பக்கங்கள்

31 அக்டோபர் 2012

இளையாராஜா இசை நிகழ்ச்சி ரத்து?

Music Cinema Inseperable Says Maestro Ilayaraja இலங்கைத் தமிழர்களின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு மற்றும் புயல் காரணமாக, இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, வருகிற 3-ந் தேதி கனடாவில் நடைபெறவிருந்தது. அதில் 100-க்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள், பின்னணி பாடகர்-பாடகிகள் கலந்து கொள்ளவிருந்தனர். மிகப் பிரமாண்டமாக ரோஜர்ஸ் ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருந்தது. 30000 க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆனால் இந்த இசை நிகழ்ச்சிக்கு கனடாவில் உள்ள தமிழர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நவம்பர் மாதத்தை விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாக ஈழ தமிழர்கள் கடைபிடிப்பதால், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை வேறு மாதத்துக்கு மாற்றிக் கொள்ளுமாறு அவர்கள் கூறி வந்தனர். ஆனால் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்கும் என இளையராஜாவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கூறினர். இதற்கிடையில், அமெரிக்காவை புரட்டிப் போட்ட சாண்டி புயல் காரணமாக விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கனடாவிலும் தட்பவெப்பம் சாதகமாக இல்லை. இதைத் தொடர்ந்து வருகிற 3-ந் தேதி கனடாவில் நடைபெற இருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டதாம். இளையராஜா நேற்று முன்தினம் இரவு கனடா புறப்படுவதாக இருந்தார். அந்த பயணத்தை அவர் ரத்து செய்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இளையராஜா தரப்பில் இதுகுறித்து எதுவும் கூறப்படவில்லை.

வீட்டிற்குள் சக்தி வாய்ந்த குண்டு கண்டெடுப்பு!

ஆனந்தபுரம் பகுதியில் வீடொன்றிற்குள் மழை நீர் உட்புகுந்ததையடுத்து, வீட்டு உரிமையாளர் கொட்டிலின் கரையில் மண்ணை அணைத்து நீர் உட்புக முடியாமல் தடுக்க முயற்சித்த போது, மண்வெட்டியில் சிக்கிய ஒரு பொருளைக் கவனமாக எடுத்துப் பார்த்துள்ளார். அது ஏதோ ஒரு வகை வெடி பொருளைப் போன்று காணப்பட்டதனால் அதைக் கவனமாக வைத்து விட்டு உடனடியாக இராணுவத்தினருக்கும் எவ். எஸ். டி. என்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த எவ். எஸ். டி. நிறுவனத்தினர் அந்தக் குண்டைக் கவனமாக வீட்டில் அருகில் இருந்து தூரத்தில் வைத்து வெடிக்க வைத்தனர். அந்தப் பகுதியில் வீடுகளில் இருந்தவர்கள் அனைவரும் தொலைவில் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்பே மிகவும் சக்தி வாய்ந்த அந்தக் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. அப்போது அது மிகவும் பெரிய சத்தத்துடன் வெடித்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

30 அக்டோபர் 2012

"நீங்கள் இங்க இருங்களன்; நானும் வாறன் கெதியா" 6 பிள்ளைகளின் தாயாரின் கண்ணீர் கதை!

இருப்பதற்கு ஓர் இடம் இல்லாமலும் பராமரிப்பதற்குப் பெற்ற பிள்ளைகள் முன்வராமையாலும் தனது நோய்வாய்ப்பட்ட கணவனை கைதடி வயோதிபர் இல்லத்தில் இணைத்தார் வயோதிப மனைவி. இப்படி ஒரு பரிதாபச் சம்பவம் கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளது. இது பற்றி மேலும் தெரிய வருவதாவது: யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்தவர்கள் இவர்கள். கணவரான ஜோண் திரவியத்துக்கு வயது 83. மனைவி திரவியம் இராசாத்தியம்மாவுக்கு வயது 75 இவர்களுக்கு 6 பிள்ளைகள் தம்மைப் பராமரிப்பதற்குத் தமது பிள்ளைகள் முன்வராமையால் வயது முதிர்ந்த நேரத்தில் தமது வாழ்க்கையை நடத்திச்செல்வதில் பெரும் சிரமப்பட்டனர். இவர்களுக்குத் தங்கியிருப்பதற்கு இருப்பிடமும் இருக்கவில்லை. இதனால் பெரிதும் அந்தரித்த நிலையில் இருந்து வந்தனர். சுகயீனமடைந்துள்ள தனது கணவரைத் தொடர்ந்து பராமரிப்பதற்கு முடியாமல் போனமையால் அவர் தனது கணவரையும் அழைத்துக் கொண்டு நேராகக் கைதடி அரச முதியோர் இல்லத்துக்குச் சென்றார். தானும் நோய்வாய்ப் பட்டுள்ள நிலையில் தனது கணவரைப் பராமரிக்க முடியாத நிலை உள்ளதாகவும், பிள்ளைகளும் தம்மைப் பராமரிக்க முன் வராமை காரணமாகத் தாங்கள் பெரிதும் துன்பப்படுவதாகவும் தெரிவித்த அந்த வயோதிபப்பெண் இல்ல அத்தியட்சகர் முன்பாக விம்மி விம்மி அழத்தொடங்கினார். அவர்களின் நிலையைக் கண்டு கொண்ட இல்லத்தின் அத்தியட்சகர் என்.கிருபாகரன் அவர்களுடைய விவரங்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் வயது முதிர்ந்த கணவனான திரவியத்தை முதியோர் இல்லத்தில் இணைத்துக் கொண்டார். தனது கணவனை ஒரு இடத்தில் ஒப்படைத்து விட்ட மனத்திருப்தியுடன் முதியோர் இல்லத்தில் இருந்து வெளியேறும் போது, எனது கணவரை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன். நான் எங்கேயாவது இருந்து வாழ்கிறேன். அடிக்கடி அவரை வந்து பார்த்துச் செல்வேன் யாரும் இல்லாவிட்டால் நானும் இங்கு வருகிறேன். என அழுதழுது கூறி விட்டுச் சென்றதாக இல்லத்தின் அத்தியட்சகர் தெரிவித்தார். இந்த மாத முற்பகுதியில் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற முதியோர் தின நிகழ்வுகளின் போது பெற்றோரைப் பிள்ளைகள் அன்பு, ஆதரவுடன் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இப்படி ஒரு சம்பவம் இடம் பெற்றமை மனவேதனை அளிப்பதாக இல்ல அத்தியட்சகர் மேலும் கூறினார். பிள்ளைகள் தமது பெற்றோரை இப்படி அநாதரவாக விட்டுச் செல்லும் நிலை எமது சமூகத்தில் அதிகரித்து வருவதாகவும் இந்த நிலையை மாற்றுவதற்கான விழிப்புணர்வைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அத்தியட்சகர் தெரிவித்தார். இந்தப் பெற்றோரைக் கைவிட்டுள்ள 6 பிள்ளைகளும் வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வசிப்பதாகவும் அத்தியட்சகர் குறிப்பிட்டார். பாருங்கள் இந்தப் பெற்றோருக்கு ஏற்பட்ட நிலைமையை.

மின்சார கம்பி அறுந்து வீழ்ந்ததால் பருத்தித்துறையில் மாணவன் பலி!

யாழ். பருத்தித்துறைப் பகுதியில் மின்சாரம் தாக்கி 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் (29-10-2012) நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை ஹாட்டிலிக் கல்லூரியில் கல்வி கற்கும் முஸ்தப்பா தயாபரன் என்ற மாணவனே உயிரிழந்தவர் ஆவார். தம்பசிட்டி முருகன் கோவில் ஒழுங்கையில் தயாபரன் சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசி மின் ஏந்திச் சென்ற கம்பி அறுந்து அவர் மீது வீழ்ந்ததினால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சடலம் பிரதேச பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

29 அக்டோபர் 2012

இசைஞானி இளையராஜா நிகழ்ச்சி தள்ளிப் போடப்பட்டால் மகிழ்வோம்– செந்தமிழன் சீமான்

தமிழ்த்தேசிய இனத்தின் இசை அடையாளமாகவும், அரைநூற்றாண்டாக தமிழர்களை தன் இசையால் மகிழ்வித்து வரும் அய்யா இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடா டொராண்டோவில் நவம்பர் மாதம் நடப்பதை அறிந்தது மனம் வருந்தி நவம்பர் மாதத்தை தவிர்த்து அக்டோபர் மாதத்திலோ அல்லது டிசம்பர் மாதத்திலோ வைத்துக்கொள்ள நாம் தமிழர் இயக்கம் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேண்டுகோள் விடுத்தார். தமிழீழ விடுதலை போராட்டத்தில் நவம்பர் மாதம் புனிதமான மாதம். உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் எழுச்சி கொள்ளும் மாதம். நவம்பர் 27 தமிழ் மண்ணின் விடுதலைக்காக களம் ஆடி விழுப்புண்பட்டு வீழ்ந்து நடுகல்லாகிவிட்ட மாவீரர்களின் அளப்பரிய தற்கொடையை நினைவு கூறுமுகமாக கொண்டாடப்படும் எழுச்சி நாள். இளமை நாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் விதைத்தவர்களை வணங்கும் நாள். மாவீர்ர்கள் சிந்திய குருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி என சூளுரைக்கும் நாள். அத்தோடு நவம்பர் 02, பிரிக்கேடியர் சுப. தமிழ்ச்செல்வன் எதிரியின் குண்டுவீச்சுக்கு இலக்காகி மரணித்த நாள். நவம்பர் 03 அடக்கம் செய்த நாள். இந்த நாள்களை உள்ளடக்கிய மாதத்தில் கேளிக்கை, கொண்டாட்டம் போன்றவற்றில் திளைத்திருக்க செய்து தமிழ் மக்களை அவர்களது விடுதலை வேட்கையில் இருந்து திசை திருப்பி விட இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முனைகிறது என்பதால் இந்நிகழ்ச்சிக்கும் நாம் தமிழர் கட்சி தன் எதிர்ப்பை பதிவு செய்தது. இந்நிலையில் இன்று சென்னையில் செந்தமிழன் சீமானை சந்தித்த இசை நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தாங்கள் அந்த நிகழ்ச்சியை நவம்பர் மாதம் தவிர்த்து வேறொரு நாளுக்கு தள்ளிப் போடுவதாகவும் அதற்குரிய உடன்பாட்டை இளையராஜாவிடம் இருந்து பெறப் போவதாகவும் உறுதி அளித்துள்ளார்கள். அய்யா இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சி புலம் பெயர் மக்களிடத்தில் நடத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை, தமிழீழ விடுதலை போராட்டத்தின் முக்கிய மாதமான நவம்பர் மாதத்தில் நடத்துவதில் தான் முரண்பாடு ஆகவே நிகழ்வு வேறு மாதத்திற்கு தள்ளி வைக்கபட்டால் கட்டாயம் மகிழ்ந்து கைகோர்ப்போம் என்று தெரிவிக்கப்பட்டது.

