு தயாராக உள்ளதாகவும் தமிழக வர்த்தக குழுவினர் தெரிவித்தனர். யாழ்ப்பாண தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெயசேகரன் பேசுகையில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வாழும் யாழ்பாணத்தில் தொழில் வணிக வளர்ச்சி, வேலைவாய்ப்பு இல்லை. அங்கு தொழில் துவங்க வேண்டும். தற்போது, பெரும்பாலான பொருட்கள் கொழும்பு நகரில் இறக்குமதியாகிறது. அங்கிருந்தே யாழ்பாணம் அனுப்பப்படுவதால், அவற்றின் விலை அதிகமாகிறது. பொருட்களை நேரடியாக யாழ்பாணத்திற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்,´´ என்றார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மதுரை வர்த்தகர்கள் உறுதியளித்தனர்.

ஐநா மனித உரிமை பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடருக்கு 32 ரகசிய அறிக்கைகள்!

எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடருக்கு 32 அரச சார்பற்ற நிறுவனங்கள் ரகசிய அறிக்கைகளை அனுப்பி உள்ளதாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது என திவயின கூறியுள்ளது. இந்த நிறுவனங்களில் பல வன்னியில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கையை நிறுத்த கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்ததுடன் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனைக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளதாக உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு அறிக்கைகளை அனுப்பிய அரசசார்பற்ற நிறுவனங்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர். இவர்களில் ஒருவர் இந்தோனேசியாவை இரண்டாக பிளவுப்படுத்த முயற்சிக்கும் மாநாடு ஒன்றுக்கு சென்று அந்த நாட்டினால் வெளியேற்றப்பட்டவர் என தெரியவந்துள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளார்.

22 செப்டம்பர் 2012

மக்களை ஏமாற்றிவிட்டதால் ஊர் திரும்ப அஞ்சும் மு.காவினர்!

வாக்களித்த மக்களின் விருப்புக்கு மாறாக மு.கா., அரசுடன் இணைந்து கொண் டதையடுத்து அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் தமது சொந்த ஊர் செல்லமுடியாமல் கொழும்பில் திண்டாடுகின்றனர். கிழக்கு முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானோரின் வாக்குகளை நடந்து முடிந்த தேர்தலில் மு.கா. பெற்றுக்கொண்டது. பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமாயின், மு.காவுக்கு வாக்களியுங்கள் என்று கூறி மக்களின் உணர்வலைகளைத் தூண்டி வாக்குகளைச் சூறையாடிய மு.கா. அனைத்தையும் மறந்து அரசிடம் சரணாகதியடைந்தது. இப்போது மக்கள் விழிப்படைந்துவிட்டதை மு.கா. எம்.பிக்களும், மாகாணசபை உறுப்பினர்களும் நன்கு புரிந்துகொண்டுள்ளனர். இதனால் பீதியடைந்த இவர்கள், சொந்த ஊர் திரும்பமுடியாமல் தவியாய்த் தவிக்கின்றனர். கொழும்பிலிருந்தவாறே தமது மனைவி, மக்கள், குடும்பத்தினருடன் தொலைபேசி வாயிலாக உரையாடியே ஊர் நிலைமைகளை அறிகின்றனராம். மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ள மு.கா. உறுப்பினர்கள் கொழும்பில் தங்குவதற்கு இடமின்றியும், போதியளவு பணமின்றியும் திண்டாடுகின்றனர் என அறியமுடிகின்றது. நிலைமை இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் கூட்டமைப்புடன் சேர்ந்திருக்கலாம் என்றாராம் ஒரு புதிய மாகாணசபை உறுப்பினர். மக்களைத் தம்பக்கம் எப்படி மாற்றலாம்? அரசுடன் இணைந்ததற்கு என்ன நியாயங்களைக் கூறலாம்? என்றெல்லாம் இப்போது இவர்கள் ஆராய்கின்றனர் எனத் தெரியவருகின்றது. ஊடக அறிக்கைப் படலங்களும் தயாராகுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. "மக்கள் என்ன மடையர்களா? இன்னும் இன்னும் இவர்களின் கோமாளித்தனத்துக்கு ஆட'' என்று கேட்கிறார் ஒரு பொதுமகன்.

நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களின் காரியாலயத்தில் உயரதிகாரிகளுடன் சந்திப்பு.

இன்று நடைபெறவிருக்கும் "எமது நிலம் எமக்கு வேண்டும் " மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வையொட்டி நேற்றையதினம் மதியம் ஜெனீவா ஐக்கிய நாட்டு சபை மனிதவுரிமை ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களின் காரியாலயத்தில் உயரதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது .இச் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகளால் பின்வரும் ஐந்து கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது .
1.பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
3.இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
4.பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
5.மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் இச் சந்திப்பில் தமிழ் மக்கள் தமது விடுதலைக்காக தொடர்ந்து மக்கள் மையப்படுத்தப்பட்ட வெகுயன கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தவேண்டும் மற்றும் மனிதவுரிமை அமர்வுகள் நடைபெறும் காலங்களில் மக்கள் பலத்துடன் தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வகையில் அனைத்துலக குமூகத்தை நோக்கி நீதிக்கான நிகழ்வுகளை நடாத்துவது வரவேற்கத்தக்கது எனவும் கூறப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற உரையாடலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள அரசால் இனவழிப்பில் சிக்கித்தவிக்கும் தமிழ் மக்கள் தாயகத்தில் எதிர்கொள்ளும் இன்றைய நிலைமையை விரிவாக எடுத்துக் கூறப்பட்டது . முக்கியமாக சிங்கள அரசு இன்று பாரம்பரிய தமிழர் நிலத்தை அபகரிப்பதை மற்றும் சிங்கள மயமாக்கல் , தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்ச்சியாக மேற்கொள்ளுவதை சுட்டிக்காட்டி பேசப்பட்டது .

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்."
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
 078 662 93 06
 076 410 06 76
 076 421 13 99

21 செப்டம்பர் 2012

பணத்திற்கு “கலாநிதி“ பட்டம்! யாழ்.பல்கலைக்கழகத்தில் பெறலாம்?!

