பக்கங்கள்

30 அக்டோபர் 2014

சிறீலங்கா நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி!போர்க்களமானது இராமேஸ்வரம்!

போதைப் பொருள் கடத்தியதாக 5 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை- கொழும்பு ஹைகோர்ட்! இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு ராமேஸ்வரத்தில் பெரும் போராட்டம் வெடித்துள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ராமேஸ்வரம் அருகே பேருந்து ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் போதைப் பொருளை கடத்தியதாக 2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் இன்று கொழும்பு உயர்நீதிமன்றத்தில் 5 மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்துள்ளது. WERBUNG இது தமிழகத்தில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் - மதுரை சாலையில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மதுரை - ராமேஸ்வரம் சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் டயர்கள் கொளுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. போர்க்களமானது ராமேஸ்வரம்! தண்டவாளம் தகர்ப்பு - பேருந்துக்குத் தீவைப்பு -மின்சாரம் துண்டிப்பு! இதேபோல் ராமநாதபுரம்- ராமேஸ்வரம் ரயில் பாதைகளில் தண்டவாளங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தால் சென்னை புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டங்களால் ராமேஸ்வரம் பகுதியே மிகுந்த கொந்தளிப்பாக பதற்றமாக காணப்படுகிறது.இதனிடையே ராமேஸ்வரம் அருகே அக்காமடத்தில் பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் முற்றாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.இந்த போராட்டங்களால் ராமேஸ்வரத்தில் இருந்து வெளியூர் செல்லும் சென்னை எழும்பூர், கன்னியாகுமரி, மதுரை செல்லக் கூடிய 4 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டிருப்பதால் ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

29 அக்டோபர் 2014

மலையகத்தில் மண்சரிவில் புதையுண்டனர் மக்கள்!

மீரியபெத்த பகுதியில்  பெரும் மண்சரிவு!  400 பேர் வரையானோர் மாயம்!! 14 சடலங்கள் மீட்பு!!!ஹப்புத்தளை - ஹல்துமுல்ல - மீரியபெத்த பிரதேசத்தில் பெரும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பெய்துவரும் கன மழை காரணமாக தற்போதும் மண்சரிவு ஏற்பட்டவண்ணமுள்ளதாக கொஸ்லந்த பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் 14 சடலங்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு இடம்பெற்ற பகுதிக்கு மீட்புப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார். மண்சரிவில் சிக்கி 400 பேர் வரையானோர் காணாமற்போயுள்ளனர் என்றும், அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மண்சரிவு காரணமாக 8 லயன்களும் 5 கோட்டஸ்களும் மண்ணுக்குள் புதைந்துள்ளன என தெரியவருகிறது. அங்கு வசித்த மக்கள் குறித்து தெரியவரவில்லை என்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.மலையகத்தில் மண்சரிவில் புதையுண்டனர் மக்கள்!

26 அக்டோபர் 2014

கிளி,யில் விசாரணைப்படிவம் வழங்கியவர் கைதாம்!

ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிப்பதற்கொனத் தயாரிக்கப்பட்ட படிவங்களை கிளிநொச்சிப்பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை பயங்கரவாதத் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்தனர் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் மக்களுக்கு படிவங்களை விநியோகித்துக் கொண்டிருந்த சமயமே நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. கைதான நபரிடமிருந்து போர்க்குற்ற விசாரணைக்காக சமர்ப்பிக்கப்படவிருந்த படிவங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும், அவரை வவுனியாவுக்கு கொண்டுசென்று விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 அக்டோபர் 2014

முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம் பகுதிகளில் உடல்கள் எரிக்கப்பட்டுள்ள எச்சங்கள்!

News Serviceமுள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம் பகுதிகளில் உள்ள சில பாலங்களுக்கு அடியில் உடல்கள் எரிக்கப்பட்டுக் கிடப்பதாக அங்கு சென்று மீண்ட தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள். வட்டுவாகலில் உள்ள சிறிய பாலம் ஒன்றிற்கு அடியில் சுமார், 15 உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், மற்றும் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே பல உடல்கள் எரியூட்டாப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இராணுவத்தினரின் தாக்குதல்களில், கட்டட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவகள் உடல்களுக்கு பக்கமாக மரக் குத்திகளைப் போட்டு இராணுவம் எரியூட்டியுள்ளது. குறிப்பாக உடல்களை அழிக்கவும் இவ்வாறு செய்துள்ளனர். மேலும் முள்ளிவாய்க்காலில் இறந்த பலரது உடல்களை இடிந்த பாலங்களுக்கு அடியில் போட்டு எரியூட்டியும் உள்ளனர்.சமீபத்தில் சில தமிழர்கள், முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம், மற்றும் வட்டுவாகல் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். தடைசெய்யப்பட்ட சில பகுதிகளுக்கு இவர்கள் சென்றவேளை அவ்விடம் எங்கிலும் மண்டை ஓடுகள் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தது மட்டுமல்லாது, அவற்றை புகைப்படமும் எடுத்துள்ளனர்.போர் நடந்தவேளை தம்மை பாதுகாத்துக்கொள்ள மக்கள் வெட்டிய பதுங்கு குழிகள் பல காணப்படுவதாகவும், அவற்றில் பல பொறிந்து உள்நோக்கி விழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், அதனுள் பல மண்டை ஓடுகளும் மனித எலும்புகளும் காணப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர். அவற்றுக்கு அருகாமையில், பல இடங்களில் வெள்ளை நிற சாம்பல் காணப்படுவதாகவும், அவை மனித உடல்களை எரிக்கும்போது மிஞ்சும் சாம்பல் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆங்காங்கே வெடிக்காத, (இல்லையேல் ஏவமுடியாத) ராக்கெட்டுகளும் நிலத்தில் காணப்படுவதாகவும் அறியப்படுகிறது.இலங்கை இராணுவத்தினர் இறுதி நேரத்தில் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் முன்னேற ஆர்.பி.ஜி ரக ஏவுகணைகளையே பயன்படுத்தியுள்ளனர். பாரிய அழிவை ஏற்படுத்தவல்ல இவ்வகையான ஏவுகணைகளைப் பயன்படுத்தியே இராணுவம் முன்னேறியுள்ளது. இந்நிலையிலேயே தாம் கனரக ஆயுதங்களைப் பாவிக்கவில்லை என்று, சர்வதேச தொலைக்காட்சிகளுக்கு 2009ம் ஆண்டு இலங்கை அரசு தெரிவித்தது. முள்ளிவாய்க்கால் பகுதிகள் எங்கும், வெடிக்காத மற்றும் ஏவ முடியாத ராக்கெட்டுகள் நிலத்தில் இருப்பதை, நீங்கள் நாம் இணைத்துள்ள படங்களில் காணலாம்.தமிழ் மக்களை கொன்று குவித்து, அடையாளம் தெரியாமல் இருக்க அவர்களின் உடல்களை, மறைவிடங்களில் வைத்து மரக்குத்திகளைப் போட்டு எரியூட்டியுள்ளது இலங்கை இராணுவம்.இப் போர் குற்ற ஆதரங்களை, ஐ.நா மனித உரிமை கழகத்துக்கு நாம் அனுப்பி வைத்துள்ளதோடு, பான் கீ மூனைச் சந்திக்கவுள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினருக்கும் இப் புகைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