புலிகளை அழிக்க வஞ்சகம் செய்தவரே சொல்ஹய்ம்; விடுதலைப் புலிகள் அறிக்கை

விடுதலைப்புலிகளின் தனித்துவத்தையும் சுயத்தையும் அழிக்கும் விதமாகவும் இழிவுபடுத்தும் விதமாகவும் போரின் உச்சக்கட்டத்தில் புலிகளின் மீது எரிக்சொல் ஹெய்ம் உட்பட்ட பன்னாட்டுச் சக்திகளால் வஞ்சக வலை விரிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது. இணையத் தளங்களில் நேற்று வெளியான இந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது: புலிகளுக்கும் அரசுக்குமிடையில் பேச்சுக்கள் நடைபெறுவதற்கு நடுநிலையாளராகப் பணியாற்றிய நோர்வே நாட்டைச் சேர்ந்த எரிக் சொல்ஹெய்ம் அண்மையில் பி.பி.ஸி. செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில், எமது அமைப்பின் தலைமை மீது அபாண்டமாகப் பழிசுமத்தியது தொடர்பாக எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டியது தமிழீழ விடுதலைப் புலிகளாகிய எமது கடமையாகும். அந்த நேர்காணலில், தாம் ஒழுங்கமைத்த சரணாகதி ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளாமல் விடுதலைப் புலிகளின் தலைமை வீண் பிடிவாதம் பிடித்ததால்தான் தமிழ்மக்களுக்கு இப்பேரழிவு ஏற்பட்டதென்று எரிக் சொல்ஹெய்ம் கூறியிருக்கிறார். வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்து எமது மக்கள் நாளாந்தம் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டுக் கொண்டும், பட்டினிச்சாவை எதிர்கொண்டும், சுகாதார, மருத்துவவசதிகளின்றி அல்லற்பட்டுக் கொண்டும் இருந்த வேளையில் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு நாம் மூன்றாந்தரப்பு ஒன்றிடம் எமது மக்களைக் கையளிக்க முன்வந்திருந்தோம். அதேநேரம் உடனடி போர்நிறுத்தத்தையும் வேண்டி நின்றோம். அதை தொடர்புடையவர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தோம். இதேவேளை, எமது அமைப்பின் தலைமையையும் போராளிகளையும் சரணடையும்படி தொடர்ச்சியாக அழுத்தத்தைப் பிரயோகித்ததுடன் அதற்குரிய திட்டங்களையும் வகுத்து இயக்கத் தலைமையினதும் போராளிகளினதும் சரணடைவையே முக்கியத்துவப்படுத்தி நடுநிலையாளர்களும் பன்னாட்டுச் சமூகமும் செயற்பட்டு வந்தது. மாறாக, நாம் எமது மக்களை மூன்றாந்தரப்பு ஒன்று பாதுகாப்பாகப் பொறுப்பெடுக்க வேண்டுமெனவும் அதற்குரிய உத்தரவாதத்தை எழுத்து மூலம் தரும்படியும் கேட்டுக் கொண்டிருந்தோம். எமக்குரிய அந்த பாதுகாப்பு உத்தரவாதம் நோர்வேயாலோ ஏனையவர்களாலோ தரப்படவேயில்லை. சரணடைவு பற்றிய திட்டங்களே தொடர்ந்தும் பேசப்பட்டுக் கொண்டிருந்தன. எமது போராட்ட மரபு வித்தியாசமானது, உலகில் தனித்துவமான நெறிகளையும் நடைமுறைகளையும் கொண்டது. மிக இறுக்கமாகப் பேணிவந்த அந்தத் தனித்துவங்களும் இராணுவ ஒழுக்கங்களுமே எமது இயக்கத்தையும் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் வளர்த்தும் பாதுகாத்தும் வந்தன. அப்படிப்பட்ட எமது இயக்கத்தின் தனித்துவத்தையும் சுயத்தையும் அழிக்கும் விதமாகவும் இழிவுபடுத்தும் விதமாகவுமே போரின் உச்சக்கட்டத்தில் எமது அமைப்பின் மீது எரிக் சொல்ஹெய்ம் உட்பட்ட பன்னாட்டுச் சக்திகளால் வஞ்சக வலை விரிக்கப்பட்டது. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதற்காக கழுத்தில் நஞ்சுகட்டும் நடைமுறையை உருவாக்கிப் பேணிவந்த விடுதலைப் புலிகள் அமைப்பை ஒட்டுமொத்தமாகச் சரணடையும்படி ஒரு திட்டத்தை முன்வைக்க இவர்கள் முண்டியடித்தார்கள். எதிரியின் கோட்டைக்குள் நின்றே தலைகுனியாமல் எதிர்த்து நின்ற எமது தலைமையை, அன்னியரின் மிரட்டல்களுக்கெல்லாம் சளைக்காமல் எதிர்த்து நின்று போராட்டத்தை வளர்த்த எமது தலைமையை, தனது சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமற்று வழிகாட்டியாய் வாழ்ந்து வந்த எமது தலைமையை எதிரிகளிடம் மண்டியிடும்படி ஒரு திட்டத்தை முன்வைக்க இந்த நடுநிலையாளர்களால் முடிந்ததென்றால், எமது இனப்பிரச்சனையைத் தீர்க்க இவர்கள் எவ்வளவு இதய சுத்தியோடு செயற்பட்டிருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். எரிக் சொல்ஹெய்மும் நோர்வேயும் நடுநிலையாளராகச் செயற்படவெனப் புறப்பட்டது எமது இனப்பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கத்துக்காகவே. தமிழ்மக்கள் மேலான கொடிய போரை கைகட்டிப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இறுதியில் விடுதலைப்போரைத் தலைமைதாங்கி நடாத்திய அமைப்பை அதன் தலைமையுட்பட சரணடையும்படி கேட்பதென்பது, நிகழ்காலத்தில் மட்டுமன்றி எதிர்காலத்திற்கூட அந்த விடுதலைப் போராட்டத்தைப் பூண்டோடு அழிக்கும் செயலாகும். ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை என்றுமே மீளெழமுடியா நிலைக்கு இட்டுச்செல்ல சிங்களப் பேரினவாதம் முயன்றதற்கு ஒப்பான செயலே இந்த நடுநிலையாளர்களும் பன்னாட்டுச் சமூகமும் இறுதிப்போரின்போது நடந்துகொண்ட முறையுமாகும். நேர்மையற்ற முறையில் நடத்தப்பட்ட போரில் எமது மக்களைப் பாதுகாக்க, போரை நிறுத்துவதே நடுநிலையாளராகச் செயற்பட்டவர்களின் கடமையாக இருந்திருக்க வேண்டும். மாறாக, பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதுவும் நடுநிலையாளரின் அனுசரணையோடு செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து இறுதிவரை வெளிவராமல் அமைதி காத்த தரப்பை அழுத்தி, ஒட்டுமொத்தச் சரணாகதியூடாக விடுதலைப்போராட்டத்தையே மழுங்கடிக்கும் பணியாக இருந்திருக்கக் கூடாது. வருந்தத்தக்க முறையில் எரிக்சொல்கெய்மும் நடுநிலையாளர்களும் ஈழப்போராட்டத்தை ஒட்டுமொத்த அழிவுக்குக் கொண்டுசெல்லும் முனைப்போடு செயற்பட்டது மட்டுமன்றி, இன்று எமது தலைமைமீதே பழியைச் சுமத்தி தமது கைகளிலிருக்கும் இரத்தக்கறையை மறைக்க முற்படுகின்றார்கள். எமது அமைப்பின்மீதும் தலைமைமீதும் அபாண்டமான பழியைச் சுமத்துவதைக் கடுமையாகக் கண்டிப்பதோடு எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் இனியாவது மனச்சாட்சியுடன் நடந்துகொள்ளுமாறு தொடர்புடையவர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

மட்டக்களப்பில் தமிழ் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த அவலம்!

மட்டக்களப்பில் தமிழரான காவற்றுறை அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் புகுந்த பிக்கு ஒருவர், அவ் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் வீட்டையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மட்டக்களப்பு - மங்கலராமய விகாரைக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது, மட்டக்களப்பு நகரில் உள்ள மங்கலராமய விகாரைக்கு அருகில் தமிழ் மொழி பேசும் காவற்றுறை அதிகாரி ஒருவர் குடியிருந்து வருகிறார். குறித்த அதிகாரியும் அவரது மனைவியும் காவற்றுறை உப பரிசோதகராகக் கடமையாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மங்கலராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல தேரர், குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டின் மதில்களை அகற்றக்கோரியும் வீட்டை உடைக்ககோரியும் பல்வேறு தடவைகள் வீட்டின் மீது தாக்குதலும் நடத்தியுள்ளார். இந் நிலையில் நேற்று மாலை பிக்குவின் தலைமையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்ற சுமார் 06 பேர் கொண்ட குழுவினர் காவற்றுறை அதிகாரி வீட்டின் மதில், குளியல் அறை மற்றும் சமையலறைப் பகுதிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் குடும்பத்தினரையும் தாக்கமுற்பட்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த அதிகாரி, காவற்றுறையினரின் அவசர சேவைப்பிரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆயினும் காவற்றுறையினர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் உடனடியாக அருகில் உள்ள மட்டக்களப்பு காவற்றுறையினரிடம் சென்று முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு குறித்த அதிகாரி கோரியுள்ளார். எனினும் உயரதிகாரி இல்லையென குறித்த முறைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் தனது முயற்சியைக் கைவிடாத, அந்த அதிகாரி மட்டக்களப்பு மாவட்ட காவற்றுறை மா அதிபரின் வீட்டுக்கு சென்று முறையிடச் சென்றவேளை, அங்கு கடமையில் இருந்த காவற்றுறையினர் குறித்த அதிகாரி இல்லையென கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நீதவானிடம் சென்று தனது நிலைமை தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், குறித்த காவற்றுறை அதிகாரி பாதுகாப்பு கருதி வேறு இடத்துக்கு செல்ல தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் நாடுகளில் புலிகளின் நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை என்கிறார் கோத்தபாய!

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் புலிகளின் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்க அரசு நடவடிக்கைஇலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் மனிதக் கடத்தல்கள் என்பவற்றில் ஈடுபட்டுவரும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் புலிகளின் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு லக்ஷ்மண் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்ற இளம் தலைவர்கள் சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். '2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். இதன் ஒரு கட்டமாக புலிகளுடன் பல சுற்றுப் பேச்சுகளும் இடம்பெற்றன. ஆயினும் இந்தப் பேச்சு வார்த்தைகளின்போது எட்டப்பட்ட உடன்படிக்கைகளை மீறி மக்களுக்கு எதிரான தாக்குதல்களில் புலிகள் ஈடுபட்டனர். ஆயினும் பலமான தலைமைத்துவம், மக்களின் ஆதரவு, சிறந்த திட்டமிடல் வெளிநாடுகளில் பெற்றுக் கொண்ட பயிற்சி என்பவற்றின் மூலம், மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டு புலிகளை இல்லாதொழித்தோம். இதன் போது இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களின் நல்வாழ்வில் அக்கறை செலுத்திய அரசு, அனைவரையும் தற்போது மீள்குடியமர்த்திவிட்டது. படையினரிடம் சரணடைந்த புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இறுதிப் போரின் போது தப்பிச் சென்ற சில புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்து புலம்பெயர் மக்களைத் தவறான வழியில் தூண்டி விடுகின்றனர். குறிப்பாக இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மனிதக் கடத்தல்கள் என்பவற்றின் பின்னணியில் உள்ள இந்தப் புலி உறுப்பினர்களின் செயற்பாடுகளைத் தடுக்க அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

28 அக்டோபர் 2012

கனடாவில் பாரிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது!

கனடாவின் மேற்கு கடலோரப் பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கனடாவின் மேற்கு கடலோரப் பகுதியில் மாஸ்ஸெட் நகரில் இருந்து 139 கிலோ மீட்டர் தொலைவை மையமாகக் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.7 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுவித்திருக்கிறது. இதுவரை சேத விவரம் எதுவும் தெரியவில்லை.

ஆனந்தபுரத்தில் குண்டு வெடித்து சிறுமி பலி!