தமிழ் இனத்தின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கொண்டுவரப்பட்டிருக்கின்ற போதிலும் தமிழினத்தினைப் பழிவாங்கும் நடவடிக்கைகளும் அந் நடவடிக்கைளுக்கு துணை நிற்கும் தமிழினத்தின் சில சக்திகளும் ஒத்துழைக்கின்ற செயற்பாடுகளும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. நில ஆக்கிரமிப்பு அத்துமீறிய குடியேற்றம் எனத் தொடரும் நடவடிக்கையின் தொடராக தமிழ் மக்களின் கல்வியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தலைதூக்கியிருக்கின்றன. தமிழ் மக்களின் அடையாளமாக குறிப்பாக கல்வியிலும் அறிவார்ந்தவர்கள் பலரதுதோற்றுவாயாகக் கருதப்படுகின்ற யாழ்ப்பாணத்தில் பணத்திற்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்குகின்ற நடவடிக்கை தொடர்பிலான திடுக்கிடும் தகவல்கள் தமிழ்லீடருக்குக் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான நவீன பல்பொருள் விற்பனை நிலையம் மற்றும் திருமண மண்டம் ஒன்றினை நடாத்திவருகின்ற தியாகி எனப்படும் தியாகேந்திரன் என்பவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையில் ஈபிடியின் கல்வி அபிவிருத்திக்குழு ஈடுபட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கின்றது. இந்த நடவடிக்கையில் ஈபிடிபியின் கல்வி அபிவிருத்திக் குழு முக்கியஸ்தரும் நல்லூர் கோட்டக்கல்வி அதிகாரியுமான மாணிக்கராசா மற்றும் தனியார் கல்வி நிலைய ஆசிரியரான இரா.செல்வவடிவேல் மற்றும் ஆங்கில ஆசிரியர் சுதர்சன் ஆகியோர் நேரடியாக ஈடுபட்டிருக்கின்றனர். குறித்த நபர்கள் பாடசாலை அதிபர்கள் கல்வி சார் அதிகாரிகளிடம் மாதிரிப் படிவம் ஒன்றைக் கையளித்து அதில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று தியாகேஸ்வரனுக்கு கலாநிதிப்பட்டத்தினை யாழ்.பல்கலைக்கழகம் வழங்கவேண்டும் எனத் தெரிவித்து அவர்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த வலியுறுத்தலுக்கு அமைய யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரியரட்ணம் மற்றும் பாடசாலை அதிபர்கள் கோரிக்கைக் கடிதங்களை அனுப்பிவைத்திருப்பதாகத் தெரியவருகின்றது. பணத்திற்காக ஈபிடிபி இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமையும் பொருத்தமற்ற நபர்களுக்கு மதிப்பிற்குரிய பட்டங்களை வழங்குவதன் மூலம் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட யாழ்.பல்கலைக்கழகம் தனது தனித்துவத்தினை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டிருப்பாக யாழ்.பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர்கள் சிலர் கவலை வெளியிட்டிருக்கின்றனர். இதேவேளை யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகளின் அதிபர்களை மாற்றி அதன் ஊடாக சீரான கட்டமைப்புக்களை உடைய பாடசாலைகளைச் சிதைப்பதற்கான முயற்சியிலும் வல்லாதிக்க சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன. இதற்கு பிரதானசூத்திரதாரிகளாக ஈபிடிபியினர் ஈடுபட்டிருகின்றனர். அந்த வகைக்குள் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்.இந்து மகளிர் கல்லூரி, யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி உட்பட்ட உயர் கல்லூரிகளின் அதிபர்களை உரிய காரணங்கள் எதுவும் இன்றி இடமாற்றத்திற்கு உட்படுத்தி கல்லூரிகளின் கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்டிருகின்றன. அதிபர்கள் பதவிகளில் இருந்து விலக்கப்படுகின்ற போது பாடசாலைக் கட்டமைப்புக்களில் பிறழ்வு நிலை ஏற்பட்டிருக்கின்றது. யாழ். இந்து மகளிர் கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கு நல்லூர் கோட்டக்கல்வி அதிகாரியாகவும் ஈபிடிபியின் கல்வி அபிவிருத்திக் குழுவின் முக்கியஸ்தராக விளங்கிவருகின்ற மாணிக்கராசா என்பவரே காரணமாக இருந்தார் என்பது பகிரங்கப்பட்டிருந்தது. ஒரே வளாகத்தில் கல்வி அலுவலகமும் கல்லூரியும் செயற்பட்டுவந்திருந்தன. கல்லூரிக்குச் செல்கின்ற மாணவிகளை கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்தமையை மாணவிகள் அதிபரிடம் முறையிட்டிருந்தனர். இதுதொடர்பாக அதிபர் தெரிவித்த எதிர்ப்பினை அடுத்து அதிபர் பழிவாங்கப்பட்டதுடன் அதிபருக்கு ஆதரவு தெரிவித்த மாணவிகளை வடமாகாண ஆளுநர் சந்திரசிறீ நேரடியாக அழைத்து மிரட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரான மாணிக்கராசா தான் கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் பதவியினைக் கைப்பற்றுவதற்காக அங்கிருந்த அதிபரின் பதவியினைப் பறித்தெடுத்ததாக தெரியவந்திருக்கின்றது. இதேபோல வேம்படி மகளிர் கல்லூரியிலும் அரசியல் தலையீட்டினை மேற்கொண்டு அங்கிருந்த நிர்வாகச் செயற்பாடு சிதைக்கப்பட்டிருக்கின்றது. இதனை விடவும் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவிலும் முற்றுமுழுதான அரசியல் தலையீடு இடம்பெற்றிருந்தமை பரமரகசியமாகும். இவ்வாறான அரசியல் அசிங்கங்களை அரங்கேற்றுவதற்காக கல்விச் சமூகத்தின் உயர் பீடங்களை கையிலெடுத்திருக்கின்ற ஈபிடிபி யாழ்ப்பாணத்தில் இடம்பெறப்போகும் மற்றொரு பயங்கரத்தினை கண்டு கொள்ளவில்லையா? அல்லது கண்டும் காணாமல் துணை நிற்கிறதா? என்பது தான் புரியாத புதிராக உள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அதிகாரங்கள் இன்னும் சில வருடங்களில் சிங்கள மாணவர்களின் கைகளுக்கு மாறும் அபாய நிலை ஏற்பட்டிருக்கின்றமையே அந்தப் பயங்கரமாகும். அடுத்த ஆண்டு யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயில்வதற்காக யாழ்ப்பாணம் வருகின்ற சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை அறுபதைவிட அதிகம் என்று தெரியவந்திருக்கின்றது. இதன் தொடராக அடுத்த அடுத்த ஆண்டுகளில் சிங்கள மாணவர்களின் யாழ்.பல்கலைக்கழகத்திற்கான அனுமதி எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கலாம் என்றும் சிங்கள மாணவர்களின் அதிகரிப்பின் மூலம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பெரும்பான்மை சிங்களமயமாகின்றபோது தமிழ் மக்களின் வலுவான சக்தியாக விளங்குகின்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர் சக்தியும் சிதறுண்டு போகும் அபாய நிலையும் உணரப்பட்டிருக்கின்றது. சிங்கள இனவாதம் திட்டமிட்ட வைகையில் மிக நேர்த்தியாகவும் சாமர்த்தியமாகவும் தமிழினத்தின் மீதான ஆழமான சிதைப்பினைமேற்கொண்டுவருகின்றது. பதவிக்காகவும் பணத்திற்காகவும் தம்மை விலை கொடுத்திருக்கின்ற கல்வித்துறையில் உயர் பதவிகளில் உள்ளோரும் அரசியலில் உள்ளோரும் சில நாள் கனவுகளுக்காக ஒட்டுமொத்த தமிழினத்தையும் விலைபேசும் நிலையினை என்று கைவிடுவோர்களோ அன்று தான் தமிழினத்திற்கான உண்மையான விடுதலை கிடைக்கும் இதுவே உண்மை.

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்
நன்றி:தமிழ் லீடர் 

சகல அபிவிருத்தித் திட்டங்களிலும் ஊழல் மோசடிகள்!