நன்றி,-தமிழர் குரல்-

24 அக்டோபர் 2014

காணாமற்போன பெண் சடலமாக கண்டுபிடிப்பு!

காணாமற்போயிருந்த பெண்  முள்ளியில் சடலமாக மீட்பு!நாகர்கோயில் பகுதியில் காணாமற்போயிருந்த இளம் தாயொருவர் வடமராட்சி முள்ளிப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வடமராட்சி, நாகர்கோவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான கலியுகமூர்த்தி சுகந்தி (வயது - 36) என்பவர் காணாமற்போயுள்ளார் என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை முள்ளிப் பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற சிலர் சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சடலம் அழுகிய நிலையில் உருக்குலைந்து காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் பருத்தித்துறை நீதிவான் ஜே.கஜநிதிபாலன் சடலத்தைப் பார்வையிட்டு பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

நன்றி!மலரும்.கொம்

23 அக்டோபர் 2014

புலிகளுடன் தொடர்பு என்பது பொய்யென துரைராஜா மறுப்பு!

ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் அதிகாரபூர்வ இல்லத்தை 2009-ம் ஆண்டில் புதுப்பித்த செல்வாசுக் நிறுவனம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது என்று இலங்கையில் வெளியாகும் குற்றச்சாட்டுக்களை அந்த நிறுவனம் மறுத்துள்ளது.விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நிதி நிறுவனம் ஒன்றுடனேயே குறித்த கட்டடத்தை புதுப்பிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததை தான் பதவியேற்றபோது கண்டுபிடித்ததாக ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தமாரா குணநாயகம் அண்மையில் பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.தமாரா குணநாயகத்துக்கு முன்னதாக ஜெனீவாவில் பணியாற்றியவர், தற்போது இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளராகவுள்ள ஷெனுக்கா செனவிரட்ண.ஷெனுக்காவின் காலத்திலேயே விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நிறுவனத்துடன் அந்தக் கட்டடத்தை புதுப்பிக்கும் வேலை நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜேவிபியும் குற்றம் சாட்டிவருகின்றது.2012-ம் ஆண்டில் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் நால்வர் சுவிட்சர்லாந்துக்கு சென்று நடத்திய ஆய்வின் முடிவில் தயாரிக்கப்பட்டது என்று நம்பப்படுகின்ற அறிக்கை ஒன்றையும் ஜேவிபி ஊடகங்களுக்கு கசியவிட்டிருந்தது.இந்த பின்னணியிலேயே, இலங்கைப் பிரதிநிதியின் இல்லத்தை புதுப்பித்துக் கொடுத்த செல்வாசுக் நிறுவனத்தின் உரிமையாளர் பி.டி. துரைராஜா பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.தமது நிறுவனத்தை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி வெளியான குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்தார்.தான் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் துரைராஜா தமிழோசையிடம் கூறினார்.இதே நேரம்"தான் புலிகளின் ஒரு சிலரால்(சுவிசில் உள்ள)மிரட்டப்பட்டதாகவும் துரைராஜா பிபிசீக்கு தெரிவித்துள்ளார்.

22 அக்டோபர் 2014

யாழ்,சங்கிலியன் அரண்மனைக்கு சிங்களவர் உரிமை கோருகிறார்!

நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சங்கிலியன் அரண்மணை எனது பரம்பரைச்சொத்து. அதனை மீட்டுத் தரவேண்டும் என உரிமை கோரி திடீரென எங்கிருந்தோ வந்த தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அரண்மனைக்குச் சொந்தமான பரம்பரையின் இப்போதுள்ள வாரிசு நான்தான். ஆனால் இதனை தொல்பொருள் திணைக்களம் உரிமை கொண்டாடி வருகிறது எனவும் அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். உரிய விசாரணை மேற்கொண்டு எனது பரம்பரைச் சொத்தை மீட்டுத் தரவேண்டும் எனவும் தனது முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண தமிழ் இராச்சியத்தின் சான்றுகளாக இப்போது எஞ்சியிருப்பது நல்லூர் சங்கிலிதோப்பு, மந்திரிமனை, அரண்மணை வாயில், சங்கிலிய மன்னனின் சிலை உள்ளிட்ட மிகச் சிலவே என்பது குறிப்பிடத்தக்கது.

21 அக்டோபர் 2014

இந்தியப்படைகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு கடமையில் இருந்த போது சுட்டுக்கொல்லப்பட்ட 21 பேரின் 27 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். 1987ஆம் ஆண்டு இதே தினத்தில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த இந்திய இராணுவம் அங்கு கடமையில் இருந்த வைத்தியர்கள் தாதியர்கள் உட்பட 21பேரையும் நோயாளர்கள் 60 பேரையும் சுட்டுக்கொன்றனர் என்பது தெரிந்ததே.

