பக்கங்கள்

30 ஜூன் 2012

திருமலையில் தமிழர் நிலங்களை அபகரித்து கடற்படை முகாம்!

திருகோணமலை ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சீனன் வெளி பகுதியில் கடற்கரையோரமாக அமைந்துள்ள பொது மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகளில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் காணிச் சொந்தக்காரர்கள் தமது காணிகளில் குடியிருக்கவோ பயிர்ச் செய்கையில் ஈடுபடவோ முடியாதநிலை காணப்படுவதாக காணிச் சொந்தக்காரர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தக் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள காணிகள் தோப்பூர் பிரதேச முஸ்லிம் மக்களினதும் சீனன் வெளி பிரதேச தமிழ் மக்களினதும் காணிகளாகும். இந்தக் காணிகளுக்கான உரிய அத்தாட்சி பத்திரங்கள் இருந்தும் தமது காணிகளை மீளப் பெற முடியாதுள்ளதாக காணிச் சொந்தக்காரர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி காணிச் சொந்தக்காரர்களுக்கான காணிகளை பெற்றுத்தர உரிய கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

29 ஜூன் 2012

இணைய அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ள புலனாய்வாளர்கள்!

லங்கா மிரர் இணையத்தளம் மற்றும் ஸ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் இணையத்தளம் அமைந்துள்ள வளாகத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தற்போது சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிட்டகோட்டை மஹிந்தானந்த வீதியில் அமைந்துள்ள மேற்படி இணையத்தளங்களின் வளாகத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சுமார் 20 முதல் 25 வரையான அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். ‘அவர்கள் வளாகத்தில் தேடுதல் நடத்துவதற்கான உத்தரவு பத்திரத்தை வைத்திருந்ததாகவும் ஆனாலும் அதில் இணையத்தளங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும் அவர்கள் எங்களுக்கு எதுவும் கூறாமல் அவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.’ எனவும் அவர் கூறினார். நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள லங்கா மிரர் ஆசிரியர் ருவன் பேர்டினான்ட் வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக சிலரிடமிருந்து தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தமிழ்க்கைதிகள் சிறைப்பிடித்த காவலர்கள் மீட்கப்பட்டுள்ளனராம்!

வவுனியா சிறைச்சாலையில், அரசியல் கைதிகளால் பணயமாக பிடித்து வைக்கப்பட்டிருந்த சிறைக் காவலர்கள் மூவரையும் விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர், காவற்றுறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் இவர்கள் மூவரும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் மூன்று பேர் கடந்த செவ்வாய்க்கிழமை பூஸாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அவர்களை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கே கொண்டுவர வேண்டும் எனக் கோரி, சிறைக்கைதிகள் புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சிறைச்சாலை நிர்வாகம் நேற்று கைதிகளுக்கு பலாத்காரமாக உணவை வழங்க முற்பட்டதோடு கைதிகளையும் தாக்கியுள்ளனர். இதன்போது சிறைக் காவலர்கள் மூவரை தமிழ்க் கைதிகள் முற்றுகைக்குள் வைத்திருந்தனர். கைதிகளிடமிருந்து அவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலனளிக்காத காரணத்தால், இன்று காலை கலகம் அடக்கும் காவற்றுறையினர், அதிரடிப்படையினர், இராணுவத்தினர் குவிக்கப்பட்டும், அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து சிறை அதிகாரிகள் அழைக்கப்பட்டும், கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் நீர்பாய்ச்சி அடிக்கும் வாகனங்கள் சகிதம் வவுனியா சிறைச்சாலை சுற்றி வளைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்னர் இராணுவம், அதிரடிப்படையினர் மற்றும் காவற்றுறையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் சிறைக்காவலர்கள் மூவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

28 ஜூன் 2012

நில அபகரிப்புக்கெதிரான போராட்டம் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியாம்!

தமிழ் மக்களின் நிலங்களை இராணுவத்தினர் அபகரிப்பதை எதிர்த்துத் தமிழ்த் தேசிய முன்னணியால் யாழ். நகரில் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டம், ஜனநாயக மறுப்பையும் ஆயுதக் கலாசாரத்தையும் மீண்டும் முனைப்புடன் அரங்கேற்றும் முயற்சி என்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்று தெரிவித்துள்ளது. இந்தக் கவனஈர்ப்புப் போராட்டத்துக்கு பொலிஸார் யாழ். நீதிவான் மன்றிடமிருந்து தடையுத்தரவு பெற்றிருந்தனர். இந்தத் தடையுத்தரவை நீக்கக் கேட்டு தமிழ்த் தேசிய முன்னணிசார்பில் மனுச் செய்யப்பட்டது. அந்த மனு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. சட்டமுறைகளுக்கு அமைவாக இந்த மனு செய்யப்படவில்லை என்பதால், வழங்கப்பட்ட தடையை மீண்டும் உறுதி செய்வதாக நீதிவான் மா.கணேசராசா தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "இந்த வழக்கிலுள்ள பிரச்சினையை ஆரோக்கியமான, புத்திசாலித்தனமான, சட்டமுறையான நடவடிக்கைகள் மூலம் அணுகியிருக்க முடியும். ஆவணங்களின் மூலம் உரிய நீதிமன்றின் முன்சென்று தமது உரித்தை நிலைநாட்டியிருக்க முடியும். பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதை விடுத்து தேசிய பாதுபாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தை நடத்த முயன்றுள்ளனர். அத்துடன் நீதிமன்றக் கட்டளையை அவமதிக்கும் வகையில் கட்டளையைக் கிழித்தெறிந்து, "நீதிமன்றக் கட்டளையை மதிக்கும் இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்'' என்று கோஷமிடப்பட்டதாகவும் மன்று அறிகின்றது. இதன் மூலம் சட்டத்தினைக் கையில் எடுக்கும் வகையிலும் அதனூடாக மக்களைத் தவறாக வழிநடத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்குச் சாட்சியாக எதிர்மனுதாரர்களுக்காக வாதாடும் ஒரு சில சட்டத்தரணிகளும் இருந்துள்ளார்கள். இவ்வாறான செயற்பாடுகள் நீதித்துறைக்கு சவால் விடும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் அமையும் என்று மன்று கருதுகின்றது. சட்டத்துறையில் உள்ள இவர்கள் இதனைக் கண்டிக்க முனையாததன் மூலம் அவர்களின் கடப்பாட்டிலிருந்து விலகியிருப்பதுடன் இத்தகைய செயலுக்கு உரமூட்டிதாகவே மன்று கருதுகின்றது. மக்களின் அவலங்களின் மீது அரசியல் நடத்தி, மீண்டும் இருண்ட யுகத்துக்குள் மக்களை இட்டுச் செல்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனநாயக மறுப்பையும் ஆயுதக் கலாசாரத்தையும் மீண்டும் முனைப்புடன் அரங்கேற்றுவதற்கான முயற்சியாகவே மன்று இதனைக் கருதுகின்றது. மக்களை அரசியல் பகடைக் காய்களாக்கி அவலங்களின் மீது அரியணை ஏறும் முயற்சி அரங்கேற்றப்பட்டுள்ளது. இனக்குரோதங்களைத் தூண்டி இரத்தம் தோய்ந்த வரலாற்றை மீண்டும் இந்த மண்ணில் மேடையேற்றுவதற்கான முயற்சியை மன்று எந்த வகையிலும் அனுமதிக்காது. ஆகவே மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் சட்டமுறையற்ற வகையில் செய்யப்பட்ட இந்த விண்ணப்பத்தை மன்று நிராகரிப்பதுடன் ஏற்கனவே வழங்கப்பட்ட தடைக் கட்டளையை மன்று உறுதி செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் மன்றிற்குச் சமூகமளித்திருந்தார்.

27 ஜூன் 2012

தீவகத்திற்கு மின்சாரம் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளதாம்!