சகல அபிவிருத்தித் திட்டங்களிலும் ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன –மங்கள சமரவீரநாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் சகல அபிவிருத்தித் திட்டங்களிலும் உழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் சகல அபிவிருத்தித் திட்டங்களிலும் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மோசடி செய்யப்படும் பல பில்லியன் கணக்கான ரூபாய்கள் அரசியல்வாதிகள் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். பலம்பொருந்திய அரசியல்வாதிகள் இவ்வாறு ஊழல் மோசடிகளின் மூலம் ஈட்டும் பணத்தை கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் முதலீடு செய்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மோசடியான முறையில் ஈட்டும் கறுப்புப் பணத்தை, சட்ட ரீதியான பணமாக மாற்றும் ஓர் மையமாக கொழும்புப் பங்குச் சந்தை செயற்பட்டு வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மிகச் சிறிய அளவிலான அபிவிருத்தித் திட்டம் முதல் பாரியளவிலான அபிவிருத்தித் திட்டம் வரையில் நாட்டில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மிஹின் லங்கா, ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, இலங்கைக் கிரிக்கட், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், கொழும்பு பங்குப் பரிவர்த்தனை ஆகிய பல்வேறு நிறுவனங்களில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். பாரியளவில் ஊழல் மோசடிகள் செய்து பணம் சம்பாதித்த தலைவர்கள் அவற்றை அனுபவிக்க முடியாமல் உயிர் துறந்த வரலாறு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். லிபிய அதிபர் முகமட் கடாபியே இதற்கான அண்மைய உதாரணம் என மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

20 செப்டம்பர் 2012

விஜயராஜ் எந்த அமைப்பு? :முரண்பட்ட சில தமிழ் அமைப்புகள்!

ராஜபக்சே வருகையை கண்டித்து தீக்குளித்து இறந்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் எந்த அமைப்பு என்பதில் போட்டா போட்டி நடந்தது. சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தின் உறுப்பினர் என இறப்பதற்கு முன் நக்கீரனிடம் விஜயராஜ் சொல்லியிருந்தாலும் 'அவர் எங்கள் அமைப்பை சேர்ந்தவர் அல்ல' என மறுத்துள்ளது சி.பி.எம் கட்சி.' அண்ணன் சீமான் மடியில் தான் உயிர் பிரிய வேண்டும் என விஜயராஜ் கூறினார்' என நாம் தமிழர் கட்சியினர் ஒரு வதந்தியை பரப்பினர். அதோடு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் 'காலை பத்து மணிக்கு அண்ணன் சீமான் தலைமையில் இறுதி ஊர்வலம்' என அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி வர இது அங்கிருந்த மற்ற தமிழ் அமைப்புகளை கடுப்பாக்கியது. அவர்கள் எதிர்ப்பை காட்டினர். விடுதலை சிறுத்தைகளோ அவர் இறப்பதற்கு முன்பே காலையிலேயே 'விஜயராஜ் எங்கள் அமைப்பில் இருந்துள்ளார் 'என ஆதாராமாக அந்த வார்டில் அவர் பொறுப்பில் இருந்த பெயரை நகல் எடுத்து அணைத்து பத்திரிக்கையாளர்களிடமும் தந்தனர். மேலும் தொலைபேசியில்,கட்சி தலைவர் தொல். திருமாவளவனிடம் 'தலைவரே விஜயராஜ் நம்ம கட்சியை சேர்ந்தவர். நாங்க தான் முன் இருந்து அணைத்து போராட்டத்தையும் நடத்தி வருகிறோம்' என்றபடி கூற 'அவரோ பத்திரிக்கையில் வேறு மாதிரி வருகிறதே' என்றபடி போனை துண்டித்தார். விஜயராஜ் எந்த அமைப்பை தான் சேர்ந்தவர்? என அவர் அண்ணன் தேவராஜ், தங்கைகள், பெற்றோர்களிடம் கேட்டோம். 'நான் திராவிடர் விடுதலைக் கழகத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் என் தம்பி வை.கோ,சீமான் என அனைத்து கூட்டங்களுக்கும் செல்வான். ஆனால் எந்த அமைப்பையும் சேராதவன் அவன். அமைப்புசாரா தமிழ் உணர்வாளர் அவனை தமிழன் என அடையாளபடுத்துவதே அவன் தியாகதிற்கான அங்கீகாரமாக இருக்கும்' என்றார் கண்ணீரோடு. இதையே அனைவரும் வழிமொழிந்தனர்!

தமிழர்களை திருப்பி அனுப்புகிறது பிரித்தானியா!

பிரித்தானியாவின் மனித உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் வாடகைக்கு அமர்த்தப்படும் மூன்று விமானங்களில் இவர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர். முதலாவது குழுவில் 60 பேர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். விமான நிலையங்களுக்கு எதிரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம் என்பதால், எந்த விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர் என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்த நிலையில், பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ளவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டால், அவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என மனித உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் இலங்கையில் நடைபெற்ற போர் முடிவடைந்துள்ள நிலையில், இலங்கை தமிழர்கள் பிரித்தானியாவில் அகதிகளாக வாழ வேண்டிய தேவையில்லை என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் தமிழர்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் விசா பிரிவின் அதிகாரி சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். இதனை கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுரகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக கூறி, பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோரின் நோக்கம் பணம் சம்பாதிப்பதே எனவும் குலரத்ன குறிப்பிட்டுள்ளார்.

19 செப்டம்பர் 2012

குரானை புறந்தள்ளி மஹிந்த சிந்தனையின் கீழ் செயற்படுகிறது முஸ்லிம் காங்கிரஸ்!

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருக்குரானை ஒருபக்கம் வைத்து விட்டு மஹிந்த சிந்தனையின் கீழ் செயற்படுவதாக எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியிக் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் அரசிற்கு எதிரானவர்கள் என காண்பித்து மக்களிடம் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எதிர்க் கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர், நான் முன்னதாகவே முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் அரசிலிருந்து விலகி வேறாக போகாது என குறிப்பிட்டேன். அதே போல் நடந்து விட்டது. அரசுடன் உடன்படிக்கை செய்து முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு தேர்தலில் தனித்து போட்டியிட்டது. பின்னர் நடந்தது அனைத்துமே நாடகம். இங்கு முஸ்லிம் காங்கிரஸ் செய்தது என்ன? மக்களை இந்தப் பக்கம் ஏமாற்றி விட்டு சலுகைகளை அனுபவித்தல். இங்கு முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு விடயங்கள் முன்னின்றன. ஒன்று பள்ளி உடைத்தல். மற்றையது அமைச்சு பதவியை பாதுகாத்தல். இதில் இரண்டாவது தெரிவையே முஸ்லிம் காங்கிரஸ் தெரிவு செய்துள்ளது. இதிலிருந்து ஒருவிடயம் தெரிந்து கொள்ள வேண்டும் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் ஒருபோதும் அரசிற்கு எதிராக செல்லாது எனவும் ரணில் மேலும் தெரிவித்தார்.

18 செப்டம்பர் 2012

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை",ஐ.நாவிடம் முறைப்பாடு.

