பக்கங்கள்

26 ஜூன் 2021

தடைகளைத் தாண்டி இறுதிவரை மக்களுடன் இருப்போம்-கனகரத்தினம் சுகாஸ்!

இம்முறை #கொரோனா #நிவாரணப் #பணியை ஆரம்பித்து இன்றுடன் #ஒரு #மாதம் நிறைவடைகின்றது! கடந்த ஆண்டு 2020 கொரோனா நிவாரணப் பணி, 2020 பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்குப் பிறகு மீண்டும் ஒரு குறுகிய கால இடைவெளியில் இம்முறை எவ்வாறு கொரோனா நிவாரணப் பணியை மேற்கொள்வது? எமது பொருளாதாரம் அதற்கு இடங்கொடுக்குமா? உதவும் தமிழ்ச் சொந்தங்கள் மீண்டும் உதவுவார்களா? உதவ அவர்களுக்கு மனமிருந்தாலும் அவர்களின் பொருளாதாரம் அதற்கு இடங்கொடுக்குமா? என்ற பல அடுக்கடுக்கான கேள்விகளுடன், எப்படியென்றாலும் எமது மக்களோடு இறுதிவரை பயணிக்க வேண்டும் என்ற உந்துதலால் ஆரம்பித்த நிவாரணப் பணி இன்று #உங்கள் #அனைவரது #பேராதரவோடு ஒரு மாதத்தை நிறைவு செய்கின்றது என்பது #ஆச்சரியமான #உண்மை! உங்களின் ஆதரவின்றி நிச்சயமாக இது சாத்தியமாகியிருக்காது! பல சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் #கொடையாளர்கள், சேவை நோக்கோடு பணியாற்றும் #களப் #பணியாளர்கள், #சக #பணியாளர்கள் அனைவருக்கும் எமது சிரந்தாழ்த்திய நன்றிகள்! எத்தனை சவால்களைச் சந்தித்தாலும் இறுதிவரை மக்களுடன் இருப்போம் என்பதில் உறுதியாகவுள்ளோம்! பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்தாலும் இறுதிவரை எம்மவர்கள் வழிகாட்டிச் சென்ற #கஞ்சித் #தொட்டித் #திட்டத்தை நடைமுறைப்படுத்தி என்றாலும் #எம்மக்களோடு #தொடர்ந்து #பயணிப்போம்! “#நாங்கள் #சாப்பிடும்வரை #எமது #மக்களையும் #சாப்பிட #வைப்போம்” என்ற வாசகம் வெறும் உதட்டிலிருந்து பிறந்ததல்ல, அது உள்ளத்திலிருந்து பிறந்தது! ஆதரவளிக்கும் அனைவருக்கும் #கோடி #நன்றிகள்! தடைகளைத் தாண்டி #இறுதிவரை மக்களுடன் இருப்போம்!!!

23 ஜூன் 2021

படையினரால் பல ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன-பாராளுமன்றில் கஜேந்திரன்!

வடக்கு,கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக வெளிநாடுகளுக்குக் குத்தகைக்கு வழங்கக்கூடாது. தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடமே மீளக் கையளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபன அபிவிருத்தி திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். "போரின் பின்னர் வடக்கு, கிழக்கில் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் படையினரால் பல ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் காணிகளில் சில பகுதி சீனாவுக்கு குத்தகைக்கு வழங்க தற்போது திட்டமிடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் யாழ். கீரிமலைப் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையைக் குத்தகைக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம்" எனத் தெரிவித்துள்ளார்.

11 ஜூன் 2021

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றில் தீர்மானம்!

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்பெய்ன்-மொக்ரோ எல்லைப் பகுதி, ரஸ்யா மற்றும் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குளும், எதிராக 15 வாக்களும் அளிக்கப்பட்டதுடன் 40 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வதாகவும் அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் சிவிலியன் சந்தேக நபர்களை கைது செய்யவும் தடுத்து வைக்கவும் கூடிய அதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக சித்திரவகைள் இடம்பெறுவதாகவும் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாகவும், பலவந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் இது சர்வதேச நியமங்களுக்கு அமைவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இலங்கைக்கு மீளவும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்தல், மனித உரிமை விவகாரங்கள் உள்ளிட்ட 27 சர்வதேச பிரகடனங்களை அமுல்படுத்தல் ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்த சலுகை வழங்கப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் வழியாக இந்த சலுகைத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தீர்மானம் நிறைவேற்றிய உறுப்பினர்கள் கோரியுள்ளனர். இலங்கைக்கு தற்காலிக அடிப்படையில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை இடைநிறுத்தக் கூடிய சாத்தியங்கள் உண்டா என்பதனை உன்னிப்பாக மதிப்பீடு செய்யுமாறும் கோரியுள்ளனர்.

08 ஜூன் 2021

சிவசங்கர் பாபா கைது செய்யப்படவேண்டும்-சீமான் கண்டன அறிக்கை!

