பக்கங்கள்

28 பிப்ரவரி 2014

புலிகள் ஐ.நா.சாசனத்திற்கு உட்பட்ட விடுதலை அமைப்பு-இத்தாலி நீதிமன்று அதிரடி தீர்ப்பு

கடந்த 2008 யூன் மாதம் (18.06.2008) சர்வதேச பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்து வழங்கியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பின் 2010 ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டு 2011 இல் நாப்போலி நீதிமன்றத்தால் இவர்கள் குற்றமற்றவர்கள் எனவும் மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமது போராட்டத்தின் மூலம் மருத்துவம்,நீதிமன்றம், கல்வி, பொருண்மியம், சீரான இராணுவக் கட்டமைப்பு ஆகியவை உள்ளடங்கிய ஒரு நிழல் அரசை நிறுவி இருந்தது என்பது தமது ஆய்வில் தெரிய வந்துள்ளமையால் இவ் இயக்கம் ஜெனீவா சாசனங்களிற்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியதெனவும் இவ்வியக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாதெனவும் , அந்த வகையில் இத்தாலி தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் அற்தமற்றது எனவும் மேலும் விடுதலைப் புலிகள் இயக்கம் போர்க்குற்றங்கள் புரிந்திரிப்பின் அவற்றிக்கான விசாரணையை சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கான நீதி மன்றமே விசாரிக்க தகுதியானதென குறிப்பிட்டு 23-06-2011 நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அந்தவகையில் அவரது தீர்ப்பு தவறானது எனக்கூறி அரச தரப்பினர் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதற்கான வழக்கு விசாரணை 27-02-2014 மேல் முறையீட்டு நீதிமன்றில் ஒன்பது நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சில மணி நேர இரு தரப்பு விவாதங்களின் பின்னர் முதல் கட்ட நீதிபதியின் தீர்ப்பை தாமும் உறுதிப்படுத்துவதாக கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்தனர்.

சிறீலங்கா மீது எரிச்சல் காட்டியது அமெரிக்கா!

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அடிப்படைக் கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னும் பதிலளிக்காத நிலையில், சிறிலங்காவில் நாம் அதைச் செய்வோம் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி. வொசிங்டனில், நேற்று உலக நாடுகளின் மனித
உரிமைகள் நடைமுறைகள்- 2013 என்ற அறிக்கையை வெளியிட்டு வைத்து, உரையாற்றிய போதே அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி, இவ்வாறு தெரிவித்துள்ளார். “பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அடிப்படைக் கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னும் பதிலளிக்காத நிலையில், சிறிலங்காவில் நாம் அதைச் செய்வோம். துரதிஸ்டவசமாக, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மதசிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இன்னமும் அங்கு தொடர்கின்றன. இந்த நிலைகள் பற்றிய எமது கவலைகளே, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் வரும் மார்ச் அமர்வில் இன்னொரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு வழிவகுத்துள்ளது. நாம் அதைச் செய்வோம், ஏனென்றால், மனிதஉரிமைகளையும், மனித கௌரவத்தையும் மறுக்கின்ற நாடுகள், எமது நலன்களுக்கும், மனித நலன்களுக்கும் சவாலாக இருக்கும் என்பது எமக்குத் தெரியும். “ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

27 பிப்ரவரி 2014

கோபிதாஸிற்கு அஞ்சலி செலுத்த அனைவரும் அணிதிரள்க!

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதி விஸ்வலிங்கம் கோபிதாஸின் இறுதி கிரிகைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வடமராட்சி புலோலியில் உள்ள அவரது வீட்டில் நடைபெறவுள்ளது. தமிழ் இனத்துக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த கோபிதாஸிற்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுமக்கள் தமிழ் உணர்வாளர்கள் அரசியல்வாதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு வடமாகணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில் பிரித்தானிய தமிழ் பிரஜையான விஸ்வலிங்கம் கோபிதாஸ் 2007 மார்ச் மாதம் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து புலிகளுக்கு நிதி சேகரித்தாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பின் 8வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்துப்பட்டிருந்தார். இந்நிலையில் இருதயநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் உரிய சிகிச்சை அளிக்கபடாமயினால் கடந்த 24 திகதி மகசின் சிறைச்சாயில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளது.தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக விசாரணை எதுவுமின்றி சிறைச்சாலையில் பல கைதிகள் சித்திரைவதைக்கு உள்ளாக்கப்பட்டுவருக்கின்றனர். இதன் எடுத்து காட்டே கோபிதாஸ் மரணமும் நிகழ்ந்துள்ளது. இந்த அரசாங்கம் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் கோபிதாஸ் போன்று பல அரசியல் கைதிகள் தொடர்ந்தும் மர்மான முறையில் மரணமடையா நேரிடுமென்றார்.

26 பிப்ரவரி 2014

கோபிதாஸின் சடலம் யாழ்ப்பாணம் எடுத்து செல்லப்பட்டுள்ளது!

இலங்கையின் மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலையான தமிழ் அரசியல் கைதி விசுவலிங்கம் கோபிதாஸ்-43 இன் சடலம் யாழ்ப்பாணம் எடுத்துசெல்லப்பட்டுள்ளது. வடமராட்சியின் மந்திகையினை சொந்த இடமாக கொண்ட அவர் விடுதலைப்புலிகளிற்கு நிதி உதவி வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இலங்கை சென்றிருந்த நிலையில் 2007 ம் ஆண்டின் மார்ச் மாதம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினில் வைத்து கைதாகியிருந்தார். இவரது மரணத்தினையடுத்து அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பிரிட்டனிலிருந்து இலங்கை சென்றுள்ளனர் .இந்நிலையில் அவரது சடலம் பொறுப்பேற்கப்பட்டு யாழ்ப்பாணம் எடுத்துசெல்லப்பட்டுள்ளது. அவரது மரணத்தினில் மர்மம் இருப்பதாகவும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் குடும்பத்தவர்கள் கோரியுள்ளனர். எனினும் அவர் மாரடைப்பினால் மரணமடைந்ததாக சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது சொந்த ஊரினில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள பூதவுடலிற்கு மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். இறுதி கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

25 பிப்ரவரி 2014

டக்ளஸ்,கருணா,பிள்ளையான் போர்க்குற்றவாளிகள்!