20 அக்டோபர் 2014

கஜதீபனை விழாக்களுக்கு அழைக்க விசாரணையாம்!

kajatheepanவடமாகாண சபை உறுப்பினர் கஜதீபனை விழாக்களில் கலந்துகொள்ள அழைப்பதற்காகவே அவரது விபரங்களை திரட்டினோம் என்று யாழ்.மாவட்ட படைகளின் ஊடகப்பேச்சாளர் மேஜர் ரஞ்சித் மல்லவராச்சி ஞாயிற்றுக்கிழமை (19) கூறினார். வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபனின் ஏழாலையில் அமைந்துள்ள வீட்டிற்கு சனிக்கிழமை (18) காலை சென்ற படையினர் மூவர் கஜதீபனிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். வீட்டுக்கு சென்ற படையினர்,வசாவிளான் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மற்றும் இராணுவ வீரர்கள் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்டனர். தொடர்ந்து, உங்களுக்கு திருமணமாகிவிட்டதா, எத்தனை குழந்தைகள்?, உங்கள் கிராமஅலுவலர் பிரிவு என்ன? போன்ற கேள்விகளை கஜதீபனிடம் கேட்டுள்ளனர்.விசாரணை செய்தமைக்கான காரணத்தை கஜதீபன் கேட்டபோது, அது மேலிடத்து உத்தரவு என குறித்த படையினர் தெரிவித்திருந்தனர்.இது தொடர்பில் மேஜர் ரஞ்சித் மல்லவராச்சியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘இராணுவத்தினர் நடத்தும் நிகழ்வுகளுக்கு கஜதீபனை அழைக்கும் பொருட்டு அவரிடம் தரவுகள் பெறப்பட்டதாகவும் மாறாக இராணுவ விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை’ எனவும் கூறினார்.

19 அக்டோபர் 2014

யாழில் மழையுடன் விழுந்தன மீன்கள்!

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பெய்த மழையுடன் மீன்களும் விழுந்துள்ளன. குடாநாட்டில் பரவலாக பருவமழை பெய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதியில் மீன் மழை பெய்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீரமாகாளி அம்மன் கோயில் பகுதியில் பெய்த மழையின்போது 30 தொடக்கம் 40 வரையான மீன்கள் மழையுடன் விழுந்துள்ளன. கறுப்பு நிறத்தில் இருந்த சிறிய மீன்களை பார்வையிட அப்பகுதியில் மக்கள் திரண்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக நேரில் கண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் - அதிகாலைவேளை ஆலயத்தின் பிரதம குரு அருகில் இருந்த தனது வீட்டில் இருந்து ஆலயத்தை நோக்கிச் சென்றுள்ளார். இதன் போது ஆலயத்தின் முன்பகுதியில் சில மீன்கள் துடித்துக் கொண்டு இருப்பதை அவதானித்துள்ளார். இதன் பின்னர் அயலில் உள்ளவர்களை அழைத்துக் கொண்டு அப்பகுதியை முழுமையாக அவதானித்துள்ளார்.இதன் போது அப்பகுதியில் உள்ள தேர் முட்டியடியில் தேங்கி நின்ற மழை வெள்ளத்தில் ஏராளமான மீன்கள் காணப்பட்டதையும் அவதானித்துள்ளனர். அதே போன்று ஆலயத்தின் முன்பகுதியிலும் அதிகளவான மீன்கள் துடித்துக்கொண்டு இருந்துள்ளன. மழையுடன் சேர்ந்து மீன் விழுந்த சம்பவம் தொடர்பாக கதை தெரிந்த பலர் அங்கு வந்து மீன்களை பார்வையிட்டுச் சென்றிருந்தனர். இதன் பின்னர் அங்கிருந்த சில மீன்கள் பொது மக்களால் பிடித்துச் செல்லப்பட்டதுடன், பறவைகளும் தூக்கிச் சென்றுள்ளன என்று தெரிவித்திருந்தனர்.

யாழில் பியர் விற்பனை அதிகரிப்பு!

யாழ்.மாவட்டத்தில் கடந்த பன்னிரெண்டு வருடங்களில் பியர் பாவனையாளர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமால் அதிகரித்துள்ளது என்று யாழ். மாவட்ட வணிகர் கழகம் தெரிவித்துள்ளது. யாழ். மாவட்ட வணிகர் கழக மண்டபத்தில் வணிகர் கழகத் தலைவர் எஸ்.ஜெயசேகரம் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு பியர் பாவனையானது 5 லட்சத்து 55 ஆயித்து 304 லீற்றராக இருந்தது. இந்த நுகர்வு கடந் 2013 ஆம் ஆண்டில் 40 லட்சத்து 56 ஆயிரத்து 999 லீற்றராக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது இளைய தலைமுறையினர் தவறான பாதையில் இட்டுச் செல்லப்படுகின்றனர் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. இதுகுறித்து பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அதிக அக்கறை காட்டவேண்டியது அவசியமாகும்.என வணிகர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

17 அக்டோபர் 2014

மகிந்த வரவால் நெடுந்தீவு ஆசிரியர்களுக்கு வந்தது செலவு!