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆனந்தபுரம் என்னுமிடத்தில் குண்டொன்று வெடித்ததில் பத்து வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். ஆனந்தபுரம் 5 ஆம் வட்டாரத்தில் உள்ள பச்சை புல்மோட்டை என்னுமிடத்தில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றிருப்பதாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர். இந்தப் பகுதியில் மீள்குடியேறியுள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரன் தனது காணியில் மண்டிக்கிடந்த புல்லை வெட்டிச் சுத்தம் செய்வதில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காகச் சென்ற அவரது சகோதரியாகிய ஜோசப் நிக்கலஸ் நிஷாந்தினி என்ற சிறுமியே இந்த வெடிப்புச் சம்பவத்தில் சிக்கியுள்ளார். படுகாயமடைந்து முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது அவர் மரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வெடிப்புச் சம்பவத்தின்போது வீட்டில் சமையலில் ஈடுபட்டிருந்த 28 வயதான அவரது மற்றுமொரு சகோதரி, சிதறிச் சென்ற குண்டின் பாகம் ஒன்று தாக்கியதில் காயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அயலவரான பெண் ஒருவர் தெரிவித்தார். வெடிப்புச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர், உயிரிழந்த சிறுமி மண்ணில் கொத்திய அடையாளத்துடன் கிடந்த கத்தி ஒன்றைக் கண்டெடுத்துள்ளதுடன், இந்தக் கத்தியினால் பொருள் ஒன்றை கொத்தியபோதே குறித்த குண்டு வெடித்திருக்க வேண்டும் என்று ஊகம் தெரிவித்திருப்பதாக அயலவர்கள் கூறுகின்றனர். புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள பல கிராமங்களில் பற்றைகள் மற்றும் புற்களை வெட்டிச் சுத்தம் செய்யும்போது பொது மக்களால் கண்டெடுக்கப்படுகின்ற பல வகையான வெடிப்பொருட்களை இராணுவத்தினர் அகற்றிச் செல்வதாகவும், இதனால் தமது வாழ்க்கை ஆபத்து மிக்கதாக இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் கூறி வருகின்றனர். ஒரு சிறுமியை பலிகொண்டுள்ள இந்தச் சம்பவம் வெடிப்பொருட்கள் தொடர்பான மக்களின் அச்ச உணர்வை மேலும் அதிகரித்திருப்பதாக அந்தப் பிரதேச மக்கள் கூறினர்.

இலங்கை கப்பல்களை தடுத்து நிறுத்தியது அமெரிக்கா!

ஈரானில் இருந்து மசகு எண்ணெய்யை தருவிப்பதற்காக இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்கள் ஈரானின் கடல் எல்லையில் வைத்து அமெரிக்க கப்பல்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து அந்தக் கப்பல்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அமெரிக்கா பச்சை விளக்கை காட்டும் வரை இலங்கையால் ஈரானிடம் இருந்து எவ்வித மசகு எண்ணெய் கொள்வனவையும் மேற்கொள்ளமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் தமது ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரவில்லை. எனினும் அமெரிக்க தடை காரணமாக, இலங்கையை சிறிய கப்பல்களை அனுப்புமாறு ஈரான் கோரியது. அதற்கமைய கப்பல்களும் அனுப்பப்பட்டன. எனினும் ஈரான் செல்லும் கப்பல்களுக்கு காப்புறுதியை வழங்க காப்புறுதி நிறுவனங்கள் முன்வர மறுக்கின்றன. இதன் காரணமாக ஈரானுடன் வங்கி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாதுள்ளது என்றும் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

27 அக்டோபர் 2012

புகலிட கோரிக்கையாளர்கள் 14 பேர் திருப்பியனுப்பப்பட்டனர்!

புகலிட கோரிக்கையாளர்கள் 14 பேரை அவுஸ்திரேலியா திருப்பியனுப்பியுள்ளது என அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. தங்காலை - குடாவெல்ல பகுதியில் மீன்பிடி படகை கடத்திய நபர்களுக்கே புகலிடம் மறுக்கப்பட்டு மீண்டும் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். குறித்த 14 பேரும் மீனவர்கள் சிலரை நடுகடலில் வைத்து கொலை செய்துவிட்டு அவர்களின் படகை கடத்தி; சென்றதாகக் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. படகு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலியாவிற்கு அறிவித்திருந்தது. இதன்பிரகாரமே படகு மூலம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோர முற்பட்டவர்களை அந்நாட்டு குடிவரவு குடியழகழ்வுத் திணைக்களம் நாடு கடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதியில் வைத்தே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகை கடத்திய குறித்த 14 புகலிடக் கோரிக்கையாளர்களும் கொகோஸ் தீவுகளிலிருந்து விசேட விமானம் மூலம்; நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். குறித்த படகு கடந்த 13ம் திகதி கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இனப்பிரச்சனைக்கான தீர்வை அரசுதான் இழுத்தடிக்கின்றது.

13 ஆவது திருத்தச் சட்டத்தையே இல்லாதொழிக்குமாறு கடும் போக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் நியாயமான தீர்வு கிடைப்பதனை ஜனாதிபதி உறுதிப்படுத்தாத நிலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு தெரிவுக்குழுவில் இணையமுடியும் எனவும் தீர்வை இழுத்தடிப்பது அரசே ஒழிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்ல எனவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்காமல் காலம் கடத்தும்  செயற்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே பொறுப்பு என அரச தரப்பு தெரிவித்து வரும் கருத்து தொடர்பாகவே புளொட் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்று அரசில் அங்கம் வகிக்கும் கடும் போக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இந்தக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் நிலையில் நியாயமான தீர்வு எவ்வாறு கிடைக்கும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியாயமான தீர்வு திட்டம் எதையும்  இதுவரையில் முன்வைக்கவில்லை.இவ்வாறானதொரு நிலைமையில் தெரிவுக்குழுவில் எவ்வாறு இணையமுடியும். வெளிச்சமூகத்தினால் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தையே முழுமையாக நடைமுறைப்படுத்தாத இலங்கை அரசு, எவ்வாறு தான் முன்வைக்கும் தீர்வில் தமிழர் நலன்சார் விடயங்களை முன்வைக்கும் எனவும் சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிம்களின் மத்ரஸா அநுராதபுரத்தில் தீக்கிரை!

அனுராதபுரம், மல்வத்தை சிங்கனுவ பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம்களின் மத்ரஸா ஒன்று இன்று அதிகாலை எரிச்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத குழு ஒன்றே இதனைச் செய்ததாகத் தெரிவிக்கும் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளார்கள். முஸ்லிம் மக்கள் இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த மதரசா எரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 20:20 அடி பரப்பைக்கொண்ட இந்த மத்ரஸா தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அனுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளையும் மற்றும் அறநெறி வகுப்புகளையும் நடத்தி வந்த தற்காலிக கற்கை நிலையமொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமயகம் உறுதி செய்துள்ளது. இத் தீவிபத்து சம்பவத்தினால், ஹாட்போட் மட்டைகளால் மறைக்கப்பட்ட நிலையில் இயங்கி வந்த மேற்படி கற்கை நிலையம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். இச்சம்பவம் அநுராதபுரத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

26 அக்டோபர் 2012

பாம்புகளுடனும் கண்ணிவெடிகளுக்கிடையிலும் வாழும் மீள் குடியேற்றப்பட்ட மக்கள்!

இலங்கையில் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்து, இறுதியாக தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் பாம்புகள், வெடிப்பொருட்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருதாகக் கூறுகின்றார்கள். மிகமோசமான சண்டைகள் நடைபெற்ற புதுக்குடியிருப்பு நகரப் பகுதியிலும், கிராமங்களிலும் உள்ள பல வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. பாம்புத் தொல்லை: கிராமங்களில் அழிந்து கிடக்கின்ற வீடுகள் கட்டிடங்களின் இடிபாடுகள், காணிகளில் படர்ந்துள்ள பற்றைகள், காடுகள் என்பவற்றில் பாம்புகள் நிறைந்திருப்பதாக மீள்குடியேறியுள்ளவர்கள் கூறுகின்றார்கள். மோசமான ஒரு வறட்சியின் பின்னர் மழை பெய்யத் தொடங்கியிருப்பதை அடுத்து பாம்புத் தொல்லை அதிகரித்துள்ளது, அதேவேளை, பற்றைகள், புல் வளர்ந்துள்ள இடங்கள், காடாகக் கிடக்கின்ற காணிகளில் கண்ணிவெடிகள் மற்றும் பலதரப்பட்ட வெடிப்பொருட்கள் என்பன அகற்றப்படாமல் கிடப்பதனால், காணிகளில் நடமாடுவது ஆபத்தானதாக இருக்கிறது என்றும் அவர்கள் கவலைப்படுகின்றார்கள். மிதிவெடிகள்: கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்பே, இந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், கண்ணிவெடிகள் காணிகளில் முழுமையாக அகற்றப்படவில்லை என்று மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். தங்கள் காணிகளில் தாங்கள் பற்றைகள், காடுகளை அழித்துச் சுத்தம் செய்யும்பொது வெடிப்பொருட்கள் காணப்படுவதாகவும், இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக அங்கு விரைந்து வருகின்ற இராணுவத்தினர் அவற்றை எடுத்துச்செல்வதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள். இந்தக் கண்ணிவெடி ஆபத்து குறித்து கருத்து வெளியிட்ட எஃப்.எஸ்.டி என்ற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் ஹார்ட்நட் தொம்ஸ், இங்கு ஒவ்வொரு சதுர மீட்டர் நிலமும் ஆய்வு செய்யப்பட்டு, கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்றும், வீடுகள், கிணறுகளின் உட்பக்கங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமே கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருப்பதாகக் கூறினார். இடம்பெயர்ந்துள்ள மக்களை குறிப்பிட்ட திகதிக்குள் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கண்ணிவெடிகளை அகற்றி குறிப்பிட்ட பிரதேசங்களை ஒப்படைக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்கள் கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுக்கு கொடுக்கின்ற அழுத்தம் காரணமாகவே இவ்வாறு தாங்கள் கண்ணிவெடி அகற்றுவதாக அவர் குறிப்பிட்டார். "கண்ணிவெடி அகற்றியவர்களினால் கண்டுபிடித்து அகற்றப்படாத கண்ணிவெடிகள் வெடிப்பொருட்கள் தமது காணிகளில் இருக்கின்றன, அதனால் அங்கு வெடிப்பொருள் ஆபத்து இருக்கின்றது என்று மீள்குடியேறியுள்ள ஒவ்வொருவரும் நன்கு அறிவார்கள். அதேவேளை, தமது நிறுவனம் கண்ணிவெடி அகற்றிய புதுக்குடியிருப்பு மேற்கு, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் கண்ணிவெடி அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை" என்று ஹார்டநட் தொம்ஸ் தெரிவித்தார். இருந்தபோதிலும், மீள் குடியேற்றப்பட்டுள்ள பகுதிகளிலும் கண்ணிவெடி அகற்ற வேண்டியிருக்கின்றது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

(செய்தி ஆதாரம் பி.பி.சி)

25 அக்டோபர் 2012

கிளிநொச்சியில் மேலும் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் படைகள்!

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் சுமார் 21 காணித்துண்டுகளை இராணுவத் தேவைகளுக்கு வழங்குமாறு கோரப்பட்டு கரைச்சிப் பிரதேச செலயகத்துக்கு இராணுவத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனைவிழுந்தான்குளம், வன்னேரிக்குளம், ஸ்கந்தபுரம், இரத்தினபுரம், திருவையாறு, கணேசபுரம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள், மற்றும் பிரதேச சபை ஆகியவற்றுக்கு சொந்தமான சுமார் பதினேழு காணித்துண்டுகள் தற்போது இராணுவத்தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றதுடன் அவற்றை தமக்கு வழங்குமாறும் விண்ணப்பித்துள்ளனர். அதற்கு மேலதிகமாக 4 காணித் துண்டுகளையும் தமக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இராணுவத்தினரால் விண்ணப்பிக்கப்பட்ட காணித்துண்டுகளை வழங்குவதற்கு சில அரச அதிகாரிகள் விருப்பம் தெரிவிப்பது மட்டுல்லாமல், அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா.சட்டங்களுக்கு முரணான மீள்குடியேற்றம்!