சிறிலங்காவில் அமைச்சர்களாக இருக்கும் மூத்தத் துணை ஆயுதக்குழு தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா, கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் ஆகியோர் மீது போர்க்குற்றங்கள் மற்றும் மோசமான மீறல்கள் குற்றச்சாட்டுக்கள் உள்ள போதிலும், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.துணை ஆயுதக்குழுக்கள் பெருமளவில் கலைக்கப்பட்டுள்ள போதிலும், ஆயுத மோதல்களின் போது இடம்பெற்ற மோசமான குற்றங்கள் தொடர்பான அதிகளவு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களான டக்ளஸ், கருணா மற்றும் பிள்ளையானுக்கு எதிராக இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளான கருணாவும், பிள்ளையானும் பின்னர் அதிலிருந்து பிரிந்து தனிக்குழுவாக செயற்பட்டதாகவும், இவர்கள் போர்க் குற்றங்களில் ஒன்றான சிறார்களை படையில் சேர்க்கும் நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்ததாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும், சிறுவர்கள், ஆயுத மோதல்கள் தொடர்பான ஐநா பொதுச் செயலாளரின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக நவநீதம்பிள்ளை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

24 பிப்ரவரி 2014

இந்தியத் தடையை மீறி இணையத்தில் போர் தவிர்ப்பு வலயம் காணொலி!

திரையரங்குகளில் திரையிட இந்தியத் தணிக்கைச் சபை அனுமதி மறுத்ததை அடுத்து, 'போர் தவிர்ப்பு வலயம் :சிறிலங்காவின் கொலைக்களங்கள்' ஆவணப்படம், நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டது. கெலும் மக்ரே தயாரித்த இந்த 94 நிமிட ஆவணப்படத்தை, இந்தியாவில் திரையரங்குகளில் திரையிடுவதற்கு இந்திய தணிக்கைச் சபை அனுமதி மறுத்திருந்தது. சிறிலங்காவுடனான உறவுகளை பாதிக்கும் என்று காரணம் காட்டியே இந்த ஆவணப்படத்துக்கு இந்திய தணிக்கைச்சபையால் அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன், பொதுமக்களுக்கு அசளகரியத்தை ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதை திரையரங்குகளில் காண்பிக்க அனுமதிக்க முடியாது என்றும் இந்திய தணிக்கைச்சபை கூறியிருந்தது. இந்தநிலையில், திரையரங்குகளில் காண்பிக்கத் தடைவிதிக்கப்பட்ட, இந்தியா, நேபாளம், மலேசியா ஆகிய நாடுகளில், இந்த ஆவணப்படத்தை இணையத்தளத்தில் கட்டணமின்றிப் பார்க்கும் வசதியை ஏற்படுத்த கெலும் மக்ரே முடிவு செய்தார். இதன்படி நேற்று முதல், இந்த ஆவணப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை சிறிலங்காவிலும் கட்டணமின்றிப் பார்வையிடலாம். 94 நிமிடங்களைக் கொண்ட இந்த ஆவணப்படத்தில், போரில் உயிர்தப்பியவர்களின் சாட்சியங்கள், இறுதிக்கட்டப் போரில் ஏற்பட்ட அழிவுகள், அங்கிருந்த ஐ.நா பணியாளர்களின் செவ்விகள், சிறிலங்காப் படைகளின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் காட்சிகள், அவை தொடர்பான, தடயவியல் நிபுணர்களின் கருத்துகள் போன்றன இடம்பெற்றுள்ளன. வட இந்தியாவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஆவணப்படத்தின் ஹிந்தி மொழியாக்கப் பதிப்பும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணப்படத்தை பார்க்க,

இங்கே அழுத்துங்கள் -
http://nofirezone.org/watch

23 பிப்ரவரி 2014

நோ பயர் சோன் தடைக்கு இலங்கை உறவே காரணம்!

இலங்கையின் இறுதிக் கட்டப் போரின் போது நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க்குற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட நோ பயர் சோன்-(NO FIRE ZONE- The Killing Fields of Sri Lanka) ஆங்கிலத் திரைப்படத்தை இந்தியத் திரையரங்குகளில் வெளியிட இந்திய திரைப்பட தணிக்கைத் துறை அனுமதி மறுத்துள்ளது. இலங்கையுடனான நட்புறவை பாதிக்கும் என்ற காரணத்தினாலேயே இந்தப் படத்தை திரையிட அனுமதி அளிக்கப்படவில்லை என்று தமக்கு காரணம் கூறப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் கலம் மெக்ரே பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இந்தியாவின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் மிகவும் தவறான முடிவு என்றும் கலம் மெக்ரே கூறினார்.'இலங்கையுடனான நட்புறவைப் பாதிக்கும் என்ற காரணத்தை அவர்கள் சொல்லியிருப்பது, குறுகிய கால அரசியல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது, உண்மை நிலவரம் ஒன்றை மக்கள் தெரிந்துகொள்ள முடியாதபடி மறைக்கின்ற நடவடிக்கை' என்றும் அவர் தெரிவித்தார். 'இது நிச்சயமாக இந்தியாவுக்கு பிரச்சனைக்குரிய, அசௌகரியத்துக்குரிய நிலைமை தான். நீதி கிடைப்பதற்கு உண்மையை நிலைநாட்டுவது அவசியம். அந்த நீதி தான் அரசியல் தீர்வொன்றையும் அமைதியான சூழலையும் எட்டுவதற்கு அடிப்படை ஆதாரமாக அமையமுடியும். இப்படி இந்தப் படம் மக்களை சென்றடைவதைத் தடுப்பதன் மூலம் இந்தியா தவறிழைக்கிறது என்று தான் எனக்குத் தோன்றுகிறது' என்றும் கூறினார் இயக்குநர் கலம் மெக்ரே. 'ஆனால், நோ பயர் சோன் படத்தில் வருகின்ற அனேகமான காட்சிகள் மனதை பெருமளவில் பாதிக்கக்கூடியவை என்று இந்திய திரைப்பட தணிக்கைச் சபை இன்னொரு காரணத்தையும் கூறியிருக்கிறதே' என்று தமிழோசை அவரிடம் சுட்டிக்காட்டியது.'போர்க்குற்றங்கள் என்பது மனதைப் பாதிக்கக்கூடிய, விரும்பமுடியாத சம்பவங்கள் தான். அவற்றை நிரூபிப்பதற்கான ஆதாரங்களும் அப்படியாகத் தான் இருக்கமுடியும். அந்தப் படம் பிரித்தானிய தொலைக்காட்சிகள் காட்டப்படுவது தடுக்கப்படவில்லை. இவை துயரகரமான உண்மைகள். அவற்றுக்கு முகம் கொடுத்துதான் ஆகவேண்டியிருக்கிறது' என்று பதிலளித்தார் கெலம் மெக்ரே. மனதைப் பாதிக்கக்கூடிய காட்சிகள் என்பது ஒரு சாக்குபோக்கு காரணமே என்றும் இலங்கையுடனான உறவுகளை கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பது தான் உண்மையான காரணம் என்றும் அவர் தெரிவித்தார். இந்திய திரைப்படத் தணிக்கைத் துறையின் தீர்மானம் தொடர்பில் மேன்முறையீடு செய்யும் எண்ணம் இல்லை என்றும் இந்தியாவிலும் தடை ஏற்படக்கூடும் என்று கருதப்படும் மலேசியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் எல்லா மக்களும் இலகுவாக பார்க்கக்கூடிய விதத்தில் இணையத்தில் படம் வெளியிடப்படுவதாகவும் இயக்குநர் மேலும் கூறினார். மலேசியாவில் இந்தப் படத்தைக் காண்பித்தக் குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை சிறை செல்லக்கூடிய வழக்கொன்றை உள்ளூர் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்நோக்கியுள்ளதாகவும் மெக்ரே தெரிவித்தார்.தமது படம் திரையிடப்படுகின்றமை தடுக்கப்படுகின்ற சம்பவங்களின் பின்னணியில் இலங்கை அரசாங்
கமே உள்ளதாகவும் நோ பயர் சோன் இயக்குநர் தெரிவித்தார். இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் கலம் மெக்ரே ஈடுபட்டுவருவதாகவும் அவரது படங்களுக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பண உதவி அளிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்து கெலம் மெக்ரே தமிழோசையிடம் கருத்துத் தெரிவித்தார்.