மின்கம்பங்கள் நடப்பட்டுள்ள தீவகப் பகுதியின் அனைத்து இடங்களுக்கும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மின் விநியோகம் வழங்கப்படும் என இலங்கை மின்சார சபையினர் உறுதியளித்துள்ளனர். தீவுப்பகுதி அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஊர்காவற்றுறை பிரதேசசபை மண்டபத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தீவுப்பகுதிக்கு மின் விநியோகம் வழங்க மின்சார சபையினர் பின்னடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டினார்கள். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின்சாரம் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கைஎனவும், அரசின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதை விடுத்து உங்கள் விருப்பப்படி செயலாற்ற முடியாது எனவும் மின்சார சபை அதிகாரிகளுக்குத் தெரிவித்ததுடன் பணம் செலுத்தியவர்களுக்கு முன்பதாக மீளக்குடியமர்ந்த மக்களுக்கான இலவச மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். அத்துடன் தற்போது மின் கம்பங்கள் நடப்பட்டுள்ள அனைத்து இடங்களுக்கும் எப்போது மின் விநியோகம் வழங்கப்படும் என்பதைத் தெரிவிக்குமாறும் அவர்களிடம் சந்திரகுமார் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் மின்கம்பங்கள் நடப்பட்ட இடங்களுக்கு மின் விநியோகம் வழங்கப்படும் என மின்சார சபை அதிகாரிகள் உறுதியளித்தனர்.

26 ஜூன் 2012

படைகளின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது திருமுறிகண்டியில் மக்கள் ஆவேச ஆர்ப்பரிப்பு!

இராணுவம், காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என அரச இயந்திரத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தமிழ் மக்களின் நிலங்கள் வன்பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியது. திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயச் சூழலில் காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கு கொண்டு தமிழர் நிலம் வன்பறிக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பரித்து வருகின்றனர். "நாம் கேட்பது எமது உரிமை அது கிடைக்கும் வரை ஓய மாட்டோம்" "எமது பூர்வீகத்தை அசிங்கப்படுத்தாதே" "போர் முடிந்து மூன்றாடுகள் ஆகிவிட்டது. இன்னும் எம் நிலத்தில் இராணுவமா?" "சொந்த மண்ணில் அகதிகளாக நாம்" "நிறுத்து நிறுத்து ஆக்கிரமிப்பை நிறுத்து" எனப் பலகோஷங்கள் எழுப்பியவாறு கவனயீர்ப்பில் பங்கு கொண்டோர் ஆர்ப்பரித்தனர். பொதுமக்கள் எவரும் போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என அச்சுறுத்தும் வகையில் இன்று காலை முதல் ஆலயச் சுற்றாடலில் படையினர், காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர். அதனையும் மீறியே பொதுமக்கள் திரண்டுள்ளனர். அத்துடன், பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரிடம் படையினரும் காவற்றுறையினரும் அவர்களுடன் புலனாய்வாளர்களும் சென்று அச்சுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. போராட்டம் ஆலய முன்றலில் நடைபெற்றால் ஆலய நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என அவர்கள் மிரட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியின் மனோ கணேசன் உள்ளிட்ட பலரும் தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்பள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

25 ஜூன் 2012

யாழ்,மக்களில் சிங்கள இரத்தம்தான் ஓடுகிறதாம்!

பெரும்பாலான யாழ்ப்பாண மக்களில் ஓடுவது சிங்களவர்களின் இரத்தம் தான் என்று இலங்கை இராணுவத்தின் யாழ்.படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். "யாழ்.போதனா மருத்துவமனை இரத்த வங்கிக்கு அதிகளவில் பங்களிப்புச் செய்பவர்கள் படையினரே. ஒவ்வொரு மாதமும் இராணுவம், இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்கிறது. இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு 125 தொடக்கம் 150 லீற்றர் வரையான இரத்தம் படையினரால் வழங்கப்படுகிறது. இப்போது பெரும்பாலான யாழ்ப்பாண மக்களிடம் ஓடுவது சிங்கவர்களின் இரத்தம் தான்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

24 ஜூன் 2012

மிரட்டலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிடோம்!

பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஜூலை 4 ஆம் திகதி தொடக்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர் என்றும் தாம் எவ்விதமான பயமுறுத்தலுக்கும் அஞ்சி தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப் போவதில்லை எனவும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் கூறியுள்ளது. தனக்கு அல்லது தனது குடும்பத்தினருக்கு விடுக்கப்படும் பயமுறுத்தலுக்கு தான் பணியப் போவதில்லை என நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் அந்தச் சம்மேளனத்தின் தலைவர் நிமல் ரஞ்சித் தேசிறி கூறினார். இந்த வார முற்பகுதியில் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திய இருவர், அவரின் 17 வயது மகள் பற்றிய தகவல்களைக் கேட்டுக் கொண்டு தேவசிறியின் அயலுக்கு இரண்டு தடவை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையிட்டு அடுத்த நாள் உயர்கல்வி அமைச்சரிடம் முறையிட்ட போது அவர் "இப்போது இந்த புதிய கதையை காவித்திரிகிறீர் களா?' என கேட்டார். அமைச்சர் தனது முறைப்பாட்டை கணக்கில் எடுக்க வில்லையென தேவசிறி கூறினார். அமைச்சருடனான பேச்சுக்களில் நாம் சம்பளங்களை முக்கியப்படுத்தி பேசவில்லை. நாம் ஆட்சேர்ப்பு, பல்கலைக்கழகத்தின் சுயாதீனம், பல்கலைக்கழகங்களை தனியார் மயமாக்கல் கல்வி மீதான பொதுச் செலவு என்பன பற்றியே கூடுதல் கவனம் செலுத்தினோம். இவ்விடயங்கள் ஆழமாக பேசப்பட வேண்டிய விடயங்கள். ஆயினும் அது நடப்பதில்லை என அவர் கூறினார். பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் உப தலைவர் வண. தம்பர அமில தேரர் தமது சங்கம் வேலை நிறுத்தத்தை நடத்தியே தீரும். என்ன நடந்தாலும் எத்தனை மிரட்டல் வந்தாலும் எம்மை தடுக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

23 ஜூன் 2012

வழங்கப்படும் காணிகளில் குடியேறுங்கள்"முறிகண்டி மக்களுக்கு பிரதேசசெயலர் மிரட்டல்!

முறிகண்டிக்காணிகள் எந்தக் காலத்திலும் மக்களுக்கு வழங்கப்படமாட்டாதுமுல்லைத்தீவு மாவட்டம் திருமுறிகண்டிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான காணிகள் மீளவும் அவர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்றும் குறித்த காணிகளின் உரித்துப் பத்திரங்களில் இருந்து மக்களின் பெயர்கள் அகற்றப்பட்டிருப்பதாகவும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் மக்களிடம் நேரடியாத் தெரிவித்திருக்கின்றார். திருமுறிகண்டிக்கிராமத்தில் மீள்குடியேற்றம் இடம்பெறாத நிலையில் குறித்த கிராம மக்கள் தொடர்ந்தும் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். முறிகண்டிக் கிராம மக்களை நேரில் சென்று சந்தித்த ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் மக்களை மிரட்டும் பாணியில் உரையாடியிருக்கின்றார். திருமுறிகண்டி விவகாரம் அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் பலத்த நெருக்கடியினைக் கொடுத்திருக்கின்றது. எனவே இதனைப் பெரிது படுத்தாது வழங்கப்படுகின்ற காணிகளில் குடியேறுங்கள். உங்கள் காணிகளுக்கான உரித்து பத்திரங்கள் இனிவருங்காலங்களில் செல்லுபடியற்றவைகிவிட்டன. எந்தக் காலத்திலும் அந்தக் காணிகளில் குடியேற உங்களுக்கு அனுமதி வழங்கப்படாது. எனவே ஒரே ஒரு சந்தர்ப்பமாகவே மாற்றுக்காணிகள் வழங்கப்படவுள்ளன என்று பிரதேச செயலர் மக்களை மிரட்டியிருக்கின்றார். பிரதேச செயலரின் இம் மிரட்டலை அடுத்து கணிசமான மக்கள் இந்த நடவடிக்கைக்கு உடன்பட்டிருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய இன்று மக்களுக்கு காணிகள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை சில நாட்களுக்கு முன்னர் குறித்த மக்களைச் சந்தித்த ஐ.நா தொண்டு நிறுவனம் ஒன்று சொந்த இடம் இல்லாது வேறு இடத்தில் குடியேறினால் தம்மால் உதவிகளை வழங்க முடியாது என்று மக்களிடம் தெரிவித்ததாகவும் அதற்கு உதாரணமாக புதுக்குடியிருப்பு மக்களை திம்பிலிப் பகுதியில் குடியேற்றியமையால் தாம் உதவிகளை வழங்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதாகவும் தெரியவருகிறது.. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திருமுறிகண்டியில் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ள நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றது. இந்நிலையில் உண்ணாவிரதத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பங்கேற்பரா? என்பதில் சந்தேகம் நிலவுவதாக நலன்புரி முகாம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

22 ஜூன் 2012

கட்டுவான பாணியில் வடக்கு கிழக்கில் படுகொலைகள்!

