பக்கங்கள்

28 பிப்ரவரி 2021

உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் அம்பிகை செல்வகுமார்!

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழத்தை சேர்ந்த  அம்பிகை செல்வகுமார் எனும் பெண் பிரித்தானியாவில் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். தியாக தீபம் திலீபனின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளைக் காட்சிப்படுத்தியவாறு, அவர் தனது போராட்டத்தை தொடங்கியுள்ளார். ஈழத் தமிழர்களுக்கு விடுதலை, நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமது குடும்பம் நீண்ட காலமாகவே ஜனநாயகக் களத்தில் குரல் கொடுத்து வந்ததாக அம்பிகை செல்வகுமார் கூறியுள்ளார். ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மீண்டும் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பை சிறிலங்கா அரசாங்கம் தொடர்வதற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இணைந்து தீர்மானத்தை முன்வைக்கவுள்ள செய்தி, மன வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தாய்நிலத்தில் நீதிக்காக ஏங்கித் தவிக்கும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி தான், சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் அம்பிகை செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

26 பிப்ரவரி 2021

ராஜீவ் காந்தி மீதான குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்தவர் தா.பாண்டியன்!

ராஜீவ் காந்தி வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட போது அங்கிருந்த தா.பாண்டியன் கடுமையாக காயமடைந்திருந்தார். எனினும் தனது இறுதி மூச்சுவரை 7 தமிழர்களின் விடுதலைக்காக பாடுபட்டார். சிறுநீரக கோளாறால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தா.பாண்டியன் உயிரிழந்தார். அவர் இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பிரதமர்களின் பேச்சை மொழி பெயர்த்தவர். அந்த வகையில் 1991-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்தார்.21 ஆம் தேதி மே மாதம் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த போது அவர் ஒரு பேரணியை நடத்தினார். பின்னர் தனது காரில் பிரச்சார மேடைக்கு வந்தார். அங்கிருந்து பிரச்சார மேடை இருக்கும் இடத்தை நோக்கி வந்த போது ஏராளமானோர் அவருக்கு மாலை அணிவித்தும் கைகுலுக்கியும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.அப்போது விடுதலை புலிகளின் தற்கொலைப் படையை சேர்ந்தவர் என குற்றம்சாட்டப்படும் தாணுவும் ராஜீவ் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவர் கால்களில் விழுவது போல் குனிந்து தனது உடலில் மறைத்து வைத்திருந்த ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். அப்போது ராஜீவ் காந்தி, அவரை சுற்றியிருந்த 15 பேரும் கொல்லப்பட்டனர்.இந்த படுகொலை சம்பவத்தில் காவலர்கள், கமாண்டோ வீரர்கள், போலீஸார் என பலர் காயமடைந்தனர். அவ்வாறு காயமடைந்தவர்களில் தா.பாண்டியனும் ஒருவர். படுகாயமடைந்த தா.பாண்டியன் ராஜீவ் காந்தியின்பிரச்சார பேச்சை மொழிப்பெயர்ப்பு செய்வதற்காக வரவழைக்கப்பட்டார்.இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இலங்கை அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார். பிரச்சினைக்கு அமைதியான அரசியல் தீர்வைக் காண இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவுக்கு தா பாண்டியன் அழைப்பு விடுத்தார். அது போல் 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு கடிதமும் தா.பாண்டியன் எழுதியிருந்தார்.

10 பிப்ரவரி 2021

சுமந்திரனின் உரை தொடர்பில் கஜேந்திரகுமார் கண்டனம்!