ஐக்கிய நாடுகளின் விதிகளுக்கு முரணாக இலங்கையில் தமிழ் மக்கள் வற்புறுத்தப்பட்டு மீழ் குடியேறம் செய்யப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உள்ளக இடம்பெயர்ந்தோர்க்கான இயக்குனர் கூறியுள்ளார். அடுத்த மாதம் அளவில் இலங்கை வரவுள்ள அவர், இலங்கையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களின் சொந்த இடங்களில் அல்லாது பிற இடங்களில் மீழ் குடியேற்ற செய்யப்பட்ட மக்களையும் பார்வையிடுவார் என அறிய முடிகின்றது.

தமிழருடன் பேச சிங்கள எம்பிக்கள் ஐரோப்பா விஜயமாம்!

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ளனராம். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர் வசந்த சேனாநாயக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  ஹரீன் பெர்னாண்டோ ஆகியோரே  ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ளவர்களாம்.புலம் பெயர் தமிழர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் புலம்பெயர் தமிழர்களை இணைத்துக் கொள்வதற்கும், முரண்பாடுகளை களைவதற்கும் இந்த விஜயம் வழிகோலும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.இந்த விஜயத்தின் இறுதியில் பரிந்துரை அறிக்கையொன்று அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.இதேவேளை உலகத்தமிழர் பேரவை சிறீலங்கா அரசுடன் எவ்வித பேச்சுக்களிலும் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

24 அக்டோபர் 2012

முதலமைச்சர் வேட்பாளர் டக்ளஸா கேப்பியா?அரசுக்குள் முரண்பாடு!

வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்குள் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆலோசகர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை வடமாகாணத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டுமென அரசின் முக்கியமான சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனராம் அதேசமயம், ஈ.பி.டி.பி. தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை முதலமைச்சர் வேட்பாளராக ஆளுங்கட்சி நியமிக்க வேண்டுமென மற்றுமொரு சாரார் வலியுறுத்திவருகின்றனராம்,இந்த இருவரும் மாகாணசபைத் தேர்தலைக் குறிவைத்து காய்களை நகர்த்திவருவதால் ஆளுங்கட்சிக்குள் இது விடயத்தில் கடும் பனிப்போர் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் களத்தில் இறங்கும் முதற்கட்ட வேலையாகவே கடந்த வாரம் முதல் கே.பி. மக்களுடன் நெருங்கும் நடவடிக்கைகளில் இறங்கிவருவதாக அரசாங்கத்தின் உயர் மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணி காரணமாகவே, கே.பி. எதுவித குற்றமுமற்றவர் என அரசின் முக்கிய பிரமுகர்கள் தெரிவிக்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.எது எப்படியோ தமிழ் மக்களை பொறுத்தளவில் இவர்கள் எவரையும் தமது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதே உண்மை.

பிரித்தானியாவிலிருந்து 48இலங்கையர் திருப்பி அனுப்பப்பட்டனர்!

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை சென்றடைந்தனர். தமிழர்கள் சிங்களவர்கள் உட்பட சுமார் 48 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக 60 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படவிருப்பதாக பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நாடு திரும்பிய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலர் சட்டத்தரணிகள் ஊடாக விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இறுதி நேரத்தில் இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை ரத்து செய்ததாக பிரித்தானியாவின் முன்னணி ஊடகமொன்று தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

23 அக்டோபர் 2012

இளையராஜாவின் இசை நிகழ்வை புறக்கணிக்குமாறு கனடா தமிழர்கள் வேண்டுகோள்!

கனடாவில் இடம்பெறவுள்ள இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு கனேடிய தமிழர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கனடா தமிழர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’எங்களின் தொப்புள் கொடி உறவான கலைஞர்களே! தயவுகூர்ந்து ஈழத் தமிழர்களின் வெந்த புண்ணிலே வேலைப் பாச்சாதீர்கள். நாங்கள் இழந்தது ஒன்று இரண்டல்ல. 40,000-க்கும் மேற்பட்ட மாவீரர்களையும், பல இலட்சக்கணக்கான எங்களின் சொந்தங்களையும், மண்ணையும் இழந்து உலகப்பந்தெங்கும் ஏதிலிகளாக அலைகின்றோம். எமக்கு இன்னும் நீதியோ, அரசியல் உரிமையோ கிடைக்கவில்லை. நாங்கள் அழுது புரண்டு ஆற்று வதற்காக எங்களின் தலைவன் பிரபாகரனால் குறிக்கப்பட்ட மாதந்தான் இந்த நவம்பர் மாதம். இந்த மாதத்திலாவது அழுவதற்குக்கூட சிங்களவன் விடுவதாயில்லை. ஈழத்திலே இருக்கும் அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையெல்லாம் இருக்கும் இடந்தெரியாமல் அழித்து விட்டான். ஈழத் தமிழனுக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள்தான். இவர்களின் பலத்தைச் சிதைப்பதற்காக பல மில்லியன் கணக்கில் பணத்தை இனத் துரோகிகளின் கையில் வாரி இறைத்து மாவீரர்களின் விழாவைக் குழப்புவதற்காக சென்ற ஆண்டிலிருந்து மிகவும் வேகமாகச் செயற்பட்டுக் கொண்டு வருகின்றான். எங்களுக்கு இசைஞானி இளையராசா மேல் எந்தவொரு வெறுப்புமில்லை. மாவீரர்களுக்குரிய நவம்பரில் மாத்திரம் எந்தவெரு ஆடம்பரமும் வேண்டாமென்பதுதான் கனடியத் தமிழர்களின் வேண்டுகோள். கனடாவிலுள்ள தமிழ் மக்களின் எதிர்ப்பினால் இவர்கள் எதிர்பார்த்த மாதிரி நுளைவுச் சீட்டுகள் விற்பனையாகாமையினால், ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள். இதிலிருந்து என்ன தெரிகின்றது. இவர்களுக்கு பணத்தைப் பற்றிக் கவலையில்லை. எல்லாவற்றிற்கும் பின்னால் சிங்கள அரசின் ஆதரவு இருக்கின்றது. எனவே, எங்களின் அன்பான கலைஞர்களே இழந்து போன எங்களின் மாவீரர் பேரிலும், இசைப் பிரியா போன்ற ஈழக் கலைஞர்களின் பேரிலும் உங்களிடம் மன்றாட்டமாகக் கேட்கின்றோம், நவம்பர் 3-ல் கனடாவில் நடைபெறும் இளையராசாவின் இசை விழாவைப் புறக்கணிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்’’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழினியின் துயரம் நீங்கிவிட்டது - ஆயினும் இன்னமும் எத்தனை எத்தனை தமிழ் உறவுகள் இப்படி இருக்கிறார்களோ!

News Serviceதந்தையை யுத்தத்தால் இழந்து ,தாயாரை வறுமை காரணமாக பிரிந்து அம்மம்மா மற்றும் சிறியதாயாருடன் கிளிநொச்சியில் வசிக்கின்ற இந்த தமிழினி , தங்கை தமிழ் நிலா ( இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் ) அவர்களை லண்டனில் வசிக்கும் ஒரு கருணை உள்ளம் கொண்ட தொழில் அதிபர் சமூக சேவை ஆவலர் ஒருவர் பொறுப்பு எடுத்துள்ளார். (வலம் கொடுப்பதை இடம் அறியக்கூடாது என்பது போல அவர் தனது பெயரை கூறி விளம்பரப்படுத்த விருப்பமில்லை) இவர் இந்த குடும்பத்திற்கான முழு பொறுப்பையும் எடுத்து தானாக மனமுவந்து உதவிகளை தொடங்கி விட்டார். இந்த தொடர்பினை கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின்[KILIPEOPLE.ORG-UK] ( கிளிநொச்சியில் உள்ள தொண்டர்கள் IBC நேரலை ஊடாக நேரடியாக ஒழுங்கமைத்து கொடுத்தார்கள் என்பது யாவரும் அறிந்ததே. ஆதலால் இந்த தமிழினியின் துயரம் நீங்கிவிட்டது ஆயினும் இன்னமும் எத்தனை எத்தனை தமிழ் உறவுகள் இப்படி இருக்கிறார்களோ தெரியவில்லை, கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பிடம் தினமும் இப்படியான உதவி கோரல்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன நாமும் எம்மாலான வற்றை முன்னுரிமை அடிப்படையில் செய்து வருகின்றோம். கருணை உள்ளம் கொண்டவர்கள் எம்மிடம் அணுகினால் இந்த தமிழினி குடும்பத்தை போல நிறைய குடும்பங்களை உங்களுடன் நேரடியாக தொடர்பு படுத்திவிடுவோம். இப்படியான உதவிகள் தேவைபடுபவர்கள் மனம் திறந்து உரிமையுடன் எம்மிடம் அணுகுங்கள் . கேளுங்கள் தரப்படும் , தட்டுங்கள் திறக்கப்படும் ,தேடுங்கள் கிடைக்கும் என்கிறார்கள் இந்த கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினர்(KILIPEOPLE.ORG- UK) மேலதிக தொடர்புகளுக்கு: kilipeople2011@gmail.com / /07979767485/07536436916/ 07957122472.

வன்னியில் ஐ.நா மேற்கொண்ட பணிகள் குறித்த அறிக்கை மறைக்கப்பட்டுவிட்டதா?

சிறிலங்கா அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான போரின் போது மேற் கொள்ளப்பட்ட ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக, ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அறிக்கையை ஐ.நா மறைத்துவிட்டதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் என்ற உயர் அதிகாரியை நியமித்து, கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் பணி ஆணை வழங்கிய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நான்கு மாதங்களில் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தார். எனினும், தொராயா, தனிப்பட்ட காரணங்களுக்காக அந்தப் பணியை செய்ய முடியாதுள்ளதாக அறிவித்ததை அடுத்து, சார்ள்ஸ் பெற்றி என்ற அதிகாரி குறித்த பணிக்கு நியமிக்கப்பட்டார். அவரும், குறிக்கப்பட்ட கால எல்லையைக் கடந்து, 9 மாதங்களாகியும் அறிக்கை இன்னமும் வெளியிடப்படாதுள்ளது. "இலங்கை இறுதிப் போரின்போது, ஐ.நா மேற்கொண்ட பணிகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, சார்ள்ஸ் பெற்றி நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்" என ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸர்க்கி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், குறித்த அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது என இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது. இன்னமும் இந்த அறிக்கை வெளியிடப்படாதுள்ள நிலையில், அது மறைக்கப்பட்டு விட்டதா? எனவும் அது கேள்வியெழுப்பியுள்ளது. இதனிடையே, இந்த அறிக்கையைத் தயார் செய்ய நியமிக்கப்பட்ட சார்ள்ஸ் பெற்றி ஐ.நாவின் விதிமுறைகளுக்கு முரணாக, ஒரே நேரத்தில் இரண்டு பணிகளை மேற்கொண்டதாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

22 அக்டோபர் 2012

டில்லிக்கு கோத்தா அவசரமாக விரைவு; 13ஆவது திருத்தம், கே.பி. விவகாரம் பற்றியும் ஆராய்வு!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பரபரப்புக் கருத்தை வெளியிட்டிருந்த சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவசர பயணமொன்றை மேற்கொண்டு இந்தவார நடுப்பகுதியில் இந்தியா செல்லவுள்ளார். புதுடில்லியில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் கோத்தபாய முக்கிய பேச்சு களை நடத்துவாரென்று உயர்மட்ட அரச வட்டாரங்கள் நேற்றிரவு உதயனிடம் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் அரசியல் தீர்வு மற்றும் வடபகுதியில் இராணுவப் பிரசன்னம் உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விளக்கமளித்திருந்தார். இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இந்தியப் பிரதமர் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அந்தப் பேச்சுக்களின் தொடர்ச்சியாகவே பாதுகாப்புச் செயலரின் இந்தப் பயணம் இடம்பெறுவதாகத் தெரிகிறது. 13ஆவது திருத்தத்தினை ரத்துச் செய்வது தொடர்பில் இலங்கையில் ஏற்பட்டுள்ள வாதப்பிரதிவாதங்கள், புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆலோசகரை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்தான இந்திய மத்திய அரசின் கோரிக்கை, வடபகுதியில் இராணுவப் பிரசன்னத்தை குறைப்பது போன்ற விடயங்களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்புச் செயலாளருடன் ஆராய்வார் என்று உயர்மட்ட இந்திய இராஜதந்திரியொருவர் தெரிவித்தார்.எதிர்வரும் புதன்கிழமையளவில் கோத்தபாய இந்தியா செல்வாரென தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச சுயாதீன விசாரணை என்ற நிலைப்பாட்டிலிருந்து புலம் பெயர் சமூகம் மாறுபடாது.

News Serviceஇலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப் போவதில்லை என உலகத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது. தேசிய இனப்பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேசப் போவதில்லை என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென அரசாங்கம் மெய்யாகவே விரும்பினால், முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென விரும்பினால், மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலகுவில் தீர்வினை எட்ட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடக்க உள்ள நிலையில் இதுவரையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் யதார்த்தமான முனைப்புக்களை அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை என்ற நிலைப்பாட்டிலிருந்து புலம் பெயர் சமூகம் மாறுபடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குமரன் பத்மநாதன் வடக்கு கிழக்கில் மனிதாபிமான தொண்டுகளை மேற்கொண்டு வருவதில் தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களுக்கு எவரேனும் உதவிகளை வழங்கினால் அதனை விமர்சனம் செய்யும் அவசியம் கிடையாது என சுரேன் சுரேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

21 அக்டோபர் 2012

ஜனநாயக மக்கள் முன்னணியின் பதவி நிலைகள் மற்றும் புதிய நிர்வாகிகள்.

கடந்த வெள்ளிக்கிழமை கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற அரசியல்குழு கூட்டத்தில் புதிய பதவிகளுக்கான தெரிவுகளும், நடப்பு பதவி நிலைகளும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டன. அதன்படி ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய மட்ட நிர்வாகிகளாக பின்வருவோர் கடமையாற்றுவார்கள். தலைவர் மற்றும் பொதுசெயலாளர் மனோ கணேசன், பிரதி தலைவர் நல்லையா குமரகுருபரன், தேசிய அமைப்பாளர் எஸ். ராஜேந்திரன், சிரேஷ்ட உப தலைவர் வேலணை வேணியன், தவிசாளர் பி. ஜெயபாலன், உப தலைவர் முரளி ரகுநாதன், உப தவிசாளர் முரளி வேலாயுதன், நிதி செயலாளர் கே. கணேசன், நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன, உதவி பொது செயலாளர் எஸ். குகவரதன், ஊடக செயலாளர் எஸ். பாஸ்கரா, பிரச்சார செயலாளர் கே.டி. குருசாமி, தலைமையக செயலாளர் லோரன்ஸ் பெர்னாண்டோ, உதவி நிர்வாக செயலாளர் வேலு குமார், உதவி பிரச்சார செயலாளர் ஏ. கே. ராஜ்குமார், உதவி தலைமையக செயலாளர் எம். நாகலிங்கம் ராஜா, சமூக நலவுரிமை விவகார குழு தலைவர் ஜெரோம் விக்னேஸ்வரன்-உப தலைவர் பிரதீப் ராஜகுமாரன், வாக்குரிமை விவகார குழு தலைவர் த. மனோகரன், கல்வி விவகார குழு தலைவர் லயன் எஸ்.மனோகரன்-உப தலைவி எஸ். மஞ்சுளா, மகளிர் விவகார குழு தலைவி நந்தினி விஜயரத்தினம், இளைஞர் விவகார குழு தலைவர் எம். நவாஸ், கலாச்சார விவகார குழு தலைவர் கே. செந்தில்குமார், இடர் நிவாரண குழு தலைவர் வேலணை வேணியன்-உப தலைவர் எஸ். பாஸ்கரா.
-ஜனநாயக மக்கள் முன்னணி-

அவுஸ்ரேலியா சென்ற அகதிகள் கடற் கொள்ளையர்களாக மாறினராம்!

அவுஸ்ரேலியா சென்ற அகதிகள் கடற் கொள்ளையர்களாக மாறினர் , என அவுஸ்ரேலிய தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி.

வடமாகாணசபையின் அரச முதலமைச்சர் வேட்பாளர் கே.பியாம்?

அடுத்த வருடம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதனை ஆளுங்கட்சி முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இதன் காரணமாக தற்போதிருந்தே அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டு கே.பிக்கு கிளிநொச்சியிலுள்ள தமிழ்ச்செல்வனின் வீட்டினை அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் அந்தச் செய்திகள் கூறுகின்றன. தமிழ்ச் செல்வனின் இந்த வீட்டிலிருந்தே கே.பி தனது வடமாகாண அரசியல் மற்றும் வடக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை முனெடுக்கவுள்ளார் என்றும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

20 அக்டோபர் 2012

கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ள இலங்கையர்கள்!


12இலங்கையர்கள் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களுக்காக நிதி திரட்டியவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளனர். உலகத் தமிழர் அமைப்பில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளனர். கனேடிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு திணைக்களத்துடன் ஆலோசனை நடத்தியதன் பின்னர் குறித்த இலங்கையர்களை நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரிட்ஷ் கொலம்பியா, ஒன்டாரியோ, கியூபிக் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரச்சாரம் செய்தமை மற்றும் நிதி திரட்டிய குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு;ள்ளனர். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகளின் சிரேஸ்ட தலைவர்களுடன் கைது செய்யப்பட்டவர்கள் நெருங்கிய தொடர்புகளைப் பேணியிருக்கக் கூடும் என கனேடிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

புலம்பெயர் தமிழருடன் பேசப்போகிறதாம் சிறீலங்கா!

புலம்பெயர் தமிழ் மக்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகிறது. மிக நீண்ட காலமாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம், புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். திட்டமிட்டவாறு புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டால் வெகு விரைவில் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மிக நீண்ட காலமாக நிலவி வரும் நம்பிக்கையின்மையை களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்கள் உருவாவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் இன்னும் ஒரு தசாப்த காலத்தில் மீண்டும் யுத்தம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

19 அக்டோபர் 2012

டக்ளஸ் ஆஜராகித்தான் ஆக வேண்டும்!

சென்னை இளைஞரை சுட்டுக் கொன்ற வழக்கில் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்ய கோரி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துவிட்டது.
வழக்கு என்ன?
தமிழகத்தில் 1980களில் இலங்கை போராளிகள் அமைப்பினர் சுதந்திரமாக நடமாடி வந்தனர். அப்போது தகராறு ஒன்றில் 1986ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியன்று சென்னை சூளைமேட்டில் அப்பாவியான திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவரை சுட்டது டக்ளஸ் தேவானந்தா என்பதால் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனால் டக்ளஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகினர். பிடிவாரண்ட்- தேடப்படும் குற்றவாளி
இந்த நிலையில் அரசியல் மாற்றங்களால் டக்ளஸ் தேவானந்தா இலங்கைக்குப் போய்விட்டார். ஆனால் இந்த வழக்கின் விசாரணையில் அவர் ஆஜராகவில்லை. இதனால் 1990-ம் ஆண்டு சென்னை அமர்வு நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்தது. அத்துடன் 1994-ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டார்.
மீண்டும் சூடுபிடித்த வழக்கு
இதனிடையே தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அப்போது தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருக்கும் பிடிவாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் டக்ளஸ் கோரியிருந்தார்.
மனு தள்ளுபடி
இம்மனு மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் டக்ளஸ் தேவானந்தா மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அவர் வழக்கில் ஆஜராகாமல் இருந்து வருகிறார். ஆகவே, அவர் இந்த நீதிமன்றத்தில் முதலில் ஆஜராக வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த சூழலில் பிடியாணையை ரத்து செய்து, தன்னிடம் விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று கூறினார்.

படையினரை கொன்றதாக குற்றப்பத்திரிகை தாக்கல்!

வில்பத்து வனத்தின் கொட்டகச்சி என்ற பிரதேசத்தில் சாலியபுர இராணுவ முகாமில் கட்டளை அதிகாரி  லெப்டினட் கேர்ணல் ஜயந்த சுரவீர உட்பட 4 இராணுவத்தினரை கைக்குண்டு வீசி தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்த இரண்டு விடுதலைப்புலிகள்  சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் நேற்று வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்நாயக்க முன்னிலையில், புலிகளின் முக்கிய உறுப்பினர்களான எஸ்.ஜே. என்ற உதயன், ஐயன் அல்லது சிவலிங்கம் என அழைக்கப்படும் சிவபிரகாஷ் ஆகியோருக்கு எதிராகவே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இவர்களுக்கு  எதிராக 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதுடன், தாம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பாளிகள் அல்ல என சந்தேக நபர்கள் தெரிவித்தனர். 2007 மார்ச் 09 திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில், வில்பத்து தேசிய வன பகுதியில் கடமையின் நிமித்தம் ஜீப் வண்டி ஒன்றில் சென்று கொண்டிருந்த லெப்டினட் கேர்ணல் ஜயந்த சுரவீர, மேஜர் விஜேரத்ன, இராணுவப் சிப்பாய்களான கபில குமார, சுரங்க ஆகியோர் கொட்டக்கச்சி பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி கசுன் பொன்னப்பெரு ஆஜராகியிருந்தார். மேற்படி சந்தேக நபர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

18 அக்டோபர் 2012

கடற்படையினர் மாதகலிலிருந்து 20ஆம் திகதி வெளியேறுவர்: மு.சந்திரகுமார்

மாதகல் மேற்கு பிரதேசத்தில் அப்பகுதி மக்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் புதன்கிழமை தெரிவித்தார். குறித்த பகுதியை எதிர்வரும் 20ஆம் திகதி கடற்படையினரிடமிருந்து விடுவிப்பதாக உறுதியளித்துள்ள நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த 250 குடும்பங்கள் இரண்டு வாரங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். அப்பகுதியில் மீள்குடியேறும் மக்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு அமைவாக வீட்டுத்திட்டங்கள், வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தப் பிரதேசங்களுக்கான ஏனைய உட்கட்டுமாணம் மற்றும் வீதி, மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு அந்த பிரதேசங்களுக்கு அதிகாரிகள் குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டு தேவைகள் இனங்காணப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனக் குறிப்பிட்டார். அத்துடன் மாதகல் மேற்கில் வசித்த வந்த மக்கள் சொந்த வீடுகளில் மீள்குடியேற முடியாது தொடர்ந்தும் தடுக்கப்பட்டு வருவதாக் மாதகல் மேற்கு மக்கள் சார்பாக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு கோடி கையெழுத்து நடவடிக்கை.

தமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வை நிர்ணயிக்கும் சுயணிர்ணய உரிமையை வலியுறுத்தியும், சுயாதீன உலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் கையெளுத்து வேட்டை ஸ்காபரோ சிவிக் செண்டரில் வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 12 மாலை 5:30 ற்கு ஆரம்பமாகியது. தற்போது ஒரு கோடி கையெழுத்து நடவடிக்கை உலகம் முழுவதும் வியாபிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்கள் அவைகள் இதனை மக்கள் பணியாக கையேற்று செயற்படுத்துகின்றன. அன்பான உறவுகளே! பெருமளவு தமிழர் வாழும் கனடா நாட்டில் வாழும் நாம், அதிகூடிய கையெழுத்துகள் சேகரிக்கும் கடமையுடையவர்கள். எங்கள் மண்ணுக்காக உயிரைத் தியாகம் புரிந்தவர்களுக்கு நாம் செய்யவேண்டிய தலையாய பணி இது. உங்கள் கையெழுத்து, உங்கள் குடும்பத்தினர் கையெழுத்து, உங்கள் உறவினர் - அயலவர் - நண்பர்களின் கையெழுத்துகள் மட்டுமன்றி, இன மதங்களுக்கு அப்பாற்பட்டதாக உங்களுக்கு அறிமுகமான, உங்களுடன் பணிபுரிகின்ற ஒவ்வொருவரின் கையெழுத்தையும் இதற்காகப் பெறுங்கள் என்று உங்களை உரிமையுடன் கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகின்றது.

ஒன்று பத்தாகி; பத்துகள் நூறாகி; நூறுகள் ஆயிரமாகி ஆயிரங்கள் லட்சங்களாகி ஒரு கோடியாக எட்டட்டும்! !
தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை தொலைபேசி: 416-830-7703 மின்னஞ்சல்: info@ncctcanada.ca / இணையத்தளம்: www.ncctcanada.ca

17 அக்டோபர் 2012

பல்கலைக்கழக மாணவர்ளுக்கு மீண்டும் சர்ச்சைக்குரிய தலைமைத்துவ பயிற்சி?

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இம்முறையும் சர்ச்சைக்குரிய தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி பல்கலைக்கழக மாணவர்களுக்கான முதல் கட்ட தலைமைத்துவ பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது. மூன்று கட்டங்களாக மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதல் கட்டத்தில் ஒன்பதாயிரம் மாணவ, மாணவியருக்கு தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கடற்படை மற்றும் பொலிஸ் முகாம்களில் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் நாட்களில் எழக்கூடிய சட்டப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் நோக்கில் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்குவது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை அதிகளவான மாணவ மாணவியர் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படுவதனால் மூன்று கட்டமாக தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட உள்ளது.

சவுதியில் எஜமானை கொன்ற இலங்கையர்!

சவுதி அரேபியாவில் வாகன சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர், அவரது தொழில் தருணரை கொலை செய்துவிட்டு, தொழில் தருணரின் மனைவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள கோபார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொழில் தருணரையும், அவரது மனைவியையும் காரில் ஏற்றிச் சென்ற குறித்த சாரதி, கோபாரில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் வைத்து தொழில் தருணரை கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அவரது மனைவியை வன்புணர்வுக்கு உட்படுத்திவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த போது காவற்துறையினர் அவரை மீட்டுள்ளனர். கைதான இலங்கையருக்கு 50 வயது என்றும் கொலை செய்யப்பட்டவருக்கு 70 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தெரிவுக்குழு பொய்யானது; நிரூபித்தது கோத்தா கூற்று –ஐ.தே.க

“தீர்வு விடயத்தில் அரசின் உள்மனதில் இருக்கும் நிலைப்பாட்டையே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார். எனவே 13 ஆவது திருத்தத்தையே வழங்கத் தயாரில்லாத இந்த அரசை நம்பி கூட்டமைப்பும், நாமும் எந்த அடிப்படையில் தெரிவுக்குழுவுக்குச் செல்வது?” இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல. 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிக்கவேண்டும் என பாதுகாப்புச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், இது தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் மேலும் கூறியவை வருமாறு: 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வை முன்வைக்கத் தயார் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடமும், ஐ.நா.செயலாளரிடமும் அரசு உறுதியளித்துள்ளது. அத்துடன், 13 பிளஸ் என இந்தியாவிடமும் அது கூறியுள்ளது. ஆனால், அரச அதிகாரியான கோட்டாபய ராஜபக்ஷ 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும எனக் கூறுகின்றார். தமிழர் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு எதுவும் இல்லை என்பதையே அவரின் கூற்று பிரதிபலிக்கின்றது. தீர்வு விடயத்தில் அரசின் உள் மனதில் உள்ள நிலைப்பாட்டையே அவர் வெளிப்படுத்தியுள்ளார். அரச அதிகாரியாக இருந்துகொண்டு வரம்பு மீறி செயற்பட்டாலும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாத நிலைமையே நாட்டில் உள்ளது. ராஜபக்ஷ குடும்பம் என்ற அதிகாரம் அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றது. அதேவேளை, அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் எட்டப்படும் எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் பிரதான எதிர்க்கட்சியினராகிய நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் எனப் பகிரங்கமாகவே அறிவித்துள்ளோம். எனினும், தீர்வு விடயத்தில் காலத்தை இழுத்தடிப்பதற்கு அரசு தெரிவுக்குழு கைங்கரியத்தைக் கையாள்கின்றது. கோட்டாவின் கூற்று இதையே அம்பலப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. அத்துடன், தெரிவுக்குழுவின் நம்பகத்தன்மையும் இதன்மூலம் அற்றுள்ளது. எனவே, 13 ஆவது அரசமைப்பின் பிரகாரம் தீர்வை வழங்கவே தயாரில்லாத இந்த அரசை நம்பி நாம் எப்படித் தெரிவுக்குழுவுக்குச் செல்வது? கூட்டமைப்பும் எந்த அடிப்படையில் கலந்துகொள்ளும்? என்றார்.

16 அக்டோபர் 2012

அடிதடியில் இறங்கினார் விஜயகலா மகேஸ்வரன்!

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான பத்து பேர் கொண்ட குழுவினர் வர்த்தக நிறுவன உரிமையாளர் ஒருவரை தாக்கியுள்ளனர். கொழும்பு, புறக்கோட்டை சதாம் வீதியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள விமானசேவை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து அதன் உரிமையாளரை இந்த குழுவினர் கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன் வர்த்தக நிலையத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 12.00 கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு தரப்பினர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதன் உரிமையாளரான இ.சுரேந்திரன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தற்போது கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வானில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா தலைமையில் சிவில் உடையில் வந்தவர்களே நிறுவன உரிமையாளரை கடுமையாக தாக்கியதாக உறவினர்கள் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமையும் வடமாகாண ஆளுளர் சந்திரசிறியின் செயலாளரான மேஜர் சுனில் ஜயக்கொடி தலைமையிலான பத்து பேர் கொண்ட இரர்ணுவத்தினர் ஆயுதங்களுடன் நிறுவனத்துக்குள் புகுந்து நிறுவனத்தினை சேதப்படுத்தியிருந்தனர். இது தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது வர்த்தக நிலையமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றபோதும் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள பொலிஸார் மறுத்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். தாம் அந்த கட்டிடத்தை குத்தகை அடிப்படையில் பெற்று அதனை நடத்திவரும் போது அதனை அச்சுறுத்தி அபகரிக்க பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா முயல்வதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். சமூகத்துக்கு சேவையாற்ற வேண்டிய ஒருவர் இவ்வாறு இராணுவத்தினருடன் இணைந்து மாபியா கும்பல்போல் செயற்பட்டு வருவது தொடர்பில் தரப்பினர் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் இல்லாது போனால் மனித உரிமை ஆணைக்குழுவை நாடப்போவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

கோத்தபாயவுக்கு எதிராக, மாதகல் மக்கள் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்!

வலிகாமத்தில் பலாலி படைத் தளத்துக்கு வெளியே மக்கள் காணிகளை உள்ளடக்கி தடுப்பு வேலிகளை அமைப்பதால் தங்களால் அந்தப் பகுதியில் மீளக்குடியேற முடியாதுள்ளதாகத் தெரிவித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக மாதகல் மக்கள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளனர். 2009ஆம் ஆண்டே போர் முடிவுக்கு வந்துவிட்டபோதிலும் தாங்கள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்லவோ சொந்தக் காணிகளில் குடியிருக்கவோ அனுமதிக்கப் படவில்லை. மாறாக வலிகாமம் பலாலி படைத்தளத்துக்கு வெளியேயுள்ள மக்களது நிலப்பகுதிகளையும் உள்ளடக்கி சுற்றிவேலி அடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்தப் பகுதிக்குள் எவரும் உட்பிரவேசிக்கலாகாது என்ற அறிவித்தலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாதகல் மேற்குப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள், நேற்று தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் முறையிட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு செயலாளர் பிரிவைச் சேர்ந்த ஆறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணி மோகான் பாலேந்திரா ஊடாக தங்கள் சார்பிலும் அந்தப் பகுதிப் பொது மக்களின் நலன் சார்பிலும் இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெட்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியவர்களை அவர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர். வடபகுதியில் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 1992ஆம் ஆண்டிலிருந்து தாங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதாகவும் வடக்கில் 2009ஆம் ஆண்டு மோதல்கள் முடிவுக்கு வந்தபோதிலும் தமது சொந்தக் காணிகளுக்கு குடும்பங்களுடன் தங்களால் திரும்பமுடியாமல் இருப்பதாகவும் அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பி அங்கு வசிப்பது நல்லிணக்கப்பாட்டுக்கான ஒரு முக்கிய அம்சமாகும். எனவே போர் 2009ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டதால் இது உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர். வலிகாமம் பகுதியில் அந்தப் பகுதி மக்கள் குடியமர்த்தப்பட வேண்டுமென்று அந்த மக்களின் உரிமைகளை நிலைநாட்டி உயர்நீதிமன்றம் ஏற்கனவே கட்டளையொன்றை பிறப்பித்திருந்தது. ஆனால் அந்தப் பகுதிக்குத் திரும்பவோ தமது காணிகளில் குடியேறவோ அனுமதிக்கப்படவில்லை என்பதை நீதிமன்றின் கவனத்துக்கு அவர்கள் கொண்டுவந்துள்ளனர். அவர்கள் மேற்கொண்டும் தெரிவித்துள்ள முறைப்பாட்டில் தமது காணிகள் இருக்கும் பகுதியானது உயர் பாதுகாப்பு வலயம் என்று கூறும் சட்டமோ ஒழுங்கு விதிகளோ ஒருபோதும் இருந்ததில்லை. மற்றும் 2011ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் அவசரகால நிலைமை நீக்கப்பட்டதை அடுத்து உயர் பாதுகாப்பு வலயம் என்று இலங்கையில் எந்தப் பகுதியும் பிரகடனப்படுத்தப்படுவதற்குச் சட்ட அங்கீகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளதுடன் தங்களையோ வேறு அப்பகுதி மக்களையோ மீளக் குடியமர்வதிலிருந்து தடுப்பதற்கு பிரதிவாதிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் செல்லுபடியாகும் சட்டம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசமைப்பின் கீழ் தங்களுக்குள்ள உரிமையின்படி மீளவும் தங்கள் காணிகளில் சென்று குடியமர்வதற்கேற்ற தமது அடிப்படை உரிமைகளை நிலைநாட்டித் தீர்ப்பொன்றை வழங்கும்படி மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கேட்டுள்ளனர்.

15 அக்டோபர் 2012

20 வருடத்துக்கு பின்னர் தாயைச் சந்தித்த மகன்!

