பக்கங்கள்

11 பிப்ரவரி 2013

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரின் வீடு சூறை - சென்னைத் தாக்குதலுக்கு பதிலடி?

சென்னையில் உள்ள இலங்கை வங்கிக் கிளை தாக்கப்பட்டதன் எதிரொலியாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரின் அதிகாரபூர்வ வசிப்பிடம் சூறையாடப்பட்டிருக்கலாம் என்று இந்திய ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், தனது பணிகளை முடித்து திரும்பிய துணைத் தூதுவர் மகாலிங்கம், தனது வசிப்பிடம் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டதை அவதானித்தார். அவரது வீட்டில் இருந்த ஒரு வீடியோ பிளேயர், மற்றும் ஒரு தொகைப்பணம் என்பன திருடப்பட்டுள்ளன. இந்தியத் துணைத் தூதுவரின் வீட்டினுள் புகுந்தவர்கள் அங்கு தேடுதல் நடத்தியிருப்பதை உணரமுடிவதாக, அங்குள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மடித்து வைக்கப்பட்டிருந்த துணிகளும், படுக்கை விரிப்புகளும் கூட கலைத்துப் போடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட எதையோ அவர்கள் தேடிவந்திருக்க வேண்டும் என்று தோன்றுவதாக அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார். கடந்த காலத்தில் இருந்த அச்சுறுத்தல் சம்பவங்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் சிறிலங்கா ஆயுதப்படைகளின் கண்காணிப்பில் உள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துணைத் தூதுவர் மகாலிங்கம் தூதரகத்தில் பணியில் இருந்தபோது, பட்டப்பகலிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்பக்க ஜன்னல் வழியாக நுழைந்தே அங்கிருந்த பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன. எனினும், இந்தச் சம்பவத்தை சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி நிராகரித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்த சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள போதிலும், அது குறித்து எத்தகைய முறைப்பாடும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.