ஹம்பாந்தோட்டை கட்டுவான பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் போன்ற சம்பவங்கள் வடக்கு கிழக்கில் நாள் தோறும் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்டபாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு தொடர்ந்தும் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டிலேயே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துணைஇராணுவக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். துணை இராணுவக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைதல் மற்றும் சுயாதீன காவல்துறை ஆணைக்குழுவினை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுவதன் மூலம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2010ம் ஆண்டு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையிலும் துணைஇராணுவக் குழுக்கள் பற்றி பரிந்துரை செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களை களைவதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் பேணப்படுவதாக அரசாங்கம் பொய்யாக சர்வதேசத்தில் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

21 ஜூன் 2012

திருப்பி அனுப்பப்படுகின்றனர் சத்திரசிகிச்சை நிபுணர்கள்!

newsயாழ். போதனா வைத்தியசாலைக்கு நியமிக்கப்படும் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு அங்கு சத்திர சிகிச்சைக் கூட வசதிகள் போதுமானதாக இல்லை என்று கூறப்பட்டு வைத்தியசாலை நிர்வாகத்தால் அந்த நிபுணர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அந்த நிபுணர்களது சிகிச்சை இங்கு கிடைக்கப்பெறாமையால் நோயாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிபுணத்துவ சிகிச்சையைப் பெறுவதற்காக நூற்றுக்கணக்கான நோயாளர்கள் கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. வாய், முகம், தாடை சத்திர சிகிச்சை நிபுணர், நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் ஆகியோர் அண்மையில் சுகாதார அமைச்சால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டனர். இங்கு போதிய சத்திர சிகிச்சைக்கூட வசதிகள் இல்லை என்று வைத்தியசாலை நிர்வாகம் கூறியதை அடுத்து அவர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் மற்றும் நரம்பியல் சிகிச்சை நிபுணர்களை இங்கு நியமிப்பதில் இழுபறி நிலை இருந்து வருகிறது. மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் கடந்த வருடம் நியமிக்கப்பட்டார். அவரும் பின்னர் திருப்பி அனுப்பப்பட்டார். யாழ். போதனா வைத்தியசாலையில் தற்பொழுது ஐந்து சத்திரசிகிச்சைக்கூடங்கள் உள்ளன. மகப்பேற்று சத்திர சிகிச்சைக்கூடம் மற்றும் பிரதான 3 சத்திர சிகிச்சைக் கூடங்களும் உள்ளன. பல தசாப்தங்களுக்கு முன்னர் தேவையான சத்திரசிகிச்சை நிபுணர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கியிருந்தனர். தற்போது கட்டப்பட்டு வரும் கட்டடத்தொகுதியில் பல சத்திரசிகிச்சைக் கூடங்கள் அமையவுள்ளன. இந்த வருட இறுதியில் அந்த வேலைகள் பூர்த்தியடைந்து விடும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தேவையானளவு சத்திரசிகிச்சை நிபுணர்களை இப்பொழுதே உள்வாங்கி அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டும். அதைவிடுத்து காலம் கடத்துவதன் மூலமாக இங்குள்ள நோயாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கமுடியாத நிலையே தோன்றும். இது தொடர்பாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பவானி பசுபதிராஜாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது: இங்கு சத்திர சிகிச்சைக் கூட வசதிகள் போதுமானதாக இல்லை. அதனால் புதிதாக நிபுணர்களை உள்வாங்க முடியாதுள்ளது என்று பதிலளித்தார்.

20 ஜூன் 2012

நயினை நாகபூ­ஷணிஅம்மன் நேற்று கொடியேற்றம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா நேற்று நண்பகல் 12 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நேற்றைய கொடியேற்ற வைபவத்தில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர். வடக்கின் பல பகுதிகளிலும் தீவுப் பகுதி மற்றும் வெளியூர்களில் இருந்தும் திரண்டு வந்திருந்த அடியார்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. சிவஸ்ரீ பரமசாமிக் குருக்கள் முத்துச்சாமிக் குருக்கள் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து பூசை, அபிஷேகத்தை அடுத்து நாகபூஷணி அம்மன் திருவீதியுலா வந்தார். யாழ்.பஸ் நிலையத்தில் இருந்து நயினாதீவுக்கு விசேட போக்குவரத்துச் சேவையும் தனியார் மினி பஸ் சேவையும் இடம்பெற்றன. குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து 25 படகுகள் சேவையில் ஈடுபட்டிருந்தன. படகுக் கட்டணம் வழமைபோன்று 30 ரூபா அறவிடப்பட்டது. ஆனால் நாக விகாரைக்கு சொந்தமான படகில் தலைக்கு ரூபா ஐம்பது கட்டணமாக அறவீடுசெய்யப்பட்டது. இதேவேளை வழமைபோன்று அடியார்களுக்கு அமுதசுரபி அன்னதான சபையினர் சிறப்பான முறையில் அமுதளித்தனர். ஆலயசுற்றாடலில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன.

19 ஜூன் 2012

தயவுசெய்து விட்டுவிடுங்கள்; வேம்படியின் புதிய அதிபர் மன்றாட்டம்!

பதவியேற்க விடாமல் திருப்பி அனுப்பப்பட்டார் யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் புதிய அதிபர் திருமதி வேணுகா சண்முகரட்ணம். அவர் நேற்று பாடசாலைக்குச் சென்றார். அப்போது அங்கு அதிபரின் அறை இழுத்துப் பூட்டப்பட்டிருந்தது. இது குறித்து விவரம் கேட்டபோது "பதில் அதிபர் திருமதி ராஜினிமுத்துக்குமாரன் வலயத்தில் நடைபெறுகின்ற அதிபர் கூட்டத்துக்கு சென்று விட்டார்'' என்று கூறி, ரேணுகா திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் ஏன் வம்பு? எனத் திரும்பி வந்துவிட்டார் புதிய அதிபர். பொதுச் சேவை ஆணைக்குழு கடந்த 11ஆம் திகதி தொடக்கம் வேம்படி மகளிர் கல்லூரிக்கான புதிய அதிபராக திருமதி வேணுகா சண்முகரட்ணத்தை நியமித்து நியமனக் கடிதத்தையும் வழங்கியிருந்தது. புதிய அதிபரை கடமைப் பொறுப்புகளை ஏற்க விடவில்லை என்ற விடயத்தை அறிவதற்காக கல்லூரி அதிபர் அலுவலகத்துக்கு நேரில் சென்ற "உதயன்' செய்தியாளரும் பதில் அதிபரால் திருப்பி அனுப்பப்பட்டார். "கல்வி அமைச்சின் அனுமதிக் கடிதத்துடனேயே ஊடகங்கள் பாடசாலைக்குள் வரமுடியும். முதலில் அந்த அனுமதியுடன் வாருங்கள்'' என்று அவர் கூறினார். இது தொடர்பில் புதிய அதிபர் திருமதி வேணுகா சண்முகரட்ணத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது "இந்தப் பிரச்சினையைப் பெரிது படுத்த வேண்டாம், அப்படியே விட்டுவிடுங்கள். அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொள்வார். பிரச்சினை பெரிதானால் அது என்ர உயிருக்குக் கூட ஆபத்தாக மாறிவிடும்'' என்றார். வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் பா.விக்னேஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது "வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் விடயத்தில் எனக்கு எதுவும் தெரியாது. நடப்பதைக் கண்டு கொள்ளவேண்டியது தான்'' என்றார்.

18 ஜூன் 2012

அவுஸ்ரேலியா புறப்பட இருந்த படகை தடுக்க சென்ற பொலிசாரும் படகில் ஏறி தப்பினரா?