20 வருடத்துக்கு பின்னர் தாயைச் சந்தித்த மகன் – முதியோரின் கண்ணீர் சம்பவம்கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித்தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதடியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் (வயது 65) என்பவரே தனது வயது முதிர்ந்த தாயாரான கனகசபை பரமேஸ்வரி (வயது95) என்பவரை 20 வருடங்கள் கழித்துக் கண்டுகொண்டமையால் ஆனந்தக் கண்ணீர் விட்டார். இரு தசாப்தத்துக்குப் பின்னர் தனது மகனைக் கண்டு தாயாரும் தனது வயது முதிர்ச்சி மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் மத்தியில் ஒரு உணர்வு பூர்வமான சந்தோஷத்தை ஏற்படுத்தியதாக இல்லத்தின் அத்தியட்சகர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்டவர் கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் அவருக்கு இப்போது வயது 65. கடந்த போரினால் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை இழந்த இவர் தனிமையில் தவித்து வந்தார். ஊனமுற்ற நிலையில் இருந்த இவரைப் பராமரிக்க எவரும் இல்லாமையால் அப்பகுதிக் கிராம அலுவலர் மூலம் கைதடி அரச முதியோர் இல்லத்தில் இவர் சேர்க்கப்பட்டார். கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னரே அவர் முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்டார். ஏற்கனவே இவரது தாயாரான கனகசபை பரமேஸ்வரி கடந்த 20 வருடங்களாக கைதடி முதியோர் இல்லத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறார். அவருக்குக் கண்பார்வை இல்லை. படுத்த படுக்கையிலேயே இருக்கிறார். அவர் அங்கு இருப்பது மகனான அற்புதானந்த ஈஸ்வரனுக்குத் தெரியாது. இந்த நிலையில் அற்புதானந்த ஈஸ்வரன் முதியோர் இல்ல நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினரைச் சந்திக்கச் சென்றுள்ளார். உறவினர் வீட்டுக்குச் சென்றபோதுதான் தனது தாயார் முதியோர் இல்லத்தில் இருக்கும் விடயம் உறவினர் மூலம் அவருக்குத் தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் அற்புதானந்த ஈஸ்வரன் மீண்டும் முதியோர் இல்லத்துக்குச் சென்றார். அவர் முதியோர் இல்ல வாசலிலேயே பலத்த சத்தத்துடன் அழத் தொடங்கிவிட்டார். இதனால் இல்ல நிர்வாகிகள் திகைப்படைந்தனர். பின்னர் விடயத்தை விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது. தனது தாயார் இல்லத்தில் இருக்கும் செய்தியை அவர் இல்ல நிர்வாகிகளிடம் கூறினார். உடனடியாக இந்தத் தகவல் தாயாருக்குத் தெரிவிக்கப்பட்டது. மகனான அற்புதானந்த ஈஸ்வரனும் தாய் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிச் சென்றார். அங்கே தாயும் மகனும் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டனர். இது அங்கு கூடியிருந்த அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்ததாக இல்லத்தின் அத்தியட்சகர் கூறினார்.

மட்டக்களப்பில் தமிழ் குடும்பங்கள் முஸ்லீம்களாக மதமாற்றம்!

மட்டக்களப்பை சேர்ந்த 75 சைவ தமிழ் குடும்பங்கள் அம்பாறையில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டுள்ளனர். வறுமை நிலையை பயன்படுத்தி இவர்கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர். அம்பாறையில் மாவட்டத்தில் அரிசி ஆலை மற்றும் ஆடைவிற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் வேலை செய்யும் சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, செங்கலடி, கிரான், கோரகல்லிமடு ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களை அவர்களின் முதலாளிகள் வற்புறுத்தி மதமாற்றம் செய்துள்ளனர் என்றும் இவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தி இந்த மதமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு தனியான பள்ளிவாசல் மற்றும் ஒரு கிராமமும் உருவாக்கப்பட்டு வருவதாக பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கல்முனையில் ஆடைவிற்பனை நிலையம் ஒன்றில் வேலைசெய்யும் தமிழ் இளம் பெண் ஒருவரை அக்கடை உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள போதிலும் காவல்துறையினர் அவர் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கல்முனை அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் முஸ்லீம் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பெரும்பாலான தமிழ் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர். ஆனால் அவர்களின் வறுமை காரணமாக இதை வெளியில் சொல்ல தயங்குகின்றனர் என்றும் பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

லண்டனில் நடைபெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்!

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளையும், களப்பலியான முதல் பெண் போராளி 2ம் லெப்ரினன்ற் மாலதியின் இருபத்தைந்தாவது நினைவு நாளையும், நினைவுறுத்தி எழுச்ச்சி நிகழ்ச்சி ஒன்று கடந்த 13ம் திகதி சனிக்கிழமை மாலை மேற்கு லண்டன் கொலின்டேல் பகுதியில் நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திகழ்ச்சி மாலை 7 மணிக்கு தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. உயிரோடை தமிழ் வானொலியின் அறிவிப்பாளரும், நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திருமதி. ரூபி குமார் தேசியக் கொடியினை ஏற்றி வைக்க, முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி, தேசியச் செயற்பாட்டாளர் திரு. இராதாகிருஸ்ணன் ஆகியோர் மாலதியின் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து நிகழ்ச்சியினை ஆரம்பித்து வைத்தனர். திரு.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தமது உரையில் பெரும் தோல்வியில் முடிவுற்ற நோர்வேயின் சமாதான ஓப்பந்தத்தில் அனுசரணையாளராகவிருந்த எரிக் சூல்கெய்ம் அவர்கள் அண்மையில் தெரிவித்த கருத்துகளையிட்டான தமது கண்டனத்தை தெரிவித்ததுடன், எத்தகைய அழுத்தங்கள் வரினும் போராட்டம் தொடரும் எனக் குறிப்பிட்டார். தேசிய செயற்பாட்டளார் கவிஞர் திரு. கந்தையா இராஜமனோகரன் அவர்கள் பேதுரு சகாயசீலி என்ற இயற்பெயர் கொண்ட 2ம் லெப்ரினன்ற் மாலதி அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்ததுடன், இந்திய அரசு காலம் காலமாக ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்து வந்த அநீதிகள் பற்றியும் விளக்கினார். லண்டனில் இம்முறை மாவீரர்நாள் நிகழ்ச்சி வழமைபோல் எக்செல் மண்டபத்தில் நடைபெறவிருப்பதனையும் அறிவித்தார். திருமதி சுகி கோபிரத்னம் அவர்கள் சமகால நிகழ்வுகள் பற்றி தனது பார்வை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தியதுடன். ஈழத்தமிழ் மக்களாகிய நாம் சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப எமது அரசியல் செயற்பாடுகளை மாற்றியமைக்காமல் எமது அரசியல் அபிலாசைகளை அடைவதை நோக்காக் கொண்டு செயற்படவேண்டும் என வலிறுத்திக் கூறினார். மேற்கு லண்டன் பெண்கள் அமைப்பினரின் வில்லுப்பாட்டு உட்பட பல கலைநிகழ்சிகளும் நடைபெற்றன.

திவிநேகும சட்டத்திற்கு எதிராக மூன்று வெவ்வேறு வழக்குகள்!

திவிநெகுமவிற்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல்வாழ்வின் எழுச்சி என்ற திவிநேகும சட்டத்திற்கு எதிராக மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரத்தின, அசாத் சாலி, சிறிதுங்க ஜெயசூரிய, சரத் மனமேந்திர, அருணா சொய்சா ஆகிய எதிரணி கட்சி தலைவர்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் மூன்று வெவ்வேறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். வட மாகாணத்தில் வாழும் மக்களின் ஆணையையும், உடன்பாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வட மாகாண ஆளுநருக்கு எந்த வித அதிகாரமும் கிடையாது என்றும், மாகாணசபைகளின் நிதி வருவாய் அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பொறுப்பெடுக்கும் அதிகாரத்தை இந்த சட்டம், மத்திய அரசாங்கத்தின் தனி ஒரு அமைச்சருக்கு வழங்குகிறது என்றும் மனுதாரர்கள் தமது மனுக்களில் தெரிவித்துள்ளனர். பிரபல மனித உரிமை சட்டத்தரணி கிரிசாந்த வெலியாமுன்ன இந்த வழக்குகளில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகியுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 18 ம் திகதி வியாழக்கிழமை உயர் நீதிமன்றில் நடைபெறும்.

14 அக்டோபர் 2012

மஞ்சுள திலகரட்ன தாக்குதலின் பின்னணியில் புலிகள் என்கிறார் விமல்!

நிறைவேற்று அதிகாரம்,சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றை ஒன்றுக்கொன்று முரண்படுத்தி, மோதல்களை ஏற்படுத்த புலிகள் முயற்சிக்கின்றனர். சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதலின் பின்னணியிலும் சர்வதேச சூழ்ச்சிக்காரர்களும் புலிகளுமே உள்ளனர் ௭ன்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனை அரசாங்கம் கொலை செய்தது ௭ன்றே அப்போது ௭திர்க்கட்சியினர் குற்றம் சுமத்தினர். ஆனால், தற்போது உண்மை வெளிவந்துள்ளது. ௭னவே சர்வதேசமும் ஐ. நா.வும் இலங்கைக்கு ௭திராக தீர்மானங்களை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ள போது வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் வகையில் செயற்பட அரசாங்கம் முனையாது ௭ன்றும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லை, ஜயந்திபுரவில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வியாழ்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், சுயாதீன நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண தாக்கப்பட்டமை தொடர்பில் ௭திர்க்கட்சிகள், அரசாங்கம் மீது விரலை நீட்டுவது மட்டுமன்றி சர்வதேச சூழ்ச்சிக்காரர்களுக்கும் புலிகளுக்கும் தேவையான சூழலை உள்நாட்டில் ஏற்படுத்தவே முயற்சிக்கின்றன. குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர போதப் பொருட்களுக்கு அடிமையான ஒருவரை அரசு சந்தேக நபராக சுட்டிக் காட்டக் கூடும் ௭ன்று கூறியிருந்தார். மங்கள சமரவீர ௭ம். பி. கூறிய இக் கருத்துக் குறித்து பொலிஸ் மா அதிபர் விசாரணை நடத்த வேண்டும். யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரத் தன்மையை சீர்குலைக்க சர்வதேச சக்திகள் செயற்படுகின்றன. குறிப்பாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள புலிகள் நாட்டின் முக்கிய துறைகளிடையே மோதல்களை ஏற்படுத்த சூழ்ச்சிகளை செய்கின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது. விரிவுரையாளர்களின் போராட்டம் மற்றும் தொழிற்சங்க போராட்டம் ௭ன்று அனை த்து போராட்டங்களின் பின்னணியிலும் சர்வதேச சூழ்ச்சிகளே காணப்படுகின்றது. ௭னவே நாட்டிற்கு ௭திரான சூழ்ச்சிகளுக்கு துணை போய் சரத்பொன்சேகா ௭திர்கொண்ட நிலைக்கு உள்ளாக ௭திர்க்கட்சியினர் முயற்சிக்கக் கூடாது ௭ன்றார்.

யேர்மனியில் நடைபெற்ற அகதிகள் உரிமைக்கான மாபெரும் போராட்டம்.