மஹிந்தவின் தீவக விஜயத்தின் போதான செலவுகளை ஆசிரியர்களது தலையில் கட்டியடிக்க முற்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. மஹிந்தவின் யாழ்ப்பாண வருகையை முன்னிட்டு பாடசாலையில் ஏற்பட்ட செலவுகளை ஆசிரியர்களே பொறுத்துக்கொள்ள வேண்டுமென நிர்ப்பந்திப்பதாகவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.நெடுந்தீவிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்களை இவ்விடயத்தனில் அதிபர் நிர்ப்பந்தித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மஹிந்த யாழ்ப்பாணத்தில் தங்கி நின்று பல இடங்களிற்கும் சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். குறிப்பாக மூன்றாம் நாளன்று தீவுப்பகுதிகளுக்கு சென்றிருந்த வேளை நெடுந்தீவிற்கும் சென்றிருந்தார். இங்கு நெடுந்தீவு மகா வித்தியாலயத்திற்குச் சென்று மகிந்தோதயா ஆய்வு கூடத்தையும் திறந்து வைத்திருந்தார்.இதற்காக ஐனாதிபதியின் வருகையினை முன்னிட்டு பாடசாலையிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பல்வேறு அலங்கரிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டன.இதற்காக கல்வித் திணைக்களத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆயினும் அந்த நிதி போதாததால் மேலதிகமாக ஒரு இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் கணக்குக் காட்டியுள்ளார். ஆகவே இதனை குறித்த பாடசாலையிலுள்ள 16 ஆசிரியர்களுமே வழங்க வேண்டுமென்றும் கோரியுள்ளார்.ஆயினும் இதற்கு ஆசிரியர்கள் சம்மதம் தெரிவிக்காத போதும் குறித்த பாடசாலையின் அதிபர் அமைச்சர் டக்ளஸின் ஆசி பெற்றவர் என்றும் அவரை முன்னிறுத்தி ஏதும் பழிவாங்கலில் ஈடுபடலாமெனவும் ஆசிரியர்கள் அச்சம் கொண்டுள்ளதால் இச் சம்பவம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் முறையிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

"ஜெயாவிற்கு பிணை"பட்டாசு கொளுத்திக் கொண்டாடினார் சரத்குமார்!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்தது, தற்போதே தீபாவளியைக் கொண்டாடிய மகிழ்ச்சியை அளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார். 18 வருடங்களாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் தீர்ப்பளித்தது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம். தீர்ப்பையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வேண்டி மனுத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா. ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் ஜாமீன் வேண்டி மனுத்தாக்கல் செய்தார். ஜெ.க்கு ஜாமீன்... படப்பிடிப்பில் பட்டாசு வெடித்து ‘தீபாவளி’ கொண்டாடிய சரத்குமார் இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை அறிந்த அதிமுகவினர் மகிழ்ச்சியாக இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்திருப்பது தொடர்பாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் எம்.எல்.ஏ. இது தொடர்பாக ஜெயா டிவிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் அவர் கூறியதாவது:- அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்தது குறித்து கேள்விப் பட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அவர் தடைக் கற்களைத் தகர்த்தெறிந்து மீண்டு வருவார். இத்தகவலை அறிந்து மக்கள் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நான் தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கிறேன். இங்கு எல்லாரும் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்திருப்பது குறித்து அறிந்து மகிழ்ச்சியாக உள்ளனர். பட்டாசுகள் வெடித்து இதனை நாங்கள் கொண்டாடுகிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார். தனது பேச்சிற்கு இடையே படப்பிடிப்புத் தளத்தில் பட்டாசுகள் வெடித்த ஓசையையும் தொலைபேசி வழியாக அவர் கேட்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

16 அக்டோபர் 2014

புலிகள் மீதான தடையை ஐரோப்பிய நீதிமன்றம் நீக்கியது!

விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பதில் ஐரோப்பிய கவுன்சில் கையாண்டிருந்த நடைமுறையில் தவறுகள் இருக்கின்ற காரணத்தால், இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று இந்தியாவில் அறிவிக்கப்பட்டிருந்த முடிவின் அடிப்படையில், ஐரோப்பிய கவுன்சில் முடிவெடுத்திருந்ததாகவும், அது முறையல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எனவே ஒரு மூன்று மாத காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருப்பது பற்றி ஐரோப்பிய கவுன்சில் மறுபடியும் பரிசீலித்து புதிதாக முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீடிக்கவே செய்யும் என்றும், அது நீக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றத்தின் ஊடககத்துறை அதிகாரியான கிறிஸ்டஃபர் ஃப்ரெட்வெல் பிபிசியிடம் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பா என்ற கேள்வியை ஐரோப்பிய நீதிமன்றம் பரிசீலித்திருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். பயங்கரவாத அமைப்புகளுக்கு பொருந்தக்கூடிய சர்வதேச விதிகளையும் அளவுகோல்களையும் விடுதலைப் புலிகளுக்கு பொருத்த முடியாது என்ற புலிகள் தரப்பு வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அறிக்கை:
ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தும் விஷயம் இந்த உத்தரவில் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி ஐரோப்பிய கவுன்சிலுக்கு இலங்கை அரசு இதுவரை தகவல் வழங்கி வந்ததுபோலவே இனியும் தொடர்ந்து தகவல் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் சம்பந்தமாக ஐரோப்பிய ஆணையம் செய்யும் மறு பரிசீலனையிலும் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தாம் நம்புவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

15 அக்டோபர் 2014

காவலூர் ராஜதுரை இயற்கை எய்தினார்!

காவலூர் ராஜதுரை
இலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலங்கை வானொலியின் முன்னாள் நிகழ்ச்சித்தயாரிப்பாளரும் வானொலி ஊடகவியலாளருமான காவலூர் ராஜதுரை நேற்று (14-10-2014) மாலை அவுஸ்திரேலியா சிட்னியில் காலமானார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் இயங்கிய காவலூர் ராஜதுரையின் கதை வசனத்தில் வெளியான பொன்மணி திரைப்படம் இலங்கை தமிழ்த்திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்தது. கொழும்பில் வசீகரா விளம்பர நிறுவனத்தின் இயக்குநராகவும் இயங்கிய காவலூர் ராஜதுரை பல வருடங்களாக அவுஸ்திரேலியா சிட்னியில் தமது குடும்பத்தினருடன் வசித்தார். இங்கு இயங்கும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினதும் மூத்த உறுப்பினரான காவலூர் ராஜதுரை சிறுகதை, விமர்சனம், கட்டுரை, விளம்பரம் முதலான துறைகளிலும் எழுதியிருப்பவர். சில நூல்களின் ஆசிரியருமாவார்.