பல்வேறு சவால்கள் மற்றும் நெருக்கடிகள் மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி துரோகமிழைத்துவிட்டார் சுமந்திரன். இவ்வாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் இன்றுமாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, ஐந்து நாட்களாக சுமார் ஒரு இலட்சம் மக்களின் பங்களிப்புடன் – இறுதிநிகழ்வில் சுமார் 60000 மக்கள் நேரடியாக கலந்துகொண்ட ஒரு நடைபயணம் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை இடம்பெற்றது. தமிழ் கட்சிகளும் சிவில் சமுகமும் போனமாதம் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கும், மனித உரிமை பேரவையின் தலைவருக்கும், உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயணம் இடம்பெற்றது. இந்தகடிதம் வெறுமனே ஒருசில அரசியல்கட்சிகளினதும் அமைப்புகளினதும் கோட்பாடல்ல மாறாக அது ஒட்டுமொத்த தமிழ் மக்களினது ஏகோபித்த கோரிக்கையாக காணப்படுகின்றது என்பதை நிலைநாட்டுவதற்காக நிரூபிக்கும் நோக்கத்துடனேயே இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது, ஒட்டுமொத்த சர்வதேசசமூகத்தினதும் பார்வையை ஈர்க்கக்கூடிய அளவிற்கு- மியன்மாரில் இடம்பெறும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் போல – இந்தியாவில் இடம்பெறுகின்ற போராட்டங்கள் போன்று மிகவும் காத்திரமான ஒரு செய்தியை சர்வதேச சமுகத்திற்கு கொடுக்கக்கூடிய அளவிற்கும்,விசேடமாக அந்த கடிதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அமைந்திருந்தது. அதுதான் அந்த போராட்டத்தின் உண்மையான நோக்கம். அந்த போராட்டத்தின் உண்மையான நோக்கம் அதுவாயிருக்க-நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் வெறுமனே பத்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து – அந்த கோரிக்கைகள் வெறுமனே அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாக இருக்கின்றது என்பதையும் தெரிவித்து அந்த கோரிக்கைகள் தான் போராட்டத்தின் நோக்கமாக உள்ளது -அந்த போராட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளாக இருக்கக்கூடிய வடக்குகிழக்கு தமிழ் மக்களினது தாயகம் என்ற கோட்பாட்டையோ அல்லது தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசம் என்ற கோட்பாட்டையோ சுயநிர்ணயஉரிமை என்ற கோட்பாட்டையோ அல்லது தமிழின அழிப்பிற்கு ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக இன்னொரு சர்வதேச குற்றவியல் விதிமுறைகள் ஊடாக நீதி கேட்பதையும் வலியுறுத்தாமல் ஒட்டுமொத்த போராட்டத்தையும்; கொச்சைப்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்திருந்தார். நாங்கள் அந்த முயற்சியை ஒரு சாதாரண தவறாக கருதமுடியாது. சுமந்திரன் கடிதம் எழுதினபொழுதும் பங்குபற்றியவர்.அவருடைய கட்சியும் அவரும் பேச்சுவார்த்தைகளில் தங்களை ஈடுபடுத்தியிருந்தனர்,போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டவேளை அவருக்கு அதன் சரியான நோக்கம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும்,நேற்றைய தினம் அந்த போராட்டத்தின் அடிப்படை நான்கு கோட்பாடுகளை வலியுறுத்தாமல் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி என்பதை-விசேடமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாகவிசாரணை என்பதை வலியுறுத்திதான் அந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பதை முற்றுமுழுதாக மூடிமறைத்து – வெறுமனே சிறிலங்கா அரசாங்கத்தை நம்பி – சிறிலங்கா அரசாங்கத்திற்குத்தான் அந்த கோட்பாடுகளை – வெறுமனே அந்த பத்துக்கோட்பாடுகளையும் முன்வைப்பதாக சொல்லப்பட்டது. எம்மை பொறுத்தவரை அந்த போராட்டத்திலே எத்தனையோ சவால்கள் எதிர்ப்புகள் நெருக்கடிகள் இடையூறுகள் காணப்பட்ட நிலையிலேய கலந்துகொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி அவர்களுக்கு செய்த மாபெரும் துரோகமாக நாங்கள் அதனை பார்க்கின்றோம். நாங்கள் சுமந்திரனின் கருத்தினை வலுமையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.