படகில் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களைக் கடத்தும் முயற்சியொன்றை முற்றுகையிட சென்ற பொலிஸ் சிப்பாய் இருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவர்களாவர். சிலாபம், கருக்குபனை பிரதேசத்தில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது. இந்த முற்றுகையின் பின்னர் இந்த இரண்டு பொலிஸ் சிப்பாய்களும் பணிக்குத் திரும்பவில்லை எனவும்,எதனால் இவர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்பது இதுவரை தெரியவரவில்லை எனவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆட்கடத்தல்காரர்கள் இந்த இரண்டு பொலிஸ் சிப்பாய்களுக்கும் அனர்த்தம் எதனையும் ஏற்படுத்தியிருக்கலாம் என ஒரு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், ஆட்கடத்தல் காரர்களுடன் இந்த இரண்டு பொலிஸ் சிப்பாய்களும் படகில் அவுஸ்திரேலியா சென்றிருக்கலாம் என இன்னுமொரு தரப்பு தெரிவித்துள்ளது.

யாழில் தொடரும் விஷமிகளின் அடாவடி!

newsயாழ்.பிறவுண் வீதி 2ஆம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்துவீட்டின் உள்ளே ஒயில் ஊற்றிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது விஷமிகள் குழு ஒன்று. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சி.யோகராசா என்பவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது சம்பவத்தின் போது அறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த புடைவைகளும் பாடசாலை மாணவர்களது பதிவுப் புத்தகங்களும் கழிவு ஒயிலினால் தோய்ந்திருந்தன. மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த மூவரே அங்கு தாக்குதல் நடத்தியமை ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மூவரில் ஒருவர் வீட்டுக்கேற்றடியில் இயங்கிய நிலையில் மோட்டார் சைக்கிளுடன் நிற்க மற்றைய இருவரும் உள்ளே சென்று தாம் கொண்டு வந்த தடி ஒன்றினால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு சுமார் 5 போத்தல்களில் கொண்டு வந்த கழிவு ஒயிலை வீட்டின் ஜன்னலினூடாக உள்ளே ஊற்றியுள்ளனர். ஜன்னல் கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட வீட்டுக்காரர் கூக்குரலிடவே மூவரும் தப்பிச் சென்றுவிட்டனர். சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டனர். சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. கழிவு ஓயில் ஊற்றப்பட்டதனால் வரவேற்பறை மற்றும் அறை ஒன்றும் அலங்கோலப்படுத்தப்பட்டன. உள்ளே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சைக்கிள் மற்றும் உடுபுடைவைகள், பதிவுப்புத்தகங்கள் மட்டுமன்றி வீட்டின் சுவர்களிலும் ஒயில் ஊற்றப்பட்டிருந்தது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை அதிகாலை வேளை யாழ்.போதனா வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய நிபுணர் ந.ஜெயக்குமாரனின் கந்தர்மடத்திலுள்ள வீடும் இதே பாணியில் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டிருந்தது. எனினும் அந்தச் சம்பவத்துக்கும் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சம்பவத்துக்கும் எந்தவித தொடர்புமில்லை என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

17 ஜூன் 2012

காணிகளை கையகப்படுத்த துடிக்கிறார் வடமாகாண ஆளுநர்!

newsவடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு மற்றும் தனியார் காணிகளைக் கையகப்படுத்த வடக்கு மாகாண ஆளுநர் முனைகிறார். தேர்தலின் பின்னர் இவற்றுக்கான அதிகாரம் தனது கையில் இருக்காது என்பதாலேயே அவர் இவ்வாறு செய்கிறார். இதன் முதற்கட்டமாகவே அரச அதிபர்களாகப் பெரும்பான்மை இன அதிகாரிகளை அவர் நியமிக்கிறார் என வட மாகாண சபையின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது: வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தீடீர் அறிவிப்பு விரைவில் அரசினால் வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தக் கூடிய சூழல் உள்ளது. தேர்தல் நடைபெற்றதால் முதலமைச்சரின் கீழ் நிர்வாகம் வந்தவுடன் காணி விடயம், காணி கையகப்படுத்தும் விடயம் முடிவுக்கு வந்துவிடும். அதற்கு முன்னர் தனது அதிகார் எல்லையைப் பயன்படுத்திக் காணிகளைப் படையினருக்கும், கடற்படையினருக்கும் பெற்றுக் கொடுத்து விட வேண்டும் என்பதில் கடும் பிரயத்தனம் செய்கிறார் வடக்கு ஆளுநர். கடந்த இரண்டு வருடங்களாகக் காணி பெறும் முயற்சி இடையிடையே மேற்கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை. தற்போது வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் காணிகளைக் கையகப்படுத்தும் கைங்கரியத்தை முழுமூச்சாக மேற்கொள்கிறார் ஆளுநர் என்றார்கள்.

பிரித்தானியாவில் தமிழர் படுகொலை!

பிரித்தானியாவின் லெஸ்டர் பகுதியில் கடந்த பலவருடமாக வசித்து வந்த ஜேம்ஸ் பொண்ணுத்துரை நிமலராஜன் என்பவர், கடந்த 9ஆம்திகதி இனந்தெரியாதோரின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர், கடந்த 9ஆம் திகதி அன்று இரவு 11 மணியளவில் கடையில் பணிபுரிந்துவிட்டு வீடு செல்லும் பொழுது, வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் இவர், லெஸ்டர் றோயல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நொட்டிங்காம் குயின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கும் சிகிச்சை பயனளிக்காத பட்சத்தில் நேற்றுக் காலை மரணமடந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக முதல்கட்ட விசாரணையின் போது 13,14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட சிறுவர்கள் ஆரம்பத்தில் தாக்கப்பட்ட குற்ற வழக்காக இருந்தபோதிலும், இப்பொழுது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரனைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மிட்லான்ட் சிறப்பு நடவடிக்கை பிரிவைச் சேர்ந்த தலைமை பொலிஸ் அதிகாரி, “இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் பல நபர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து விசாரித்த போதிலும் எமக்கு மேலும் பல தகவல்கள் மற்றும் சாட்சியங்களை எதிர்பார்க்கின்றோம்” என தெரிவித்தார். லெஸ்டரின் ஜிப்சி லேன் பகுதியில் இரவு 10.30 இருந்து 11.15 வரை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதால் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் இச்சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தகவல் தெரிவிக்க 0800 555 111 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு  அழைக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

16 ஜூன் 2012

காரைநகர் வன்புணர்வுச் சம்பவம்: சந்தேகநபரின் சேட்டைப் பிடித்து அடையாளம் காட்டினார் யுவதி!


காரைநகரில் மனவளர்ச்சி குன்றிய யுவதியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் சந்தேக நபர்கள் இருவரில் ஒருவரை இவர்தான் தன்னைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று சந்தேக நபர் அணிந்திருந்த சேட்டைப் பிடித்து இழுத்து உணர்ச்சிவசப்பட்டு அடையாளம் காட்டினார் பாதிக்கப்பட்ட யுவதி. ஊர்காவற்றுறை நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற சந்தேகநபர்களின் அடையாள அணிவகுப்பிலேயே பிரஸ்தாப யுவதி சந்தேகநபரை அடையாளம் காட்டினார். இந்த அடையாள அணிவகுப்பில் 18 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிமன்றில் பதில் நீதிவான் இ.சபேசன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த மாதம் 19ஆம் திகதி காரைநகரில் இரும்பு சேகரிப்பில் ஈடுபட்ட இரண்டு முஸ்லிம்கள் வீடொன்றுக்குள் சென்று தாயார் வீட்டின் பின்புறம் சென்றவேளை மனவளர்ச்சி குன்றிய யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச்சென்றதாகத் தெரிவித்து அந்தப்பகுதி மக்கள் ஒன்றுகூடி சந்தேகநபர்கள் இருவரையும் பிடித்துப் பொலிஸில் ஒப்படைத்திருந்தனர். புத்தளம் தில்லையடியைச் சேர்ந்த சலீம் சண்லூஸ் மற்றும் நீர்கொழும்பு தலுகொத்தவைச் சேர்ந்த கிதுறு முஹதீன் கிஜானுக் சுகமத் ஆகிய இரண்டு சந்தேக நபர்களுமே இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.அதன்போதே பிரஸ்தாப யுவதி தன்னைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று சந்தேகநபர் ஒருவரை உணர்ச்சிவசப்பட்டு அவர் அணிந்திருந்த சேட்டைப் பிடித்து இழுத்து நீதிமன்றில் அடையாளம் காட்டினார். சந்தேகநபர்கள் இருவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். நேற்றைய தினம் வழக்கு நடைபெற்ற போது தமிழ், முஸ்லிம் பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 இற்கும் மேற்பட்டோர் சமூகமளித்திருந்தனர். மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஸ், கடந்தமுறை இது சம்பந்தமான வழக்கு நடைபெற்றபோது பெண்கள் அமைப்பினர் பலர் பிரசன்ன மாகியிருந்தனர். அவர்களில் முஸ்லிம் பகுதியினருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குக்குச் சென்றால் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவீர்கள் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சந்தேகநபர்களைப் பிணையில் விடக்கூடாது என மன்றில் தெரிவிக்கப்பட்டது. சந்தேகநபர்களைப் பிணையில் விடுவிக்கும்படி கோரப்பட்டபோதும் நீதிமன்றம் பிணையை மறுத்து 22ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

