பக்கங்கள்

31 டிசம்பர் 2021

நாமலுடன் இணைந்து பட்டத் திருவிழா - இனத்திற்கு இழைக்கும் வரலாற்றுத் தவறு!

சிறிலங்கா இனவழிப்பு அரசின் தொடந்து வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் ஒரு அம்சமாக எமது பாரம்பரியமான சித்திரப் பட்ட திருவிழாவினை ஆக்கிரமித்து அவர்களின் இன நல்லிணக்க வேடத்துக்குள் அடக்கியுள்ளது என கனடா ஒருங்கிணைந்த ப்ளூஸ் விளையாட்டுக் கழகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்கா அரசின் தமிழர் இனப்படுகொலைக்கு திட்டமிட்டு வெள்ளையடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் மற்றும் வல்வை உதய சூரியன் கழக நிர்வாகத்தினரின் தமிழின துரோக செயல்களை வன்மையாக கண்டிக்கின்றோம். வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் மற்றும் வல்வை உதய சூரியன் கழக நிர்வாகத்தினரின் தன்னிலை விளக்க அறிக்கையினை பார்த்து வெட்கித் தலை குனிகின்றோம். பெருமையும் வீரமும் செறிந்த வல்வை மண் இவர்களின் செயற்பாட்டால் வேதனை கொண்டுள்ளது. சிறிலங்கா இனவழிப்பு அரசின் தொடந்து வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் ஒரு அம்சமாக எமது பாரம்பரியமான சித்திரப் பட்ட திருவிழாவினை ஆக்கிரமித்து அவர்களின் இன நல்லிணக்க வேடத்துக்குள் அடக்கியுள்ளது. தமிழர்கள் ஒரு தனித்துவமான இனக்குழுமம். எங்களை யாரின் அங்கீகாரத்திற்காகவும் ஏங்கவிடாமல், எந்த அதிகாரத்திற்கும் அடிபணியாமல் எமது விடுதலைப் போராட்டத்தை கொண்டு நடத்திய மாபெரும் தலைவன் அவதரித்த மண்ணில் இனப்படுகொலை அரசு காலூன்றுவது என்பது மாவீரர்களையும், அவர்களின் நிகரில்லா ஈகத்தையும் கொச்சைப்படுத்துவதே அன்றி வேறேதுமில்லை. வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் மற்றும் வல்வை உதய சூரியன் கழக நிர்வாகத்தினரின் தன்னிலை விளக்க அறிக்கையின் படி, இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினுடாக எமது பாரம்பரியகலாசார நிகழ்வான இந்த சித்திரப்பட்டப் போட்டி பன்முகப்படுத்தப்பட்டு , பல நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் முன்னிலையில் இலங்கை அரசின் மிகப்பெரிய நல்லிணக்க நாடகத்தின் கடைசிக் காட்சியாக இடம்பெறப் போகின்றது என்பது மிகவும் வேதனை அளிக்கின்றது. விடுதலைப்போராட்டம் தொடங்கிய இடத்திலேயே இதனை நடத்திக் காட்டுவதன் மூலம் எமது இனத்திடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் அடித்து நொறுக்கும் முயற்சியாகவே நாம் இதை பார்க்கின்றோம். இலங்கை அரசின் அற்ப சொற்ப சலுகைகளுக்காக இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமைப்புகளை கனடா வாழ் வல்வை மக்களின் அங்கமாகிய டொரோண்டோ ப்ளூஸ் மற்றும் மொன்றியல் ப்ளூஸ் விளையாட்டு கழகங்கள் ஆகிய நாம் ஒன்றிணைந்து கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விடயத்தை எக் காரணத்தை கொண்டும் நடத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்துகின்றோம். பாரம்பரியம் மிக்க விளையாட்டுக் கழகமான உதய சூரியன் கழகத்தின் நிகழ்கால இளம் தலைவர்களின் சிறிலங்கா அரசுடனான இணைக்கப் போக்கே இனவழிப்பு அரசை எமது பெருமை மிகு வல்வை மண்ணில் இந்த நாடகத்தை நடத்த இடம்கொடுத்துள்ளது. இச் செயலானது ஒரு பெரும் அரசியல் மற்றும் உளவியல் தோல்வியை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இலங்கை அரசுக்கு சர்வதேச மட்டத்தில் பாரிய அங்கீகாரத்தினை பெறுவதற்கு உந்துகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், எம் வல்வை மக்களின் இன்ப துன்பங்களில் தொடர்ந்து பங்கெடுத்து, தங்களின் உழைப்பினால் அவர்களை தினமும் மேம்படுத்திக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த மக்களின் மனங்களை இந்நிகழ்வானது மிகவும் புண்படுத்தி உள்ளது. இவ் விடயத்தின் பாரதூரமான விளைவுகளை புரிந்து கொண்டு, ஏற்பாட்டாளர்கள், போட்டியாளர்கள், மற்றும் எம் இனிய வல்வை மக்கள் முன்வந்து தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்யுமாறும் அவர்கள் மறுக்குமிடத்து இந்நிகழ்வை புறக்கணிக்குமாறும் உரிமையோடு வேண்டிக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 நவம்பர் 2021

கனடா கூட்டத்தில் பதற்றம் பொலிஸ் பாதுகாப்புடன் தப்பினார் சுமந்திரன்!

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்ற கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிகழ்வு இடைநிறுத்தப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் சுமந்திரன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்க பயணத்தை அடுத்து. கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொண்டுள்ளார். இவர்கள் நேற்று கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், கலந்துரையாடல் நடக்கும் மண்டபத்துக்கு வெளியே நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக குறித்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து,45 நிமிடம் தாமதமாகி குறைவான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் ஆரம்பமாகியது. இதன்போது,கூட்டத்தில் மக்கள் தமது கேள்விகளை வாய்மொழியாக கேட்க முற்பட்ட போது அதனை எழுத்துமூலமாக எழுதி தருமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த நிலையில் அங்கு சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.பல பகுதிகளிலிருந்தும் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள மக்கள் தம்மால் எழுத்துமூலமாக கேள்விகளை வினவ முடியாதென தெரிவித்த நிலையில், வாய்மொழியாக கேள்விகளை கேட்க பின்னர் ஏற்பாட்டாளர்கள் அனுமதித்துள்ளதுடன்,குறைந்தளவிலான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் இடம்பெற்றது.இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டம் இடம்பெற்ற மண்டபத்திற்குள் நுழைந்து சுமந்திரனை அங்கிருந்து வெளியேறுமாறு குழப்பத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சுமந்திரனை பொலிசாரின் பாதுகாப்புடன், மண்டபத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.என செய்திகள் தெரிவிக்கின்றன.

13 நவம்பர் 2021

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம்!

13-11-2021 மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம். எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 27 திகதிவரையான காலப்பகுதி தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான வாரமாகும். அக்காலப்பகுதி தமிழ் மக்களின் விடிவுக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரச் செல்வங்களை நினைவு கூரும் நாட்களாகும். இந்நாட்கள் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து மறைக்கப்படமுடியாததும், திசைதிருப்பப்பட முடியாததுமாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகும். இனவிடுதலை நோக்கிய, ஆயுதப் போராட்டம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டதன் பின்னணியையும், தமிழ் மக்கள் ஆயுதமேந்தியதன் நியாயத்தன்மைகளையும், அதிலிருந்த தியாகங்களையும், அடுத்த சந்ததியினரும் தேடிப்பார்க்கக்கூடியவாறு வரலாற்றுக் கடத்திகளாகவும் இருக்கக் கூடிய நாட்களாகும். இந்நாட்கள் இறந்தவர்களை நினைவுகூருகின்ற சாதாரண நாட்களுமல்ல. தமிழின விடுதலைக்காக வித்தாகிப்போன வீரமறவர்கள், தமிழர் தாயகக் கனவோடு துயில்கொள்வதாகக் கருதி, தமிழினத்தின் விடுதலை இலக்கு திசை மாறாமல் செல்ல, தமிழ்த் தேச மக்கள் சபதம் செய்யும், தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆணிவேரான நாட்களாகும். எனவே இறந்தவர்களை நினைவு கூருவது என்கின்ற சொல்லாடல் ஊடாகவும், வேறுநாட்களைக் குறிப்பிட்டும், சாதாரண மரணங்களோடு, தமிழின விடுதலைக்காக வித்தாகிப் போனவர்களின் தியாகங்களையும் இணைத்து, வட கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் மன்றம் மதிப்பீடு செய்து பொதுமைப்படுத்துவதென்பது, மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், தமிழ்த் தேசிய தாகம் கொண்டவர்களிடத்தில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்திய செயற்பாடாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. தமிழ்த் தேசிய அரசியலுக்காக தம்மைத் தியாகம் செய்த ஆயர்கள், குருக்களை உருவாக்கித் தந்த கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை நினைவு கூரும் நாட்களாக நவம்பர் 20ம் திகதியை பொதுமைப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முடிவு ஆரோக்கியமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். கெடுபிடிகள் நிறைந்த சிறிலங்கா அரச இயந்திரத்தால், மாவீரர்களை நினைவுகூர்வதற்கு பல்வேறு வழிகளிலும் தடைகளை ஏற்படுத்த முற்படும் வேளையில், தமிழின தாயக விடுதலைக்காக வித்தாகிப்போன மாவீரர்களின் வாரத்தை, நவம்பர் 21-27 திகதிவரை நினைவிருத்தும்வகையிலும், வடக்குக் கிழக்குத் தழிழர் தாயகமெங்கும் நவம்பர் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணியொலி எழுப்பி வரலாற்றைக் கடத்துவதுமே வரவேற்கத்தக்க விடயமாக அமையும் என்பதையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். எனவே ஆயர்மன்றமானது தமது முடிவை பரிசீலனைசெய்து அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உரிமையுடனும் பணிவன்புடனும் கேட்டுக்கொள்கின்றோம். 
நன்றி!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
தலைவர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

செல்வராசா கஜேந்திரன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம்.

நன்றி!முகநூல் சுகாஷ்.

07 அக்டோபர் 2021

ஒற்றையாட்சிக்குள் தீர்வை வழங்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் இந்தியா முன் வைக்கக் கூடாது!