நன்றி:பி.பி.சி தமிழோசை 

22 பிப்ரவரி 2014

ஜெத்மலானி மருத்துவமனையில் அனுமதி!

மூத்த வழக்குரைஞர் ராம்ஜெத்மலானி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ராம்ஜெத்மலானி, அவரது அறையில் கால் தவறி விழுந்ததாகவும், இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்ட உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நால்வரில் ஒருவர் மனநோயாளி!

இலங்கையில் நான்கு பேரில் ஒருவர் மன நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சட்ட உளவியல் மருத்துவர் ரீ.எஸ்.எஸ்.மெண்டிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் 25 வீதமானவர்கள் ஏதேனும் ஓர் உளவியல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உளவியல் சிகிச்சை வழங்கக் கூடிய தகைமையுடைய 60 மருத்துவர்களே கடமையாற்றுகின்றனர். இதனால் நாளுக்கு நாள் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளை தடுக்க முடியவில்லை. குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த நாடு முழுவதிலும் 25 சட்ட வைத்திய அதிகாரிகளே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். இது எந்த வகையிலும் போதுமானதல்ல என தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வட மாகாணத்திலேயே மனஉழைச்சலுக்கு உள்ளானவர்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

21 பிப்ரவரி 2014

இராணுவத்தில் இணையுமாறு படையினர் நிர்ப்பந்தம்!

இராணுவத்தில் இணையுமாறு படையினர் தம்மை நிர்ப்பந்தித்து வருவதாகக் கிளிநொச்சியிலுள்ள இளம் பெண்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கண்ணீர் மல்க முறையிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி புழுதி ஆற்றிலிருந்து மாயவனூர் கிராமத்துக்கு ஏற்றுநீர்ப்பாசனம் மூலம் விவசாய நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். குறித்த திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையுடன் அங்கு சென்றிருந்தார். புழுதி ஆற்றினைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்வது தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் அதன் பின்னர் மாயவனூர் கிராம மக்களுடனான சந்திப்பினை மேற்கொண்டு அந்தக் கிராமத்தின் குறை நிறைகள் தொடர்பில் கேட்டறிந்தார். அதன் போது கண்ணீர் விட்டழுத அந்தக் கிராமத்தினைச் சேர்ந்த இளம் பெண்கள், இராணுவத்தினர் தம்மை இராணுவத்தில் இணையவேண்டும் அல்லது வட்டக்கச்சி விவசாயப் பண்ணையில் வேலை செய்யவரவேண்டும் என நிர்ப்பந்தித்துவருவதாகவும் தம்மால் படையினரின் அழுத்தங்களில் இருந்து மீள முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர். இதற்குப் பதிலளித்த விவசாய அமைச்சர்,வலுக்கட்டாயமாக படைச் சேர்ப்பில் பெண்களை ஈடுபடுத்துவதை ஏற்கமுடியாது. இலங்கை அரசாங்கம் போர்க்காலத்தில் அதிகமான இராணுவத்தினரை உள்வாங்கிய நிலையில் தற்போது இராணுவம் உப்பிப்போயுள்ளது. போருக்குப் பின்னர் இராணுவத்தின் தேவையில்லை என்ற நிலையில் இவ்வாறான கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் எதற்காக அரசாங்கம் ஈடுபடவேண்டும். இதனை ஒரு போதும் ஏற்க முடியாது என்பதுடன் இந்த நடவடிக்கையினை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இதேவேளை வட்டக்கச்சியில் உள்ள விவசாயப் பண்ணை எமது விவசாயத் திணைக்களத்திற்கு சொந்தமானது. அதனை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு எமது பெண்களை அங்கு வேலைக்கு வருமாறு நிர்ப்பந்திக்கின்றது. விவசாயப் பண்ணை இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் அங்கு வேலைக்குச் செல்வதற்கு பெண்கள் அஞ்சுகின்றனர். இந்த நடவடிக்கை அந்தப் பகுதி மக்களின் வறுமைக்கு ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது. போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுபோன்ற தொடர் நெருக்கடிகளையும் தொந்தரவுகளையும் எமது மக்கள் எதிர்கொண்டே வருகின்றனர். இதன் காரணமாகவே இராணுவத்தினரை எமது பகுதிகளிலிருந்து வெளியேறவேண்டும் என நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். இராணுவத்தினர் வெளியேறுகின்றபோதே இவ்வாறான நெருக்கடிகளிலிருந்து எமது மக்கள் மீண்டெழுவதுடன் எமது வறுமைக்குட்பட்ட மக்களின் பொருளாதாரமும் மேம்பாடடையும் என்று தெரிவித்த விவசாய அமைச்சர், இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.