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த, ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகளிடம், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் அதனை நிறைவேற்றவில்லை என யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயம் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகத்தில் ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களை கவனிக்கும் பிரிவுக்குத் தலைவரான ஹன்னி மெகல்லியும், அந்த உயர்ஸ்தானிகத்தில் சட்டத்தின் மாட்சிமை மற்றும் ஜனநாயகம் ஆகிய விஷயங்களை கவனிக்கும் பிரிவினைச் சேர்ந்த ஆஸ்கர் செல்டர்ஸும் யாழ்ப்பாணத்திற்கான தமது விஜயத்தின்போது ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்து, யாழ் ஆயர் அவர்களையும் சந்தித்து வடபகுதி நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், யுத்தம் மூண்டதற்கான காரணத்தை அறிந்து அதற்குரிய அரசியல் தீர்வை முன்வைக்கவும் இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக ஐநா அதிகாரிகளிடம் யாழ் ஆயர் தெரிவித்திருப்பதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாண சபையின் உயரதிகாரிகளையும், யாழ் அரசாங்க அதிபரையும் முதலில் சந்தித்த ஐநா அதிகாரிகள், வடபகுதியின் அபிவிருத்திப் பணிகள், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் என்பவை தொடர்பாக அரச அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்து கொண்டனர். இதன் பின்னர், யாழ்குடாநாட்டில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள ஒரு பகுதி மக்களையும் அவர்கள் நேரடியாகச் சந்தித்து அவர்களது வாழ்க்கை நிலைமைகள், குறைநிறைகள் என்பவற்றையும் கேட்டறிந்துள்ளனர். இதன் பின்னர் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற யாழ் ஆயருடனான சந்திப்பின்போது, யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வன்னிப்பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் திருப்திகரமாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், மீள்குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் பல இடங்களில் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என்றும் ஐநா அதிகாரிகளிடம் யாழ் ஆயர் அவர்கள் எடுத்துக் கூறியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (பீபிசி) யுத்தம் முடிவடைந்து அமைதியேற்பட்டிருக்கின்ற போதிலும், வடபகுதியில் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்றும், ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதிலும், அரசாங்கத்தினால் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் ஐநா அதிகாரிகளிடம் இந்தச் சந்திப்பின்போது யாழ் ஆயரினால் எடுத்துரைக்கப்பட்டிருப்பதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சலுகைகளுக்காக மு.கா.அரசிடம் சோரம்போகக்கூடாது",-அஷாத் சாலி

சலுகைகளுக்காக அரசாங்கத்திடம் SLMC சோரம் போகுமானால்  கிழக்கில் போராட்டம் வெடிக்கும் - அஸாத் சாலிமுஸ்லிம் மக்கள் தமக்கு வழங்கிய ஆணையை எட்டி உதைத்து விட்டு, சலுகைகளுக்காக அரசாங்கத்திடம் முஸ்லிம் காங்கிரஸ் சோரம் போகுமானால் அக்கட்சிக்கு எதிராகக் கிழக்கில் போராட்டம் வெடிக்கும் என கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மு.காவின் பட்டியலில் போட்டியிட்ட அஸாத் சாலி எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், அமையவுள்ள வடக்கு மாகாணத்தில் வெல்லும்போது கூட்டமைப்புக்குக் கிடைக்கும் போனஸ் ஆசனமொன்றை முஸ்லிம் காங்கிரசுக்குத் தருவதாக உறுதியளித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்க வேண்டும் என்றும், இதுவே முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு எனவும் அஸாத் சாலி கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழும் முஸ்லிம் காங்கிரஸ் எந்தத் தரப்புக்குத் தனது ஆதரவை நல்கவேண்டும் என்பது குறித்து கருத்து வெளியிடும் போதே அஸாத் ஸாலி மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளாhர். அரசுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாகவே கிழக்குத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸூக்கு அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் ஆணையை வழங்கினர். மு.காவுக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகள் அரசுக்கு எதிரான வாக்குகளாகும். எனவே, மக்கள் ஆணையைப் புறந்தள்ளிவிட்டு அக்கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடாது. இந்தக் கோட்பாட்டுக்குப் புறம்பாக, சலுகைகளுக்காக அரசிடம் மு.கா. சோரம்போகுமானால் அது தமிழ் பேசும் மக்களைக் காட்டிக்கொடுக்கும் செயலாகும். எனவே, முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மு.கா. அரசை ஆதரிக்குமானால் அக்கட்சிக்கு எதிராகக் கிழக்கில் போராட்டம் வெடிக்கும். மூன்று மாவட்டங்களிலும் மக்கள் மு.காவுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவர். அரசுக்கு எதிராகத் தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்த ஹக்கீமுக்கு அரசுக்கு ஆதரவை வழங்குவதற்கு எந்தவொரு அதிகாரமுமில்லை என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன். குறிப்பாக, முதல்வர் பதவி உட்பட மாகாண அமைச்சுகளை வழங்குவதற்கு முன்வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கில் மு.கா. கூட்டாட்சியொன்றை ஏற்படுத்தவேண்டும். வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் போது, அதில் போட்டியிட்டு மு.கா. தோல்வியடைந்தாலும் தாம் பெறும் போனஸ் ஆசனத்தைத் தருவதாக மு.காவிடம் கூட்டமைப்பு உறுதியளித்துள்ளது. எனவே, கூட்டமைப்புடன்தான் மு.கா. இணையவேண்டும். இதுவே முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பாகும் என அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

17 செப்டம்பர் 2012

முஸ்லிம் காங்கிரஸ் இறுதி முடிவெடுக்கவில்லை.

கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையே இன்று காலை திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எமது தெரிவித்தார். கொழும்பு பாக் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமை தாங்கியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார். மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தன்னுடன் நாடாளுமன் உறுப்பினரான, மாவை சேனாதிராசாவும், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத், செயலாளர் எம்.ரி.ஹசன் அலி, ஹாரிஸ் ஆகிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவிததார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களும் முஸ்லிம் காங்கிரசுக்கு முஸ்லிம் மக்களும் ஆணையொன்றை வழங்கியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் சிறுபாண்மை அரசை நிறுவும் அந்த ஆணையை செயற்படுத்த வேண்டும் என கூட்டமைப்பின் சார்பில் கோரப்பட்டதாகவும், அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை கூட்டமைப்பின் கோரிக்கையை முன்வைத்து கலந்துயயாடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக சுமந்திரன் தெரிவித்தார்.

வேலணையில் உருக்குலைந்த நிலையில் சடலம்!

வேலணைப் பகுதி கடற்கரையில் இனம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்குச்சென்ற மக்கள் சடலத்தைக்கண்டு ஊர்காவற்துறைப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் சடலத்தை இனம் காண்பதற்காக வைத்துள்ளார்கள். சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் குறிப்பிட்ட சடலம் கடல் தொழிலுக்குச்சென்றவர்களுடையதா அன்றி வேறெங்காவது கடலில் வீந்தவர்களுடையதா என்பது தெரியாத நிலையில் சடலம் உருக்குலைந்து காணப்படுகின்றது. ஊர்காவற்துறை பொலிஸாருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 செப்டம்பர் 2012

முதலில் தனது மகனை விசாரணைக்கு ஒப்படைக்கட்டும் மேர்வின் சில்வா.