தமிழர் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தம் உள்ளடங்கலாக ஒற்றையாட்சிக்குள் தீர்வினை வழங்கக்கூடிய எந்தவொரு யோசனையையும் இந்தியா முன்வைக்கக்கூடாது. என்று அந்நாட்டு வெளியுறவுச்செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுடனான சந்திப்பின்போது வலியுறுத்தியதாக தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கும் நலன்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் இந்திய வெளியுறவுச்செயலரிடம் எடுத்துரைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தமிழர்களின் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தத்தின் ஊடாகத் தீர்வை வழங்கவேண்டும் என்பதே இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடாக இருந்துவருவதாக இதன்போது தெரிவித்த இந்திய வெளியுறவுச்செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, அதனை எதிர்வருங்காலங்களிலும் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டார். மறுபுறம் இந்திய வெளியுறவுச்செயலருக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களின் வாயிலாக அறிந்துகொண்டோம். அதன்படி நாம் கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கு 11 வருடங்களுக்கு முன்னர் எம்.கே.நாராயணன் இலங்கை வந்தபோது வலியுறுத்தப்பட்ட அதே விடயங்கள்தான் இப்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு, தமிழ்த்தேசியத்தைப் புறக்கணித்து, தமிழர்களின் அபிலாஷைகளைக் கைவிடுகின்ற கூட்டமைப்பின் போக்கு மீண்டும் மீள உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஒற்றையாட்சியின் கீழான தீர்வை நிராகரிக்கின்ற பொறுப்பு தமிழ்மக்களின் கைகளிலேயே இருக்கின்றது. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்க்ததினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் 13 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டு, ஒற்றையாட்சியின்கீழ் தீர்வை வழங்குவது குறித்த சர்வசன வாக்கெடுப்பில் மக்கள் அதற்கு எதிராக வாக்களிக்கவேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்தார். மேலும் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'இந்திய வெளியுறவுச்செயலருடனான எமது சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்களுக்குப் புறம்பான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ்ப்பத்திரிகையொன்றில் (ஈழநாடு) ஆசிரியர் தலையங்கமொன்று எழுதப்பட்டிருக்கின்றது. 13 ஆவது திருத்தத்தின் ஊடாகத் தமிழ்மக்களுக்கான தீர்வு வழங்கப்படவேண்டும் என்று வெளியுறவுச்செயலர் வலியுறுத்தியபோது அதனை நாம் மறுக்கவில்லை என்றும் யதார்த்த அரசியலை விளங்கிக்கொண்டு, ஏனையோரைப்போன்ற முகவர்களாக செயற்படுகின்றோம் என்றும் பொருள்படும்வகையில் அந்த ஆசிரியர் தலையங்கள் எழுதப்பட்டிருக்கின்றது. இதுகுறித்து நாம் அப்பத்திரிகையின் உரிமையாளர் மற்றும் ஆசிரியருக்குத் தெளிவுபடுத்தியிருக்கின்றோம். இனிவருங்காலங்களில் எமது கட்சியுடன் தொடர்புடைய விடயங்களை எழுதும்போது, அத்தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து எம்மிடம் கேட்டறிந்து தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.

25 செப்டம்பர் 2021

கோத்தாவிற்கு எதிராக களம் கண்ட நாடுகடந்த தமிழீழ அரசு!

சிறிலங்கா அரசுத்தலைவர் கோத்தபாய இராஜபக்ச நியு யோர்க் ஐ.நா சபையின் உள்ளே, உள்ளகபொறிமுறை குறித்து பேசிக் கொண்டிருக்க, சிறிலங்காவை சர்தேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஐ.நாவின் வெளியே குரல் எழுப்பினார் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கோத்தாவே திரும்பிப் போ என்ற முழக்கத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை புதன்கிழமை ஐ.நாவின் முன்னால் மேற்கொண்டிருந்தது. ஓர் போர்குற்றவாளியை ஐ.நா தனது அரங்கில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டதனை கண்டு நாங்கள் அதிர்ச்சியடைகின்றோம். இனப்படுகொலையாளி ஒமர் அல்-பஷீர் இந்த அரங்கில் உரையாற்றினார் என்ற உண்மையை அறிவோம். உகண்டா நாட்டு சர்வாதிகாரி இடி அமீன் ஒருமுறை இந்த அரங்கில் உரையாற்றினார் என்பதையும் அறிவோம். இந்நிலையில் இந்த அரங்கில் (.ஐ.நா) கோத்தா உரையாற்ற அனுமதிக்கப்பட்டதில் எங்களுக்கு ஆச்சரியமில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குரலெழுப்பியிருந்தார். சர்வதேச நீதிப்பொறிமுறையினை நிராகரித்து உள்ளகபொறிமுறை குறித்து தனது நிலைப்பாட்டை கோத்தா வெளிப்படுத்தியிருந்த நிலையில், அதற்கு எதிர்வினையாற்றிய பிரதமர் வி.உருத்திரகுமாரன், பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச நீதிப்பொறிமுறை என்பது தமிழர்களின் நிலைப்பாடு மட்டுமன்றி, அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாடு என்பதனை வலியுறுத்தினார். சிறிலங்கா அரசு, அதன் அரசாங்க கட்டமைப்பு யாவிலும் ஆழவேரூன்றியுள்ள இனநாயகம், இனவெறியின் உண்மையினை உலகம் அறியும் என்பதோடு, இதன் ஊடாக தமிழர்களுக்கு நீதி கிடைக்க இடமில்லை என்பதனை, சிறிலங்காவின் வரலாறு பல தசாப்தங்களாக நன்கு நிரூபித்துள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் இடித்துரைத்திருந்தார். தமிழினத்தின் மீது நடந்தேறிய குற்றங்கள் என்பது ஒரு தனிநபராலோ அல்லது தனிப் பட்டாலியனாலோ அல்ல, மாறாக சிறிலங்கா அரசால் நிகழ்தப்பட்டது. குற்றத்தை புரிந்தவரே நீதிபதியாக இருக்க முடியாது என்பது பொது அறிவு மற்றும் அடிப்படை சட்டக் கொள்கையாகும் என்பதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறித்துரைத்திருந்தார். கோத்தபாயாவுக்கு தார்மீக தைரியம் இருந்தால், சிறிலங்காவின் தலைவராக ரோம் சட்டத்தில் கைச்சாத்திட்டு, பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு சமர்ப்பிக்குமாறு நாங்கள் சவால் விடுகிறோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்ததோடு, அவர் அதை செய்ய மாட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் அவர் ஒரு கோழை என இடித்துரைத்தார். ஐ.நாவில் உரையாற்ற கோத்தபாய ராஜபக்சேவுக்கு ஐ.நாவின் நெறிமுறைகள் அனுமதித்தாலும், 1987ம் ஆண்டு ஐநாவில் பொதுச்சபைக்கு வருவதற்கு அப்போதைய ஒஸ்திரிய அதிபர் கர்ட் வால்ட்ஹெய்முக்கு விசா வழங்க மறுத்ததைப் போலவே, கோதாவுக்கும் அமெரிக்கா அனுமதி மறுத்திருக்கலாம் என்பதையும் கூற வேண்டும். இரண்டாம் உலகப் போரில் அவர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டார் என்ற அடிப்படையில் மறுக்கப்பட்டதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை, கோத்தாவை தனது கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்து, எதிர்காலத்தில் அவர் நுழைவதை மறுக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம் எனக் கோரியிருந்த வி.உருத்திரகுமாரன், இன்று கோத்தாவுக்கு சத்தமாகவும் தெளிவாகவும் இங்கிருந்து ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறோம். பஷீருக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் அவருடைய அணியில் சேரும் நாள் வெகுதொலைவில் இல்லை என பிரதமர் வி.உருத்திரகுமாரன் உள்ளே உரையாற்றிக் கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் கோத்தபாயவை நோக்கி இடித்துரைத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 செப்டம்பர் 2021

அரசியல் கைதிகளை மிரட்டிய அமைச்சர்,கஜேந்திரகுமார் கண்டனம்!

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் கைதிகள் இருவரை முழந்தாளிடச் செய்துள்ளதுடன் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 12ம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து அவர்களில் இருவரை முழந்தாளில் இருக்க செய்துள்ளார். பின்னர் அவர் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை சுட்டுக்கொல்லப் போவதாக மிரட்டியுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இதனை உறுதிப்படுத்த முடியும், இராஜாங்க அமைச்சரின் கொடுரமான நடவடிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக கண்டிக்கின்றது. உலகின் மிகவும் பயங்கரமான சட்டங்களில் ஒன்றான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,சிலர் ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக அவர்களிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நலன்களை கவனிக்க வேண்டிய அமைச்சர் அவர்களை கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளமை அவர்களது நிலையை மேலும் மோசமாக்கியிருக்கும். குறிப்பிட்ட அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டும் அவரது பொறுப்புகளை பறிக்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது. ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இலங்கையின் ஒரு அமைச்சர் இது போன்ற மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதென்பது, ஐநா மனித உரிமை பேரவையை இலங்கை அரசாங்கம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதையே எடுத்துக்காட்டுவதாகவும் பதிவிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையை ஒரு பொருட்டாகக் கருதாத இலங்கையை தொடர்ந்தும் ஐநா மனித உரிமைப் பேரவைக்குள் வைத்திருப்பது அர்த்தமற்றது எனவும், அதற்கு அப்பால் குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

08 செப்டம்பர் 2021

புலமைப்பித்தனின் இல்லத்தை மறு தாயகம் என புலிகள் கூறினார்கள்!

உடல்நலக் குறைவால் காலமான அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரும் கவிஞருமான புலமைப்பித்தன் (வயது 86) உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது புலமைப்பித்தனின்  மனைவி கதறி அழுதார். அவரது கையை பிடித்து ஆறுதல் தெரிவித்தார்.1935-ம் ஆண்டு கோவையில் பிறந்தவர் புலமைப்பித்தன். 1968-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோவில் திரைப்படத்துக்கு பாடல் எழுதியதன் மூலம் திரை உலகத்துக்கு வந்தார்.அந்த படத்தில் புலமைப்பித்தன் எழுதிய நான் யார்? நான் யார்? என்ற பாடல் இன்றளவும் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது.எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு புலமைப்பித்தன் பாடல்கள் எழுதினார். குடியிருந்த கோவில், அடிமைப்பெண், குமரிக்கோட்டம், நல்ல நேரம், உலகம் சுற்றும் வாலிபன் என 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமாக இருந்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவான போது அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.அதிமுகவின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர் புலமைப்பித்தன். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 4 முறை பெற்றுள்ளார் கவிஞர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களான பிரபாகரன், பேபி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் புலமைப்பித்தன் வீட்டில் தங்கி தங்களது பணிகளை செய்ததும் வரலாறு. புலமைப்பித்தனின் வீடு தங்களது இரண்டாவது தாயகம் என்றுதான் அந்நாளில் புலிகளின் தலைவர்கள் கூறியதை அவரே பல பேட்டிகளில் பதிவும் செய்திருக்கிறார்.1964-ல் தொடங்கிய புலமைப்பித்தனின் திரைப்பயணம் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த எலி திரைப்படம் வரை இடைவிடாமல் தொடர்ந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாதான் அதிமுக பொதுச்செயலாளர் என்ற கருத்தில் உறுதியானவராகவும் இருந்தார். கடந்த மாத இறுதியில் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் புலமைப்பித்தன். அண்மையில் மருத்துவமனையில் புலமைப்பித்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சசிகலா. இன்று காலை சிகிச்சை பலனின்றி புலமைப்பித்தன் காலமானார். அவரது உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதேபோல் அதிமுகவின் முக்கிய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். அமமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர். சரஸ்வதி, திருமுருகன் காந்தி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.முன்னதாக புலமைப்பித்தன், உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை - அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவலை கேள்விப்பட்டு நேற்று நேரில் சென்று சசிகலா, புலமைப்பித்தனிடம் நலம் விசாரித்தார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, இதயக்கனி திரைப்படத்தில் இடம்பெற்ற நீங்க நல்லா இருக்கணும் என்ற பாடலின் மூலம், அதிமுகவை பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்ல தோள் கொடுத்தவர் புலமைப்பித்தன் என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.ஆரம்ப காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி சேகரித்து வழங்கியவர் புலவர் புலமைப்பித்தன் என்பது குறிப்பிடத்தக்கது. 