20 பிப்ரவரி 2014

இனப்படுகொலையின் புதிய ஆதாரம் வெளியாகிறது!

சேனல் 4 ன் சிறீலங்காவின் இனப்படுகொலை ஆதாரங்கள் அடங்கிய புதிய காணொளி வரும் பிப் 22 சனிக்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் வெளியிட இருக்கிறோம். இந்த நிகழ்வில் கல்லம் மெக்ரே அவர்கள் 45 நிமிடங்கள் இணையம் மூலம் நேரடியாக நம்முடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது. முதலில் பதிவு செய்யும் 250 நபர்களுக்கு மட்டுமே அனுமதி… உங்கள் இருக்குயை பதிவு செய்ய tamilyouthsandstuden­ts@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 பிப்ரவரி 2014

கொலை வெறியில் காங்கிரஸ்!

ராஜீவ்-ஜே.ஆர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன்,முருகன், நளினி உட்பட 7 பேர் கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். இந்நிலையில் பேரறிவாளன். சாந்தன் மற்றும் முருகனின் கருணை மனுக்களை தாமதமாக பரிசீலித்தாக கூறி, இவர்களது மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.மேலும் குற்றவியல் நடைமுறை சட்டப்படி விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இன்று அமைச்சரவையை கூட்டி முதல்வர் ஜெயலலிதா ஆலோசித்தார். அப்போது ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் 7பேரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவெடுத்து அறிவித்தார். மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தார். மூன்று நாட்களுக்குள் விடுதலை செய்யாவிட்டால், தமிழக அரசே விடுதலை செய்யும் என்று அதிரடியாக அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரசார் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் ஜெயலலிதாவின் முடிவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, ‘’பிரதமரை கொன்றவர்களையே தண்டிக்காமல் விடுவிப்பது எப்படி சரியாகும்? சாதாரண மனிதர்கள் பாதிக்கப்படும்போது எப்படி நீதி கிடைக்கும்? ராஜீவ்காந்தி என் தந்தை என்பதற்காக கூறவில்லை. நாட்டிற்காக சொல்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் முடிவு பொறுப்பற்ற விபரீதமன மக்கள் நலன் சாரா செயல் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில், ’’மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசின் கடிதம் இதுவரை வரவில்லை. கடிதம் வந்த பின்னரே 7 பேரை விடுவிப்பது தொடர்பாக முடி வு எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

18 பிப்ரவரி 2014

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

ஈழத்தில் இந்திய அராஜகம்!
ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தமிழ் உணர்வாளர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். வேலூர் சிறையில் பேரறிவாளன், முருகன் ஆகியோரை அவரது உறவினர்கள் நேரில் சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்தது. மூவரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பு வெளியானதும் தமிழகம் முழுவதும் தமிழ் இன உணர்வாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி வரவேற்றனர்.சென்னை கோயம்பேட்டில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளுக்கு உணர்வாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பறை இசை ஒலித்து ஆடிப்பாடி மகிழ்ந்த தமிழ் இன உணர்வாளர்கள் தூக்கு கயிற்றுக்கு தீயிட்டு எரித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.கோயம்புத்தூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் மதிமுகவினர் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் உணர்வாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.பேரறிவாளனுடன் சந்திப்புஇந்நிலையில் தீர்ப்பு வெளியான உடனேயே முருகனின் தாயார் சோமணி, மாமியாரும் நளினியின் தாயாருமான பத்மா ஆகியோர் முருகனை வேலூர் சிறையில் சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.பேரறிவாளனை சென்னையில் இருந்து சென்ற அவரது தாயார் அற்புதம்மாள் மற்றும் குடும்பத்தினரும் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

17 பிப்ரவரி 2014

காதல் தகராற்றில் மாணவன் வெட்டிக்கொலை!

திருச்சியில், காதல் தகராறில் இலங்கைத் தமிழரான கல்லூரி மாணவர் கடத்திச் செல்லப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். திருச்சி சீனிவாச நகரில் வசிக்கும், ஸ்ரீதரன். இலங்கை தமிழரான இவரது மகன் விதுகரன் (வயது 20). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்தார். விதுகரன் காதலித்த மாணவியின் தங்கையை அதே கல்லூரியில் படிக்கும் திருச்சி தில்லைநகரை சேர்ந்த அரவிந்த் (20) காதலித்தார். விதுகரனுக்கு இது பிடிக்காததால் அரவிந்தை கண்டித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் விதுகரன் வீட்டின் முன்பு அரவிந்த், சிலருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டை விட்டு வெளியே வந்த விதுகரனை, அரவிந்த்தும் அவருடன் வந்தவர்களும் அடித்து, உதைத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விதுகரனின் தாய் சிவனேஸ்வரி திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விதுகரனை தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக உறையூர் பகுதியை சேர்ந்த தினகரன் (20), ஜான்சன் (20) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தினகரன் போலீசாரிடம் கூறுகையில், காதல் தகராறில் அரவிந்த், கூலிப்படை உதவியுடன் விதுகரனை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்து, காரில் வைத்து குழுமணி, ஜீயபுரம், முக்கொம்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் சுற்றினார். பின்னர் ஜீயபுரம் பகுதியில் உள்ள சின்னகருப்பூர் கொடிங்கால் வாய்க்கால் கரையோரம் உள்ள ஒரு தென்னந்தோப்பில் விதுகரனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.பின்னர் பிணத்தை அருகில் உள்ள வடிகால் வாய்க்காலில் போட்டு வைக்கோல், தென்னங்கீற்று மட்டைகளை போட்டு மூடி வைத்தனர் என்றார். இதையடுத்து தினகரன், ஜான்சன் ஆகியோரை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது விதுகரன் உடலை மறைத்து வைத்த இடத்தை போலீசாரிடம் தினகரன் காட்டினார். பின்னர் விதுகரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் கடத்தல் வழக்கை கொலை வழக்காக மாற்றி தினகரன், ஜான்சனை பிடித்து விசாரித்து வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்அரவிந்த் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட விதுகரனின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். தாய் மற்றும் ஜனனி என்ற அக்காவும் உள்ளார். கல்லூரி மாணவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

16 பிப்ரவரி 2014

இலங்கைக்கு ஆதரவளிக்கும் நாடுகளிற்காக காணொளி!

இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள ஆபிரிக்க மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகளுக்காக அடுத்த காணொளியை காண்பிக்க உள்ளதாக சனல் 4 தொலைக்காட்சியின் தயாரிப்பாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாடாளுமன்ற கட்டிடத்தின் விக்டர் ஹியூகோ மண்டபத்தில் அண்மையில் திரையிடப்பட்ட “போர் தவிர்ப்பு வலயம்” காணொளி காட்சிப்படுத்தலின் பேதோ கெலும் மக்ரே கருத்துக்களை வெளியிட்டார். ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கையின் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் சம்பந்தமாக விசாரணை நடத்த இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்படும் என நினைக்கின்றேன். இறுதிக்கட்ட போரில் மேற்குலக நாடுகள், அமெரிக்கா, சீனா, ஈரான், இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான் என அனைத்து நாடுகளும் ராஜபக்ஷவுக்கு உதவின. போர் முடிந்த பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய திறமையான உரை குறித்து கவனம் செலுத்துங்கள். இலங்கை பயங்கரவாதத்தை எதிர்க்கொண்டு இதனை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் நாடுகளின் உள்விவகாரங்களில் பலமிக்க நாடுகள் தலையிடக் கூடாது எனவும் அவர் அமெரிக்காவை மறைமுக சுட்டிக்காட்டி கூறியிருந்தார். இது வேடிக்கையான மற்றும் பொய்யான ஏகாதிபத்திய எதிர்ப்பு. இந்த கதையினை ஆபிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகள் நம்பின. எமது அடுத்த காணொளியை ஆபிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு காண்பிக்க உள்ளோம். இந்த நாடுகளுக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் முரண்பாடுகள் உள்ளன. இதுதான் ராஜபக்ஷவின் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு காரணமாக அமைந்தது. எனினும் எமது காணொளியின் ஊடாக ராஜபக்ஷவின் பொய்யான ஏகாதிபத்திய எதிர்ப்பை இந்த நாடுகள் புரிந்து கொள்ளும். போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைக்கான சந்தர்ப்பத்தை ஐக்கிய நாடுகள் வழங்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதேபோல் பிரித்தானிய பிரதமர் கமரூன் தான் கூறியது போல் வலுவாக செயற்படுவார் என நம்புகிறோம். எப்படி இதற்கு உதவலாம் என நாம் எண்ணி வருகிறோம். காணாமல் போதல் சம்பவங்கள் ஊடாக அவர்கள் இலங்கையின் நிலைமைகளை புரிந்து கொள்ள முடியும். அதன் பின்னர் அது பற்றிய கலந்துரையாடல்கள் நடக்கும். என்னிடம் உள்ள தகவல்களை வைத்து போரில் என்ன நடந்தது என்பது பற்றிய கதையை எழுத முடியும். தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பில் குறிப்பாக சட்ட துறையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறிப்பாக, தமிழ் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள், சிங்கள படையினர் வடக்கில் சகல இடங்களையும் கைப்பற்றியுள்ளமை, சிங்கள குடியேற்றத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் துரிதமான சிங்களமயமாக்கல், பலவந்தமான நில அபகரிப்பு, திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள் என அனைத்திலும் அரசாங்கத்தின் தலையீடு இருக்கின்றது என நான் நம்புகிறேன் என கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

15 பிப்ரவரி 2014

வன்னியில் பெண்கள் மீது சிங்களம் புரிந்த கொடூரம்!

இலங்கைத் தீவில் சிங்கள அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2009 இல் போரின் உச்ச கட்டத்தின் போது, சிங்கள இராணுவத்தினர் ஈழத் தமிழ்ப் பெண்களை வதைத்துக் கொன்ற காட்சி புதிய ஆதாரமாகக் கிடைத்துள்ளது. அந்தக் கொடுமையை எழுத்தில் பதிய என் மனம் மறுக்கிறது. ஐயோ! இப்படியும் ஒரு கொடுமையா? என்று புலம்பி தவிக்கிறது. தமிழ்ப் பெண்கள் 15 பேரை சிங்கள இராணுவம் கதறக் கதறக் கற்பழித்து பின்னர் படுகொலை செய்து, சிதைந்துபோன அப்பெண்களின் உடல்களை உணவின்றியும், மருந்தின்றியும், குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் பதறித் துடித்துக்கொண்டிருந்த தமிழ் மக்கள் முன்னால் மண்ணில் வீசுகிறது. அத்துடன் முடியவில்லை கொடுமை. மனிதகுலத்தின் கர்பக் கிரகமான பெண்ணின் கருவறையான உடல் பகுதியில் துப்பாக்கிகளைக் கொண்டு நாசப்படுத்தும் அக்கிரமம் மிருகங்கள் கூட செய்யத் துணியாதது.இந்தக் கொடிய சம்பவம் காணொளியாக சேனல்-4 இல் விரைவில் வெளியாகக்கூடும். எனவே, இலங்கைத் தீவில் சிங்கள அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

14 பிப்ரவரி 2014

கண் விழியுங்கள் இந்துக்களே” : வவுனியாவில் துண்டுப்பிரசுரம்!

சிவசேனா என்ற பெயரில் கண்விழியுங்கள் இந்துக்களே, இந்து சமயம் அழிந்தால் அழியட்டும் என்ற எண்ணம் கொண்ட இந்து சமயத்தவரா நீங்கள்?ஆம் என்றால் இதை தொடர்ந்து வாசிக்காதீர்கள் என்ற தலைப்புடன் வவுனியா முழுவதும் துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்தன. இத்துண்டு பிரசரத்தில் இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற்ற முயற்சிப்பது இல்லை ,இந்துக்கள் மற்ற மதத்தவரின் பழக்கவழக்கங்களை தரகுறைவாக பேசுவதும் இல்லை , இந்துக்கள் பிற மத கடவுளர்களை தீய சக்திகளாக (சாத்தான்களாக) சித்தரிப்பதில்லை ,உலகின் பழமையான மதமாக இருந்தாலும் பெரும்பான்மையான மதமாக இல்லாத்தற்கு காரணம் நாம் படையெடுத்து சென்ற போதும் கட்டாய மதமாற்றம் செய்யாதது இருந்தும் எம்மை படையெடுத்து வந்த அந்நியர்கள் எம்மை கட்டாய மதமாற்றம் செய்தனர். இன்றும்கூட எம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றனர் இந்துமதம் எமக்கு தந்த சுதந்திரத்தை வேற்று மதத்தவர்கள் ஏன் எம்மவர்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக வேட்டையாடி வருகின்றார்கள் இதே நிலை தொடர்ந்தால். எதிர்காலத்தில் நாம் அனைவரும் கழுத்தில் சிலுவையுடனும் தலையில் குல்லாவுடன் தான் திரிவோம். நாம் ஒன்றும் மற்ற மதத்தவர் போன்று மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் கொள்கையுடைய ஈனப்பிறவிகளல்ல எமக்கு வெளிநாட்டிலிருந்து மத அழிப்பிற்கென பண உதவியோ பொருளுதவியோ கிடைப்பதில்லை காதல் எனும் வலை விரித்து திருமணமெனும் ஆயுதத்தால் எம்மவரை மதம் மாற்றும் காமுகர்களும் நாமில்லை இனியும் நாமிதை சுட்டி காட்டாதிருந்தால் நாம் கடவுளுக்கு செய்யும் துரோகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

12 பிப்ரவரி 2014

ஜெனீவாவில் அனந்தி எழிலன்!