14 அக்டோபர் 2014

தீவகத்தில் மகிந்தோதய!

வடபகுதிக்கு வருகை தந்த மகிந்த ராஜபக்ஷ நெடுந்தீவிற்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பிரதேச செயலகக் கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்காக கையளிக்கின்றார்.இதனிடையே நெடுந்தீவு மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார்.இதனிடையே வேலணையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலகக் கட்டிடத்தை திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளிக்கவுள்ள மகிந்த ராஜபக்ஷ ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி, காரைநகர் தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம் மற்றும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய ஆய்வுகூடங்களையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளிக்கவுள்ளார்.இந்த நிகழ்வுகளில் சிறீலங்காவின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்துறைசார்ந்தோர் கலந்து கொண்டனர்.இன்றைய நிகழ்வுகளை நிறைவு செய்யும் மகிந்த ராஜபக்ஷ மாலை கொழும்புக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

12 அக்டோபர் 2014

மஹிந்தவுக்கு ஒரு நுளம்பு கூடக் கடிக்ககூடாது!

போர்க்குற்றவாளியின் வரவை ஒட்டி முன்னெப்போதும் இல்லாத வகையில் யாழ் சுகாதாரப் பகுதியினர் முற்றவெளிப் பிரதேசத்தில் நேற்றிரவு நுளம்பை ஒழிப்பதற்காகப் புகையூட்டும் பணி நடைபெற்றது.மஹிந்தவுக்கு ஒரு நுளம்பு கூடக் கடிக்ககூடாது என்பது டக்ளஸ் குழுவின் எதிர்பார்ப்பாம். இதனால் யாழ். வீரசிங்கம் மண்டபத் தைச் சூழ உள்ள பகுதியில் இந்தப் புகையூட்டும் பணிகள் மஹிந்தவிற்காக இடம்பெற்றன. அத்துடன் முற்றவெளி பகுதியைத் தூய்மை யாக்கும் பணியில் சுகாதார பகுதினர் கடந்த இரண்டு நாள்களாக ஈடுபட்டுவருகின்றனராம். அதேவேளைஇ வீரசிங்கம் மண்டபத்தில் உள்ள நன்னீர் கிணற்றின் குடிநீரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கிணற்று நீரில் ஏதாவது தொற்று கிருமிகள் உண்டா என்பதைக் கண்டறிவதற்காகச் சுகாதாரப் பகுதியினர் அதன் மாதிரியை எடுத்து சென்றனர்.மஹிந்த தான் மனிதன் மற்ற குடா நாட்டு மக்கள் எல்லோரும் மிருகங்களா? இந்த வேலையை ஒழுங்காக வாரம் தோறும் செய்தாலுமே யாழ் குடா நாட்டில் டெங்கினையும் வயிற்றோட்டத்தினையும் கட்டுப்படுத்தலாம் அல்லவா?

நன்றி:ஈழநாதம்

11 அக்டோபர் 2014

ஈபிடிபியினரின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார் தர்மகர்த்தா!

வடமராட்சியின் வல்லிபுரக்கோவில் ஆலய தர்மகர்த்தா ஒருவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதலிலிருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.ஈபிடிபி சார்பு முக்கியஸ்தர் ஒருவரால் ஆலய கட்டிட நிர்மாணப்பணிகளில் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 31 கோடி ஊழல் மோசடி தொடர்பில் நியாயம் கேட்டுப்போராடி வந்திருந்த 67 வயதுடைய சதானந்தன் கேசவானந்தன் என்பவரே கொலை முயற்சியிலிருந்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.இன்று நடைபெற்ற ஆலய தர்மகர்த்தா சபைக் கூட்டத்தில் பருத்தித்துறை பிரதேசசபையின் உறுப்பினரும் ஈபிடிபி ஆலய தர்மகர்த்தாக்களுள் ஒருவராக திணிக்கப்பட்டு உள்ளவருமான குறித்த நபரிடம் ஆலய புனரமைப்பு தொடர்பாக நடந்த மோசடிகள் தொடர்பாக முரண்பட்ட நிலையில் பருத்தித்துறை மருதங்கேணி வீதியினூடாக கற்கோவளத்திலுள்ள தனது வீடு நோக்கி சென்ற வேளையிலேயே அவர் தாக்கப்பட்டுள்ளார்.மோட்டார் சைக்கிளில் தமது முகங்களை மறைத்தவாறு சென்ற தாக்குதலாளிகள் இவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். தம்மால் எடுத்துவரப்பட்ட வாள்களால் இவரை வெட்ட முற்பட்ட வேளை வீதியால் வந்திருந்த அரச பேருந்து பயணிகளால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். தன் மீதான கொலை முயற்சி பற்றி அவர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தினில் முறைப்பாடொன்றை செய்துமுள்ளார்.ஆலய தர்மகர்த்தா சபையில் இருக்கும் குறித்த ஈபிடிபி பிரமுகரிடமே ஆலய நிர்மாண வேலைகள் முறையற்ற விதத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் ஆலய நிர்வாக சபையிலுள்ள ஏனைய தர்மகர்த்தாக்கள் முரண்பட்டு வந்துள்ளனர். இப்பிரச்சினை உச்சம் பெற்றுள்ள நிலையில் ஆலய வருடாந்த உற்சவம் முடிவுற்றதும் ஒன்று கூடி ஆராய்ந்த கூட்டத்தில் முரண்பாடு உச்சம் பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே தன் மீதான கொலை முயற்சி இடம்பெற்றதாக தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கலைக்கழக பேரவை முதல் போக்குவரத்து சபை, வைத்தியசாலை அபிவிருத்தி சபை வரை தமது ஆதரவாளர்களையும் முக்கியஸ்தர்களையும் ஈபிடிபி திணித்து வருவது தெரிந்ததே. தற்போது ஆலய தர்மகர்த்தா சபைகளையும் விட்டுவைக்காது தமது சாதனைகளை தொடர்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

10 அக்டோபர் 2014

குமார் குணரட்னம் இலங்கைக்குள் பிரவேசிக்கத் தடை!

முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கைக்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குமார் குணரட்னத்தின் பெயர் கறுப்புப் பட்டியலிடப்படும் ஆவணத்தில் பதியப்பட்டுள்ளது.நாட்டுக்கு எதிரான வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தி குமார் குணரட்னத்திற்கு இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த சில காலங்களாக சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்து இலங்கைக்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் இந்த குற்றச்சாட்டை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் அடிப்படையில் குமார் குணரட்னத்தின் பெயரை இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம், நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாத கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்களின் வரிசையில் இணைத்துள்ளது.இதேவேளை, வீசா இன்றி நாட்டு;க்குள் தங்கியிருந்தமைக்காக கடந்த 2012ம் ஆண்டு நீதிமன்றம் விதித்திருந்த அபராதத் தொகை இதுவரையில் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.குமார் குணரட்னத்திற்கு எதிரான அபராதப் பணத்தை கட்சி செலுத்த உள்ளதாக முன்னணி சோசலிச கட்சி அறிவித்திருந்தது.எனினும் இதுவரையில் அபராதத் தொகை செலுத்தப்படவில்லை.ஜனாதிபதி தேர்தலில் குமார் குணரட்னத்தை கட்சியின் சார்பில் போட்டியிட செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

09 அக்டோபர் 2014

கூட்டுக்கட்சிகளுடன் பேதம் பார்க்கவில்லை என்கிறார் வடக்கு முதல்வர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளுடன் தான் பேதமின்றியே நடந்து கொள்வதாக, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழரசுக் கட்சியின் சார்பாக நான் நடந்து கொள்வதாக என்னிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளிக்கையில், நான் கொள்கை ரீதியாக தமிழரசுக் கட்சியுடன் மட்டுந்தான் இணந்திருக்க முடியுமேயொழிய, வன்முறையோடு சம்பந்தப்பட்ட ஈபிஆர்எல்எவ், டெலோ, புளொட் ஆகிய கட்சிகளுடன் கொள்கை ரீதியாக நான் இருக்க முடியாதென்று தெரிவித்தேன்.ஆனால் அந்தக் கட்சிகளை நான் எந்தவிதமான பேதத்துடனும் நடத்தவில்லை. அவர்களுடன் மனிதாபிமானத்துடன். சகோதரத்துவத்துடன் தான் நடந்து வருகின்றேன். அவ்வாறு பேதம் காட்டி நான் நடந்து கொள்வதாக இருந்தால் ஈபிஆர்எல்எப் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கமாட்டேன். அந்த மாநாட்டில் நான் கலந்து கொண்டு செயற்பட்டதை அவர்கள் போற்றி மகிழ்ந்திருக்கின்றார்கள்.‘இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் வெளியில் இருப்பவர்கள் நடைமுறைக்கு அப்பாற்பட்ட வகையில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள். இது துரதிஷ்டவசமானது. நான் எவரையும் வேற்றுமையுடன் நடத்தவில்லை. எனவே இது சம்பந்தமாக அவர்கள் எந்தவிதமான ஐயப்பாட்டையும் கொள்ளத் வேண்டியதில்லை. ஒரு சில்லறை விடயத்தை வெளியில் இருப்பவர்கள் பெரிதுபடுத்தியிருப்பது மன வருத்தத்தை அளிக்கின்றது என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.அதேவேளை, இதுபற்றி பிபிசி தமிழோசையிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பின் ஊடாக முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கி முதலமைச்சராகியுள்ள, வடமாகாண முதலமைச்சர், நடுநிலை நின்று அனைவரையும் வழிநடத்திச் செயற்பட வேண்டும், ஒரு கட்சியின் சார்பாகச் செயற்படக் கூடாது என்று அவரைக் கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.முதலமைச்சர் தமிழரசுக் கட்சியின் சார்பாக நடந்து கொள்கின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்ததற்குப் பதிலளித்த முதலமைச்சர், ‘இதற்கு நான் கூறுகின்ற பதிலையிட்டு நீங்கள் யாரும் கோபிக்கக் கூடாது. நான் ஈபிஆர்எல்ப் கட்சியுடனோ, டெலோவுடனோ, புளொட் கட்சியுடனோ சேர முடியாது. நான் தமிழரசுக் கட்சியின் சார்பாக இருக்கின்றேன் என தெரிவித்ததாகக் கூறினார்.முதலமைச்சருக்குப் பதிலளிக்கும் வகையில், நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள எல்லா கட்சிகளும் உங்களிடம் வேண்டிக் கொண்டதையடுத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வந்த நீங்கள் எல்லோருக்கும் பொதுவாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் குறிப்பிடுகின்ற இந்தக் கட்சிகள் எல்லாம் 25 வருடங்களுக்கு முன்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து தங்களை தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியையும் வகிக்கின்றார்கள்.அரசாங்கத்துடனும், எதிர்க்கட்சிகளுடனும், வெளிநாடுகளுடனும் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் பேச்சுக்கள் நடத்தி வருகின்றார்கள். ஆயுதப் போரட்டத்தை மேற்கொண்டிருந்தவர்கள் என்று, நீங்கள் சுட்டிக்காட்டுவது இல்லாத ஒரு விடயத்தைப் புதிதாக உருவாக்குவதாகவே இருக்கின்றது.அத்துடன் தமிழரசுக் கட்சி உங்களை அவர்களுடன் சேருமாறு கேட்டிருக்கலாம், ஈபிஆர்எல்எப் கட்சியியோ, டெலோ மற்றும் புளொட் கட்சிகளோ உங்களைத் தங்களுடன் சேருமாறு கேட்கவுமில்லை. இந்த நிலையில் நீங்கள் குறிப்பிடுவது ஆயுதப் போராட்டத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் அமைந்துள்ளது என அவரிடம் தெரிவித்தேன். அவருடைய பதில் எங்களுக்கு அதிருப்தி தரும் வகையிலேயே அமைந்திருந்தது என்பதையும் அவருக்கு எடுத்துக் கூறினேன் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

08 அக்டோபர் 2014

பிரஜைகள் குழு தலைவர் மீது தாக்குதல்!