காணிகளை நாம் அபகரிக்கிறோம் என்பதற்கு அத்தாட்சி உண்டா?கேட்கிறார் கோத்தபாய

வடக்கில் தனியாரின் காணிகள் அரசால் சுவீகரிக்கப்படுகின்றன என எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்த கோத்தபாய ராஜபக்ஷ, “வடக்கில் பலவந்தமாகத் தனியார் காணிகள் எவையும் சுவீகரிக்கப்பட்டிருந்தால் அவற்றை இனவாதம் பேசும் தமிழ் அரசியல்வாதிகள் ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டட்டும்” என்றும் சவால் விடுத்தார்.காணி சுவீகரிப்பு என்பது வடக்கில் சில அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்படும் பொய்ப்பிரசாரம் எனவும் கோத்தபாய குறிப்பிட்டார். வடக்கில் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணிகள் சுவீகரிப்புத் தொடர்பாகப் கோத்தபாய ராஜபக்ஷவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: வடக்கில் காணிகள், குறிப்பாகத் தனியார் காணிகள் எவையும் சுவீகரிக்கப்படவில்லை; அபகரிக்கப்படவுமில்லை. சில இடங்களில் தனியாருக்குச் சொந்தமான காணிகளைப் பாதுகாப்புத் தரப்பினர் பயன்படுத்தினாலும் அந்தக் காணிகள் மீளளிக்க முடியாத ஒரு நிலைமை இருக்குமாயின் காணி உரிமையாளருடன் பேசி அவர்களுக்குரிய காணி நட்டஈட்டைச் செலுத்திய பின்னரே காணியை நாம் ஏற்கிறோம். இதுதான் உண்மை நிலைமை. இதற்கப்பால் அரச காணிகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. அவற்றையே நாம் பொறுப்பேற்கிறோம். இன வாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதக் கண்ணோட்டத்துடன் இவற்றை நோக்கி தமிழ் மக்களிடம் தவறான அரசியலை நடத்தக்கூடாது. வடக்கின் பாதுகாப்பு வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை முற்றாக அகற்றிவிட வேண்டுமெனக் கேட்கிறார்கள். அதிகளவான இராணுவ முகாம்கள் வடக்கிலா இருக்கின்றன? இராணுவ முகாம்கள் கூடுதலாக இருப்பது அநுராதபுரம் மாவட்டத்தில். இரண்டாவதாக கொழும்பு மாவட்டத்தில்தான் கூடுதலான இராணுவ முகாம்கள் உள்ளன. எனவே, கூடுதலாக இராணுவ முகாம்கள் வடக்கில் உள்ளன, அவை மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இருக்கின்றன என்று தவறான தகவல்களை மக்களுக்கு வழங்கித் தவறாக வழிநடத்தக்கூடாது. புலிகளை முறையிட்டார்களா? புலிகள் இருந்தபோது எத்தனையோ தமிழர்களின் காணிகள் அவர்களின் கையகப்படுத்தி இருந்தார்கள். கொழும்பின் அரசியல் பிரமுகர் சார்லி மகேந்திரன் மற்றும் முன்னாள் மேயர் கணேசலிங்கம் போன்றவர்களுக்கும் இதேபோன்ற பிரச்சினைகள் இருந்தன. அவற்றை நாம்தான் தீர்த்துவைத்தோம். புலிகளின் காலத்தில் தமிழர்களின் காணிகளும், சொத்துகளும் அவர்களால் கையகப்படுத்தப்பட்டிருந்தன. இப்போது வீறாப்பாகப் பேசும் தமிழ்க் கூட்டமைப்பினரோ அல்லது வேறு எவருமோ புலிகள் காணிகளை அபகரித்துள்ளனர் என்று அப்போது அமெரிக்காவிடமோ அல்லது இந்தியாவிடமோ முறையிட்டார்களா என்று நான் கேட்க விரும்புகின்றேன். இப்போது தமிழ்நாட்டுக்குச் சென்று முறையிடுபவர்கள் அப்போதும் இதனைச் செய்திருக்கலாமல்லவா? வடக்கில் நாம் புலிகளைப் போன்று செயற்படவில்லை. தனியாரின் காணிகளைக் கபளீகரம் செய்யும் எந்த நோக்கமும் எமக்குக் கிடையாது. அவ்வாறான திட்டங்களும் எம்மிடம் கிடையாது. இவ்வாறு குறிப்பிட்டார் கோட்டாபய.

15 ஜூன் 2012

கருணா சொல்லியே தேசியத் தலைவரின் மகன் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

தலைவரின் மகன் பாலச்சந்திரன் கொலை: வெளிவராத உண்மைகள் !தமிழீழ தேசியத்தலைவரினது 14 வயது மகன் பாலச்சந்திரனை, இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என்ற செய்தியை இதுவரை பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தது. அதனைத் தவிர இச் செய்தியை சனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டது யாவரும் அறிந்ததே. இருப்பினும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது, இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என்று எல்லா ஊடகங்களும் தெரிவித்தபோதிலும், குறிப்பாக எவர் இப் படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர் அவர்களின் பெயர் என்ன என்பது தொடர்பாக இதுவரை எத்தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். எமக்கு கிடைத்த உறுதியான தகவலின் அடிப்படையில், சிறுவன் பாலச்சந்திரன் எப்போது, எங்கே, யாரல் யாரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விடையங்கள் தற்போது தெளிவாகியுள்ளது. போர் முடிவுற்றதாக இலங்கை இராணுவம் அறிவித்த மே 19ம் திகதி அதிகாலை 7.30 மணிக்கு நந்திக்கடல் களப்பின் மேற்குப் புறமாக பாலச்சந்திரன் இராணுவத்திடம் சென்று சரணடைந்துள்ளார். இராணுவத்தின் 4ஆவது விஜயபாகு படைப்பிரிவின், முத்துபண்டாவின் தலைமையில் இருந்த 08 பேர் கொண்ட இராணுவப் படையணியிடம் இவர்கள் சரணடைந்ததாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் தலைவரது பிரத்தியே பாதுகாப்பு உறுப்பினர் இருவருடன் பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார். இவரோடு மேலும் மூவர் பாதுகாப்புக்காக பாலச்சந்திரனோடு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்போது லெப்டினன் கேர்ணல் அலுவிகார அவரது 681ஆவது பட்டாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேர்ணல் லலந்த கமமே ஊடாக, 53ஆவது படையணியில் அன்று மேஜர் ஜெனரல் பதவியிலிருந்த கமல் குணரத்னவிற்கு இவ்விடையத்தை அறிவித்துள்ளார். சிறிது தூரத்தில் இருந்த கமல் குணரத்னவின் உத்தரவிற்கமைய, பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரை நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து கமல் குணரத்ன இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கமல் குணரத்ன பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரிடம் பிரத்தியேகமாக விசாரணைகளை நடத்தியுள்ளார். இதன்போது தனது தந்தையிடமிருந்து பிரிந்து பாதுகாப்புத் தரப்பினருடன் வந்து இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக பாலச்சந்திரன் கூறியுள்ளார். பாலச்சந்திரனிடம் பெறப்பட்டத் தகவல்களை கமல் குணரத்ன உடனடியாக பாதுகாப்புச் செயலாளருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தையும் கோத்தபாய கருணாவிற்கு அறிவித்துள்ளார். இதன்போது பாலச்சந்திரன் எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக வரக்கூடும் என்பதுடன், சிறு வயது என்பதால் நீதிமன்றத் தண்டனைகளிலிருந்தும் தப்பிவிடுவதற்க சாத்தியம் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதே சரியான முடிவும் எனவும் பாதுகாப்புச் செயலாளருக்கு கருணா கூறியுள்ளார் என மேலும் அறியப்படுகிறது. இதற்கமைய மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்ட கோதாபய ராஜபக்ஷ, மேஜர் ஜெனரலின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளார். பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக பிரித்தானியாவின் ”செனல் 4” தொலைக்காட்சியும் பல தகவல்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்தப் படையணியில் இருந்த இராணுவ அதிகாரியொருவரே மேற்கண்ட தகவல்களை கசியவிட்டுள்ளார். குறிப்பிட்ட இராணுவ அதிகாரியின் மகன் ஒருவர் சமீபத்தில் தீராத நோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும், தான் முன் நிலையில் பாலச்சந்திரணுக்கு நடந்த கொடுமைகளை, தான் வெளியே சொன்னால் தான் தன் பழி தீரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து 14 வயது பச்சிளம் பாலகன் என்று கூடப் பாராமல், அவனை கொலைசெய்தது பிரிகேடியர் கமல் குணரத்னவே என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

14 ஜூன் 2012

இஸ்லாமியர்களின் கடைகளை அசிங்கப்படுத்திய சிங்கள வெறியர்கள்!

காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் மூடப்பட்டிருந்த முஸ்லிம் கடைகளுடைய பூட்டுக்களில் மனித மலம் பூசப்பட்டிருப்பதாகவும்,நாய்கள் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதிகளில் வீசப்பட்டிருப்பதுடன், நாய் இரத்தமும் அங்குள்ள கடைகள் மீது தெளிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிமிருந்த நிலையிலேயே இந்த அசிங்கம் நிறைந்த தகவல்களும் வெளியாகியுள்ளன. இச்சம்பவங்களுக்கு சிங்கள பேரினவாதிகள் காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது. தம்மை சிங்கள தேசப்பற்றாளர்கள் எனக்கூறிக்கொள்ளும் சிலரே இவ்வாறான பாதகச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. முஸ்லிம் சமூகத்திற்கெதிராக காலியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த இனவாதச் செயற்பாடுகளை முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் யாழ் முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார். இதுதொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

13 ஜூன் 2012

வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்!

யாழ்ப்பாணம், வேம்படி மகளிர் கல்லூரி அதிபரின் திடீர் இடமாற்றத்தை ரத்துச் செய்யக்கோரி அக்கல்லூரி மாணவிகளால் பாடசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்று நடத்தப்பட்டது. அத்துடன், தமது எதிர்ப்பினைத் தெரிவித்து மாணவிகள் கையொப்பமிட்ட மகஜர் ஒன்று, மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டம் தொடர்பாக மாணவிகள் கருத்து தெரிவிக்கையில், 'இந்த இடமாற்றத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீண்ட காலமாக எமது அதிபர் பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார். அவரின் சிறப்பான செயற்பாடே இவ்வாண்டு க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் எமது பாடசாலை முதலிடம் பெறுவதற்கு காரணம். இந்த இடமாற்றத்தை யாழ் வலயக் கல்வித் திணைக்களம் உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்யப்படாவிட்டால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் இடம்பெறும்' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழர்கள் தொடர்ந்து பொறுமை காக்கமாட்டார்கள்!விக்கிரமபாகு கருணாரட்ன

தமிழர் செறிந்து வாழும் தாயகமான வடக்கை அடிமைகள் பூமியாக மாற்றுவதற்கு கொடுங்கோல் அரசாங்கம் இராணுவத்தை அனுப்பி வேடிக்கை பார்ப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் பொறுமையை பேரினவாத அரசாங்கம் சோதனை செய்ய முற்படுமானால் பின் விளைவுகள் விபரீதமாக மாறும் என்று நவ சமசமாஜக் கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். பிணங்களை அடக்கும் மயான பூமியையும் ஆக்கிரமித்து, அங்கு பௌத்த கொடியை நிலைநாட்டி சிங்கள தேசம் என்ற இனவாத மந்திரத்தை செப்பி நாட்டை சிங்களமயமாக்குவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தங்களுக்கான உரிமைகளைக் கோரிப் போராடிய தமிழர்களைக் கொன்று குவித்த அரசாங்கம், தமிழினத்தின் தனித்துவ சின்னங்களையும் இன்று அழித்து விட்டுள்ளதாக விக்கிரமபாகு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவம் திட்டமிட்டு காணிகளை சுவீகரித்து வரும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. உரிமைகளை ஜனநாயக விழுமியங்களுக்கமையப் பெற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் அதனை இன்னுமொரு தரப்பு தர மறுக்கும் தருணத்தில் வன்முறை மூலமாக அதனை பெறவேண்டும் என்ற நிலைமை ஏற்படுகின்றது. அதுவே எதிர்காலத்தில் தீவிரவாதமாக உருவெடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல இன்னல்களைச் சந்தித்த பின்னரும் தமிழர்களின் துயரங்கள் அவல நிலைமைகள் தீரவில்லை. மாறாக, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயற்பாடுகளையே இந்த மஹிந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும் நவசமசமாஜ கட்சித் தலைவரும், தெஹிவளை கல்கிசை நகரசபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

12 ஜூன் 2012

மொழிபெயர்ப்பு கடமைகளில் போராளிகள்!

இலங்கை காவற்துறை திணைக்களத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் நாலாம் மாடியில் மொழிபெயர்ப்பு கடமைகளில் முன்னாள் போராளிகளை அரசு கடமையில் ஈடுபடுத்திவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது குடாநாட்டிலிருந்தும் வன்னியிலிருந்தும் தொடர் விசாரணைகளுக்கென பலரும் தொடர்ச்சியாக நாலாம் மாடிக்கு அழைக்கப்பட்ட வண்ணமேயுள்ளனர். முன்னாள் போராளிகளது குடும்பங்கள் நாட்டை விட்டு தப்பியோடியவர்களென பலரதும் குடும்பங்களுக்கும் இவ்வாறு விசாரணைக்கென அழைக்கப்பட்ட வண்ணமேயுள்ளன. அவர்களிற்கான சிங்கள-தமிழ் மொழி பெயர்ப்பாளர்களாகவே முன்னாள் போராளிகள் பலரும் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. எனினும் அவ்வாறு பயன்படுத்தப்படும் போராளிகளுள் இதுவரை காணாமல் போயுள்ளதாக கூறி பெற்றோர் மற்றும் குடும்பத்தவர்களால் தேடித் திரியும் சிலரும் இருந்ததாக தெரியவருகின்றது.எனினும் அவர்களும் ஆட்களை அடையாளங்காணும் பணிக்காகவே பயன்படுத்தப்பட்டு வருவதாக இவ்வாறு விசாரணைக்காக சென்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்தார். விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான உடைமைகளை தேடிக்கண்டு பிடிப்பதில் அரசு முழு அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான தகவல்களை தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு தொடர் விசாரணைகளை பொதுமக்களிடம் படைத்தரப்பு முன்னெடுத்து வருகின்றது.

11 ஜூன் 2012

சரணடைந்து காணாமற்போனோர் குறித்துஐ.நாவிசாரிக்கப் போகிறது!

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர்வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. முறைப்படியான இந்த வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்தால், மூன்றாவது தரப்பின் ஊடாக இந்தக் கலந்துரையாடல்கள் நடத்தப்படக் கூடும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளையின் சிறிலங்கா பயணத்துக்கு முன்பதாக உண்மை கண்டறியும் குழுவொன்றை அனுப்புவதற்கு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன் அடிப்படையிலேயே இந்தக் கலந்துரையாடலுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேண்டுகோள், நவிபிள்ளையின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னதாக உண்மை கண்டறியும் குழுவை அனுமதிக்க விடுக்கப்பட்ட வேண்டுகோளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இந்த நேர்முகத்துக்கு முறைப்படியான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த போராளிகள் காணாமற்போனதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகம் இதுதொடர்பாக சாட்சியமளித்தோரிடம் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக நம்பப்படுவதாகவும், அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை!

Laxman Kiriella_CIஅரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.கண்டி – அம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அண்டைய நாடான இந்தியாவுக்கு கூட இலங்கை அமைச்சர்களால் செல்ல முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், அரசாங்க நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நன்மை அடைந்து வருவதாக ஜே. வி .பி தெரிவித்துள்ளது. ஜே வி பி யின் பொது செயலாளர் டில்வின் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை உலக சந்தையில் எண்ணெய் விலை குறைவடைந்த நிலையிலும், தொடர்ந்தும் மக்களுக்கு எரிபொருளின் விலையை குறைத்து வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

10 ஜூன் 2012

கிழக்கு முஸ்லீம் மக்கள் கக்கீம் முதல்வராவதை விரும்பவில்லை!

