பக்கங்கள்

12 செப்டம்பர் 2010

பாடகி சொர்ணலதா மரணம்!


இனிமையான குரலால் 23 வருடங்கள் ரசிகர்களை மயங்க வைத்த பாடகி சொர்ணலதா இன்று சென்னையில் காலமானார். அவரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா பாலக்காட்டை பூர்வீகமாகக்கொண்ட சொர்ணலதா தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம், இந்தி,உருது,பஞ்சாபி உட்பட பல மொழிகளில் 23 ஆண்டுகளாக பின்னணி பாடியுள்ளார். கருத்தம்மா படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் ‘போறாளே பொன்னுத்தாயி...’பாடலை பாடியதற்காக தேசிய விருது பெற்றார்.
இவரின் தந்தை கே.சி.செருகுட்டி பிரபல ஹார்மோனியக்கலைஞர். தாய் கல்யாணி இசைப்பிரியர். கீ.போர்டு மற்றும் ஹார்மோனியத்தில் சிறந்த பயிற்சி பெற்றவர் சொர்ணலதா.
1982ம் ஆண்டு வெளியான நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்ற பாரதியாரின் பாடலைப் பாடி இசைஞானி இளையராஜாவால் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகபடுத்தப்பட்டார்.
தளபதி படத்தில் ’ராக்கம்மா கையத்தட்டு’, சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச...’, கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’, சின்னத்தம்பி படத்தில் ‘போவோமா ஊர்கோலம், நீ எங்கே’, என் ராசாவின் மனசிலே படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே’ போன்ற பாடல்கள் மிகப்பிரபலம்.
1.எவனோ ஒருவன் வாசிக்கிறான்(அலைபாயுதே)
2.சொல்லாயோ சோலைக்கிளி(அல்லி அர்ஜூனா)
3.குச்சி குச்சு ராக்கம்மா(பம்பாய்)
4.உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி(ஜெண்டில்மேன்)
5.அக்கடான்னு நாங்க (இந்தியன்)
6.மாயா மச்சீந்திரா(இந்தியன்)
7.அஞ்சாதே ஜீவா(ஜோடி)
8.முக்காலா முக்காபலா(காதலன்)
9.காதலெனும் தேர்வெழுதி(காதலர் தினம்)
10.போறாளே பொன்னுத்தாயி(கருத்தம்மா)
11.உளுந்து வெதைக்கையிலே(முதல்வன்)
12.பூங்காற்றிலே..(உயிரே)
13.ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு(உழவன்)
14.காதல் யோகி (தாளம்) என்பன உட்பட ஏ.ஆர்.ரகுமான் இசையில் 35க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.
1.மலைக்கோயில் வாசலில்(வீரா)
2.மாடத்திலே கன்னி மாடத்திலே(வீரா)
3.என்னுள்ளே என்னுள்ளே(வள்ளி)
4.ராக்கம்மா கையத்தட்டு(தளபதி)
5.உத்தம புத்திரி நானே(குரு சிஷ்யன்)
6.நான் ஏரிக்கரை மேலிருந்து (சின்னத்தாயி)
7.மாசி மாசம் ஆளான பொன்னு(தர்மதுரை)
8.மணமகளே(தேவர் மகன்)
9ஆட்டமா தேரோட்டமா(கேப்டன்பிரபாகரன்)
10.நீ எங்கே என் அன்பே(சின்னதம்பி)
11.போவோமா ஊர்கோலம்(சின்னதம்பி)
12.மாலையில் யாரோ மனதோடு பேச(சத்ரியன்) என்பன உட்பட இளையராஜா இசையில் பல ஹிட் பாடல்களைத்தந்துள்ளார்.
தனது இனியைமான குரலால் ரசிகர்களை மதிமயங்க வைத்த ஸ்வர்ணலதா திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். சமீப காலமாக நுரையீரல் பாதிப்பால் கஷ்டப்பட்டு வந்த ஸ்வர்ணலதா இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலை வீட்டில் இருந்தபோது திடீரென வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகி்ச்சை அளித்தும் பலனின்றி காலமானார்.
அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.