பக்கங்கள்

24 ஜனவரி 2020

கனடாவில் தமிழக மாணவி மீது தாக்குதல்!

ரேச்சல் ஆல்பர்ட்கனடாவில் மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 23 வயதான ரேச்சல் ஆல்பர்ட் எனும் அந்த மாணவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.தமிழகத்தின் குன்னூரை சேர்ந்த ஆல்பர்ட் என்பவரின் இரண்டாவது மகள் ரேச்சல். குன்னூரில் பள்ளிக் கல்வியை படித்த அவர், பெங்களூருவில் இளநிலை பட்டப்படிப்பை பெற்ற பிறகு, சுமார் மூன்றாண்டுகள் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். பள்ளி, கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கிய அவருக்கு, கனடாவின் மிகப் பெரிய நகரமான டொரொண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித்தொகையுடன் பட்ட மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்க, அங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் "விநியோகச் சங்கிலி மேலாண்மை" (Supply chain management) பயின்று வருகிறார்.இந்நிலையில், உள்ளூர் நேரப்படி, கடந்த புதன் கிழமை அன்று இரவு 10 மணியளவில் யார்க் பல்கலைக்கழக வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபரால் ரேச்சல் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக டொரொண்டோ நகர காவல்துறை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. ஆசியாவை சேர்ந்தவராக கருதப்படும் அந்த நபர், சுமார் 5'11'' உயரம் இருக்கக் கூடும் என்றும், ரேச்சலை தாக்கிய பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களை முதலாக கொண்டு அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் டொரொண்டோ நகர காவல்துறையின் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.டொரொண்டோ நகர மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரேச்சலை பார்ப்பதற்காக, கனடாவுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அவரது தந்தை ஆல்பெர்ட்டை இதுதொடர்பாக பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை போன்று, கனடாவிலும் படிப்பில் சிறந்து விளங்கிய தனது மகளை பொறாமையின் காரணமாக உடன் படிக்கும் மாணவரே தாக்கியிருக்கக் கூடும் என்று ஆல்பர்ட் சந்தேகிக்கிறார். "எனது மகள்தான் அவளது வகுப்பறையிலேயே இளைய மாணவர். 30-35 வயதை சேர்ந்தவர்கள் கூட அவளுடன் படிக்கிறார்கள், ஆனால் ரேச்சல்தான் படிப்பில் சிறந்து விளங்கி வருகிறாள். இந்நிலையில், தன்னிடம் 'எப்படி நீ மட்டும் இவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறாய்' என்று அடிக்கடி கேட்டு தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தன்னை தொந்தரவு செய்வதாக எனது மகள் என்னிடம் கூறியதுண்டு. எனவே, அந்த சக மாணவர்தான் ரேச்சலை தாக்கி இருப்பாரா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது" என்று அவர் கூறுகிறார்.இந்நிலையில், கடந்த வாரம்தான் ரேச்சல் தான் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற உள்ளதாக தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். "எனது மகளிடம் அவரை டேட்டிங் செய்ய விரும்புவதாக கூறி, அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக எனது முதல் மகளிடம் சமீபத்தில் ரேச்சல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எனக்கு தெரியாது என்பதால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உள்ளதாக ரேச்சல் என்னிடம் கூறியபோது அவர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், இப்போது எந்த சம்பவத்தை எதனோடு தொடர்புபடுத்தி பார்ப்பது என்று எனக்கு தெரியவில்லை" என்று ஆல்பர்ட் கூறுகிறார்.ரேச்சல் அடையாளம் தெரியாத நபரால் அவரது கழுத்துப் பகுதியில் பலமுறை குத்தப்பட்டு, சம்பவம் நடந்த நடைபாதையில் சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக கனடாவை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், தனது மகள் கத்தியால் குத்தப்பட்டதுடன் பின்புறம் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாக அவரது தந்தை கூறுகிறார். "எனது மகளின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டபோது, அவர் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாக கூறினர். ஆனால், இதுதொடர்பாக ஏன் தங்களது செய்தியில் கனேடிய ஊடகங்கள் குறிப்பிடவில்லை என்று எனக்கு குழப்பமாக உள்ளது. இந்திய வெளியுறவுத் துறையின் உதவியுடன், விசா கிடைத்த உடனேயே கனடாவுக்கு செல்ல உள்ளேன். நான் நேரில் சென்ற பிறகுதான் அனைத்து விடயங்களும் தெரிய வரும்" என்று ரேச்சலின் தந்தை ஆல்பர்ட் கூறுகிறார். ரேச்சல் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் டொரொண்டோ நகர காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும், தனது மகளின் உடல்நிலையை கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

நன்றி:பிபிசி தமிழ்

09 ஜனவரி 2020

ஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுக்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு!

காசெம் சுலேமானீஇரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. "இரான் ராணுவத் தளபதி காசெம் சுலேமானீயை தற்காப்புக்காகவே கொலை செய்தோம்" என்று ஐக்கிய நாடுகள் அவைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், இரானின் மிக சக்திவாய்ந்த ராணுவத் தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ, வெள்ளிக்கிழமையன்று இறந்தார்.காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே, இராக்கில் அமெரிக்க துருப்புகள் செயல்பட்டுவந்த ராணுவ தளங்கள் மீது இரானில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மேற்கொண்டு குந்தகம் விளைவிக்காமல் இருக்கவும், இரான் அரசு மேலதிக நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கவும், இரான் தரப்புடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐநாவுக்கான அமெரிக்க தூதர் கெல்லி கிராஃப்ட் தெரிவித்துள்ளார். எந்தவொரு நாடும் தங்கள் தற்காப்பு கருதி நடவடிக்கை எடுக்க ஐநா சாசனத்தின் பிரிவு 51 வழிவகை செய்கிறது. இதன் காரணமாகவே காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் அந்தக் கடிதத்தை ஐநா பாதுகாப்பு சபைக்கு தெரிவிக்க அமெரிக்கா எழுதியுள்ளது.மத்திய கிழக்கு பகுதியில் உள்ள தங்கள் நாட்டு ஊழியர்கள் மற்றும் நலன்களை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரான் மீதான பொருளாதார தடைகள் நீடிக்கும் சூழலில், பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வந்துள்ளது என்று ஐநாவுக்கான இரான் தூதர் மஜித் தக்த் ராவன்சி கூறியுள்ளார். இராக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மீது இரான் நடத்திய தாக்குதலும் ஐநா சாசனத்தின் பிரிவு 51இன் கீழ் நியாயப்படுத்தக்கூடியதே என்று அவர் கூறியுள்ளார். ஐநா பாதுகாப்பு சபைக்கு இரான் எழுதியுள்ள கடிதத்தில் தங்கள் தரப்பு போரையோ நிலைமை மோசமாவதையோ விரும்பவில்லை என்றும், உரிய அளவிலான பதில் ராணுவ நடவடிக்கையை தாங்கள் எடுத்ததாக கூறப்பட்டுள்ளது. தாங்கள் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கோ அவர்களின் சொத்துகளுக்கோ சேதம் ஏற்படவில்லை. ராணுவ நிலைகள் மீது மட்டுமே இலக்கு வைத்து தாக்கப்பட்டது என்றும் இரானின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:பிபிசி தமிழ்