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடர் தொடர்பான குழுநிலை கலந்துரையாடல்கள், விசேட கலந்துரையாடல்கள், சந்திப்புக்களில் கலந்துகொள்ள சத்தம் இன்றி நேற்றிரவு பயணமாகிய அனந்தி சசிதரன் (எழிலன்) ஜெனிவாவைச் சென்றடைந்ததாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார். ஏற்கனவே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகியோர் அங்கு தரித்துள்ள நிலையில் அனந்தியும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக முக்கிய பங்காற்ற உள்ளார். குறிப்பாக படையினரிடம் தமது உறவுகளை நேரடியாக கையளித்த முக்கிய சாட்சியாகவும் அனந்தி விளங்குகிறார். அந்த வகையில் ஜெனிவாவில் இடம்பெறும் சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களின் மனித உரிமை தொடர்பான முக்கிய கலந்துரையாடல்கள் சந்திப்புக்களிலும் கலந்து கொள்ள உள்ளார்.இதேவேளை ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள், முதலமைச்சரின் அனுமதி, மாகாண சபைத் தீர்மானம் என்பன யாவும் உறுதியாகி இருந்த போதும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளால் எனது பயணம் குறித்து முன்னதாகவே கருத்து கூறுவதனை நான் தவிர்த்து வந்தேன். ஏறத்தாள நான் போகவில்லை என்ற தொனியிலான கருத்துக்களை கூறிவந்தேன். ஆனால் சில ஊடகங்கள் நான் மகிந்தவுக்கு கூஜாதூக்கப் போகிறேன் என்றுகூட செய்திகளை வெளியிட்டு இருந்தார்கள். நானும் என்போன்ற பல செயற்பாட்டாளர்களும் எத்தகைய நெருக்குதல்களுக்கு மத்தியில் பணியாற்றுகிறோம் என்பதனை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என அனந்தி சசிதரன் தெரிவித்தார். இதனிடையே ஜெனீவாவிற்கு தான் பயணமாகமாட்டேன் என வடமாகாண வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நோர்வே தூதுவருடனான சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனை அவர் தெரிவித்தார்.அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஜெனீவாக் கூட்டத்தொடரில் வடக்கின் முதலமைச்சர் என்ற ரீதியில் கலந்துகொள்வீர்களா என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "ஐநா மனித உரிமைக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மாட்டேன் செல்வவேண்டிய அவசியமுமில்லை நான் வடக்கின் நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளை கவனித்து வருகின்றேன். அரசியல் நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்த்து வருகின்றார்கள் அவர்கள் செல்வார்கள் பெண்கள் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி:குளோபல் செய்திகள் 

11 பிப்ரவரி 2014

வடக்கு முதல்வரின் உரையால் மகிந்தவிற்கு கொதி,வலி!

வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வரணி மகாவித்தியாலயத்தில் நிகழ்த்திய உரை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவினால் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது. 'கர்மவினை எவரையும் விட்டு வைக்காது. நாம் முன்னர் செய்த கருமங்களுக்கே இப்பொழுது பலனை அனுபவிக்கின்றோம்.சர்வாதிகாரிகளாக இருந்த எகிப்தின் முபாரக், ஈராக்கின் சதாம் ஹுசைன்,பாகிஸ்தானின் முஷாரப் ஆகியோர் இருந்த நிலை என்ன என்பதையும் இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்' என்று முதலமைச்சர் தனது உரையில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­வை மறைமுகமாகச் சாடியே, வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்திருப்பதாக ஜனாதிபதிக்குச் சம்பந்தப்பட்ட தரப்பினர் போட்டுக் கொடுத்துள்ள தாகவும் ,இதனடிப்படையில் இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் நம்பகரமாக அறியமுடிகின்றது.

09 பிப்ரவரி 2014

வைகோவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் மோடி!

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் வாஜ்பாய் கடைபிடித்த அணுகுமுறையையே நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மோடியிடம் வைகோ கேட்டுக்கொண்டார். அதற்கு மோடி, "அப்படியே செய்வோம்" என்று ஏற்று கொண்டுள்ளார். வண்டலூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்கு பின் நேற்று இரவு தனியார் ஹோட்டலில் நரேந்திர மோடியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். அப்போது, காலையில் இம்பாலில் பேசிவிட்டு, பகலில் கெளஹாத்தியில் பேசிவிட்டு, மாலையில் இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் உணர்ச்சிமிக்க உரையாற்றுவது என்பது அனைவராலும் இயலாது. "இந்தியில் நீங்கள் உரையாற்றும் நிமிடங்களில் அம்மொழியைப் புரிந்து கொள்ளாதவர்களைக் கூட நீங்கள் எழுப்பும் உணர்ச்சி மிக்க குரல், அதன் தொனி, உங்களுடைய கரங்களும் முகமும் வெளிப்படுத்தும் பாவனை மக்களை வசீகரித்தது. இன்று நீங்கள் ஆற்றிய உரை, உன்னதமான சொற்பொழிவாகும்" என்று வைகோ கூறியபோது, "மிகச்சிறந்த பேச்சாளரான நீங்கள் அல்லவா? பாராட்டுகிறீர்கள்" என்றார் மோடி. "இன்றைய பேச்சில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மாநில உரிமைகளை நசுக்குவதைக் கண்டித்து, கூட்டாட்சி தத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியது, நாட்டுக்கு மிக அவசியமான கருத்தாகும்" என்று வைகோ கூறியபோது, "தமிழ்நாட்டுக்கு இந்தக் கருத்து மிகவும் அவசியமாயிற்றே" என்றார் மோடி. "தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்படுவதையும், அதைத் தடுக்காத மத்திய அரசின் கையாலாகாத தன்மையைப் பற்றிச் சாடியதும், நதிகள் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தியதும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கேற்ற தமிழ்நாட்டு கட்சிகள் ஊழல் செய்து அதனால் பலன் பெற்றதைப் பற்றியும் நீங்கள் கூறியதோடு, தன்னை மேதையாகக் கருதிக்கொள்ளும் மறு வாக்கு எண்ணிக்கை புகழ் அமைச்சர் சிதம்பரத்தை கிண்டல் செய்த முறையும் பேச்சின் சிறப்பான முத்திரைகள் ஆகும்" என்றார் வைகோ. "வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. மட்டுமே 250 முதல் 272 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும். நாடெங்கும் மோடி அலை வீசுகிறது. தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தி.மு.க., அ.தி.மு.க. என்று இதுவரை இருந்த பரிமாணம் மோடி அலையால் இம்முறை உடையும். புதிய மாற்றம் தொடங்கும்" என்று வைகோ கூறியபோது, "நானும் அப்படித்தான் எதிர்பார்க்கிறேன்" என்றார், மோடி. "லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள அரசால், படுகொலை செய்யப்பட்டதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் துரோகமும் காரணம் ஆகும். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் கடைபிடித்த அணுகுமுறையையே நீங்கள் அமைக்கப் போகிற அரசும் பின்பற்ற வேண்டும்" என்று வைகோ கூறியதற்கு, "அப்படியே செய்வோம்" என்று கூறினார் மோடி.