ஆவணப்படம்
அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் ஜெயக்குமாரியின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவிருந்த நிலையில் பிரஜைகள் குழுவின் தலைவர் இன்று இரவு (8.10) 7.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தெரிவித்ததாவது,நெடுங்கேணியில் உள்ள எனது கடையை மூடிவிட்டு எனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது நெடுங்கேணிக்கும் பெரியகுளத்திற்கும் இடைப்பட்ட வயல்வெளிப்பிரதேசத்தில் வைத்து நான் தாக்கப்பட்டேன். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரில் இருவர் என்னை சிறிய கால்வாய் ஒன்றினுள் தள்ளி இரும்புக்கம்பிகளால் தாக்கினர். இதன் காரணமாக எனது கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து என்னை தாக்கிய இரும்புக்கம்பிகளில் ஒன்றையும் எடுத்துக்கொண்டு நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது அவர்கள் வைத்தியசாலைக்கு செல்லுமாறு தெரிவித்தனர். இதனையடுத்து நான் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அத்துடன் பொலிஸார் என்னிடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர் என தெரிவித்தார்.இவ்வாறு செய்திக்குறிப்பொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

07 அக்டோபர் 2014

பேஸ்புக் துஷ்பிரயோகம்! 1500 கணக்குகள் முடக்கம்!

இலங்கையில் பேஸ்புக் துஷ்பிரயோக நடவடிக்கைகள் காரணமாக சுமார் 1500 பேஸ்புக் பயனாளர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் ஊடாக யுவதிகளை ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் கணக்குகள் இனங்காணப்பட்டு அவை தடை செய்யப்பட்டுள்ளன.பேஸ்புக் மோசடிகள் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இலங்கை கணணிசார் அவசர வினையாற்றல் குழு இதற்கான பரிந்துரைகளை செய்திருந்தது. பல்வேறு நபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தப் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த வருடத்தில் மட்டும் பேஸ்புக் முறைகேடுகள் தொடர்பாக சுமார் 1800 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறித்த வினையாற்றல் குழுவின் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை போலிப் பெயர்களில் உருவாக்கப்பட்ட பேஸ்புக் கணக்குகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேஸ்புக் ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடிகளைத் தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போது பேஸ்புக் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 011 2 691 692 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ள முடியும் என்றும் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

06 அக்டோபர் 2014

கோபியின் மனைவியை சுவிஸ் செல்லவிடாமல் தடுத்தது சிங்களம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க முனைகிறார் எனக் குற்றம்சாட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் மனைவி சர்மிளா வெளிநாடு செல்வதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.சுவிற்சர்லாந்துக்கு செல்வதற்காக கோபியின் மனைவி சர்மிளா நேற்று ஞாயிற்றுக்கிழமை உரிய ஆவணங்களுடன் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு சென்றார் என்றும் அங்கு வைத்தே அதிகாரிகள் சுவிஸுக்கு செல்ல விடாமல் அவரைத் தடுத்து நிறுத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.அவரிடம் சுவிஸ் செல்வதற்கான நுழைவிசைவு (விஸா) இருந்த போதிலும் அவரது கணவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதனாலேயே அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.சர்மிளாவை விமான நிலையத்திலேயே சிறிது நேரம் அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர். இதனை எதிர்த்து சுவிஸ் தூதரக அதிகாரிகள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாதாடினர். இதன்போதே அவரின் கணவர் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கின்றமையால் அவரை வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.மேலும் விமான நிலையத்தில் சர்மிளாவை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் துருவித் துருவி விசாரணைகளை மேற்கொண்டனர் என்றும் தெரியவருகிறது.

05 அக்டோபர் 2014

குறிகாட்டுவானில் வடதாரகை!

சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நெடுந்தீவுக்கு அடுத்த வாரம் செல்லவுள்ள நிலையில் ஒரு வருட காலமாக யார் கண்ணிலும் படாமல் ஓய்வெடுத்த வடதாரகைப் படகு நேற்றைய தினம் திடீரென குறிகாட்டுவான் துறைமுகத்துக்கு கடற்கடையினரால் கொண்டுவந்து விடப்பட்டுள்ளது.பல்வேறு காரணங்களால் இதுவரை காலமும் வடதாரகை கடற்படையினரின் கைவசமிருந்தது. இது தொடர்பில் பல தரப்பினராலும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டும் இருந்தது. ஆனாலும் மக்கள் பயன்பாட்டுக்காக வராத வடதாரகை தற்போது மகிந்தவின் வருகையை முன்னிட்டு தனது சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது என தெரிகிறது.

வட்டக்கச்சியில் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!

ஆவணப்படம்
கிளிநொச்சி வட்டக்கச்சி குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் சனிக்கிழமை(நேற்று) மாலை உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இராமநாதபுரம் புதுக்காடு பகுதியை சேர்ந்த கருணாநிதி கோகுலகீதன் (வயது 13) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தனியார் கல்வி நிலையத்திற்கு சென்றுவிட்டு, நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற வேளையிலேயே மேற்படி சிறுவன் உயிரிழந்துள்ளார்.சடலம் மீட்கப்பட்டு, பிரதேச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.மேற்படி மாணவன் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்விகற்று வந்தவர் ஆவார்.இதேவேளை, கிளிநொச்சி கந்தன் குளத்தில் நீரில் மூழ்கி கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி மூன்று சிறுமிகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

04 அக்டோபர் 2014

தமிழ்மக்கள் தங்களை நேசிப்பதாக இராணுவம் மனப்பால் குடிக்கிறது – பொ.ஐங்கரநேசன்!