மாலக சில்வா
மிருகபலி இடம்பெறுகிறதா என்பதை கண்டறிய நாடு முழுக்க உள்ள இந்து கோவில்கள் தோறும் தான் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக பொதுஜன உறவுதுறை அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்துள்ளார். இவருக்கு யார் இந்த அதிகாரங்களை கொடுத்தது என்பதையும், இவரது அமைச்சுக்கு இந்து கோவில்களை விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும், அரசாங்கத்தில் உள்ள தமிழ் இந்து அமைச்சர்களான டக்லஸ் தேவானந்தாவும், ஆறுமுகன் தொண்டமானும் ஜனாதிபதியிடம் கேட்டு தமிழ் மக்களுக்கு அறிவிக்க வேண்டும். மேர்வின் சில்வாவின் மகன், கடந்த வாரம் ஒரு இராணுவ மேஜரை தாக்கி காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிசாரால் தற்சமயம் தேடப்படுகிறார். நாட்டில் உள்ள கோவில்களை விசாரிப்பதற்கு முன்னர் இந்த அமைச்சர், பொலிஸ் விசாரணைக்கு தேடப்படும் சந்தேகநபரான தனது மகனை போலீசில் ஒப்படைத்து நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலை பெற ஒத்துழைக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். மிருகபலி தொடர்பில் இந்து ஆலயங்களில் விசாரணை நடத்தப்போகின்றேன் என்ற அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதிய அறிவிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, நம்நாட்டில் இந்து மத நிறுவனங்களும், மத தலைவர்களும் அரசியலில் தலையிடுவதில்லை. ஏனைய மூன்று மத தலைவர்களும் அரசியலில் பங்கு வகிக்கிறார்கள். ஊருக்கு இளைத்தவன் ஆண்டி என்பதை போல், இந்து மத தலைவர்களின் அரசியல் ஈடுபாடு இன்மை என்ற காரணத்தாலோ, என்னவோ மேர்வின் சில்வா இந்து மத விவகாரங்களில் தொடர்ந்து வரம்பு மீறி தலையிட்டு வருகிறார். இப்போது, இந்து மத ஆலயங்கள் தொடர்பில் தான் பொலிஸ்காரன் வேலை செய்ய போவதாக அவரது அறிவிப்பு புதிதாக வந்துள்ளது. நாட்டில் தலைபோகிற விடயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. மிருகபலியைவிட, மனிதபலி நடக்கிறது. தினசரி படுகொலைகள் நடந்தேறுகின்றன. இவற்றிற்கு எதிராக, ஒரு அஹிம்சா இயக்கத்தை இவர் ஆரம்பித்து நடத்தலாம். கடந்தமுறை முன்னேஸ்வரத்தில் மிருகபலியை நிறுத்துகிறேன் என்று சொல்லி இவர் கொண்டு போன ஆடுகளுக்கும், கோழிகளுக்கும் இவர் இன்னமும் கணக்கு காட்டவில்லை என முன்னேஸ்வரம் மக்கள் சொல்கிறார்கள். அகில இலங்கை இந்து மாமன்றம், மிருகபலி மற்றும் மத விவகாரங்களில் அரசியல்வாதிகளை தலையிடவேண்டாம் என்று சொல்லி அறிக்கை விடுகிறது. அவர்கள் சொல்வது எங்களையா அல்லது மேர்வின் சில்வாவையா என எனக்கு தெரியவில்லை. எனக்கு மத விவகாரங்களில் தலையிடும் நோக்கம் கிடையாது. இந்த அமைச்சரின் அறிவிப்புகளால் கவலை அடைந்துள்ள பல கோவில் அறங்காவலர்கள் தமது அதிருப்திகளை என்னிடம் தெரிவித்துள்ளார்கள். மலையகத்திலும், கிழக்கிலும், வடக்கிலும் கோவில்களில் மிருகபலியிடும் முறைமை இருக்கிறது. நாளை, தாங்கள் அமைச்சர் அனுப்பிய விசாரணை அதிகாரிகள் என்று சொல்லி கோஷ்டிகள் கோவில்களுக்குள் வந்து மிரட்டி கப்பம் கேட்கலாம். எனவே இந்து மத நிறுவனங்கள் இந்த விவகாரம் மேலும் வளரும் முன்னர் தலையிட வேண்டும். மத விவகார அமைச்சிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தி இதற்கு முடிவு காண வேண்டும். அரசில் உள்ள இந்து கபினட் அமைச்சர்கள், மந்திரிசபை அமர்வின்போது ஜனாதிபதியிடம் தீர்க்கமாக, மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டும். இஸ்லாமிய பள்ளிகள் தொடர்பில் எந்த ஒரு முஸ்லிம் அமைச்சரும் தன்னிடம் எடுத்து முறையிடவில்லை என ஜனாதிபதி சமீபத்தில் சொன்னார். அதுபோல் என்றாவது ஒருநாள் ஜனாதிபதி, தனது இந்து அமைச்சர்களும், தன்னிடம் எதுவும் கேட்காமல், அமைச்சரவையில் எலிகள் மாதிரி அமைதியாக இருக்கிறார்கள் என்றும் சொல்லிவிடுவார்.

15 செப்டம்பர் 2012

300 பேரை திருப்பி அனுப்புகிறது பிரிட்டன்!

பிரிட்டனில் இருந்து தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 300 பேர் அடுத்த வாரம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைத் தளமாகக் கொண்டியங்கும் "த இன்டி பென்ரன்' நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. திருப்பி அனுப்பப்பட்டால் இலங்கையில் சித்திர வதைக்கு உள்ளாக்கப்படுவர் என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் இவர்களை பிரிட்டன் குடிவரவு முகவர் நிலையம் திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்துக்குப் பின்னர் இரண்டாவது தடவையாக பெருந்தொகையினர் இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் 50 தமிழர்களை திருப்பி அனுப்ப பிரிட்டிஷ் அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்த போதும் அந்த நாட்டு நீதி மன்றம் தலையிட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் இலங்கையில் ஆபத்து இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது. கடந்த வருடத்தில் இவ்வாறு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பலர் மீளவும் பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் திருப்பி அனுப்பப்பட்ட போது தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோம் என்பதற்கு போதிய ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பித்திருந்தனர் என பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது. எனினும் தற்போது திருப்பி அனுப்பப்படவுள்ள 300 பேரில் பெருமளவானோர் மாணவர்கள் எனவும் விசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மனித உரிமைகள் அமைப்புக்கள் கண்டித்துள்ளன. திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் இலங்கையில் மிக மோசமாக சித்திரவதைக்கு உட்டுத்தும் சாத்தியம் உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தமிழ் கைதிகளை நடத்தும் விதத்தை வைத்தே இந்த அரசின் இனத்துவேசத்தை புரிந்து கொள்ளலாம்.

படுகொலைகளைச் செய்தவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி சிகிச்சையளிக்கும் இந்த அரசாங்கம் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உரிய முறையில் கவனித்து சிகிச்சையளிக்க நடவடிக்கை ௭டுக்காமையானது இனத்துவேசத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் காலியிலும் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதி சதீஸ் குணமடையாத நிலையில் மீண்டும் மகசின் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமையானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதியான சதீஸ் உடல் நிலையில் ௭வ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் திடீரென மீண்டும் மெகசின் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை சதீஸின் மனைவிக்கோ பெற் றோ ரு க்கோ தெரிவிக்காமலேயே மேற்கொள் ளப்பட்டுள்ளது. சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னரே அது தொடர்பில் சதீஸின் மனைவிக்கும் பெற்றோருக்கும் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. ௭னவே இது முறையற்றதொரு செயலாகும். மகசின் சிறைச்சாலையிலுள்ள வைத்தியசாலை, சதீஸிற்கு சிகிச்சையளிப்பதற்கு உகந்த இடமல்ல. ஏற்கனவே இரு தமிழ் அரசியல் கைதிகள் முறையாக சிகிச்சையளிக்காமையினால் ஏற்பட்ட அசம்பாவிதம் இவருக்கும் நடந்துவிடக்கூடாது. இந்த விடயமானது மிகப் பெரிய மனிதாபிமான பிரச்சினையாகும். ௭னவே அரசியல் கைதியான சதீஸை தற்போதைய நிலையிலிருந்து பாதுகாக்க ஜனநாயக முற்போக்கு சக்திகள், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும். கொலை குற்றவாளிகள் இன்று சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை மாத்திரம் உரிய முறையில் சிகிச்சையளித்து பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை ௭டுக்காதுள்ளது. ௭னவே, இந்த அரசாங்கத்தின் இனத்துவேசத்தை ௭மக்கு நன்றாக புரிந்து கொள்ள முடிகின்றது. தற்போது கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலையில் இருக்கும் சதீஸை மனைவி மற்றும் பெற்றோரின் கண்காணிப்பில் சிகிச்சை பெறுவதற்காக குறைந்த பட்சம் பிணையிலாவது விடுவிக்க வேண் டும். இவ்வாறு விடுவிக்கப்பட்டால் அவரை தற்போதைய நிலையிலிருந்து பாதுகாக்கலாம். அதற்கான உதவிகளை செய்ய அவரின் உறவினர்களும் சிவில் சமூகத்தினரும் தயாராக இருக்கின்றார்கள் ௭னவும் அவர் தெரி வித்தார்.