05 செப்டம்பர் 2021

ஜோர்ஜ் மாஸ்ரர் காலமானார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல்துறையில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் பருத்தித்துறையில் இன்று காலமானார். பருத்தித்துறையில் 1936ஆம் ஆண்டு பிறந்த அவர் தபாலதிபராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் 1994 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறையில், மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வந்தார். இலங்கை அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன், நடைபெற்ற அனைத்து பேச்சுக்களின் போதும், பிரதான மொழிபெயர்ப்பாளராக அவர் செயற்பட்டிருந்தார். இறுதிப்போரின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அவர், 2016 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் 04 ஆம் திகதி அனைத்து வழக்குகளிலிருந்தும் கொழும்பு பிரதான நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்னர் பருத்தித்துறையில் வசித்து வந்த நிலையிலேயே இன்று அவர் காலமானார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

01 ஆகஸ்ட் 2021

இரண்டு கைகளிலும் தடுப்பூசி போட்டனர் என ஒரு தாயார் தெரிவிப்பு!

யாழ். பரியோவான் கல்லூரியில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையத்தில் தனக்கு இரண்டு கைகளிலும் ஒரே நாளில் தடுப்பூசி போட்டதாக தடுப்பூசியை பெற்ற தாயார் ஒருவர் தெரிவித்துள்ளார். அவரது வீட்டில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே குறித்த விடயத்தை கூறியுள்ளார். 'குறித்த நிலையத்தில் தடுப்பூசியைப் பெறுவதற்காகச் சென்றிருந்தேன். எனக்கு ஒரு கையில் தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் எனக்கு தடுப்பூசியை வழங்கிய பெண் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். அவரிடம் நான் இரண்டு தடவைகளுக்கு மேல் எழுந்து செல்லலாமா எனக் கேட்டேன் அவர் பதிலளிக்காமல் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் உரையாடியபடி சென்றார். நான் அவ்விடத்திலேயே இருக்க மறு பக்கத்தில் இன்னொரு உத்தியோகத்தர் கையை காட்டுங்கள் என்று கூறியபடி இன்னுமோர் தடுப்பூசியை மறுகையில் போட்டார். ஊசி போட்ட சிறிது நேரத்தில் எனக்கு தலை சுற்றுவது போல் உணர்வு ஏற்பட்டது. அங்கிருந்த வைத்தியர்களிடம் சொன்னேன்,நீங்கள் சற்று அமர்ந்திருந்து விட்டுச் செல்லுங்கள் என பதில் கூறினார்கள். எனது மகளுடன் வீடு செல்லும்போது எனக்கு இரண்டு கைகளிலும் ஊசி போடப்பட்டது எனக் கூறினேன் எனது மகள் அவ்வாறு ஊசி போடக் கூடாது எனக்கூற நடந்த சம்பவத்தை எனது மகனிடம் தெரிவித்தேன். தடுப்பூசி ஒன்றா இரண்டா ஏற்றுவது என்ற விடயம் எனக்குத் தெரியாது. மகனை அழைத்துக் கொண்டு தடுப்பூசி வழங்கப்பட்ட விதம் தொடர்பில் அறிவதற்காகச் சென்றேன். முதலில் உள்ளே விட மறுத்து விட்டார்கள். பின் வைத்தியரைச் சந்திக்க அனுமதித்தார்கள் நடந்த சம்பவத்தை வைத்தியரிடம் எனது மகன் விவரமாகச் சொன்னார். எங்கள் முன்னிலையில் அங்கு கடமையிலிருந்த வைத்தியர் கையடக்க தொலைபேசிகளை கடமையின் போது பாவிக்காதீர்கள் என அறிவுரை வழங்கினார். எனக்கு ஏதேனும் வித்தியாசமான உணர்வுகள் ஏற்பட்டால் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுரை கூறியதுடன் மறுநாள் எனது வீடு தேடி வைத்தியர் ஒருவர் வந்து எனது உடல் நலம் குறித்துப் பார்வையிட்டு சென்றார் என குறிப்பிட்டுள்ளார்.

10 ஜூலை 2021

இலங்கை இராணுவ ஆடசியை நோக்கி நகர்வதாக சுகாஷ் கண்டனம்!

இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் ஜனநாயக படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு கல்லூரி சட்டமூலத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் அகிம்சை முறையில் எதிர்ப்பு தெரிவிக்க முற்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய பொதுச் செயலாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியாதைக்குரிய ஜோசப் ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டு முறையற்ற விதத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். இந்தக் கைதையும் தனிமைப்படுத்தல் செயற்பாட்டையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கை பாராளுமன்றத்தில் இருக்கின்ற சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு கல்லூரி சட்டமூலம் என்பது இலங்கையை சட்டரீதியாக இராணுவ மயப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு வழிவகுக்கின்ற ஒரு சட்டமூலம். இந்த சட்டமூலத்தை ஜனநாயக வழியிலே எதிர்த்த இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய ஜோசப் ஸ்டாலின் அவர்கள் ஒரு சட்டமூலத்திற்கு ஜனநாயக வழியிலே கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எதிர்ப்பு தெரிவித்தமைக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் உட்படுத்தப்பட்டு தற்சமயம் கேப்பாப்பிலவு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டதாகக்கூறி அடைக்கப்பட்டிருக்கிறார். உண்மையில் இது ஒரு கடத்தல் பாணியிலேதான் அவருடைய தனிமைப்படுத்தல் அமைந்திருக்கிறது என்பது கசப்பான உண்மை. குறித்த சட்ட மூலமானது ஒரு பல்கலைக்கழகத்தை இராணுவ மயப்படுத்தி அந்தப் பல்கலைக்கழகத்தில் வெளியேறுகின்றவர்களை இராணுவ மயமாக்கலுக்கு உட்படுத்தி அதற்கு பழக்கப்படுத்தி வெளியேற்றுகின்ற செயற்பாட்டிற்கு அனுமதிக்கின்ற ஒரு சட்டமூலமே இதுவாகும். இந்தக் கல்லூரி இலங்கையினுடைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்பது அவதானிக்கப்பட வேண்டிய விடயம். ஆகவே இது ஒரு தனியான சட்டத்தின்கீழ் ஆளப்படுகின்ற ஒரு கல்லூரியாக இருக்கிறது. இதனுடைய தாற்பரியத்தை உணர்ந்து ஜோசப் ஸ்டாலின் அவர்களும் சகோதர மொழி பேசுகின்ற நபர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தார்கள். அதற்காக அவர்கள் கைது செய்யப்பட்ட முறையே ஜனநாயகத்திற்கு முரணானதாக இருந்தது . கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதும் நீதிமன்றத்தினால் இவர்களை தனிமைப் படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. நீதிமன்றத்தினுடைய அனுமதியையும் மீறி நீதிமன்றத்தினுடைய கட்டளையையும் பெறாமல் எந்தவித பி.சி.ஆர் பரிசோதனையோ அல்லது ஆன்டிஜன் பரிசோதனையோ மேற்கொள்ளாமல் இவர்கள் கைது செய்யப்பட்டு தற்பொழுது கேப்பாபிலவு வான்படை முகாமிலே அடைக்கப்பட்டிருக்கிறார். அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாது முறையற்ற விதத்தில் இந்த தனிமைப்படுத்தலானது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இவருடைய கைது ஒரு ஜனநாயக படுகொலை அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஏனென்றால் இலங்கை ராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது,கோட்டாபய அரசினுடைய எதேச்சதிகார சர்வாதிகார ஆட்சி எல்லை மீறிக்கொண்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தின் ஊடாக இராணுவ மயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தை உற்பத்தி செய்கின்ற பிரசவிக்கின்றதாகவே இந்த சட்டமூலம் அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

07 ஜூலை 2021

தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கை மக்களுக்கு இல்லை-சபையில் கஜேந்திரகுமார்!

தமிழ் மக்கள் வலுக்கட்டாயமாக காணமால் ஆக்கப்பட்டமை குறித்து தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலத்தில் திருத்தங்களை செய்ய எடுக்கும் முயற்சியை நான் வரவேற்கின்றேன். 17 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை, குறிப்பாக அரசியல் அமைப்பு சபை இயக்கத்தில் இருக்கவே இல்லை. இப்போதும் இந்த சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றமை முக்கியமானது, ஆனால் நீதிமன்ற சுயாதீனம் என்ற விடயத்தில் சந்தேகம் உள்ளது. அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலயத்தை பொறுத்தவரை இந்த பிரேரணை வந்தபோது தற்போதைய அரசாங்கம் மிக மோசமாக விமர்சித்தது. இந்த பிரேரணையை அரசாங்கம் நிராகரிப்பதாக கூறியது. முன்னைய அரசாங்கமும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இருந்து விடுபட இதனை பயன்படுத்திக்கொண்டது. எவ்வாறு இருப்பினும் காணமால் ஆக்கப்பட்டோருக்கான காரியாலயம் மிகவும் முக்கியமானதாகும். இதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பின் பக்கம் இருந்து இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. இறுதியாக அவர்கள் வாக்குமூலம் கொடுப்பதை நிராகரிக்கும் நிலைமை உருவாகியது. அதேபோல் இராணுவத்தை தண்டிக்க இடமளிக்க மாட்டோம் என சிங்கள அரசியல் வாதிகள் கூறிக்கொண்டிருந்தனர். அவ்வாறு இருந்தால் எவ்வாறு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும். தமிழ் மக்கள் வலுக்கட்டாயமாக காணமால் ஆக்கப்பட்டமை குறித்து தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. முன்னைய அரசாங்கமும் இதனை சாதகமாக பயன்படுத்தி நெருக்கடியில் இருந்து தப்பிக்கவே முயற்சி செய்தது. இப்போதுள்ள அரசாங்கமும் அவ்வாறான நடவடிக்கையே முன்னெடுத்து வருகின்றது. இறுதி யுத்தத்தில் மிக மோசமான அழிவுகள் ஏற்பட்டது. இராணுவ அதிகாரிகள்தான் அதனை செய்தனர் என்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் குற்றம் இடம்பெற்றதை உறுதிப்படுத்தும் நிலைமை இருந்தும் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியாது 12 ஆண்டுகள் கடந்துள்ளது. இது இனியும் தொடர்ந்தால் குற்றவாளிகள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றார்.

06 ஜூலை 2021

நாரந்தனை வடக்கும் முடக்கப்பட்டது!

இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களின் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் படைத்தளபதி தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நாரந்தனை வடமேற்கு பிரதேசமும், மாத்தறை மாவட்டத்தில், உயன வத்த, உயன வத்த வடக்கு பிரதேசங்களும், களுத்துறை மாவட்டத்தில், புஹாபுடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மலபடவத்த பிரதேசமுமே முடக்கப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

26 ஜூன் 2021

தடைகளைத் தாண்டி இறுதிவரை மக்களுடன் இருப்போம்-கனகரத்தினம் சுகாஸ்!