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஹக்கீம் போட்டியிடுவதனை பிரதேச முஸ்லிம்கள் விரும்பவில்லைகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் போட்டியிடுவதனை மாகாண முஸ்லிம்கள் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கிழக்கு மாகாணசபைத் சேர்ந்த ஒருவரே போட்டியிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் எதிர்வரும் 16ம் திகதி பொலனறுவையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னரே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது வேட்பாளர்களை தீர்மானிக்க உள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேர்தலில் களமிறங்க நீதி அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ஹக்கீம் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், முதலமைச்சர் வேட்பாளராக ஹக்கீம் போட்டியிடுவதனை கட்சியைச் சேர்ந்த சிலரே எதிர்த்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மக்கள் காணிகளை அபகரித்து மண்டைதீவில் படை முகாம் விஸ்தரிப்பு!

யாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள மண்டைதீவு பகுதியில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அபரித்து கடற்படை தளத்தினை விரிவு படுத்தும் நடவடிக்கையில் சிறீலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.மண்டைதீவு கடற்படை தளத்தினை அண்மிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்துக்கொள்ளும் நோகில் அவற்றிற்கு உதவுமாறு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகளை சிறீலங்கா கடற்படையினர் நாடியுள்ளதாக யாழில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் நிலைகொண்டுள்ள படையினர் அந்த காணிகளை படையினருக்கு சொந்தமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் குறிப்பாக அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து தற்போது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து உறவினர்களின் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் மற்றும் பன்னாடுகளிலும் வாழ்ந்துவருகின்றார்கள் இவ்வாறான மக்களின் விபரங்களை திரட்டிய படையினர் மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். மண்டைதீவு பகுதியின் 1 ஆம் வட்டாரத்தில் அம்மன்கோவிலுக்கு கிழக்காக உள்ள 300 ஏக்கருக்கும் அதிகமான வளம்தரும் நிலத்தினை சிறீலங்கா கடற்படையினர் அபகரித்துள்ளார்கள். இவ்வாறு அபகரித்து பாரிய கடற்படை தளத்தினை விரிவுபடுத்தியுள்ள நிலையில் மேலும் 50 மீற்றர் சுற்றுவட்ட நிலத்தினை கையகபடுத்த அரச இயங்திரங்களை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு பகுதியில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்ட நிலையில் தற்போது பாரியளவிலான கடற்படை தளமும் பல ஆயிரம் படையினர் தங்ககூடிய வகையில் கட்டடங்களும் அவர்களுக்கான விடுதிகளம் மற்றும் உலங்கு வானூர்தி தளமும் கடற்படை தளத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது,வடக்கில் படைக்குறைப்பினை மேற்கொள்வதாக பன்னாடுகளுக்கு கூறிக்கொள்ளும் சிறீலங்கா அரசு தமிழ்மக்களின் காணிகளை கையகப்படுத்தி படைமுகாம்களை அமைத்து மேலும் படையினரின எண்ணிக்கையினை அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது,யாழ்ப்பாணத்தின் தீவக பகுதிகளில் மாத்திரம் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கடற்படையினர் நிலைகொண்டுள்ளார்கள் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்றவகையில் படையினரின் தங்கு விடுதிகளும் இந்த மண்டைதீவு கடற்படை முகாமில் அமைக்கப்படுகின்றது.

09 ஜூன் 2012

படையினருக்கு காணி கொடுப்பதில்லையென தீர்மானம்!


வலிவடக்குப் பிரதேச சபைக்குச் சொந்தமான 10 பரப்புக்காணியை படையினர் தமக்கு வழங்குமாறு கோரியிருந்த நிலையில் அந்தக் காணியை படையினருக்கு வழங்குவதில்லை என சபையின் நேற்றைய விசேட கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 
சாலம்பை கலட்டியில் உள்ள 10 பரப்புடைய பிரதேசசபைக்குச் சொந்தமான காணியை படையினர் தமக்கு வழங்குமாறு கோரி சபைத் தவிசாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர் .
14 ஆவது கெமுனு ஜோச் படைப்பிரிவினரே குறித்த காணியைத் தமக்கு வழங்குமாறு கடிதம் அனுப்பியிருந்தனர். குறித்த காணி தனிநபருக்கு சொந்தமானது எனவும் அவர் அதனை படைத்தரப்புக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் தெரிவித்து மாவட்ட விலைமதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே குறித்த காணி பிரதேச சபைக்கு சொந்தமானது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்தக் காணியை தமக்கு வழங்குவதற்கு அனுமதிக் கடிதம் வழங்குமாறு ஆர்.எம்.கே.பதுகே எனும் மேஜர் தர இராணுவ அதிகாரி ஒருவரின் கையெழுத்துடன் இந்தக் கடிதம் அனுப்பபட்டிருந்தது.
இந்தக் கடிதத்துக்கு ஏற்ப காணியை பகிர்வதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கூட்டம் வலி வடக்கு பிரதேச சபையில் நேற்று இடம்பெற்றது.
இதில் உறுப்பினர்கள் ஏகமனதாக 1971 ஆம் ஆண்டில் எமக்கு தரப்பட்ட காணி அப்போதைய சூழ்நிலையில் விளையாட்டு மைதானம் அமைக்க முடியாமல் போய்விட்டது. 
குறித்த காணியை சுற்றியுள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்ததும் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும் எனவே அந்தக் காணியை வழங்குவதில்லை என்று தீர்மானித்தனர்.

இலங்கை அரசின் போர்க் குற்றம்! மேலும் புகைப்படங்கள்.


இலங்கை அரசின் போர்க் குற்றம்! மேலும் புகைப்படங்கள் வெளியீடு!! – (படங்கள் இணைப்பு)இலங்கை அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையிலான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் பல ஆதாரமான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளிவந்திருந்தன.
இவ்வாறு வெளியிடப்பட்ட ஆதாரங்கள் அரச தரப்பை ஒரு இக்கட்டான நிலைக்குள் தள்ளி, ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு ஒரு இறுக்கமான சூழ்நிலையை தோற்றுவித்திருந்தது.
இது இவ்வாறிருக்க கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட போர்க் குற்ற ஆதாரப் புகைப்படங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக மேலும் சில ஆதாரப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

08 ஜூன் 2012

யாழில் சிறீலங்காவின் அரசியல் யாப்பு மாணவர்களால் தீக்கிரை!

மகிந்த ராஜபக்ஷ பிரிட்டன் வந்து தங்கியிருந்த 6ம் திகதி அன்று, இலங்கையின் அரசியல் யாப்பு யாழில் வைத்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கடைசி தமிழ் அரசனான சங்கிலியன் ஆட்சி செய்த நல்லூரிலுள்ள, புனித யோவான் தேவாலய கல்லறையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய மாணவர்களே, மேற்படி தாம் கொண்டுவந்த இலங்கை அரசின் யாப்புகளின் மாதிரியைப் போட்டு பெற்றோல் ஊற்றி எரித்துள்ளனர். இதேபோன்றதொரு சம்பவம் லண்டன் ஆர்பாட்டத்தில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். சுலோக அட்டைகளினில், இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் நடைமுறையை அமுலுக்கு கொண்டு வந்த பிரிட்டிஸாரின் கோல்புறூக் - கெமரோன் அரசியல் யாப்பு முதல் டொனமூர், சோல்பெரி அரசியல் யாப்பு ஈறாக 1972ம் ஆண்டினில் சிறிமாவினால் கொண்டுவரப்பட்ட பௌத்த குடியரசு யாப்பு மற்றும் ஜே.ஆரின் அரசியல் யாப்பு வரையாக ஏந்தி வந்த மாணவர்கள், முன்னைய வெள்ளையின பிரதிநிதிகளது அடையாளமாகவுள்ள அவர்களது கல்லறை முன்பதாக மலர்வளையம் வைத்து தமது இறுதியஞ்சலியினை செலுத்தியுள்ளனராம். மலர்வளையத்தை சூழ தாம் எடுத்து வந்த சுலோக அட்டைகளினை பரப்பி வைத்த அவர்கள், பின்னர் அரசியல் யாப்பின் பிரதிகளையும் அங்கு வைத்து தீயிலிட்டனர். மாணவர்களது இப்போராட்டம் பாதுகாப்பு அச்சறுத்தல்களின் மத்தியினில் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

அதிர்வு இணையம்

கனடிய தமிழ் மக்கள் பெரும் கண்டனம்!