14 செப்டம்பர் 2012

கைவிடப்பட்டது கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை!

கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 7 மணியளவில் நடைபெறவிருந்த குறித்த பேச்சுவார்த்தை, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் ஹக்கீம், அலரி மாளிகையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுள்ள காரணத்தினால் சமூகமளிக்க மாட்டார் என்பதால் கைவிடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளளார். குறித்த கலந்துரையாடல் மீண்டும் இடம்பெறும் திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெறவிருந்த இந்தப் பேச்சுவார்தையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் கூட்டமைப்பு ஆதரவைக் கோருவதுடன், முதலமைச்சர் பதவி உட்பட மேலும் பல விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வது குறித்தும் பேசப்படவிருந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

அண்ணர் சொன்னதை வெளியில் செயல்படுத்துங்கள்!

பாலா அண்ணாவுடன் நடேசன் அவர்கள்
முள்ளிவாய்க்காலில் இறுதிக் கட்டத்தை விடுதலைப் புலிகள் நெருங்கிக் கொண்டிருந்த தருணத்தில், அரசியல் பொறுப்பாளர் பா நடேசன் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், அண்ணர் (பிரபாகரன்) சொன்னதை வெளியில் சென்று செயல்படுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், போரின் கடைசி மணித்துளிகளில் பிரபாகரன் இட்ட உத்தரவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பா நடேசன் கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தில் உள்ள வரிகள்: சுடருக்கு, இங்கு எல்லாம் நிறைவடைந்துவிட்டது. உங்களுக்கு அண்ணர் குறிப்பிட்டதுபோல, எல்லாவற்றையும் வெளியில் சென்று செயற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். கஸ்ரோ எல்லாவற்றையும் உங்களிடம் தெரிவித்திருப்பார். எதிர்ப்பார்க்காத திருப்பம் ஏற்பட்டது உங்களுக்குத் தெரியும். தெளிவாகக் குறிப்பிடும்படி எதுவும் இல்லை. எனது செய்மதியில் எதுவும் குறிப்பிட முடியாது, அவசரமாக நீங்கள். வைகோ அண்ணனைச் சந்திக்கவும் (முடிந்தால்). மற்றபடி இந்தக் கடிதம் கொண்டு வரும் ----- விளக்கமாக தெரிவிப்பார் உங்களுக்கு. என்று எழுதப்பட்டுள்ளது. புலிகள் இயக்கம் பெரும் பின்னடைவைச் சந்தித்து, முன்னணி தலைவர்கள் வெள்ளைக் கொடியோடு சரணடைவதற்கு முன் எழுதப்பட்ட கடிதம் இது. இந்தக் கடிதத்தை தமிழ் ஈழ ஆதரவு தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

13 செப்டம்பர் 2012

கிழக்கின் முதலமைச்சராக மீண்டும் பிள்ளையான்?

கிழக்கு மாகாண முதலமைச்சராக சிவநேசதுரை சந்திரகாந்தனே மீண்டும் நியமனம் பெறுகின்றார் என்று அலரி மாளிகை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்து உள்ளன. கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரைத்தான் முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்கிற ஜனாதிபதியின் தனிப்பட்ட முடிவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இயைந்து கொடுக்க வேண்டி ஏற்பட்டது என இவ்வட்டாரங்கள் கூறுகின்றன. ஆயினும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவதால் இரு அமைச்சரவை அமைச்சுக்களும், மூன்று பிரதி அமைச்சுக்களும், ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் மத்தியில் தருகின்றமையுடன் கிழக்கு மாகாண சபையில் இரு அமைச்சுக்களும் தர வேண்டுமென்று மு. கா தலைவர் ரவூப் ஹக்கீம் விடாப்பிடியாக நின்று கொண்டார் என்று தெரிகின்றது. நாளை அல்லது நாளை மறுதினம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் குறித்த உத்தியோகபூர்வ அறிவுப்புக்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

புலம்பெயர் மக்களிடம் பிழைப்பு நடத்தவே உன்னி கிருஷ்ணன் மன்னிப்பு கோரினாராம்!

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் நற்பெயரைப் பெறும் நோக்குடனே தென்னிந்திய பாடகர் உன்னி கிருஷ்ணன் மன்னிப்பு கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளுக்கான விருந்தில் கலந்துகொண்ட சமயம் ஊடகவியலாளர்கள் மத்தியில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இந்தியதுணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண சபையின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன அழைப்பு விடுத்தமையாலே தான் அந்த நிகழ்வில் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களிடம் தனது பிழைப்பை நடத்துவதற்காகவும் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே உன்னி கிருஷ்ணன் இவ்வாறு தனக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து உலகத் தமிழர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார் எனத் தெரிவித்தார். நல்லூர் கந்தன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி சால்வை அணிவித்தார். இந்த சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், இந்த சம்பவத்திற்காக உலகத் தமிழ் மக்களிடம் தான் மன்னிப்பு கோருவதாகவும் தமிழகத்திலிருந்து வெளியாகும் இதழ் ஒன்றுக்கு உன்னி கிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அத்துடன் டக்ளஸ் பொன்னாடை போர்த்தியமையானது என் இசை பயணத்தில் கரும்புள்ளியாகும் எனவும் உன்னி கிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார். உன்னி கிருஷ்ணனின் இக் கூற்று தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எரிச்சலையும் மனக் கசப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கொள்கைகளற்ற மகிந்த அரசில் கொள்ளைகளுக்கே முதலிடம்"விக்கிரமபாகு கருணாரட்ன.

வாக்குகளைக் கொள்ளையடித்தே மஹிந்த அரசு தேர்தல் வெற்றியை ருசித்துள்ளது என பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நவசமசமாஜக் கட்சி, மஹிந்த சிந்தனையில் "கொள்கை'க்கல்ல,"கொள்ளை'க்கே முதலிடம் என்றும் குறிப்பிட்டுள்ளது. மக்கள் ஆணை தமக்கே உள்ளது என மார்தட்டும் இந்த அரசு, வன்முறைப்பாதையில் பயணிப்பதேன் என்றும் அந்தக் கட்சி கேள்வி யெழுப்பியுள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு: தற்போது ஆட்சிபீடத்திலுள்ள அரசு என்றுமே நீதியான முறையில் தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.மாறாக,அது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டே ஜனநாயகத்துக்கு எதிரான வகையில் அரச வளங்களைப் பயன்படுத்தி தேர்தலை எதிர்கொள்கின்றது. இவ்வாறு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு மக்களை உருட்டி மிரட்டி வாக்குகளைப் பெறுவது உண்மையான வெற்றியல்ல. வாக்குகளைக் கொள்ளையடித்துவிட்டு மக்கள் ஆணை தமக்கே கிடைத்துள்ளது என அரசு கூறுவது மடத்தனமாகும். அதேவேளை, பணத்தை மாத்திரமல்ல, இந்த அரசு தற்போது உறுப்பினர்களையும் கொள்ளையடிக்கின்றது. மு.கா. உறுப்பினர்களுக்கு வலைவீசியுள்ளமை இதற்குச் சிறந்த உதாரணமாகும். மஹிந்த சிந்தனையை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டர். ஏனெனில், அதில் கொள்கை, கோட்பாடுகளுக்கு இடமில்லை. கொள்ளைகளுக்கே முதலிடம் உள்ளது. கடந்த தேர்தல்களில் பெற்ற பெறுபேறுகளை விட, இந்தமுறை அரசுக்கு வாக்கு வங்கியில் பெருவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.