இம்முறை #கொரோனா #நிவாரணப் #பணியை ஆரம்பித்து இன்றுடன் #ஒரு #மாதம் நிறைவடைகின்றது! கடந்த ஆண்டு 2020 கொரோனா நிவாரணப் பணி, 2020 பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்குப் பிறகு மீண்டும் ஒரு குறுகிய கால இடைவெளியில் இம்முறை எவ்வாறு கொரோனா நிவாரணப் பணியை மேற்கொள்வது? எமது பொருளாதாரம் அதற்கு இடங்கொடுக்குமா? உதவும் தமிழ்ச் சொந்தங்கள் மீண்டும் உதவுவார்களா? உதவ அவர்களுக்கு மனமிருந்தாலும் அவர்களின் பொருளாதாரம் அதற்கு இடங்கொடுக்குமா? என்ற பல அடுக்கடுக்கான கேள்விகளுடன், எப்படியென்றாலும் எமது மக்களோடு இறுதிவரை பயணிக்க வேண்டும் என்ற உந்துதலால் ஆரம்பித்த நிவாரணப் பணி இன்று #உங்கள் #அனைவரது #பேராதரவோடு ஒரு மாதத்தை நிறைவு செய்கின்றது என்பது #ஆச்சரியமான #உண்மை! உங்களின் ஆதரவின்றி நிச்சயமாக இது சாத்தியமாகியிருக்காது! பல சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் #கொடையாளர்கள், சேவை நோக்கோடு பணியாற்றும் #களப் #பணியாளர்கள், #சக #பணியாளர்கள் அனைவருக்கும் எமது சிரந்தாழ்த்திய நன்றிகள்! எத்தனை சவால்களைச் சந்தித்தாலும் இறுதிவரை மக்களுடன் இருப்போம் என்பதில் உறுதியாகவுள்ளோம்! பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்தாலும் இறுதிவரை எம்மவர்கள் வழிகாட்டிச் சென்ற #கஞ்சித் #தொட்டித் #திட்டத்தை நடைமுறைப்படுத்தி என்றாலும் #எம்மக்களோடு #தொடர்ந்து #பயணிப்போம்! “#நாங்கள் #சாப்பிடும்வரை #எமது #மக்களையும் #சாப்பிட #வைப்போம்” என்ற வாசகம் வெறும் உதட்டிலிருந்து பிறந்ததல்ல, அது உள்ளத்திலிருந்து பிறந்தது! ஆதரவளிக்கும் அனைவருக்கும் #கோடி #நன்றிகள்! தடைகளைத் தாண்டி #இறுதிவரை மக்களுடன் இருப்போம்!!!

23 ஜூன் 2021

படையினரால் பல ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன-பாராளுமன்றில் கஜேந்திரன்!

வடக்கு,கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக வெளிநாடுகளுக்குக் குத்தகைக்கு வழங்கக்கூடாது. தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடமே மீளக் கையளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபன அபிவிருத்தி திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். "போரின் பின்னர் வடக்கு, கிழக்கில் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் படையினரால் பல ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் காணிகளில் சில பகுதி சீனாவுக்கு குத்தகைக்கு வழங்க தற்போது திட்டமிடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் யாழ். கீரிமலைப் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையைக் குத்தகைக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம்" எனத் தெரிவித்துள்ளார்.

11 ஜூன் 2021

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றில் தீர்மானம்!

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்பெய்ன்-மொக்ரோ எல்லைப் பகுதி, ரஸ்யா மற்றும் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குளும், எதிராக 15 வாக்களும் அளிக்கப்பட்டதுடன் 40 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வதாகவும் அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் சிவிலியன் சந்தேக நபர்களை கைது செய்யவும் தடுத்து வைக்கவும் கூடிய அதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக சித்திரவகைள் இடம்பெறுவதாகவும் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாகவும், பலவந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் இது சர்வதேச நியமங்களுக்கு அமைவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இலங்கைக்கு மீளவும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்தல், மனித உரிமை விவகாரங்கள் உள்ளிட்ட 27 சர்வதேச பிரகடனங்களை அமுல்படுத்தல் ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்த சலுகை வழங்கப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் வழியாக இந்த சலுகைத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தீர்மானம் நிறைவேற்றிய உறுப்பினர்கள் கோரியுள்ளனர். இலங்கைக்கு தற்காலிக அடிப்படையில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை இடைநிறுத்தக் கூடிய சாத்தியங்கள் உண்டா என்பதனை உன்னிப்பாக மதிப்பீடு செய்யுமாறும் கோரியுள்ளனர்.

08 ஜூன் 2021

சிவசங்கர் பாபா கைது செய்யப்படவேண்டும்-சீமான் கண்டன அறிக்கை!

பிஞ்சுப்பிள்ளைகளை ஆன்மீகத்தின் பெயரில் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி மீதும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்று சீமான் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:"செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா அப்பள்ளியில் பிஞ்சுப்பிள்ளைகள் மீது நிகழ்த்தி வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து வெளிவந்திருக்கும் செய்திகள் பேரதிர்ச்சி தருகின்றன. அப்பள்ளிக்கூடத்தில் படித்த மாணவிகள் அங்கு நடந்த கொடூரங்களை விளக்கும் குரல் பதிவுகளும், கேள்வியுறும் செய்திகளும் ஈரக்குலையைக் கொதிக்கச் செய்திருக்கின்றன.பள்ளி எனும் கல்விக்கட்டமைப்புக்கு அனுமதிபெற்று, எவ்வித விதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் ஆட்படாது ஆன்மீகத்தின் பெயரைச்சொல்லி, தன்னை கடவுளாக உருவகப்படுத்திக் கொண்டு கல்வி பயில வரும் ஆயிரக்கணக்கான பெண் பிள்ளைகளை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கியும், இதற்கெதிராகக் குரல் கொடுக்க முயல்வோர் மீது அடக்குமுறையை ஏவியும் ஒடுக்குவதுமெனப் பல ஆண்டுகளாகக் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பாபா சிவசங்கர் போன்றவர்கள் கடும் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டியவர்களாவர்.‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?' எனும் ஆணாதிக்க ஒடுக்குமுறைகளைத் தகர்த்து, சமூகத்தில் தலைதூக்கவும், மேலெழுந்து உயரவும் உதவும் ஒற்றைப்பேராயுதம் கல்வியே என்பதையுணர்ந்து, பள்ளிக்கூடத்திற்கு வரும் பிஞ்சுப்பிள்ளைகளை ஆன்மீகத்தின் பெயரால் தங்களது பாலியல் இச்சைகளுக்கு இரையாக்கிய சிவசங்கர் பாபா நிகழ்த்திய கொடுமைகளும், அத்துமீறல்களும் வெளியே வராது மூடி மறைக்கப்பட்டிருப்பது தற்செயலானதல்ல.ஆயிரக்கணக்கான பெண்களைப் பலிகொண்ட சமகாலத்தில் நடந்தேறிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போல இச்சம்பவத்திற்குப் பின்னாலும் பெரும் வலைப்பின்னலும், ஆட்சியாளர்களின் தொடர்பும் இருக்கும் எனும் வாததத்தைப் புறந்தள்ளுவதற்கில்லை. பணபலமும், அரசியல் செல்வாக்கும், அதிகாரப்பின்புலமும், சமூக அங்கீகாரமும் இருக்கும் மமதையில், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் மிதப்பிலும், மனப்போக்கிலும் மனிதத்தன்மையற்று பிஞ்சுப்பிள்ளைகளைச் சிதைத்திட்ட சிவசங்கர் பாபா போன்றவர்கள் சமூகத்தின் சாபக்கேடு.பள்ளி எனும் கல்விக்கூடத்தின் பெயரால் அதிகார மையங்களை அமைத்து, அதன்மூலம் தங்களது உடற்பசிக்குப் பிஞ்சுகளைக் குதறும் கயவர்களை எவ்விதப் பாரபட்சமுமில்லாது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், தண்டிக்கவும், கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டியது பேரவசியமாகிறது. சமூகத்தின் மேல்தட்டிலிருக்கும் மனநிலையில் கொஞ்சம்கூட ஈவு இரக்கமற்று அப்பாவிப்பெண் குழந்தைகளைப் பலிகடாக்கிய சிவசங்கர் பாபா இச்சமூகத்தில் இன்னும் சுதந்திரமாக வாழ்வது வெட்கித் தலைகுனியச் செய்கிறது.அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து, பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அதனை வெளிக்கொணரும் வேளையிலும் அப்பள்ளி மீதும், சிவசங்கர் பாபா மீதும் நடவடிக்கை எடுக்காது தமிழ்நாடு அரசு மெத்தனப்போக்கோடு இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இவ்விவகாரத்தில், தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஒப்புக்குப் பள்ளிக்குச் சென்று விசாரணை எனும் பெயரில் பார்வையிட்டதைத் தவிர எவ்வித முன்நகர்வும் இல்லாதது பெரும் ஏமாற்றமாகும்.பெண் பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்குப் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையுமில்லை என்று வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கிறது. சிவசங்கர் பாபா மீதும், அப்பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஏன் தயங்குகிறது என்பது இதுவரை புரியவில்லை.ஆகவே, இனிமேலாவது முனைப்போடு செயல்பட்டு, பள்ளிக்கூடம் நடத்துவதாகக் கூறிக்கொண்டு, பாலியல் முறைகேடுகளையும், வன்கொடுமைகளையும் பல ஆண்டுகளாகச் செய்து ஆயிரக்கணக்கான பெண் பிள்ளைகளைச் சிதைத்திட்ட சிவசங்கர் பாபா மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உடனடியாகச் சிறைப்படுத்த வேண்டுமெனவும், சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

29 மே 2021

தோல்வி கண்டு துவளாத சீமான்,களத்தில் நாம் தமிழர்!