08 பிப்ரவரி 2014

பூசா முகாமுக்குள் சோதனை நடத்தினார் அமெரிக்கப் பிரதிநிதி!

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட, போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் அமெரிக்காவின் சிறப்பு தூதுவரான ஸ்டீபன் ஜே ராப், பூசாவில் உள்ள இராணுவ முகாம் ஒன்றுக்குள் திடீரென உள்நுழைந்து சோதனை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை வந்திருந்த ஸ்டீபன் ராப் தலைமையிலான அமெரிக்க குழுவினர், காலியில் உள்ள பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்தனர்.இதன்போது, பூசா தடுப்பு முகாமுடன் இணைந்திருந்த இராணுவ முகாம் ஒன்றுக்குள் அவர்கள் திடீரென உள்நுழைந்து தேடுதல் நடத்தும் பாணியில் பார்வையிட்டுள்ளனர். போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் பலர், இன்னமும் எங்குள்ளனர் என்று தெரியாதுள்ளது. இவர்கள் இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியிருந்தன.இந்தநிலையில், பூசா தடுப்பு முகாமுக்கு அருகில் இருந்த படையினரின் முகாமும், அத்தகைய இரகசியத் தடுப்பு முகாமாக பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஸ்டீபன் ராப் குழுவினர் அதற்குள் நுழைந்து பார்வையிட்டதாகத் தெரிகிறது. பூசா தடுப்பு முகாமுடன் இணைந்த இராணுவ முகாமுக்குள், ஸ்டீபன் ராப் தலைமையிலான குழுவினர் அத்துமீறி நுழைந்ததாக, இலங்கை அரசாங்க வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.அது தடுப்பு முகாமின் பாதுகாப்புக்கான முகாம் என்பதை அமெரிக்க அதிகாரி தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும், அமெரிக்காவினது இந்த அணுகுமுறையை இலங்கை அரசாங்கத்தினால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

07 பிப்ரவரி 2014

இலங்கைக்கு எதிராக பிரான்சும் களத்தில்!

அமெரிக்காவினால் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் பொறுப்பு பிரான்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கேட்டுக்கொண்டதற்கு அமைய பிரான்ஸ் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. இதே வேளை பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் பிரித்தானியா ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

06 பிப்ரவரி 2014

ஜெனீவா பிரதிநிதிகளுடன் நிஷா பேச்சு!

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து மத்திய மற்றும் தென் ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால், ஜெனீவா பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிரித்தானியாவிற்கான விஜயத்தை முடித்துக்கொண்ட பிஷ்வால் தற்போது ஜெனீவாவில் உள்ள ராஜதந்திரிகளுடன் இலங்கை நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது, ஜெனீவாவில் கடமையாற்றி வரும் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுடன் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை நிலைமைகள் குறித்து ராஜதந்திரிகளுடன் நடத்திய சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது என பிஷ்வால் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

05 பிப்ரவரி 2014

சிங்கக்கொடி ஏற்றியவருக்கு அடி,உதை!

சிறீலங்காவின் 66ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக தனது சுயதொழில் நிலையத்தில் தேசியக் கொடியினை ஏற்றிய சுயதொழில் நிலையத்தின் உரிமையாளரான அராலி தெற்கை சேர்ந்த 56 வயதான தம்பிப்பிள்ளை மகேந்திரராசா மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் படுகாயமடைந்த உரிமையாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.சத்துருசிங்க தெரிவித்தார். குறித்த நபர் வீட்டில் இருந்தபோது வந்த இனந்தெரியாத நபர்கள் “ஏன் தேசியக் கொடியை ஏற்றினாய்”, “நீ ஆமி, பொலிஸுடன் சேர்ந்தால் பெரிய கொம்பனா?” என கேட்டு தன்னை அடித்ததாக குறித்தநபர் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

04 பிப்ரவரி 2014

இன்று வடக்கில் கறுப்புக் கொடிகள்!

