பக்கங்கள்

12 பிப்ரவரி 2013

பாதுகாப்பு வலயங்கள் படைகளுக்கே உரியது-ஹத்துருசிங்க

வலி.வடக்கில் படையினரின் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கும் பிரதேசங்கள் படைகளுக்குரியவை. அந்தப் பிரதேசங்கள் மக்கள் பாவனைக்காக ஒருபோதும் விடுவிக்கப்படமாட்டா. அவற்றைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நேற்று அடித்துக் கூறினார் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க. யாழ்.நகரிலுள்ள சிவில் நிர்வாக அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பலாலியில் படையினரால் வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகவியலாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: இராணுவத்தால் விடுவிக்கச் சாத்தியமான நிலப்பரப்புக்கள் விடுவிக்கப்பட்டுக் கொண்டே வருகிறன. பொதுமக்களின் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தற்போது எமது முகாம்களை பின்நகர்த்தியுள்ளோம். ஆனால் பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி ஆகிய பிரதசங்களில்தான் பிரச்சினை. ஏனெனில் யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களிலுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் பிரிகேட்டுக்கள் பலாலிக்குள் இப்போது உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனால் இராணுவ முகாம்கள் அமைப்பதற்குக் காணிகள் தேவைப்படுகின்றன. இதற்காக நாங்கள் மேற்படி பிரதேசங்களைச் சுவீகரிக்க வேண்டிய தேவையுள்ளது. பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பனவற்றை விஸ்தரிப்புச் செய்ய வேண்டியுள்ளது. மேலும் பலாலி விமான நிலையத்தைச் சுற்றி சிறிய முகாம்கள் அமைக்க முடியாது. விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை முன்னர் இருந்தது. எனவே அவற்றைக் கருத்திற் கொண்டு பெரிய முகாம்களை அமைக்க வேண்டிய பாதுகாப்புத் தேவை இருக்கின்றது. விமான நிலைய விஸ்தரிப்புக்காகக் காணிகள் சுவீகரிக்கப்படுவது பலாலியில் மட்டும் நடக்கவில்லை. கொழும்பு கட்டுநாயக்காவிலும் நடந்ததுதான். நிரந்தரப் பாதுகாப்பு வேலிக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்களுக்குத் தற்போதையை பெறுமதிக்கு ஏற்ப காணிகளுக்குரிய நஷ்டஈட்டை வழங்கியே அவற்றைச் சுவீகரிக்கிறோம். இராணுவத்தினரால் தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற நிரந்தரப் பாதுகாப்பு வேலிக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களே சுவீகரிக்கப்பட்டுள்ளன. என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.