யாழ்ப்பாணத்தில் பொதுநலவாய நாட்டு பிரதிநிதிகள்.

newsவடபகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள பொதுநலவாய நாட்டு பிரதிநிதிகள் வடக்கின் தற்போதைய நிலமை தொடர்பாக மிகவும் ஆவலாக கேட்டறிந்தனர். பொது நலவாய பாராளுமன்ற ஒன்றிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் 60 பேர் வட பகுதிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர் அதன் ஒரு பகுதியாக இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த வெளிநாட்டுப் பிரதி நிதிகள் யாழ்ப்பாணத்தில் முக்கிய இடமான பொது நூலகத்தினை பார்வையிட்டதுடன் மீள்குடியோற்ற பகுதிகளான மறவன் புலவு, பளை மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளனர். காலை வந்தடைந்த இவ் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு யாழில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தமது காலை உணவினை உட்கொண்டனர். பின்னர் இடம்பெற்ற கலந்துறையாடவில் வடபகுதி மக்களின் மீள்குடியேற்றம்,கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள்,கூட்டுறவு நடவடிக்கைகள் போன்றவற்றை மிகவும் ஆவலாக கேட்டறிந்தனர். அதன் பின்னர் யாழ் பொதுநூலகத்தில் யாழ் மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்,வடமாகாண ஆளுனரின் செயலாளர், ஈ.பி.டி,பியின் நடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் டக்லஸ் தேவாநந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் மாநகர முதல்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

12 செப்டம்பர் 2012

ஆனந்தபுரத்தில் பெருமளவான மனித எச்சங்கள்!

அண்மையில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட முல்லைத்தீவு ஆனந்தபுரம் பகுதியில் மனித எலும்புக் கூடுகளும் எரியுண்ட நிலையில் மனித எச்சங்களும் பரவலாகக் காணப்படுகின்றன. இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகளில் ஒன்றாகக் காணப்படும் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஆனந்தபுரம் பகுதியின் பல இடங்களிலும் மனித எலும்புக் கூடுகள் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட மக்கள் இதனை உறுதிப்படுத்தினர் அத்துடன் பல இடங்களில் எரியூட்டப்பட்ட நிலையிலும் எலும்புகள், மனித எச்சங்கள் குவியல் குவியலாகக் காணப்படுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனந்தபுரம் தமிழ் வித்தியாலத்தின் சகல கட்டடங்களும் அழித்து கற்குவியல்களாக காணப்படுகின்றன. அந்தக் கட்டட இடிபாடுகளுக்குள் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்படுகின்றன. அத்துடன் பாடசாலை கட்டடத்தின் இரு இடங்களில் சிதைந்தும் உருக்குலைந்தும் காணப்பட்ட சடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் உள்ள காணியொன்றில் குடும்பம் ஒன்று மீளக் குடியேறச்சென்ற போது எரியூட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் குவியலாக காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கூடுதலான பகுதிகளில் கட்டட இடிபாடுகளுக்குள்ளும், பதுங்குழிகளுக்குள்ளும் புதையுண்ட நிலையில் சடலங்களும் எச்சங்களும் காணப்படுவதாக அங்கு மீளக் குடியமர்ந்த மக்கள் தெரிவித்தனர். இவ்வாறு தொடர்ச்சியாக மனித எச்சங்கள் காணப்படுவதால் மீளக் குடியமர்ந்துள்ள மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு லஞ்சம் வழங்க முயற்சி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு லஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கே இவ்வாறு லஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைபிற்கு ஆதரவளித்தால் பணம் வழங்குவதாக பேரம் பேசப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய நான்கு உறுப்பினர்களை இவ்வாறு விலைக்கு வாங்க முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

11 செப்டம்பர் 2012

உலகத் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார் உன்னி கிருஷ்ணன்.

newsயாழில் தனக்கு டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்திய சம்பவம் தனது இசைப் பயணத்தில் கரும்புள்ளியாக விழுந்துவிட்டது என தமிழகத்தின் பிரபல பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் எதிர்பாராது நடந்ததாகவும் அதற்காக உலகத் தமிழ் மக்களிடம் அவர் மன்னிப்பும் கோரியுள்ளார். நல்லூர் கந்தன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி சால்வை அணிவித்தார். இந்த சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், இந்த சம்பவத்திற்காக உலகத் தமிழ் மக்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தமிழகத்திலிருந்து வெளியாகும் இதழ் ஒன்றுக்கு அவர் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழாவையொட்டி இசைக்கச்சேரி செய்யுமாறு என்னை அணுகினார்கள். ஈழத்தமிழர்களின் மனங்களில் விடுதலைப் பாடல்களின் மூலம் நீங்காத இடம் பிடித்த நான், யாழ்ப்பாணம் சென்று அவர்களை சந்திக்கவும், இசை கச்சேரி நடத்தவும் ஒப்புக்கொண்டேன். இசைக்கச்சேரி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் திடீரென தமிழ் மக்கள் பலரின் படுகொலைக்கு காரணமான ஒட்டுக்குழுவின் பொறுப்பாளரான டக்ளஸ் தேவானந்தா திடீரென தன் ஒட்டுக்குழுவைச் சேர்ந்த சிலருடன் மேடையில் ஏறி, எனக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டார். பின்புதான் அவரைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். ஒட்டுமொத்த தமிழர்களாலும் வெறுக்கப்படுபவரும், இந்தியாவில் கொலை குற்றம் சாட்டப்பட்டவருமான ஒட்டுக்குழுவின் பொறுப்பாளர்தான் டக்ளஸ் தேவானந்தா என்பதை நான் பின்னர் தெரிந்துகொண்டேன். இந்த நிகழ்வு தற்செயலாக நடைபெற்ற வேண்டதகாத சம்பவமாகும். இந்த சம்பவத்தை பற்றி மிகுந்த மனம் வருத்தம் அடைகிறேன். என்றும் உங்கள் நம்பிக்கைக்கு உரியவனாவேன். என் இசை பயணத்தில் அச்சம்பவம் கரும்புள்ளியாக விழுந்துவிட்டதை உணருகிறேன். இனி வரும் காலங்களில் இப்படியொரு சம்பவம் நடைபெறாது என உறுதிகூறுகிறேன். இந்நிகழ்வு தமிழர்களை காயப்படுத்தியிருக்கும். அதற்காக மீண்டும் எனது மனவருத்தத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

யாருக்கு ஆதரவென்பதை தீர்மானிக்கும் மு.கா.வின் விசேட கூட்டம் இன்று.