பொ.ஐங்கரநேசன்  
வடக்கில் இருந்து படையினர் வெளியேற்றப்பட வேண்டுமா என்பது தொடர்பாக வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டால் தமிழ்மக்கள் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று கிளிநொச்சி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சுதந்த ரணசிங்கா தெரிவித்திருக்கிறார். இராணுவம் எமது மண்ணைவிட்டு வெளியேறவேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மாத்திரம் சொல்லவில்லை. தமிழ் மக்களின் நிலைப்பாடும் அதுதான். ஆனால், தமிழ் மக்கள் தங்களை நேசிப்பதாக இராணுவம் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறது என்று வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று (03.10.2014) வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.கிளிநொச்சி மாவட்ட இராணுவத்தளபதி இராணுவம் பாடசாலை மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நிதி உதவி செய்வதாகப் பெருமைப்பட்டுள்ளார். பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்திருக்கிறார். இராணுவம் அவசரகால நிலைமைகளைத் தவிர ஏனைய நேரங்களில் சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தேவையில்லை.மாகாணசபையின் மீது மத்திய அரசு பிரயோகிக்கின்ற அழுத்தங்களையும் தாண்டி, ஒதுக்கப்பட்ட சொற்ப அளவு நிதியைப் பயன்படுத்தியே நாம் எமது மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றவேண்டி உள்ளது. எம்மைச் சுதந்திரமாக இயங்கவிட்டு, போதிய நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டால் எங்களால் எமது மக்களுக்கான அபிவிருத்தியை மிகச் சிறப்பாக முன்னெடுக்க முடியும். ஆனால், அரசு மாகாணசபைக்கென்று ஒதுக்கப்பட்ட விடயங்களைக்கூட எங்களுடன் எவ்வித ஆலோசனைளும் இல்லாமல் தன் கையில் எடுக்கிறது. எல்லா வேலைகளிலும் அழையா விருந்தாளியாக இராணுவத்தை ஈடுபடுத்துகிறது. இராணுவத்திடம் தமிழ் மக்களைக் கையேந்த வைத்தால், காலப்போக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை தமிழ் மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று அரசு தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறது.தமிழ்மக்கள் இலங்கைப் படையினரை விடுதலைப் புலிகளிடம் இருந்து தங்களை மீட்கவந்த மீட்பர்களாக ஒருபோதும் கருதியதில்லை. படையினரைத் தங்களது சொந்த நிலங்களில் நிலைகொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு இராணுவமாகவே தமிழ்மக்கள் கருதுகிறார்கள்.ஒரு காலத்தில் வடக்கின் விவசாய அபிவிருத்தியில் பெருபங்காற்றிவந்த வட்டக்கச்சி விதை உற்பத்திப் பண்ணையில் 410 ஏக்கர் இராணுவத்தினரிடமும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திடமும்தான் இருக்கிறது. இங்கு எங்களது விவசாயத் திணைக்களம் வெறும் 31 ஏக்கரில் மாத்திரம் ஒண்டிக்குடித்தனம் செய்யவேண்டியிருக்கிறது. அதேபோன்றுதான், இரணைமடுச்சந்தியில் இருந்த எமது விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான சேவைக்காலப் பயிற்சி நிலையத்திலும் இராணுவமே நிலைகொண்டிருக்கிறது. இப்படி, எமது நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும் படையினரை நாங்கள் எவ்வாறு அபிவிருத்தி இராணுவம் என்று அழைக்க முடியும்? இவர்களை மண்ணில் தொடர்ச்சியாக நிலை கொண்டிருங்கள் என்று எமது மக்கள் ஒரு போதும் கோரமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

03 அக்டோபர் 2014

நெடுந்தீவு சுற்றுலா வலயமாகப் போகிறதாம்!

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு பகுதியை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நெடுந்தீவில் அழகான பல இடங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக இயற்கையாக குதிரைகள் உலாவித்திரியும் நெடுந்தீவு மேலும் பல சிறப்புகளை கொண்டுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டல்களை நிர்மாணிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் அப்பகுதி சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும். இதன் மூலம் நெடுந்தீவில் வாழும் சுமார் 1500 குடும்பங்களின் பொருளாதார நிலை வளர்ச்சி பெறும் என்றும் அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா தெரிவித்துள்ளார்.

02 அக்டோபர் 2014

சஜின்வாஷின் கன்னத்தில் அறைந்தார் மகிந்த!

நிபந்தனைகளுக்கு உட்பட்டால் பதவியைத் தொடரத் தயார் என பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டொக்டர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென என அவர் கோரியுள்ளார்.தமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே தொடர்ந்தும் உயர்ஸ்தானிகர் பதவியை வகிக்கப் போவதாக நோனீஸ் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும், கிறிஸ் நோனீஸ் தாக்குதல் சம்பவம் குறித்து வெளிவிவகார அமைச்சு இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்திய பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நோனீஸ் இதுவரையில் உத்தியோகபூர்வமாக தமது ராஜினாமா கடிதத்தை வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பி வைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை சஜின்வாஷ் குணவர்த்தனவின் கன்னத்தில் மகிந்த ராஜபக்ஷ அறைந்தார் என்றும் செய்திகள் உலா வருகின்றது.

01 அக்டோபர் 2014

தோசை சாப்பிட்ட தாய் மரணம்!

மகள் சுட்டு கொடுத்த தோசையை சாப்பிட்டுக் கொண்டிருந்த  தாய் ஒருவா் அது தொண்டையில் சிக்கியதால் உயிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று புத்தூர் நவக்கிரிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தோசையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அந்த தாயார் திடீரென சுவாசிக்கச் சிரமப்பட்டதாகவும் உடனடியாக அவரை அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவா் இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.இது தொடா்பான விசாரணைகளை அச்சுவேலிப் பொலிசாா் மேற்கொண்டு வருகின்றனராம்.ம.நிா்மலாதேவி, வயது 60 என்பவரே இவ்வாறு உயிரிழந்த தாய் என தெரிய வருகின்றது.