எலிசபெத் அரசியாரை எதிர்த்து கனடிய தமிழர்கள் முற்றுகை!!பிரிட்டிஷ் அரசியாரின் வைர விழா கொண்டாட்டத்தில் இலங்கை அதிபர் கலந்துகொண்டதனைத் தொடர்ந்து கனடிய மக்கள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம், தொரொண்டோ பிரிட்டிஷ் பொது தூதரகத்தின் முன் நடந்துள்ளது. இங்கிலாந்து அரசியான அவர், நாட்டின் தலைவர் மட்டுமல்லாது கனடாவின் அரசியாரும் ஆவார். ராஜபக்சே போர் குற்றவாளி என எழுதப்பட்ட எதிர்ப்பு பலகைகளை ஏந்திய தமிழ்மக்கள், தமிழர்களுக்கு எதிராக நடந்துவரும் இனப்படுகொலையை எதிர்த்தும் போராட்டத்தின்போது முழங்கியுள்ளனர். மேலும், பொதுநலவாய நாடுகளில் இலங்கையின் அங்கத்துவத்தை எதிர்த்தும் கண்டனம் தெரிவித்துள்ளனர் கனடிய தமிழ்மக்கள். வரலாற்று சிறப்புவாய்ந்த அத்தகைய கொண்டாட்டத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்திருப்பது போர்குற்றங்கள்; மனித உரிமை மீறல்; மனித இனத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் மேன்மேலும் இலங்கைக்கு எதிர்வினைகளையே உண்டாக்குவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர். இதன் தொடர்பாக மேலும் கருத்துரைத்த ஒருவர், பொதுநலவாய நாடுகளின் பொருளாதார மன்ற கூட்டத்தில் மேடையேர இருந்த ராஜபக்சேவின் உரை ரத்து செய்யப்பட்டதுபோல் அரசியாருடனான மதிய உணவு விருந்துபசரிப்பிலும் ராஜபக்சே கலந்துகொள்வதை பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் கமலேஷ் ஷர்மா தடை செய்திருக்க வேண்டும் என்றுரைத்துள்ளார். இதனிடையே, இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்த பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவம், ஜெனிவாவில் எடுக்கப்பட்ட இலங்கையின் போர் குற்றங்கள்; மனித உரிமை மீறல்கள் தொடர்பான UNHRC-இன் தீர்மானங்களின் போலி பின்னனியையே குறிப்பதாக தமிழ்மக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். அதிகலவிளான புலம்பெயர் தமிழர்களைக் கொண்ட பொதுநலவாய நாடுகளில் ஒன்றான கனடாவில் நடந்த இம்முற்றுகை போராட்டம், லண்டனில் வசிக்கும் தமிழ்மக்கள் தங்கள் ஆதரவை விரிவாக்கும் செயலாக கருதுவதாக போராட்ட ஒருங்கினைப்பாளர் தெரிவித்துள்ளார்.

வெற்றிக்குமரன் தமிழரசி

07 ஜூன் 2012

குடாநாட்டிலும் காணி அபகரிப்பில் சிங்களப்படைகள்!

வன்னி மாவட்டங்களில் தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏப்பம் விட்ட இலங்கை இராணுவம் தற்போது யாழ். மாவட்டத்திலும் முதற்கட்டமாக 61 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.நல்லூர், கோப்பாய், தெல்லிப்பழை ஆகிய மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் இருந்து மாத்திரம் இந்த 61 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட உள்ளது. இவற்றில் தனியாரின் உறுதிக்காணிகளும் உள்ளடங்குகின்றன. இவற்றை காணி சுவீகரிப்பின் கீழ் மேற்கொள்வதற்கும் இராணுவம் திட்டங்களைத் தயார்ப்படுத்தி விட்டது. அது தவிர பிரதேச சபைகள், மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை அரச காணிகள் என்ற போர்வையில் கையகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் கிட்டத்தட்ட 24 ஏக்கர் நிலமும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் சுமார் 2 ஏக்கர் நிலமும் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரதேசத்தில் 35 ஏக்கர் நிலமும் இராணுவத்தால் கைப்பற்றப்பட உள்ளன. தாம் கேட்கும் இந்தக் காணிகளைத் தம்மிடம் கையளிக்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு இராணுவம் இந்த மூன்று பிரதேச செயலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தனியார் காணிகளை கையகப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ காணி அமைச்சின் செயலாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று மாகாண காணி ஆணையாளர் பொ.தயானந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். அரச காணிகளாயின் அவை ஏற்கனவே யாருக்காவது வழங்கப்பட்டிருந்தனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் பிரதேச செயலர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மூன்று பிரதேச செயலர் பிரிவுகளையும் தவிர்த்து பருத்தித்துறை, காரைநகர், வலி. மேற்கு ஆகிய பகுதிகளிலும் காணிகளைக் கைப்பற்ற இராணுவம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. யாழ். குடாநாட்டில் இருந்து இராணுவத்தினர் குறைக்கப்பட்டு வருகின்றனர் என்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டு வருகின்றபோதும் இராணுவம் இங்கு மக்களின் காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவது ஏன் என்று மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

06 ஜூன் 2012

மகிந்தவின் வாகனம் மீது முட்டை வீசித்தாக்குதல்!

லண்டன் போல் மால் மாளிகையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சவின் வாகனம், ஈழத்தமிழர்களின் கூழ்முட்டை வீச்சுக்கு இலக்காகியுள்ளது.விருந்துண்ணும் நிமித்தம் இன்று மதியம் 12:00 மணியளவில் போல் மால் மாளிகையை நோக்கி விரைந்து கொண்டிருந்த மகிந்தரின் இவ்வாகனத்தை இலக்கு வைத்து ஈழத்தமிழ் போராட்டவாதிகளால் சரமாரியாக கூழ்முட்டைகள் வீசப்பட்டன. இதில் சில கூழ்முட்டைகள் மகிந்தர் பயணித்த வாகனத்தின் மீது வீழ்ந்து சிதறியுள்ளன. இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் மாளிகைக்குள் மகிந்தர் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் பொய் பரப்புரையை முறியடித்து. தேசியத் தலைவர் அவர்களால் கட்டமைக்கப்பட்ட அனைதுலக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பெரும் திரளான மக்களை திரட்டி உள்ளனர்.

பிள்ளையார் இருந்த இடத்தில் புத்தரைவைத்த சிங்களப்படைகள்!

கிளிநொச்சியில் உள்ள கிருஷ்ணபுரம் என்ற பகுதியில் இருந்த பிள்ளையாரை பிறிதொரு இடத்துக்கு மாற்றி விட்டு, அப் பகுதியில் புத்தவிகாரை ஒன்றை அமைத்துள்ளனர் இராணுவத்தினர். இராணுவத்தினரின் இச் செயற்பாட்டுக்குப் பிரதேச மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். புலிகள் காலத்தில் நவம் அறிவுக்கூடம் அமைந்திருந்த இடத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 20ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமித்து வைத்துள்ள படையினர் அதற்கு முன்பாகவுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்துள்ளனர். இதன் பின்னர் வீதியை பார்த்தவாறு அமைந்திருந்த ஆலயத்தை மறுபுறமாக மாற்றியமைத் துவிட்டு, அந்த இடத்தில் புத்தர் சிலை வைத்து சிறிய விகாரை ஒன்றினையும் அமைத்துள்ளனர். இந்த இடத்தில் மிக நீண்டகாலமாக இப்பகுதி மக்களால் வழிபடப்பட்டுவந்த ஆலயத்தை மக்களின் அனுமதியில்லாமல் உடைத்தது, மாற்றியமைத்தது மட்டுமல்லாமல் அந்த இடத்தில் புத்தர் சிலை வைத்து விகாரையும் அமைத்துள்ளனர். மேலும் பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலப்பகுதி படையினரால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது மக்கள் வழிபாட்டிடத்தையும் மாற்றியமைத்துள்ளமை தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இதேவேளை இந்து ஆலயம் அகற்றப்பட்டமை தொடர்பில் இந்து அமைப்புக்களின் ஒன்றியம் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.