கிழக்கு மாகாணசபை எவ்வாறு அமையும் என்பதை தீர்மானிக்கும் சக்தியைப் பெற்றிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பையா அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பையா ஆதரிக்கும் என்பதை தீர்மானிப்பதற்கான விசேட கூட்டத்துக்கு வருமாறு மாகாணசபை உறுப்பினர்களாக தெரிவான தனது ஏழு அங்கத்தவர்களையும் அழைத்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறுவதால் தொங்குநிலை காணப்படும் நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஆதரவைக் கோரியுள்ளன. ஆதரவு கோரும் இரு தரப்பினருடனும் எமது சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ரவூப் ஹக்கீமும் இன்று கலந்துகொண்டார். கூட்டத்தில் சிலர் இந்த பிரச்சினையை கிளப்பியபோதும் தான் எதுவும் பேசவில்லை என அவர் கூறினார். அதுபற்றி நாம் மிக ஆழமாக சிந்திக்க வேண்டம் என கூறினார். இதேசமயம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரான எம்.ரி.ஹஸன் அலியை கல்முனையில் உள்ள அவரது வீட்டில் சந்திப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு தூதுக்குழுவை ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது. 11 ஆசனங்களைப் பெற்றுள்ள இந்த கட்சி முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தது. இந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிழக்கிலுள்ள மூன்று பெரிய சமுதாயங்களின் பிரதிநிதிகளுக்கும் சம பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அமைச்சர் சபையை நியமிக்க தயாராக இருப்பதாக கூறினார். நாம் ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துப்போக தயாராகவுள்ளோம். அமைச்சர்களை நியமிக்கும் போது சிங்களம் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடங்கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

10 செப்டம்பர் 2012

வேலணையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் - ஒன்று பெண்ணுடையது மற்றையது ஆணுடையது!

வேலணை வைரவர் கோயிலடிப் பகுதியில் நேற்றையதினம் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மனித மண்டையோடுகள் மீட்கப்பட்டன. கயிற்றால் கல்லுடன் கட்டப்பட்டு, கிணற்றுக்குள் வீசி படுகொலை செய்யப்பட்டவர்களுடைய எச்சங்களாக இவை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குறித்த கோயிலடிப் பகுதியிலுள்ள கிணற்றினை துப்பரவு செய்ய முயன்ற சமயம் மேற்படி மண்டையோடு ஒன்று இருப்பதை பொது மக்கள் அவதானித்துள்ளனர். இதுகுறித்து கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. இதன் பின்னர் நேற்று மதியம் குறித்த கிணற்றிலிருந்து மண்டை ஓட்டை மீட்க முயன்ற சமயம் இன்னொரு மண்டையோடும் மனித எச்சங்களும் கிணற்றுக்குள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பின்னர் இரண்டு மனித மண்டையோடுகளும் ஏனைய எலும்புத் துண்டங்களும் கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. ஒரு மண்டையோடு ஆணுடையது என்றும் மற்றையது பெண்ணுடையது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இரு மனித எச்சங்களும் ஒரு வருடத்துக்கும் குறைவான காலப் பகுதியிலேயே கிணற்றினுள் போடப்பட்டிருக்க வேண்டும் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் மனித எச்சங்களாக மீட்கப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று நம்பப்படும் தொப்பி மற்றும் ஆடைகளும் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட மண்டையோடுகள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

09 செப்டம்பர் 2012

யாழில் ரவுடிகள் அட்டகாசம் - 2 பிள்ளைகளின் தந்தை வெட்டிக் கொலை!

யாழ் - திருநெல்வேலி சிவன் - அம்மன் ஆலயத்தை அண்டிய மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இரு இளைஞர் குழுக்கள் பரஸ்பரம் வாளால் வெட்டிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சினிமாப் பாணியில் வாள்களுடன் வீதிக்கு வந்த இளைஞர்கள் பரஸ்பரம் வாளால் வெட்டுப்பட்டுள்ளனர். இதில் யாழ். திருநெல்வேலிப் பகுதியினைச் சேர்ந்த பிரபு (வயது25) என்று அழைக்கப்படும் 2 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அதே இடத்தைச் சேர்ந்த தம்பா மற்றும் நல்லூரைச் சேர்ந்த றூபன் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதேவேளை குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபரை சிலர் துரத்தி வந்தாகவும் பின்னர் அந்த இடத்தில் வைத்து வெட்டி வீழ்த்தி விட்டு தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னதாக அந்தப் பகுதியில் இளைஞர்கள் சிலர் தமக்குள் மோதிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் காயமடைந்தவர்களில் ஒருவர், அவர்களிடையே சண்டையை நிறுத்துமாறு கூறச் சென்றவராவார். இதேவேளை இந்தச் சம்பவத்தையடுத்து உயிரிழந்தவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நல்லூர் அரசடி பகுதியில் நுழைந்த இளைஞர்கள் சிலரை வெட்டியுள்ளனர். இதில் சிலர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வெளியாட்கள் உள்நுழைய முடியாதபடி அப்பகுதியில் வாள்களுடன் இளைஞர்கள் நடமாடியதாக தெரிவிக்கப்படும் நிலையில், அப்பகுதி முழுமையாக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக பரவலாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டிய பொலிஸார் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பாக இருந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கப்பலேந்தி மாதா ஆலயத்தாக்குதல் சம்பவத்திற்கு செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்.

மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனை இடம் பெற்றுக்கொண்டிருந்த போது ஆலயப்பகுதிக்கு வந்த காடையர் குழுவொன்று குறித்த ஆலயத்தினுள் கற்களால் வீசி தாக்குதல்களை நடத்தியதோடு,பட்டாசுகளை கொளுத்தி குறித்த ஆராதனையினைக் குழப்ப முயற்சி செய்தமை மத அனுஸ்டானங்களையும்,இன ஒற்றுமையையும் சீர் குலைக்கும் செயலாகக் காணப்படுவதாகவும் இச்சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் தென் பகுதியில் முஸ்ஸிம்களின் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும்,பல்வேறுபட்ட தமிழ் அமைப்புக்களும் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்ததோடு நாட்டில் தமிழ்,முஸ்ஸிம் மக்கள் வாழுகின்ற இடங்களில் தமது வழிபாட்டுத்தலங்களை அமைத்து வழிபட முடியும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அண்மைக்காலங்களாக மன்னார் கருசல் கிராமத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம் மீது அப்பகுதிக்கு வரும் காடையர்கள் மிலேச்சத்தனமான செயல்களில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்று விடுகின்றனர். குறித்த சம்பவத்தினால் அப்பகுதி கத்தோலிக்க மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேஸ்பர் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த காடையர் குழு ஒன்று குறித்த ஆலயத்தை நோக்கி கற்களினால் எறிந்து விட்டு பட்டாசுகளை கொளுத்தி போட்டுள்ளனர். கல் வீச்சில் திருப்பலியினை ஒப்புக்கொடுத்த அருட்தந்தை ஒருவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் வெளியில் சென்று பார்க்கச் சென்ற 2 இளைஞர்கள் அக் காடையர்களினால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளனர். இதனால் அன்றைய தினம் இடம் பெற்ற வேஸ்பர் ஆராதனை குழப்பமடைந்த நிலையிலே காணப்பட்டது. இப்பகுதியில் தமிழ்,முஸ்ஸிம் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் காடையர் குழு மேற்கொண்ட குறித்த நடவடிக்கையினால் அக்கிராமத்தில் பாரியதோர் இனக்கலவரத்தைத் தோற்றுவிக்கும் செயலாகவே இந்தச்சம்பவம் அமைந்துள்ளது. எனவே தொடர்ந்தும் இத்தகையதொர்ய் சம்பவம் இடம் பெறாது இருக்க சம்பவத்துடன் ஈடுபட்ட குறித்த குழுவினர் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும்,தமிழ்,முஸ்ஸிம் மக்களின் ஒற்றுமை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் எனவும்,இச்சம்பவத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்