பக்கங்கள்

19 பிப்ரவரி 2013

நாஜிகளின் படுகொலையை விட மகிந்தனின் படுகொலை கொடூரமானது- வைகோ ஆவேசம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியாகியுள்ள புகைப்படத்தை பார்க்கும் போது இதயம் வெடிப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் இருதயங்களை வெட்டிப் பிளக்கும் துன்பச் செய்தியாக, பிரபாகரனின் இளைய மகன், 12 வயதே நிரம்பிய பாலச்சந்திரன், படுகொலை செய்யப்பட்ட கோரச் சம்பவத்தை, வீடியோ ஆதாரத்தோடு சனல் 4 வெளியிட்டு உள்ளது. ஐந்து குண்டுகள் பாலச்சந்திரன் மார்பிலே பாய்ந்து உள்ளன. சண்டை நடந்தபோது, இருதரப்பிலும் குண்டுகள் பாய்ந்தபோது ஏற்பட்ட சம்பவம் அல்ல. சின்னஞ்சிறு பிள்ளையான பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு, மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு உள்ள ஒரு நிலவறைக்கு உள்ளே உட்கார்ந்து இருக்கிறார். அரைக்கால் சட்டை அணிந்து இருக்கிறார். கருப்பு சட்டை இடுப்பில் சுற்றப்பட்டு உள்ளது. தோள்களில் ஒரு பழைய லுங்கி, அப்பிள்ளையின் பால்வடியும் முகம், சின்னஞ்சிறு மார்பு, ஒரு படத்தில் கையில் ஏதோ பிஸ்கட்டோ ஒன்றையோ வாயில் உதடுகளில் வைப்பதுபோல் தோற்றம். அடுத்தபடத்தில் அந்த ஒளி தரும் கண்கள் எதையோ உற்று நோக்கும் பார்வை. ஐயோ, அதைப் பார்க்கும் போதே இதயம் வெடிக்கிறதே! அடுத்தபடம். உயிரற்ற சடலமாகக் கிடக்கிறான் பிள்ளை. ஐந்து குண்டுகள் மார்பில் பாய்ந்து உள்ள அடையாளம். இதுகுறித்து, ஆய்வு செய்த நிபுணர் கூறுகிறார்: மூன்று அடி இடைவெளியில் இருந்துதான் முதல் குண்டைச் சுட்டு இருக்க வேண்டும். அந்தத் துப்பாக்கியை நோக்கி பாலச்சந்திரன் கையை நீட்டித் தொட முயன்று இருக்கலாம். முதல் குண்டு பாய்ந்தவுடன் பின்புறமாக விழுந்துவிட்டான். அதன் பிறகு நான்கு ரவைகள் மார்பிலே பாய்ந்து உள்ளன. கிடைத்து இருக்கக்கூடிய வீடியோ ஆதாரங்களின்படி, பாலச்சந்திரன் சடலம் கிடந்த இடத்திற்குப் பக்கத்தில், வேறு ஐந்து பேரின் சடலங்களும் கிடக்கின்றன. அவர்கள் விடுதலைப்புலி போராளிகளாகத் தெரிகிறது. அவர்களது உடைகளைக் களைந்து அம்மணமாக்கி, கைகளையும், கண்களையும் கட்டி, உச்சந்தலையில் சுட்டுக் கொன்று இருக்கின்றார்கள். இது திட்டமிட்ட கோரப் படுகொலை ஆகும். தடவியல் துறையில் உலகப் புகழ்பெற்ற நிபுணர், பேராசிரியர் டெரிக் பவுண்டர், “இது நூற்றுக்கு நூறு உண்மையான தடயம்” என்று உறுதிப்படுத்தி இருக்கின்றார். பாலச்சந்திரன் கண்முன்னாலேயே ஐந்து தமிழர்களைக் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் பாலச்சந்திரனையும் படுகொலை செய்யப்பட்டுள்ளமை அணு அளவு ஐயத்துக்கும் இடம் இன்றி உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்று, சனல் 4 தொலைக்காட்சியின் காணொளிக்காட்சிகள் சாட்சியம் தருகின்றன. ஜெர்மானிய நாஜிகள் நடத்திய படுகொலைகளைவிட, தமிழ் இனக்கொலைகள், அதிலும் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஈவு இரக்கம் இன்றிக் கொன்றுகுவித்த பின்னும், இன்னுமா மனிதகுலத்தின் மனசாட்சி விழிக்கவில்லை? உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? இப்படி எத்தனை எத்தனை பாலச்சந்திரன்கள் கொல்லப்பட்டனர்? இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.