பிஞ்சுப்பிள்ளைகளை ஆன்மீகத்தின் பெயரில் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி மீதும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்று சீமான் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:"செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா அப்பள்ளியில் பிஞ்சுப்பிள்ளைகள் மீது நிகழ்த்தி வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து வெளிவந்திருக்கும் செய்திகள் பேரதிர்ச்சி தருகின்றன. அப்பள்ளிக்கூடத்தில் படித்த மாணவிகள் அங்கு நடந்த கொடூரங்களை விளக்கும் குரல் பதிவுகளும், கேள்வியுறும் செய்திகளும் ஈரக்குலையைக் கொதிக்கச் செய்திருக்கின்றன.பள்ளி எனும் கல்விக்கட்டமைப்புக்கு அனுமதிபெற்று, எவ்வித விதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் ஆட்படாது ஆன்மீகத்தின் பெயரைச்சொல்லி, தன்னை கடவுளாக உருவகப்படுத்திக் கொண்டு கல்வி பயில வரும் ஆயிரக்கணக்கான பெண் பிள்ளைகளை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கியும், இதற்கெதிராகக் குரல் கொடுக்க முயல்வோர் மீது அடக்குமுறையை ஏவியும் ஒடுக்குவதுமெனப் பல ஆண்டுகளாகக் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பாபா சிவசங்கர் போன்றவர்கள் கடும் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டியவர்களாவர்.‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?' எனும் ஆணாதிக்க ஒடுக்குமுறைகளைத் தகர்த்து, சமூகத்தில் தலைதூக்கவும், மேலெழுந்து உயரவும் உதவும் ஒற்றைப்பேராயுதம் கல்வியே என்பதையுணர்ந்து, பள்ளிக்கூடத்திற்கு வரும் பிஞ்சுப்பிள்ளைகளை ஆன்மீகத்தின் பெயரால் தங்களது பாலியல் இச்சைகளுக்கு இரையாக்கிய சிவசங்கர் பாபா நிகழ்த்திய கொடுமைகளும், அத்துமீறல்களும் வெளியே வராது மூடி மறைக்கப்பட்டிருப்பது தற்செயலானதல்ல.ஆயிரக்கணக்கான பெண்களைப் பலிகொண்ட சமகாலத்தில் நடந்தேறிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போல இச்சம்பவத்திற்குப் பின்னாலும் பெரும் வலைப்பின்னலும், ஆட்சியாளர்களின் தொடர்பும் இருக்கும் எனும் வாததத்தைப் புறந்தள்ளுவதற்கில்லை. பணபலமும், அரசியல் செல்வாக்கும், அதிகாரப்பின்புலமும், சமூக அங்கீகாரமும் இருக்கும் மமதையில், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் மிதப்பிலும், மனப்போக்கிலும் மனிதத்தன்மையற்று பிஞ்சுப்பிள்ளைகளைச் சிதைத்திட்ட சிவசங்கர் பாபா போன்றவர்கள் சமூகத்தின் சாபக்கேடு.பள்ளி எனும் கல்விக்கூடத்தின் பெயரால் அதிகார மையங்களை அமைத்து, அதன்மூலம் தங்களது உடற்பசிக்குப் பிஞ்சுகளைக் குதறும் கயவர்களை எவ்விதப் பாரபட்சமுமில்லாது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், தண்டிக்கவும், கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டியது பேரவசியமாகிறது. சமூகத்தின் மேல்தட்டிலிருக்கும் மனநிலையில் கொஞ்சம்கூட ஈவு இரக்கமற்று அப்பாவிப்பெண் குழந்தைகளைப் பலிகடாக்கிய சிவசங்கர் பாபா இச்சமூகத்தில் இன்னும் சுதந்திரமாக வாழ்வது வெட்கித் தலைகுனியச் செய்கிறது.அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து, பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அதனை வெளிக்கொணரும் வேளையிலும் அப்பள்ளி மீதும், சிவசங்கர் பாபா மீதும் நடவடிக்கை எடுக்காது தமிழ்நாடு அரசு மெத்தனப்போக்கோடு இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இவ்விவகாரத்தில், தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஒப்புக்குப் பள்ளிக்குச் சென்று விசாரணை எனும் பெயரில் பார்வையிட்டதைத் தவிர எவ்வித முன்நகர்வும் இல்லாதது பெரும் ஏமாற்றமாகும்.பெண் பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்குப் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையுமில்லை என்று வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கிறது. சிவசங்கர் பாபா மீதும், அப்பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஏன் தயங்குகிறது என்பது இதுவரை புரியவில்லை.ஆகவே, இனிமேலாவது முனைப்போடு செயல்பட்டு, பள்ளிக்கூடம் நடத்துவதாகக் கூறிக்கொண்டு, பாலியல் முறைகேடுகளையும், வன்கொடுமைகளையும் பல ஆண்டுகளாகச் செய்து ஆயிரக்கணக்கான பெண் பிள்ளைகளைச் சிதைத்திட்ட சிவசங்கர் பாபா மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உடனடியாகச் சிறைப்படுத்த வேண்டுமெனவும், சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.