சீமான் குரலை கேட்டதுமே, வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, களப்பணியில் இறங்கி வருகின்றனர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்..! சீமானை பொறுத்தவரை வெற்றியோ தோல்வியோ, இதுவரை தனி நபராகவே தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.. இதற்கு மிகுந்த மனவலிமை தேவை.. துணிச்சல் தேவை.. இந்த முறையும் அப்படித்தான் இறங்கினார்..!இந்த முறை தேர்தலில் அவரது 2 வியூகங்கள் பாராட்டத்தக்கது.. ஒன்று ஆதித் தமிழர் என்ற பெயரில் தலித் வேட்பாளர்களை சீமான் களம் இறக்கியது வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்பட்டது.மற்றொன்று, ஜெயலலிதா பிறந்த நாள் அன்று, சசிகலாவை சீமான் சந்தித்து பேசியது மிக நுட்பமான அரசியலை வெளிப்படுத்தியது.. நேரடியாகவே சசிகலாவை சீமான் சந்தித்து பேசியதால், நாம் தமிழர் கட்சிக்கு முக்குலத்தோர் வாக்குகள் ஓரளவு கிடைக்கும் என்று அப்போதே கணிக்கப்பட்டது.. அதுதான் இறுதியிலும் நடந்தது.தினகரனை ஓரங்கட்டும் அளவுக்கு முன்னேறி உள்ளார் சீமான்.. அனைத்து இடங்களிலும் தோல்வி என்று பொதுப்படையாக சொன்னாலும், சீமானுக்கான அரசியல் கட்டமைப்பு உயர்ந்து வருகிறது.. எனினும், தற்போதைய காலகட்டத்தில் தொற்று தலைதூக்கி வரும்நிலையில், சீமான் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற ஆர்வம் பரவலாக ஏற்பட்டு வருகிறது.ஏன் நாம் தோத்து போனோம்? என்ன காரணம்? எங்கே தவறு நடந்தது? யார் சொதப்பியது? என்பது குறித்தெல்லாம் ஆலோசனையே நடத்தவில்லை... 234 தொகுதிகளிலும் தோல்வி என்றபோதும், அதை பற்றியும் கவலையே படவில்லை சீமான்.. ரிசல்ட் வந்த மறுநாளே கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் ஆன்லைன் வழியாக ஆலோசனையில் இறங்கி விட்டாராம்..இதையடுத்து, அக்கட்சியின் சார்பாக போட்டியிட்ட 117 ஆண் வேட்பாளர்கள், மற்றும் 117 பெண் வேட்பாளர்களுடன் தனித்தனியாகவும் ஆலோசனை கூட்டங்களை நடத்தினாராம். இப்படியே முழு நேரமும் கட்சி பணியில் தன்னை ஈடுபத்தி கொண்டுள்ளார். அவ்வப்போது, முக்கிய பிரச்சனைகள் குறித்து, தமிழக அரசுக்கு அறிக்கைகளையும் விடுத்து வருகிறார்.தந்தையின் இறப்பு ஏற்பட்டுவிடவும், 2 நாள் மட்டும் சொந்த ஊரில் தங்கியிருதார்.. மற்படி, கட்சியின் கட்டமைப்பு பணிகளிலேயே பிஸியாக இருக்கிறார்... இதற்கு நடுவில், கொரோனா நலத்திட்ட உதவிகளையும், கட்சியினரிடம் சொல்லி முடக்கிவிட்டுள்ளார்.. இதற்காகவே ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக போன் பண்ணி பேசி கொண்டிருக்கிறாராம்.. சீமான் குரலை கேட்டதுமே, நிர்வாகிகள் வேட்டியை மடித்து களத்தில் குதித்துள்ளனர்.. வழக்கம்போலவே, மக்களிடம் நெருங்கியே இருக்கும் முயற்சிகளிலும் சீமானின் தம்பிகள் இறங்கிவிட்டனர்..!

நன்றி:one india

12 மே 2021

தமிழ் சகோதர சகோதரிகளின் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம்!

ஸ்ரீ லங்கா அரசாங்கம் தமிழ் மக்களைத் துன்புறுத்திய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த ஒடுக்குமுறை ஸ்ரீலங்காவில் தொடர்கின்றது. எனவே எங்கள் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம், நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் என கனடா, ஒன்ராரியோ மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் குராடான் சிங் தெரிவித்துள்ளார். அண்மையில் கனடா நாடாளுமன்றில் உரையாற்றிய இவர் “வணக்கம்” கூறி தமது உரையை ஆரம்பித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், “தமிழ் இனப்படுகொலை வாரத்தில் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை மரியாதையாக எண்ணுகின்றேன். இந்த வாரம் தமிழர்களுக்கு ஒரு இடத்தை வழங்கும், தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு கடுமையான அநீதியைப் பற்றி குழுவில் உள்ளவர்கள் அறிந்து கொள்ள இது ஏதுவாக அமையும். இனப்படுகொலையின் வரலாறு மற்றும் ஸ்ரீ லங்கா அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள். ஸ்ரீ லங்கன் அரசாங்கம் தமிழ் மக்களைத் துன்புறுத்திய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. பல தசாப்தங்களாக, ஸ்ரீ லங்கா ஆளுகை தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்பு, நேரடி மற்றும் கலாச்சார வன்முறை மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றின் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. 1983 ஆம் ஆண்டில் கறுப்பு ஜூலையின் ஒழுங்கமைக்கப்பட்ட இனப்படுகொலை எங்களுக்கு நினைவிருக்கிறது. அங்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வாக்காளர்களின் பட்டியல்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளையும் வழங்கியது. இதனால் ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர் கும்பல் தமிழ் குடும்பங்களை அடையாளம் காண முடிந்தது. இந்த கும்பல்கள் தமிழர்களைத் தாக்கி ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொல்ல சதி செய்தது. யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததை நினைவில் கொள்கிறோம். விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தமிழ் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டன. செஞ்சோலையில் அனாதை இல்லத்தின் மீது குண்டுவெடித்தது செம்மனியின் கல்லறைகளை நாங்கள் நினைவில் கொள்கிறோம். வெள்ளை வேன்களில் தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு காணாமல் போன ஆண்டுகளை நாங்கள் நினைவில் வைத்திருக்கிறோம். அங்கு அவர்களது குடும்பங்கள், இன்று வரை ஸ்ரீ லங்கன் அரசாங்கத்தால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே என்று கேட்கிறார்கள். சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார ரீதியாக தமிழர்கள் விலக்களிக்கப்பட்டுள்ளனர்; தமிழ் மக்கள், அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையை அகற்றும் முயற்சியில் அடிப்படை சுதந்திரங்கள் மறுக்கப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அல்லது முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது மிகவும் அழிவுகரமான தாக்குதல்களில் ஒன்றாகும். அங்கு ஸ்ரீ லங்கா அரசாங்கம் ஒரு தாக்குதலை நடத்தியது, இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காணாமலாக்கப்பட்டனர். இதையடுத்து ஏராளமான தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கனடாவிலுள்ள தமிழர்களும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த கட்டடத்திற்கு வெளியிலும் போராட்டம் நடந்ததை நான் நினைவுகூருகின்றேன். இரவு பகல் பாராது மழை, வெயில் பாராது மக்கள் இங்கு போராட்டத்தில் கலந்துகொண்டு ஒரு மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்தினர். ஆனால் அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதை நான் கவலையுடன் தெரிவிக்கின்றேன். உலகத்தலைவர்களும் இதற்கு பதில் வழங்கவில்லை. அந்த காலக்கட்டத்தில் தமிழ் மக்கள் பாரியளவு உயிரிழப்புக்களையும், சேதங்களுக்கும் முகங்கொடுத்தனர். அவர்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை. அவர்களுடைய தேவைகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவுமில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையும் வன்முறைகளும் இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதை அண்மைய காலங்களிலும் நாம் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இலங்கை அரசாங்கம் இடித்தழித்ததை குறிப்பிடலாம். இதன்மூலம் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை மீண்டும் ஆரம்பிப்பதாக தோன்றுகின்றது. தமிழ் இனப்படுகொலை வாரம் வருவதை நாம் இப்போது காண்கிறோம், இந்த ஏற்பாட்டின் முடிவுகளை, பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தமிழ் சமூகத்திற்கு எதிரான அநீதிகள், பேரணிகள் மற்றும் ஏற்பாடு மற்றும் இளைஞர் கூட்டங்களை நடத்துகின்றனர். பல மிரட்டல்களுக்கு மத்தியில் இது முன்னெடுக்கப்படுகின்றது. இப்போது, தமிழ் இனப்படுகொலை வாரம் வருவதால், தமிழ் சமூகங்களுக்கு தமிழ் இனப்படுகொலை பற்றி அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் அவர்களின் தற்போதைய தலைமுறையினருக்கும் கல்வி கற்பிப்பதற்கான வாய்ப்பை மட்டும் கொடுக்கப்போவதில்லை. முன்னோக்கிச் செல்வது நீதி மற்றும் பொறுப்புக்கூரல் இருப்பதை உறுதிசெய்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே எங்கள் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம், நீதிக்காக தொடர்ந்து போராடுவோம், உடனடியாக தமிழ் இனப்படுகொலை வாரத்தை கடந்து அதை செய்து காட்டுவோம்” என்று கூறி தனது உரையை முடித்தார்.

05 மே 2021

தமிழகத் தேர்தலில் அதிரடி காட்டிய சீமான்!

"அட ஆச்சரியமா இருக்கே.. சீமான் எப்படி 3வது இடத்துக்கு வந்தார்? நம்பவே முடியலையே" என்ற வியப்பு கேள்விகள் இந்த 4 நாட்களாகவே அரசியல் களத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.. மாயம் இல்லை.. மந்திரம் இல்லை.. நாம் தமிழர் எப்படி 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது என்பதற்கான வாக்கு வங்கி சதவீதம் தொகுதி வாரியாக வெளிவந்துள்ளது. இந்த தேர்தலிலாவது சீமான் கூட்டணி வைப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.. கமலுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தது.. ஆனால் சீமான்தான் மறுத்து விட்டார்.. வழக்கம்போலவே சிங்கம் சிங்கிளாகவே களம் இறங்கும் என்று அறிவித்தார். இதுவரை வந்த கருத்து கணிப்புகளில் அனைவருமே சொல்லி வைத்தது போல ஒரே கருத்தை சொன்னார்கள்.. இந்த முறை நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய ஓட்டுக்களை பிரிக்கும் என்றார்கள்.. அதன்படியே எல்லா தொகுதிகளிலும், கணிசமான ஓட்டுகளை பெற்றுள்ளது... அதாவது மொத்தம், 30 லட்சத்து, 43 ஆயிரத்து, 657 ஓட்டுகளை பெற்றுள்ளது.. இந்த தமிழ்நாடு என்ற மாநிலத்தின் 3வது பெரிய கட்சியாகவும் உருவெடுத்து உள்ளது.கடந்த எம்பி தேர்தலைவிட 13.79 லட்சம் ஓட்டுகளை ஜாஸ்தி பெற்றுள்ளது இந்த கட்சி.. சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட, சீமான் 48 ஆயிரத்து, 597 ஓட்டுகளை பெற்றார்... அவரது கட்சியின் வேட்பாளர்கள், ஆவடி, சோழிங்கநல்லுார், துாத்துக்குடி தொகுதிகளில், 30 ஆயிரம் ஓட்டுக்கு மேல் பெற்றுள்ளனர்.செங்கல்பட்டு, மாதவரம், பூந்தமல்லி, திருவாரூர் தொகுதிகளில், 25 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.,. 14 தொகுதிகளில், 20 ஆயிரம் ஓட்டுகளுக்கு அதிகமாகவும், 36 தொகுதிகளில், 15 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேலாகவும், 106 தொகுதிகளில், 10 ஆயிரம் ஓட்டுக்கு கூடுதலாகவும் பெற்றுள்ளனர்... இதுதான் சீமான் கட்சி 3வது இடத்துக்கு வர காரணம்.. இந்த ஓட்டுகள் தான் அதிமுகவின் வெற்றியை பாதிக்கவும் பிரதான காரணம்.இதில் இருந்து என்ன தெரிந்து கொள்ள முடிகிறது என்றால், முறையான கட்டமைப்பை ஏற்படுத்தினால், எந்த கட்சியாக இருந்தாலும் டாப் கியர் போட்டு மேலே வரும் என்பதற்கு உதாரணம்தான் நாம் தமிழர் கட்சி.. இது இந்த தேர்தலில் மட்டுமல்ல, கடந்த தேர்தலிலும் சீமான் இதை செய்திருந்தார்.. ஆனால், அதை சரியாக பலரும் உற்றுப்பார்க்க தவறிவிட்டனர்.. மேலும் சீமானின் பேச்சுக்களே சோஷியல் மீடியாவில் நம்பர் 1 இடத்தில் இருந்ததாலும், டிடிவி தினகரன் 3வது இடத்துக்கு வந்துவிட்டதாலும், நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் அவ்வளவாக பேசப்படவில்லை.இந்த முறைகூட பல அரசியல் நுணுக்கங்களை புகுத்தி உள்ளார் சீமான்.. சசிகலாவை சென்று சந்தித்ததன் விளைவு, முக்குலத்தோர் வாக்குகளை தெற்கில் பிரதானமாக கொக்கி போட்டு இழுத்துள்ளார்.. தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு பல இடங்களில் குடைச்சலையும் தந்துள்ளார்.. அதேபோல, நாங்குநேரி ராதாபுரம் தொகுதியில் வேட்பாளரை நிறுத்திய புதுமையையும் இந்த முறை சீமான் கையாண்டுள்ளதால், கமலை இந்த விஷயத்தில் ஓவர்டேக் செய்துவிட்டதாகவே பார்க்கப்பட்டு வருகிறது...ஆனால் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் நிற்காமல், கொளத்தூர் தொகுதியிலேயே போட்டியிட்டிருந்தால், கூடுதல் வாக்குகளை பெற்றிருக்கலாம் என்கிறார்கள்.. அதாவது ஸ்டாலின் Vs சீமான் என்ற ரேஞ்சுக்கு களம் மாறுபட்டிருக்கும்.. அது நாம் தமிழருக்கு கூடுதல் வலிமையை பெற்று தந்திருக்கும்..அதேசமயம், அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக தனித்து நின்று மொத்த தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் துணிச்சல் சீமானுக்கு மட்டுமே பொருந்தும்.. முக்கியமான தொகுதிகளில், யாருமே எதிர்பாராத வகையில் ஆதித் தமிழர் என்ற பெயரில் தலித் வேட்பாளர்களை களம் இறக்கியது போன்ற வித்தியாசமான, முயற்சியையும் மேற்கொள்ள சீமானுக்கு மட்டுமே தைரியம் வரும்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களுடன் என்றுமே இணைந்து தோள் கொடுக்கும் சீமானின் தம்பிகளின் பங்கு அபரிமிதமானது..!எனினும் ஒரு விஷயத்தை நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.. ஓட்டுக்கு காசு என்ற பழைய மக்கிப்போன விஷயத்தை தூக்கி குப்பையில் எறிந்துள்ளார் சீமான்.. இனி காசு வாங்காமல் ஓட்டுப்போடும் நிலை தமிழகத்தில் உருவானால், அதற்கான சத்தான விதையை ஆழமாக விதைத்த பெருமை சாட்சாத் நம் சீமானையே போய் சேரும்..!

