பக்கங்கள்

06 பிப்ரவரி 2013

சிங்கள பேரினவாதத்தின் சின்னமே மஹிந்த ராஜபக்ஷ!-கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை தீவின் 65வது விடுதலை நாள் விழா திருணோமலையில் நடந்தபோது, அதில் பேசிய ஜனாதிபதி ராஜபக்ஷ, ‘தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் தரமுடியாது, நாட்டை இனரீதியாக பாகுபடுத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது’ என்று அறிவித்திருக்கிறார். இன, மதவேறுபாடுகள் பற்றியும் சிங்களர், தமிழர், முஸ்லிம்களின் உன்னத கலாசாரத்தை பற்றியும் இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்குமளவுக்கு பேசியிருக்கிறார். லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்து, லட்சக்கணக்கான தமிழர்களை அவர்களின் பூர்வீக பூமியான ஈழத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாகவும் அனாதைகளாகவும் புலம் பெயர செய்ததோடு, அவர்களுடைய வாழ்வாரத்தையும் கேள்விக்குறியாக்கிவிட்டு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழர்களுக்கு சொந்தமான வீடுகளையும் நிலங்களையும் தொழில் நிறுவனங்களையும் சிங்களர்கள் கைப்பற்றி வளமாக இருந்த தமிழர்களின் வாழ்வாதாரத்தை வற்ற செய்துவிட்டு, அவர்களது அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் வாழ்வுரிமைகளையும் பறித்துவிட்டு, சுதந்திரமான நீதிபரிபாலன முறைகளிலும் ஊடகங்களின் நடவடிக்கைகளிலும் தலையிட்டு நிர்வாகத்தையே தலைகீழாக மாற்றி, ‘ஒரே மொழி, ஒரே மதம்’ என்று இலங்கை நாட்டை சர்வாதிகார பாதையில் செலுத்திக் கொண்டிருக்கும் ராஜபக்ஷவை, மனித உரிமைகள், மனித நேயம் ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு வகையான போர்க்குற்றங்களை புரிந்த சர்வதேச குற்றவாளி என உலக நாடுகள் பார்க்கின்றன. சிங்கள பேரினவாதத்தின் சின்னமான ராஜபக்ஷ, தமிழர்களுக்கு அதிகார பகிர்வை வழங்குவதாக இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் நீண்டகாலமாக அளித்து வந்த உறுதிமொழியை இப்போது செய்திருக்கும் அறிவிப்பின் மூலம் மீறியிருக்கிறார். இது, உலகெங்கும் வாழும் தமிழர்களும் இந்தியாவும் சர்வதேச அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டிய ஒன்றாகும். சிங்களர்கள் சார்பில் ஈழத் தமிழினத்துக்கு கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை என்பது சரித்திர சான்றாகி விட்டது. 1925 ஜூன் 25ல் யாழ்ப்பாணத்தில் இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவர்கள், இலங்கை தமிழர் மகாஜன சபையுடன் செய்து கொண்ட உடன்பாடு முதன்முதலாக காற்றில் பறக்க விடப்பட்டது. இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தமும் 25 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. இதுபோன்ற பல ஒப்பந்தங்களை சிங்கள அரசு நிறைவேற்றவில்லை என்பது மட்டுமின்றி, அவற்றை எல்லாம் மீறியே இலங்கையில் காரியங்கள் நடந்து வருகின்றன. இவ்வளவுக்கு பிறகும் இந்திய பேரரசு தற்போதாவது விழித்துக் கொண்டு, ராஜபக்க்ஷவின் சுயரூபத்தையும் குணத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொண்டு, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையையும் வாழ்வாதாரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் உலக அமைப்புகளின் உதவியோடு காப்பாற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.