யேர்மனியில் மற்றும் ஏனைய நாடுகளில் தமது உயிர்களை பாதுகாக்க அகதி தஞ்சம் கோரும் வெளிநாட்டவர்களை மனிதநேயத்துடன் கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி யேர்மன் தலைநகரத்தில் மாபெரும் கண்டனப் பேரணி நேற்று (13-10-12)சனிக்கிழமை நடைபெற்றது . இப் பேரணியில் யேர்மன் தழுவி பல்வேறு நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான யேர்மன் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அகதிகள் கலந்துகொண்டனர்.இப் பேரணியில் கலந்து கொண்ட அகதிகள் கடந்த நாட்களாக Wurzburg நகரத்தில் இருந்து 600 KM தூரத்தை கடந்து Berlin நோக்கி தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் . பலத்த பாதுகாப்பு மத்தியில் இப் பேரணி நடைபெற்றாலும் ,இப் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு ஒரு சில யேர்மன் இனவெறியர்கள் தாக்க முயற்சித்த சம்பவங்கள் நடந்தது . யேர்மனியில் கடந்த காலங்களில் அகதிகள் மிக மோசமாக கையாளப்படுவதாலும் அத்தோடு சில அகதிகள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் காரணமாகவே இப் பேரணி மிக உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது . இப் பேரணியில் கலந்துகொண்ட அகதிகள் தம்மை யேர்மன் அரசு நாடுகடத்த வேண்டாம் என்றும் தமது நாடுகளில் அரசாங்கத்தால் மற்றும் வேறு காரணங்களால் உயிராபத்து இருப்பதால் அகதிதஞ்சம் தருமாறும் வலியுறுத்தினர் . பல்லின மனிதவுரிமை அமைப்புகள் கலந்துகொண்ட இப் பேரணியில் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையும் கலந்துகொண்டு ஈழத்தமிழ் அகதிகளுக்காக குரல் கொடுத்தது .

நன்றி
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

13 அக்டோபர் 2012

தனி ஈழத்தை உருவாக்க இந்தியா அமெ. கூட்டுச் சதி; தேசப்பற்றுள்ள இயக்கம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜமரியாதையுடன் அழைத்துப் பேசும் இந்தியாவுக்கு, தமிழகத்தை சீனா கைப்பற்றும்போதுதான் எல்லாமே தெரியவரும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஈழமொன்றை அமைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டுச்சதியில் இறங்கியுள்ளன. இலங்கை விடயத்தில் தேர்ச்சிபெற்ற நிருபமாராவ் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்திய அரசின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நேற்றுமுன்தினம் அந்நாட்டின் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது. இதன்போது இந்திய முக்கியஸ்தர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் இலங்கையிலுள்ள சிங்கள அமைப்புகளினிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில், "சுடர் ஒளி'யிடம் கருத்து வெளியிட்ட தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச சமரசேகர கூறியவை வருமாறு: இலங்கையைக் கூறுபோடுவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் செயற்படுகின்றன. கூட்டமைப்பை இந்தியா அழைத்துப் பேசுவதன் பின்னணியிலும் அமெரிக்காதான் மறைமுகமாக செயற்பட்டுள்ளது. சீனாவை அடக்கியாள்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படும் அமெரிக்காவின் சுயநலத்தை காலப்போக்கில் இந்தியா உணரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கமைய அரசியல் தீர்வொன்றை வழங்குமாறு அந்நாடுகள் எமக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க முயற்சிக்கின்றன. அவ்வாறு அதிகாரங்கள் பகிரப்பட்டால் அது தனி ஈழத்துக்கு வழிகோலும். இதுதான் மேற்கூறப்பட்ட நாடுகளின் எதிர்பார்ப்பாகும். கூட்டமைப்புக்கு ராஜமரியாதை கொடுத்து அழைத்துப்பேசும் இந்தியாவுக்குத் தமிழகத்தை சீனா கைப்பற்றும்போதுதான் இலங்கையின் அருமை தெரியவரும். அப்போதுதான் அவர்கள் அனைத்தையும் உணர்வர். தமிழர் பிரச்சினையை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கையிலெடுத்துள்ளதால் உலக நாடுகளுக்கிடையில் அது மோதலை உருவாக்கும் அவலநிலை தற்போது தோன்றியுள்ளது என்றார்.

12 அக்டோபர் 2012

மக்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய படைகள்!

மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து மலையாளபுரம், கிருஷ்ணபுரம் விவசாய நிலங்களைப் படையினர் கைவிட்டுச் சென்றுள்ளனர். கிளிநொச்சி மாலையாளபுரம், கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் சுமார் 300 ஏக்கர் வரையான வயல் நிலங்களை படையினர் சிவில் பாதுகாப்புக் குழுவின் பண்ணைப் பயிர்ச் செய்கைக்கெனப் பறித்தெடுத்துக் கொண்டனர். இதனை அடுத்து நேற்று வியாழக்கிழமை அங்கு திரண்ட மக்கள் கடும் எதிர்ப்பைக்காட்டியதால் குறித்த பகுதிகளைப் படையினர் கைவிட்டுத் திரும்பியுள்ளனர்.1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைக்குரிய விவசாயச் செய்கையை மேற்மேற்கொள்ளும்பொருட்டு பழைய ஐயன்குளத்தின் கீழ் உள்ள மலையாளபுரம், கிருஷ்ணபுரம் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுவதற்கு அங்கு சென்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை குறித்த பகுதியில் காலபோகச் செய்கைக்கான ஆயத்த வேலைகளைச் செய்துகொண்டிருந்த விவசாயிகளை, தமக்கு குறித்த காணி ஒதுக்கப்பட்டதாகக் கூறி அங்கிருந்து விரட்டியடித்தனர் படையினர். இதனையடுத்துக் குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதையடுத்து குறித்த நிலங்களை விட்டுப் படையினர் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. குறித்த பகுதியில் கடந்த 1988 ஆம் ஆண்டின் பின்னர் தொடர்ச்சியாகப் பயிர்செய்கை மேற்கொண்டு வந்ததுடன், 2004 ஆம் ஆண்டு குறித்த குளம் புனரமைப்பு செய்யப்பட்டு பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.தற்போது சுமார் 544 குடும்பங்கள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் இவர்களுக்கு விவசாய உள்ளீடுகள், உரமானியம் என்பனவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நோர்வே சிறுவர் நல காப்பகத்தில் இடம்பெற்ற தவறுகளை ஏற்றுக்கொள்கிறார் சிறுவர் நல விவகார அமைச்சர்.

நோர்வேயிலுள்ள சிறுவர் காப்பகத்தில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன அத்துடன் வெளிநாடுகளைச் சேர்ந்த பிள்ளைகளைப் பராமரிப்பது தொடர்பில் தமது நாட்டு சிறுவர் காப்பகத்திற்கு போதிய அனுபவம் இல்லாதிருப்பதாக நோர்வே சிறுவர் நல விவகார அமைச்சர் (Inge Marte Torkelsen) இங்கே மார்ட்டே டோர்கெல்சன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து வெளிவருகின்ற அப்டன் போஸ்ட் (Aften Post) என்ற பத்திரிகை நேற்று முன்நாள் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பக விவகாரம் இலங்கை ஊடகங்களின் வாயிலாக சர்வதேச மட்டத்திற்கு வந்துள்ளதையடுத்து தற்போது இவ்விவகாரம் நோர்வே அரசாங்கத்திற்கு நெருவாரங்களை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பிலான தகவல்களும் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.இந்நிலையிலேயே நோர்வே நாட்டின் சிறுவர் விவகார அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருப்பதாக அப்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் சிறுவர் காப்பகத்தில் பொறுப்பேற்கப்பட்டுள்ள வெளிநாட்டு சிறுவர்கள் தொடர்பில் அமைச்சின் கவனம் திரும்பியிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.இது இவ்வாறிருக்க நோர்வே அரச மட்டத்திலுள்ள உயர் அதிகாரிகள் மத்தியிலும் நோர்வே சிறுவர் காப்பக விவகாரம் மற்றும் டொம் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதம் ஆகிய விடயங்கள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

11 அக்டோபர் 2012

கனடா தமிழ் திரைப்பட விழாவை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்!

newsகனடா, ரொறண்டோவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தமிழ் திரைப்படக் கலை விழாவை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் கனடா கிளையினர் அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து கனடாவில் செயற்பட்டுவரும் நாம் தமிழர் கட்சி கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழீழ ஈகர்களின் புனித மாதமான கார்த்திகை மாதத்தில், கனடா நாட்டில் ரொறண்டோ நகரில் நடைபெற உள்ள தமிழ் திரைப்படக் கலை விழாவை தமிழர்களாகிய நாம் கட்டாயம் புறக்கணிப்போம். தமிழர்களுக்கான களியாட்ட காலம் ஒவ்வொரு ஆண்டும் 10 மாதங்கள் தான் என்பது விதிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. எல்லாம் இழந்து அனாதையாக்கப்பட்ட மே மாதம். மற்றும் எங்களின் மானம் காக்க, தம் உயிரை இழந்த மாவீரர்களை நினைவு கூறும் கார்த்திகை மாதம் தவிர்ந்த மாதங்களிலேயே களியாட்ட நிகழ்வுகளை நடத்த வேண்டுகிறோம். எனவே அடுத்தமாதம் நடைபெறும் தமிழ் திரைப்படவிழாவை நாம் புறக்கணித்தாக வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் 105 ஏக்கர் நிலத்தை படையினர் கையகப்படுத்தியுள்ளனர்

கிளிநொச்சியில் 105 ஏக்கர் நிலத்தை  படையினா கையகப்படுத்தியுள்ளனர்  :கிளிநொச்சி மலையாள புரம், கிருஷ்ணபுரம் பகுதிகளிலுள்ள தமிழ் மக்களின் சுமார் 105 ஏக்கர் இற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை கையகப்படுத்தியுள்ள படையினர், அதனை விவசாய நடவடிக்கைகளுக்குத் தயார்படுத்தி வருவதுடன், பாரம்பரியமாக அங்கு விவசாயத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் மக்களை அங்கு வரக் கூடாது எனக் கூறி விரட்டியடித்துள்ளதாக தெரியவருகிறது. மலையாளபுரம், கிருஷ்ணபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள காணிகளில் மக்கள் கடந்த பல வருடங்களாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பல மாதங்களாக நிலவிய வறட்சி ஓரளவுக்கு நீங்கி மழை பெய்திருப்பதால் தமது காணிகளை கால போகத்துக்கு தயார் படுத்தும் நோக்கத்துடன் விவசாயிகள் கடந்த ஓரிரு தினங்களாக அங்கு செல்கின்றனர். ஆனால் அவர்களை வயல் நிலங்களுக்குச் செல்ல விடாமல் இராணுவம் துரத்தி அடித்து வருகின்றது. எங்களது சொந்த வயல் நிலங்களில் படையினர் குவிந்திருக்கின்றனர். எங்களையும் அவர்கள் விரட்டி அடித்தனர் என விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார். நாம் இந்த நிலத்தில் 29 வருடங்களுக்கும் மேலாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றோம். நேற்று வந்த இராணுவம் இது உங்கள் நிலம் இல்லை என்று கூறி எங்களைக் கலைக்கிறது என அவர் கூறியுள்ளார். கடந்த வருடமும் கால போக செய்கையில் இங்கு தமிழ் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். வழமைபோல தற்போதும் மழைகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் விவசாய நடவடிக்கைக்கு சென்ற போது விவசாயிகளுக்கு அங்கு அதிர்ச்சியே காத்திருந்தது. எவரும் இனி இப் பகுதிக்கு வரக் கூடாது எனவும் இராணுவத்தினர் அச்சுறுத்தினர். எனவே உரிய அதிகாரிகள் இதில் உடனடிக் கவனம் செலுத்தி எமது நிலங்களை மீட்டுத் தரவேண்டும் என அந்த விவசாயி கூறியுள்ளார். இதேவேளை, தமது நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாமல் படையினரால் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பதை கிருஷ்ணபுரம் விவசாய சங்கத் தலைவர் செல்லத்துரை தெரிவித்துள்ளார். இது குறித்து தாம் கிராம சேவையாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர் எனவும் இன்று பிரதேச செயலரின் கவனத்துக்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் கூறினார்.