17 ஏப்ரல் 2021

நடிகர் விவேக் மரணம்!என்னதான் நடந்தது?

நடிகர் விவேக்கின் திடீர் மரணம் தமிழ் சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவரது மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விவேக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் கோலோச்சி வந்தார்.இயக்குநர் பாலச்சந்தர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட விவேக் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் விவேக். மக்கள் தடுப்பூசி போட அச்சப்படக்கூடாது என்று தைரியம் கூறினார் விவேக்.இதனை தொடர்ந்து உடல் சோர்வுடன் இருந்த நடிகர் விவேக், நேற்று காலை வழக்கமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சியையும் மேற்கொள்ளவில்லை. பின்னர் காலை 11 மணியளவில் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார் விவேக்.அப்போது திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக் திடீரென மயங்கி சரிந்து விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் மற்றும் எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், விவேக் இன்னும் ஆபத்தான கட்டத்தில் தான் இருக்கிறார் என்றனர்.மேலும் அவரின் உடல் நலக்குறைவுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினர். நடிகர் விவேக்கிற்கு ஏற்கனவே ரத்தக்கொதிப்பு இருந்தது என்றும் அவரது இதயத்தின் இடதுபுற ரத்தக்குழாயில் 100% அடைப்பு இருந்தது என்றும் கூறினர்.மேலும் நடிகர் விவேக்கிற்கு கார்டியோஜெனிக் ஷாக் எனும் இதய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் உடலுக்குத் தேவையான போதுமான இரத்தத்தை இதயத்தால் பம்ப் பண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது கடுமையான மாரடைப்பை ஏற்படுத்தி விட்டது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து விவேக்கின் உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஆனால் 24 மணி நேரத்திற்குள்ளேயே இன்று காலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்தது.விவேக்கின் இதயத்துடிப்பு மற்றும் நுரையீரல் செயல்பாட்டை தூண்டும் வகையில் தொடர்ந்து எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் விவேக்கின் இதயத்துடிப்பு முற்றிலும் குறைந்து இன்று காலை நின்று போனது. அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

15 ஏப்ரல் 2021

புளியங்கூடல் பற்றிய காணொளி-வெளியீடு கப்பிற்றல் தொலைக்காட்சி!

புளியங்கூடல் கிராமம் பற்றிய தகவல்களை வழங்கியிருப்போர் மதிற்பிற்குரிய கணேசலிங்கம் அண்ணா மற்றும் செந்தூரன் அவர்கள்.

27 மார்ச் 2021

நாளை மாபெரும் சைக்கிள் பேரணிக்கு நாம் தமிழர் அழைப்பு!

சென்னையில், மார்ச் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, நாம் தமிழர் கட்சி சைக்கிள் பேரணி நடத்தி மக்களிடம் ஆதரவு கேட்க உள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடைபெற இருக்கின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்பதும், அதன் வேட்பாளர்களில், சரிபாதி தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவதும் தாங்கள் அறிந்ததே.அதில் ஒரு சிறப்பம்சமாக, தியாகராய நகர் தொகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் சகோதரி சிவசங்கரி போட்டியிடுகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறையின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.சகோதரி சிவசங்கரியை ஆதரித்தும், தமிழகம் முழுவதும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து வருகிற மார்ச் 28ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பாசறையானது, மாபெரும் மிதிவண்டிப் பரப்புரைப் பேரணியை நடத்த உள்ளது.மிதிவண்டிப் பரப்புரைப் பேரணியானது, அன்றைய தினம் காலை 6.30 மணி அளவில் ஆரம்பித்து, சௌந்தர பாண்டியனார் அங்காடி, எம்ஜிஆர் நினைவு இல்லம், நடேசன் பூங்கா, துரைசாமி சுரங்கப்பாதை, மேற்கு மாம்பலம், அசோக்நகர் , வடபழனி, கோடம்பாக்கம் வழியாக மீண்டும் பனகல் பூங்காவினை காலை 8.30 மணி அளவில் சென்றடைந்து நிறைவடைகிறது. இந்த நிகழ்வில் நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

19 மார்ச் 2021

தமிழர்களுக்கு எதிரான உச்சக்கட்ட கொடூரமே முள்ளிவாய்க்கால் படுகொலை!

2009 ஆம் ஆண்டில், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி சில மாதங்களில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர் என பிரித்தானிய நாடாளுமன்ற தொழிற்கட்சியின் உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் ஒன்று (Back bench Debate) நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்திற்கான முன்னெடுப்புக்களை பிரித்தானியத் தமிழர் பேரவையினர், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவினூடாக (APPG forTamils) முன்னெடுத்திருந்தனர். கடந்த 11ஆம் திகதி பெப்ரவரி மாதம் 
நடைபெறவிருந்த இந்த விவாதமானது நாடாளுமன்றத்தில் வேறு ஒரு அவசர நிகழ்வால் மாற்றப்பட்டு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளின் மிக உச்சகட்டமான முள்ளிவாய்க்கால் படுகொலையின் கொடூரத்தை நாம் அனைவரும் அறிவோம். இலங்கையின் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும், அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச (தற்போதைய ஜனாதிபதி) பாதுகாப்பு செயலாளராக இருந்தனர். 1980 களில் இருந்து, தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினரான இலங்கையில் குறைந்தது 60,000 மற்றும் 100,000 வழக்குகள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச பொது மன்னிப்பு சபை மதிப்பிடுகிறது. இந்த புள்ளிவிவரங்கள் துன்பத்தின் அளவு, உண்மைகளைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் தீர்வுக்கான அவசரத் தேவையை வலியுறுத்துகின்றன. உள்நாட்டுப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றின் கொடுமை, பெண்களின் உரிமைகளை பெருமளவில் மீறிய கதைகள், அவை நாம் ஒருபோதும் மறக்க முடியாத கதைகள். எனினும், இன்றுவரை, சர்வதேச குற்றங்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இதேவேளை, இலங்கையில் மனித உரிமைகள் மீண்டும் மீறப்படுகின்றன. கடுமையான போர்க்கால துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பலர் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் ஏழு அமைச்சரவை பதவிகள் உட்பட ஒன்பது அமைச்சர் பாத்திரங்களை வகிக்கின்றனர், மேலும் பாதீட்டில் கால் பகுதியை நிர்வகிக்கின்றனர். மனித உரிமை மீறல் குற்றவாளிகளாக கருதப்படும் பாதுகாப்புப் படையின் உறுப்பினர்களில் ஒருவரான சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மன்னிப்பு வழங்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான மிரட்டல் மிகச் சிறந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு வலுவான நடவடிக்கை எடுக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவை அழைப்பு விடுத்தது. இது தமிழர்களின் மனித உரிமைகள் பற்றியது மட்டுமல்ல. கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசு வலியுறுத்தியது. இதன் மூலம் நாட்டில் உள்ள கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களின் மத நம்பிக்கைகளை புறக்கணித்தது எனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, பிரித்தானியா முழுவதும் அரை மில்லியன் தமிழர்கள் உள்ளனர். அவர்கள் ஒரு கடின உழைப்பாளி, மரியாதைக்குரிய மற்றும் அர்ப்பணிப்புள்ள சமூகம், அவர்கள் எனக்கு மிகுந்த மரியாதை செலுத்துகிறார்கள். அயராது உழைக்கும் ஏராளமான தமிழர்களுக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். நான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி செலுத்துகிறேன், நல்லிணக்கத்திற்கான பாதை நீண்ட காலமாக இருந்தாலும், அவை அடையப்படும் வரை நாங்கள் நீதி மற்றும் மனித உரிமைகளுக்காக போராடுவோம் என்று சத்தமாகவும் தெளிவாகவும் கூறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

13 மார்ச் 2021

மறுபடியும் இரட்டை இலை, உதயசூரியனுக்கு ஓட்டு போட்டால்நாசமாகத்தான் போவீங்க-சீமான்!