இலங்கையின் 66 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்ற நிலையில் பரவலாக யாழ்.குடாநாட்டினில் கறுப்பு கொடிகள் பொது இடங்களில் அதிகாலை பறக்கவிடப்பட்டிருந்தது.படையினரின் தீவிர கண்காணிப்பினை தாண்டி இக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது.குறிப்பாக சனசமூக நிலையங்களிலேயே இத்தகைய கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி கட்டப்பட்டுள்ளதாக உள்ளுர் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் யாழ்.பல்கலைக்கழக ஆண்கள் விடுதியில் அமைந்துள்ள தண்ணீர்த் தாங்கி மீது கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் இதனை அறிந்த இராணுவத்தினர் அப்பகுதி எங்கும் குவிக்கப்பட்டதாகவும்; அக்கொடி தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படையினரது எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டதென்பது உறுதியாகியுள்ளது. இன்று குடாநாhட்டின் பிரதான வீதிகள் நகரப்பகுதிகள் அரச திணைக்களங்களென முழத்திற்கொன்றாக குவிக்கப்பட்டுள்ள படையினர் கடந்த கால சுற்றிவளைப்புக்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்பதுடன் மக்களை அச்சத்துடன் வீடுகளினுள்ளும் முடக்கி வைத்துமுள்ளது. ஒரு புறம் ஆயுதம் தாங்கிய படையினரது ரோந்துகள் வீதிச்சோதனைகளென தொடர மறுபுறம் வடமாகாணசபையின் பேரவை மற்றும உள்ளுராட்சி மன்றங்களென கண்களினில் எண்ணெயினை விட்டவாறு படையினர் அலைந்து திரிந்தனர்.படைத்தரப்பின் கெடுபிடிகள் ஒருபுறம் மக்களிற்கு வேடிக்கையாகவும் மறுபுறம் அச்சமூட்டுவதாகவும் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. மக்கள் நடமாட்டம் பெரும்பாலும் மட்டுப்பட்டதாகவும் வீதிகள் வெறிச்சோடியதாகவும் பரவலாக காணப்பட்டது.குறிப்பாக இவ்வளவு படையினர் எங்கு பதுங்கியிருந்தரென்ற கேள்வி மக்களிடையே எழுந்துமுள்ளது.

03 பிப்ரவரி 2014

கமலேந்திரன் நீக்கம் என்கிறது ஈபிடிபி!

கொலையுண்ட ரெக்சியன் 
வட மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் EPDP கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் கமலேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து எழுத்து மூலம் கமலேந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 29ம் திகதி கமலேந்திரனுக்கு யாழ்ப்பான சிறைச்சாலையின் ஊடாக தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் திரட்டிய தகவல்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் கமலேந்திரனை கட்சியிலிருந்து நீக்குவது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது என கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் டெனியல் ரெக்ஸியன் கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

பாற்காரன் குறும்பட உத்தியோகபூர்வ இணைய வெளியீடு.

கடந்த மாதம் யாழ் ராஜா திரையரங்கை நிறைத்த வெளியீடான நெடுந்தீவு முகிலனின் 6ஆவது குறும்படமான பாற்காரன் இன்று உத்தியோகபூர்வமாக படக்குழுவினரால் இணையதள வாசகர்களுக்காக வெளியிடப்படுகின்றது. யாழின் தற்போதைய பால்மா பிரச்சனையை மையக்கருவாக கொண்டு, வீண்விரையமாகும் விடயங்களுக்கு குறியீடாக பசுப்பாலினை உள்வாங்கி எல்லோர் மனங்களிலும் ஆணியடித்ததுபோல் இடம்பிடித்த பாற்காரன் குறும்படம் இணைய நண்பர்களுக்காக இன்று வெளியிடப்படுகின்றது இந்தப்படத்தின் கதாநாயகனாக பேராசிரியர் சிவச்சந்திரனின் மகன் பாரதி தனது பாத்திரத்தை நிறைவாக வெளிப்படுத்தி இருக்கின்றார், படத்தின் உயிர்நாடியாக படத்தின் ஒளிப்பதிவாளர் சுரேன் யாழ்ப்பாணத்தின் அழகை மிக தத்துரூபமாக காண்பித்துள்ளார், படத்தினை மீண்டும் மீண்டும் பார்கும் வகையில் அற்புதனின் இசை அமைந்துள்ளது, ஏனைய நடிகர்களும் தமது திறமைகளை நன்கு வெளிப்படுத்தியுள்ளனர், கதையையும் கருவையும் நெடுந்தீவு முகிலன் நன்று தேர்ந்தெடுத்துள்ளார், இப்படைப்பை தயாரித்த கேதீசை பாராட்டவேண்டும் ஈழத்தில் இருந்து நவீன திரைநுணுக்கங்களுடன் வெளிவந்த குறும்படமான பாற்காரன் இணைய வாசகர்களையும் நன்கு திருப்திப்திபடுத்தும் என்பது ஆணித்தரமான உண்மை, பாற்காரன் குறும்படம் பால் பிரச்சனையை மட்டும் அல்லாமல் எமது ஈழ்ப்பிரச்சனையையும் நாசூக்காக தொட்டுச்செல்கின்றது, ஈழத்தில் இருந்துவரும் படைப்புகள் பாற்காரன் போன்று சமூக அக்கறையும் மனித விழிப்புணர்வுடனும் வெளிவருவது எம் ஈழப்படைப்புகளை வெளிஉலகிற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை,

நன்றி:தினக்கதிர் 

02 பிப்ரவரி 2014

நாரந்தனை விபத்தில் தமிழ் பொலிஸ்காரர் மரணம்!

யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். அளவெட்டியைச் சேர்ந்த 24 வயதுடைய குகராஜ் பிரசன்னா என்ற பொலிஸ் அதிகாரி ஊர்காவற்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நாரந்தனை வடக்குப் பகுதியில் அவர் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

01 பிப்ரவரி 2014

இலங்கை சர்வாதிகார நாடு-மங்கள சமரவீர

இலங்கை ஜனநாயக நாடு அல்ல சர்வாதிகார நாடு என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை சர்வாதிகாரத்தை நோக்கி பயணித்து விட்டது.பெயரளவில் மாத்திரமே இலங்கை ஜனநாயக நாடு. இந்தோனேசியாவின் சுகார்டோ, எகிப்தின் முபாரக் ஆகியோரின் ஆட்சியில் காணப்பட்ட சகல சர்வாதிகார அடையாளங்களும் இலங்கையில் தற்போது காணப்படுகிறது. மாதம் தோறும் தேர்தல் நடத்துவதால் ஒரு நாடு ஜனநாயக நாடாகி விடாது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் காணப்படும் நவீன சர்வாதிகாரத்தின் அடையாளமாகவே தேர்தல் காணப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டியதுடன், முபாரக் எகிப்தில் தொடர்ந்தும் தேர்தல்களை நடத்தினார். சிம்பாவே ஜனாதிபதி றொபர்ட் முகாபே தொடர்ந்தும் தேர்தலை நடத்தியே தெரிவு செய்யப்படுகிறார். ஊடக சுதந்திரம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் சுதந்திரமான தீர்மானங்களை எடுக்க நாடாளுமன்றத்திற்கு இருக்கும் இயலுமை ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் இலங்கை ஜனநாயக நாடு அல்ல, சர்வாதிகார நாடு என்பது புலனாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.