தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றான பிக்கறிங்கில் Taunton வீதி & Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் 26-11-2016 நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் நடைபெற்ற கோரவிபத்தில் இரண்டு வாகன சாரதிகள் கொல்லப்பட்டுள்ளனர். Honda Accord, Toyota Corolla ஆகிய வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன என தெரியவருகிறது. இவ்கோர விபத்து தொடர்பான விசாரணைகளை DURHAM பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்கோர விபத்து தொடர்பான தகவல்கள் இருப்பின் DURHAM பொலிஸாருக்கு அறிவிக்கலாம். மேற்படி விபத்தில் கொல்லப்பட்ட ஒருவர் நீர்வேலியைச் சேர்ந்த சதீஸ் லோகநாதன் (35), இரண்டாவது நபர் 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் அத்தீஸ் பலாசுரமணியம் எனவும் தெரியவருகிறது.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
28 டிசம்பர் 2016
26 டிசம்பர் 2016
சுனாமி நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டது!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இன்று சுனாமி நினைவுத் தூபி திறந்தவைக்கப்பட்டு, குறித்த இடத்தில் மத வழிபாடுகளும் மலர் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன. சுனாமி பேரலையில் சிக்கி உயிர்நீத்தோரின் நினைவாக அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, யுத்த காலத்தில் படையினரால் அழிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் ஏற்பாட்டில் புதிதாக தூபி அமைக்கப்பட்டு, சுனாமி ஏற்பட்டு 12 வருட நினைவுதினமான இன்று திறந்து வைக்கப்பட்டது. சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள குறித்த இடத்தில், இன்றைய தினம் அவர்களது உறவுகள் மலரஞ்சலி செலுத்தினர். இந் நினைவு நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மூதாளர்களை அவமானப்படுத்திய நத்தார் பரிசு!
கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற நத்தார் தின நிகழ்வில் மூதாளர்கள் பலரை அவமானப்படுத்தும் செயல் இடம்பெற்றுள்ளது. நத்தார் தின நிகழ்வில் மூதாளர்களுக்கு உதவும் நோக்கில் பரிசுப் பொதிகள் வழங்கப்படுவதாக அறிவித்து குறித்த கிராமத்தில் வாழ்கின்ற 136 மூதாளர்களை பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துள்ளனர்.
கிராமத்தின் முதியோர் சங்கமும், வெளி மாவட்ட அமைப்பும் இணைந்து பொதிகளை மூதாளர்களுக்கு வழங்கினர். குறித்த பொதிகளை பிரித்து பார்ப்பதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மூதாளர்களுக்காக வழங்கப்பட்ட பொதிகளில் ஆடைகளே காணப்பட்டதாகவும், அவை எந்த வகையிலும் தமக்கு பொருத்தமில்லாத ஆடைகள் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பரிசுப் பொதிகளில் மேலைத்தேய பெண்கள் அணியக்கூடிய உள்ளாடை களே காணப்பட்டுள்ளன. மேலும் கிழிந்த புடைவைகளும் குறித்த பொதிகளில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உபயோகிக்க முடியாத ஆடைகளை பரிசாக வழங்கியது எந்த விதத்தில் நியாயம் என பொது மக்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கிராமத்தில் வாழ்கின்ற மூதாளர்கள் என்ற காரணத்தின் அடிப்படையிலேயே தாம் அவமானப்படுத்தப்பட்டதாகவும், குறித்த செயலினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அறிவொளி எனும் அமைப்பு ஒழுங்கு செய்திருந்ததாக செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 டிசம்பர் 2016
சர்வதேச விசாரணையின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ள ரவிராஜ் கொலை வழக்கு!
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணையே தேவை என்பதை ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பு உணர்த்தியுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீதித்துறையில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்காது என்ற செய்தி இதன் மூலம் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் நிறைவை மிக உற்சமாக கொண்டாடவுள்ள நிலையில் சிங்கள பௌத்த பேரினவாதம் தெளிவான செய்தியை கூறியிருக்கிறது. ரவிராஜின் படுகொலை மூலம் ஈழத் தமிழர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கான தீர்வு வழங்கப்படாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பில் எந்தவொரு குற்றவாளிகளையும் கண்டறிய தவறிய அரசாங்கம், அனைத்து சந்தேகநபர்களையும் தற்போது விடுவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
24 டிசம்பர் 2016
மனிதம் மரணித்து விட்டதா?தையிட்டியில் மூதாளர்களின் அவல நிலை!
தையிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட மூதாளர்களான தம்பதியர் இருவர் தனித்து விடப்பட்ட நிலையில் தெல்லிப்பளையில் நோயோடும் பசியோடும் கடந்த சில வருடங்களாக போராடியே வாழ்ந்து வந்த அவலம் கண்களை குளமாக்கியது.இரண்டு வாரங்களாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட மூதாளரான பெண்மணி மாற்றுடை இன்றி இயற்கை கடன்கள் அனைத்தையும் கழித்தவாறு தரையில் முடங்கி கிடக்க,காது கேளாத,நடக்கவே தள்ளாடும் கணவன் செய்வதறியாது குப்பி விளக்குடன் காலம் கழித்த அவலம் நெஞ்சத்தை பிழிந்தது.ஆனாலும் இன்னும் மனிதத்தை நேசிக்கும் தெல்லிப்பளை பிரதேச உத்தியோகத்தர்கள் சிலர் மிக கரிசனை கொண்டு எம் சுகாதார துறையை தொடர்பு கொள்ள நாமும் சைவ மகா சபையினரும் இணைந்து அத்தாயாரை தெல்லிப்பளையில் சேர்த்து பின் மேலதிக சிகிச்சைக்கு யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதித்தோம்.அகதி அரசி எனும் படைப்புக்காய் முதலமைச்சர் விருது வென்றவரும்
மனைவியின் துயர் கண்டு இயாலாமையோடு போராடிக் கொண்டிருந்த அந்த பெரியவருமான இராசதுரை ஐயாவை சைவ மகா சபை அலுவலகத்தில் தங்க வைத்தோம்.
இவ்வளவில் எம்மை இயக்கி மன நிறைவைத் தந்த பிட்டுக்கு மண் சுமந்த பெருமானின் கருணையை பணிகின்றோம்
அன்பின் உறவுகளே
உங்கள் வீட்டின் அருகிலும் இவ்வாறான மூத்தோர் அநாதரவற்று இருக்கலாம்.
எம்மால் முடிந்தளவு உதவுங்கள் குறைந்த பட்சம் அவசர அம்புலன்ஸ் இலக்கமான 021 2225555 / 6666 ற்கு அழைத்து வைத்தியசாலையில் சேர்க்கவாவது உதவுங்கள்.
நன்றி:நந்தகுமார் பரா(முகநூல்)
நன்றி:நந்தகுமார் பரா(முகநூல்)
23 டிசம்பர் 2016
ஜெர்மன் தாக்குதல்தாரி இத்தாலியில் சுட்டுக்கொலை!
ஜெர்மன் பெர்லின் நகரில் திங்களன்று கிறிஸ்துமஸ் சந்தையில் பார ஊர்தியை செலுத்தி 12 பேரைக்கொன்ற சந்தேக நபர் அனிஸ் அம்ரி இத்தாலியின் மிலன் நகரில் காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இத்தாலிய உளவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
அந்த பார ஊர்தியை செலுத்தும் பாகத்தில் இருந்த கைரேகையும் சுட்டுக்கொல்லப்பட்டவரின் கைரேகையும் ஒத்துப்போவதாகவும் இத்தாலிய உள்துறை அமைச்சர் மார்கோ மின்னிட்டி தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை விடியற்காலை மூன்றுமணிக்கு மிலன் நகர காவல்துறையினருக்கும் அம்ரிக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.
ரோந்த்துக்கு சென்ற மிலன் காவல்துறையினர் அம்ரி சாலையில் நடந்து சென்றதைக்கண்டதாகவும், அவரது அடையாள அட்டையை காட்டும்படி காவலர்கள் கோரியபோது அவர் தனது பையில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து இஸ்லாமிய கோஷமிட்டபடி சரமாரியாக சுடத் தொடங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.
ஒன்பது மாதமே ஆன பயிற்சி காவல்துறை அதிகாரி பதிலுக்கு அம்ரியை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காவல்துறை அதிகாரிக்கும் காயம் பட்டிருந்தாலும் அவரது காயங்கள் ஆபத்தானவை அல்ல என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பெர்லினில் நடந்த பார ஊர்தித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் காயமடைந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.
20 டிசம்பர் 2016
ஜெர்மனியில் நடந்த தாக்குதல்!பதிலடி எப்போது?
ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதியில், லாரியை ஓட்டிச் சென்று 12 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான தாக்குதல் சம்பவத்துக்கு எப்போது பதிலடி கொடுக்கப் போகிறீர்கள் என்று, ஜெர்மனியின் கன்சலர் அங்கெலா மெர்கலுக்கு அந்நாட்டில் உள்ள குடியேறிகளுக்கு எதிரான கட்சியான ஏஎஃப்டி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.இத்தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையை எப்போது ஜெர்மனி எடுக்கப் போகிறது என்றும் அவர்கள் வினவியுள்ளனர்.
நேற்றிரவு ( திங்கள்கிழமை) நடந்த தாக்குதல் சம்பவத்தை, மெர்கலின் குடியேறிகளுக்கான திறந்தவெளி கொள்கையே காரணம் என ஏஎஃப்டி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். அங்கெலா மெர்கலின் குடியேறிகளுக்கு ஆதரவான கொள்கை திட்டத்தால், கடந்த ஆண்டு சுமார் பத்து லட்சம் பேர் ஜெர்மனிக்கு வந்துள்ளனர்.
நன்றி:பிபிசி தமிழ்
நன்றி:பிபிசி தமிழ்
19 டிசம்பர் 2016
நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பி.க்கும் தொடர்பில்லையாம்!
நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பிக்கும் சம்மந்தம் இல்லை என அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம், டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். ஈ.பி.டி.பி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் வழக்கு தொடர்பாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், அந்த விடயம் தொடர்பில் நான் அதிகம் பேச நினைக்கவில்லை. இருந்தும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்கள் கட்சியின் ஆதரவாக செயற்படுகின்றனர். இதே போல் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சிறையில் உள்ளவர் கட்சியின் ஆதரவாளரே தவிர அவர் கட்சி உறுப்பினர் அல்ல. அவர் வேறு கட்சி சார்ந்தவர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டபட்டவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்களாவர். ஒட்டுமொத்தமாக இந்த வழக்கில் ஈ.பி.டி.பிக்கு தொடர்பு இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசார அணியினரை வழிமறித்து தாக்கியதில் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டு, 18 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் ஈபிடிபி உறுப்பினர்கள் மூவருக்கு இரட்டை மரணதண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
14 டிசம்பர் 2016
ஹேக்கர்களிடம் அப்பல்லோ கம்ப்யூட்டர்கள்!
அப்பல்லோ மருத்துவமனை கம்ப்யூட்டர்களை ஹேக் செய்திருப்பதாக லெஜ்ஜியன் குழு அறிவித்துள்ளது. அத்துடன் அப்பல்லோ மருத்துவமனையில் விஐபிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை வெளியிட்டால் பெரும் குழப்பம் வரும் எனவும் அக்குழு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி, விஜய் மல்லையாவின் ட்விட்டர் அக்கவுண்ட்டுகளை முடக்கி பரபரப்பை கிளப்பிய ஹேக்கர்ஸ்தான் லெஜ்ஜியன் குழுவினர். தற்போது அப்பல்லோ மருத்துவமனை கம்ப்யூட்டர்களை ஹேக் செய்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.அத்துடன் அப்பல்லோ மருத்துவமனையில் விஐபிக்களுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அதை வெளியிட்டால் பெரும் குழப்பம் ஏற்படும் எனவும் லெஜ்ஜியன் குழுவினர், வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.
மேலும் அடுத்ததாக இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியின் ட்விட்டர் அக்கவுண்ட்டை தாங்கள் ஹேக் செய்யப் போவதாவும் மிரட்டல் விடுத்துள்ளது லெஜ்ஜியன் குழு.
07 டிசம்பர் 2016
ஜெயலலிதாவின் ஆலோசகர் துக்ளக் ஆசிரியர் சோ காலமானார்!
அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த பத்திரிகையாளரும் துக்ளக் இதழின் ஆசிரியருமான சோ ராமசாமி இன்று காலை காலமானார். அவர் தனது நெருங்கிய நண்பரான முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தது தெரியாமலேயே உயிரிழந்துள்ளார். சோ ராமசாமி பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர், நடிகர் என பன்முகத் தன்மைக்கொண்டவர். கடந்த சில மாதங்களகாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மருத்துவமனையில் மூச்சுதிணறல் காரணமாக அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கைத் துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சோ ராமசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் ஆவர். ஜெயலலிதா அரசியல் தொடர்பாக சோவிடம் ஆலோசனை கேட்பார், அவரது ஆலோசனைப்படி நடப்பார் என கூறப்படுவதும் உண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானர். அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவு செய்தி சோவுக்கு தெரிவிக்கப்படவில்லை என தற்போது தெரியவந்துள்ளது. தனது நெருங்கிய நண்பர் உயிரிழந்தது தெரியாமலேயே அடுத்த 2 நாட்களுக்கு சோ ராமசாமி உயிரிழந்துள்ளார்.
05 டிசம்பர் 2016
முதல்வர் ஜெயலலிதா காலமானதாக அறிவிப்பு!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு (வயது 68) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தியைக் கேட்டு தமிழகமே பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் உறைந்துபோயுள்ளது. முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ந் தேதியன்று உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.நீர்ச் சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் நுரையீரல் தொற்று பாதிப்பு உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை கூறியது. இதனால் லண்டன் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தொடர்ந்து கூறிவந்தார்.அத்துடன அப்பல்லோ போய்விட்டு வந்த அதிமுக தலைவர்களும், ஜெயலலிதா நன்றாக குணமடைந்துவிட்டார்; வீடு திரும்புகிறார் என கூறி வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ந்தது. இதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு ரத்தநாள அடைப்பைப் போக்கும் ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். ஆனால் திங்கள்கிழமை பிற்பகல் முதல் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரும் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக மோசமாகிவிட்டது எனவும் கூறியிருந்தார். பின்னர் மாலை 5.30 மணியளவில் ஜெயலலிதா காலமாகிவிட்டார் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது. அதிமுக தலைமை அலுவலகத்திலேயே கூட அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.பின்னர் மாலை 5.45 மணியளவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடருவதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராடினர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அப்பல்லோ மருத்துவமனை இதை உறுதி செய்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா நம்மைவிட்டு பிரிந்துவிட்டாரே என்ற சோகம் ஒட்டுமொத்த தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. ஏழைகளின் காவலராக விளங்கிய எங்கள் தலைவியை நாங்கள் இழந்துவிட்டோமே என கண்ணீரும் கம்பலையுமாக அதிமுகவின் அப்பல்லோ மருத்துவமனைகளில் கட்டுக்கடங்காத வகையில் கூடியுள்ளனர். தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)