ஒன்னு சொல்றேன்.. மறுபடியும் இரட்டை இலை, உதயசூரியனுக்கு ஓட்டு போட்டால், நாசமாகத்தான் போவீங்க" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் காட்டமாக முழங்கினார். பேசினார். சீமான் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.. தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.. செல்லும் இடமெல்லாம் சீமானின் பேச்சுக்கு மக்கள் கைகளை தட்டி வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல சீமானும், தன்னுடைய பேச்சில் அதிமுக, திமுகவை சரமாரியாக விமர்சித்து வருகிறார். கிருஷணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்றும் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் சொல்லும்போது, "கழக ஆட்சிகளை, கட்சிகளை முழுதுமாக அப்புறப்படுத்தாமல், நாட்டு மக்களை வாழ வைக்க முடியாது... தமிழக அரசிற்கு உள்ள, 6 லட்சம் கோடி கடனை யார் தள்ளுபடி செய்வது என்ற கேள்விக்கு இப்போ வரைக்கும் பதில் இல்லை... ஊழல் மிகவும் குறைவாக உள்ள நாடு டென்மார்க். அதற்கு காரணம் வெளிப்படை நிர்வாகம்.. அந்த மாதிரிதான் நாங்கள், தமிழகத்திலும் வெளிப்படை நிர்வாகத்தை கொடுக்க விரும்புகிறோம்.கல்வியில் சிறந்த நாடாக தென்கொரியா உள்ளது. அந்த நாட்டை தாண்டி, தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும்... தரமான கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்குவோம். கல்வி, மருத்துவம், குடிநீர் வினியோகம் ஆகியவற்றை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து உள்ளது.. இப்போதைய ஆட்சி யாளர்களின் பொருளாதார கொள்கை முடிவு.முதல்வர், அமைச்சர், எம்எல்ஏ, எம்பி அரசு அதிகாரிகள் குழந்தைகள், அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும்.. அரசு மருத்துவமனையை பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் சட்டம் கொண்டு வருவோம்... எங்களை நம்பி, ஓட்டு போட்டால் நீங்கள் நல்லா இருப்பீங்க.. ஆனால், மறுபடியும் இரட்டை இலை, உதயசூரியன் என்றால் நாசமாக போவீங்க..திராவிட அரசியல் என்பது, திராவிட கோட்பாடு என்பது தமிழர்களை சாதி, மதம் என பிளந்து, பிளவுபட்டு ஆளுவது.. ஆனால், தமிழ் தேசிய அரசியல் என்பது சாதி, மத பிளவுகளை இணைத்து, ஒன்றுபட்டு, ஒன்றுதிரட்டி, அரசியல் வலிமை பெற்று, அதிகாரத்தை கைப்பற்றி ஆளுவது.. இது இரண்டுக்கும் வேறுபாடு இருக்கு.. கட்சி வேற கட்சிதான்.. கோட்பாடு ஒன்றுதான், கொள்கை ஒன்றுதான்.திமுகவில் எந்த இடத்தில் அதிமுக கொள்கை மாறுபடுகிறது? அதிமுகவில் இருந்து திமுக எந்த இடத்தில் மாறுபடுகிறது? இங்கியும் ஊழல், அங்கியும் ஊழல்.. இங்கியும் லஞ்சம், அங்கியும் லஞ்சம்.. இங்கியும் திருட்டு, அங்கேயும் திருட்டு.. இங்கியும் இருட்டு, அங்கேயும் இருட்டு.. இங்கியும் டாஸ்மாக், அங்கியும் டாஸ்மாக், அதனால ரெண்டு கட்சியும் இதுவரை பாஸ்மார்க்..!அப்போ இந்த கருத்தியலுக்கு மாற்று தமிழியம்தான், தமிழ்தேசிய அரசியல்தான்.. தயவுசெய்து இந்த முறை, இந்த முறை பழகிடுச்சுன்னு மட்டும்
சொல்லாதீங்க.. சிந்தனையை மாற்றி பாருங்கள்.. இந்த முறை விவசாய சின்னத்துக்கு ஓட்டு போட்டு பாருங்கள்" என்றார்.

12 மார்ச் 2021

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரது கூடாரத்தை அகற்றியது பொலிஸ்!

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பு – மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடைபெறுகின்ற நிலையில், இன்று அதிகாலை போராட்டம் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரமும், பதாகைகளும் அகற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பொலிஸாரினால் இந்த அகற்றல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், கறுப்புக் குடைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டததை முன்னெடுத்தனர். இதேவேளை, கூடாரம் மற்றும் பதாகைகள் அகற்றப்படடமை தொடர்பாக, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்வதற்குச் சென்றவேளை, கூடாரம் உள்ளிட்டவற்றை தாமே அகற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்துள்ளார். நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாகவே குறித்த கூடாரம் உள்ளிட்டவை அகற்றப்பட்டதாக, குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார். எனினும், நீதிமன்றக் கட்டளை தொடர்பாக எந்தவித அறிவிப்புகளும் தமக்கு வழங்கப்படாமல், எவ்வித முன்னறிவித்தலும் வழங்கப்படாமல் தன்னிச்சையாக இந்தச் செயற்பாடு இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இது சட்ட விரோதமான செயலென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவுசெய்துள்ளதாக அருட்தந்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில், சாத்வீக ரீதியான, அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் நீதி கோரிய போராட்டம் அனைத்துத் தடைகளையும் தாண்டி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவிக்கையில், நாங்கள் போராட்டம் நடத்தும் கூடாரங்களை அகற்றிச் சென்றமையானது இந்த நாட்டில் நீதி செத்துவிட்டது என்பதையும் அநீதி தலைவிரித்தாடுவதையும் காட்டுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

09 மார்ச் 2021

பிரபாகரனின் தம்பி நான்,சமரசத்திற்கு இடமில்லை,சீமான் அதிரடிப்பேச்சு!

இலவசங்களையும் கவர்ச்சித் திட்டங்களையும் அறிவிக்கப் போவதில்லை. மக்களுக்கு இலவசங்களே தேவைப்படாத அளவிற்கு வாழ்க்கைத்தரத்தை மாற்றுவோம் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். திருவொற்றியூர் தொகுதியில் முதல் பிரச்சாரத்தை தொடங்கிய சீமான், ஓடி ஆடி வேலை செய்யக்கூடிய தெம்பு இருக்கும் போதே அதிகாரத்தை கொடுங்கள் சிறப்பான ஆட்சியை தருகிறோம் என்று கூறி வாக்கு சேகரித்தார். சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி. ஒரே மேடையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து விட்டு பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டார் சீமான்.சென்னை திருவொற்றியூரில் களம் காண்கிறார் சீமான். விவசாயி சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்த சீமான், முதல் பிரச்சாரத்திலேயே அதிரடியான வாக்குறுதிகளை அளித்தார். மிக்சி தருகிறேன், டிவி தருகிறேன் என்று இலவசங்களை கவர்ச்சி திட்டங்களை அறிவிக்க மாட்டேன் என்று கூறினார்.உங்களை நம்பி இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான இலவசக் கல்வியை அளிப்போம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும் வகையில் உத்தரவாதத்தை கொடுப்போம் என்றார்.இலவசங்களை மக்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அவர்களின் வாழ்வை உயர்த்த முயற்சி செய்வோம். தண்ணீர் விற்பனைக்கு தடை செய்வோம். தரமான மருத்துவம் ,கல்வி ,கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்பினை அளிப்போம் என்றார், அனல்மின் நிலையத்தை உருவாக்கி வாழும் இடத்தை அழித்து சாம்பலாக்கி கொண்டிருக்கிறார்கள். காட்டுப்பள்ளியில் 6000 ஏக்கர் இடத்தை அதானி வாங்கி மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்துள்ளார். பிரபாகரனின் தம்பி நான்; எதற்கும் சமரசம் செய்யாமல் சண்டை போடும் துணிவு கொண்டவன்.உடம்பில் ஆடி ஓடி வேலை செய்ய தெம்பு இருக்கும் போதே கொண்டு போய் அதிகாரத்தில் அமர வைத்து விடுங்கள் நாங்கள் சிறப்பான ஆட்சியை உங்களுக்குக் கொடுக்கிறோம். சக்கர நாற்காலியில் அமர்ந்த பிறகு பதவி கொடுத்தால் வேலை செய்ய முடியாது எனவே இப்போதே ஜெயிக்க வைத்து விடுங்கள் என்று வாக்கு சேகரித்தார் சீமான்.

08 மார்ச் 2021

மக்கள் நலனே முக்கியம் என்பதால் திருவொற்றியூரில் போட்டி​-சீமான்!

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன் என்று சீமான் விளக்கி உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்காக தற்போது நாம் தமிழர் கட்சி டாப் கியரில் சென்று கொண்டு இருக்கிறது. திமுக, அதிமுக இன்னும் முழுமையாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிக்கவில்லை. ஆனால் நாம் தமிழர் கட்சியோ கூட்டணி பற்றியெல்லாம் யோசிக்காமல் துணிச்சலாக தேர்தலை தனியாக சந்திக்க உள்ளது. இதற்காக நேற்று நாம் தமிழர் கட்சி தங்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்தது. சட்டசபை தேர்தலுக்கான 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி நேற்று அறிவித்தது.ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்தார். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. லோக்சபா தேர்தல் போலவே 50% பெண் வேட்பாளர்களை சட்டசபை தேர்தலிலும் களமிறக்குவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் நேற்று 50% பெண் வேட்பாளர்களை சீமான் அறிவித்தார்.234 வேட்பாளர்களில் 117 ஆண் வேட்பாளர்கள் ,117 பெண் வேட்பாளர்கள் நாம் தமிழர் சார்பாக சீமானால் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட போகிறேன் என்று சீமான் முன்பு கூறி இருந்தார்.இதனால் கொளத்தூர் தொகுதியில் சீமான் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் கொளத்தூர் தொகுதிக்கு பதிலாக திருவொற்றியூர் தொகுதியை சீமான் தேர்வு செய்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன் என்று சீமான் விளக்கி உள்ளார். அதில், கொளத்தூரில்தான் போட்டியிடலாம் என்று இருந்தேன்.ஆனால் மக்கள் நலன்தான் முக்கியம். ஒருவரை வீழ்த்துவது முக்கியம் இல்லை. ஒருவரை வீழ்த்துவதை விட மக்களுக்கு என்ன செய்கிறேன் என்பதே முக்கியம். இதனால் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடாமல் திருவொற்றியூர் தொகுதியை தேர்வு செய்து இருக்கிறேன், என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

28 பிப்ரவரி 2021

உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் அம்பிகை செல்வகுமார்!

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழத்தை சேர்ந்த  அம்பிகை செல்வகுமார் எனும் பெண் பிரித்தானியாவில் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். தியாக தீபம் திலீபனின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளைக் காட்சிப்படுத்தியவாறு, அவர் தனது போராட்டத்தை தொடங்கியுள்ளார். ஈழத் தமிழர்களுக்கு விடுதலை, நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமது குடும்பம் நீண்ட காலமாகவே ஜனநாயகக் களத்தில் குரல் கொடுத்து வந்ததாக அம்பிகை செல்வகுமார் கூறியுள்ளார். ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மீண்டும் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பை சிறிலங்கா அரசாங்கம் தொடர்வதற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இணைந்து தீர்மானத்தை முன்வைக்கவுள்ள செய்தி, மன வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தாய்நிலத்தில் நீதிக்காக ஏங்கித் தவிக்கும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி தான், சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் அம்பிகை செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

26 பிப்ரவரி 2021

ராஜீவ் காந்தி மீதான குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்தவர் தா.பாண்டியன்!

ராஜீவ் காந்தி வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட போது அங்கிருந்த தா.பாண்டியன் கடுமையாக காயமடைந்திருந்தார். எனினும் தனது இறுதி மூச்சுவரை 7 தமிழர்களின் விடுதலைக்காக பாடுபட்டார். சிறுநீரக கோளாறால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தா.பாண்டியன் உயிரிழந்தார். அவர் இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பிரதமர்களின் பேச்சை மொழி பெயர்த்தவர். அந்த வகையில் 1991-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்தார்.21 ஆம் தேதி மே மாதம் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த போது அவர் ஒரு பேரணியை நடத்தினார். பின்னர் தனது காரில் பிரச்சார மேடைக்கு வந்தார். அங்கிருந்து பிரச்சார மேடை இருக்கும் இடத்தை நோக்கி வந்த போது ஏராளமானோர் அவருக்கு மாலை அணிவித்தும் கைகுலுக்கியும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.அப்போது விடுதலை புலிகளின் தற்கொலைப் படையை சேர்ந்தவர் என குற்றம்சாட்டப்படும் தாணுவும் ராஜீவ் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவர் கால்களில் விழுவது போல் குனிந்து தனது உடலில் மறைத்து வைத்திருந்த ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். அப்போது ராஜீவ் காந்தி, அவரை சுற்றியிருந்த 15 பேரும் கொல்லப்பட்டனர்.இந்த படுகொலை சம்பவத்தில் காவலர்கள், கமாண்டோ வீரர்கள், போலீஸார் என பலர் காயமடைந்தனர். அவ்வாறு காயமடைந்தவர்களில் தா.பாண்டியனும் ஒருவர். படுகாயமடைந்த தா.பாண்டியன் ராஜீவ் காந்தியின்பிரச்சார பேச்சை மொழிப்பெயர்ப்பு செய்வதற்காக வரவழைக்கப்பட்டார்.இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இலங்கை அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார். பிரச்சினைக்கு அமைதியான அரசியல் தீர்வைக் காண இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவுக்கு தா பாண்டியன் அழைப்பு விடுத்தார். அது போல் 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு கடிதமும் தா.பாண்டியன் எழுதியிருந்தார்.

10 பிப்ரவரி 2021

சுமந்திரனின் உரை தொடர்பில் கஜேந்திரகுமார் கண்டனம்!

பல்வேறு சவால்கள் மற்றும் நெருக்கடிகள் மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி துரோகமிழைத்துவிட்டார் சுமந்திரன். இவ்வாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் இன்றுமாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, ஐந்து நாட்களாக சுமார் ஒரு இலட்சம் மக்களின் பங்களிப்புடன் – இறுதிநிகழ்வில் சுமார் 60000 மக்கள் நேரடியாக கலந்துகொண்ட ஒரு நடைபயணம் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை இடம்பெற்றது. தமிழ் கட்சிகளும் சிவில் சமுகமும் போனமாதம் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கும், மனித உரிமை பேரவையின் தலைவருக்கும், உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயணம் இடம்பெற்றது. இந்தகடிதம் வெறுமனே ஒருசில அரசியல்கட்சிகளினதும் அமைப்புகளினதும் கோட்பாடல்ல மாறாக அது ஒட்டுமொத்த தமிழ் மக்களினது ஏகோபித்த கோரிக்கையாக காணப்படுகின்றது என்பதை நிலைநாட்டுவதற்காக நிரூபிக்கும் நோக்கத்துடனேயே இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது, ஒட்டுமொத்த சர்வதேசசமூகத்தினதும் பார்வையை ஈர்க்கக்கூடிய அளவிற்கு- மியன்மாரில் இடம்பெறும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் போல – இந்தியாவில் இடம்பெறுகின்ற போராட்டங்கள் போன்று மிகவும் காத்திரமான ஒரு செய்தியை சர்வதேச சமுகத்திற்கு கொடுக்கக்கூடிய அளவிற்கும்,விசேடமாக அந்த கடிதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அமைந்திருந்தது. அதுதான் அந்த போராட்டத்தின் உண்மையான நோக்கம். அந்த போராட்டத்தின் உண்மையான நோக்கம் அதுவாயிருக்க-நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் வெறுமனே பத்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து – அந்த கோரிக்கைகள் வெறுமனே அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாக இருக்கின்றது என்பதையும் தெரிவித்து அந்த கோரிக்கைகள் தான் போராட்டத்தின் நோக்கமாக உள்ளது -அந்த போராட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளாக இருக்கக்கூடிய வடக்குகிழக்கு தமிழ் மக்களினது தாயகம் என்ற கோட்பாட்டையோ அல்லது தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசம் என்ற கோட்பாட்டையோ சுயநிர்ணயஉரிமை என்ற கோட்பாட்டையோ அல்லது தமிழின அழிப்பிற்கு ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக இன்னொரு சர்வதேச குற்றவியல் விதிமுறைகள் ஊடாக நீதி கேட்பதையும் வலியுறுத்தாமல் ஒட்டுமொத்த போராட்டத்தையும்; கொச்சைப்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்திருந்தார். நாங்கள் அந்த முயற்சியை ஒரு சாதாரண தவறாக கருதமுடியாது. சுமந்திரன் கடிதம் எழுதினபொழுதும் பங்குபற்றியவர்.அவருடைய கட்சியும் அவரும் பேச்சுவார்த்தைகளில் தங்களை ஈடுபடுத்தியிருந்தனர்,போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டவேளை அவருக்கு அதன் சரியான நோக்கம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும்,நேற்றைய தினம் அந்த போராட்டத்தின் அடிப்படை நான்கு கோட்பாடுகளை வலியுறுத்தாமல் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி என்பதை-விசேடமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாகவிசாரணை என்பதை வலியுறுத்திதான் அந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பதை முற்றுமுழுதாக மூடிமறைத்து – வெறுமனே சிறிலங்கா அரசாங்கத்தை நம்பி – சிறிலங்கா அரசாங்கத்திற்குத்தான் அந்த கோட்பாடுகளை – வெறுமனே அந்த பத்துக்கோட்பாடுகளையும் முன்வைப்பதாக சொல்லப்பட்டது. எம்மை பொறுத்தவரை அந்த போராட்டத்திலே எத்தனையோ சவால்கள் எதிர்ப்புகள் நெருக்கடிகள் இடையூறுகள் காணப்பட்ட நிலையிலேய கலந்துகொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி அவர்களுக்கு செய்த மாபெரும் துரோகமாக நாங்கள் அதனை பார்க்கின்றோம். நாங்கள் சுமந்திரனின் கருத்தினை வலுமையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

28 ஜனவரி 2021

தமிழின அழிப்புக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு!

வடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. இது குறித்து வடக்கு கிழக்கு சிவில் சமூகம் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் அழைப்பு விடுக்கின்றோம். வடகிழக்கு பூர்வீக குடிகளான நாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எங்களது சுயநிர்ணய உரிமைகளுக்காக போராடி வருகின்றோம். ஆனால் தமிழர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காத இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை யாவரும் அறிவோம். யுத்தம் நிறைவடைந்து கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வடக்கு கிழக்கை இராணுவ மயமாக்கிவரும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு கிழக்கு பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பௌத்த மயமாக்கல் திட்டங்களை இலங்கை அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மூலம் வடக்கில் குருந்தூர் மலை ஐயனார் கோயில், வெடுக்குநாறி மலை சிவன் கோயில், நிலாவரை, கிழக்கில் கிண்ணியா பிள்ளையார் கோயில், குசனார் முருகன் ஆலயம், வேற்றுச்சேனை சித்திவிநாயகர் ஆலயம் உட்பட்ட பல ஆலயங்களில் தமது பாரம்பரிய கலாசார சமய வழிபாடுகளை செய்ய முடியாதவாறு ஆலயங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதோடு அங்கு பௌத்த ஆலயங்களை நிறுவுவதற்கும் முயற்சிகள் நடைபெறுகிறன. மேலும் வடக்கு கிழக்கில் உள்ள சுமார் 200 ற்கும் மேற்பட்ட பாரம்பரிய இந்து ஆலயங்களை கையகப் படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறன. அத்துடன் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்களை தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றனர். இது அவர்களின் பேச்சுரிமை அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். அத்தோடு தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை அபகரித்து சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. மட்டக்களப்பில் உள்ள பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் பால் தரும் பசுக்களை திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யும் நடவடிக்கைகளும் நடந்தேறி வருகின்றன. இதன் ஒரு கட்டமாக காடுகள் அழிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்லாமிய மக்களின் மத ரீதியான பாரம்பரிய சமய சடங்கான ஜனாசாக்களை புதைக்கும் செயற்பாடுகளை இல்லாமல் செய்து ஜனாசாகளை எரியூட்டி வருகின்றனர். இதற்கு எதிராக போராடும் முஸ்லிம் சமூகத்தையும் அடக்கி ஆள முனைகின்றனர். உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் பலதரப்பட்ட இஸ்லாமிய மக்களை பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்தி தடுத்து வைத்துள்ளனர். இதே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் பலரையும் கைது செய்து பல வருடங்களாக தடுத்து வைத்துள்ளனர். இதே போன்று சிறைகளில் விசாரணைகள் இன்றி தமிழ் அரசியல் கைதிகளாக பலர் உள்ளனர். ஆனால் பல குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள அரசாங்கம் இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருகிறது. வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தங்களது காணாமல் ஆக்கப்பட் உறவுகளை தேடி வருடக்கணக்கில் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான நீதியை வழங்காது அரசாங்க ஏமாற்றி வருகிறது. அத்துடன் மலையக தமிழ் மக்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக 1000 ரூபாய் சம்பள உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாது அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. இவ்வாறு தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும் வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை எதிர்வரும் 3 ம் திகதி முதல் 6ம் திகதி வரை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். உரிமைகளை இழந்து நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வாழும் தமிழ் பேசும் மக்களாகிய எமது அவலக் குரல்கள் சர்வதேசத்தின் மனசாட்சிகளை தட்டும் அளவுக்கு எமது போராட்டத்தை அகிம்சை வழியில் முன்னெடுக்க வேண்டி உள்ளதால் அனைத்து தமிழ் பேசும் மக்களையும் இப்போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேசம் நீதியை பெற்று தரவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்கு வடக்கு கிழக்கு தமிழ் அமைப்புகள் ஓரணியில் இணைந்து கையொப்பம் இட்டு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்ற கோரியும் அந்த கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் எதிர்வரும் 03.02.2021 தொடக்கம் 06.02.2021 வரை மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளமையால் மேற்படி போராட்டத்திற்கு வடக்கு கிழக்கில் உள்ள சிவில் அமைப்புக்கள் பல்சமய ஒன்றியங்கள் அரசியல் கட்சிகள் என அனைவரது ஆதரவையும் கோரி நிற்கின்றோம். மேற்படி போராட்டத்திற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். எனவே அரசியல் கட்சிகள் உட்பட வடக்கு கிழக்கில் உள்ள அனைவரும் மேற்படி போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி கலந்து கொள்ளுமாறு வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.