பக்கங்கள்

25 ஆகஸ்ட் 2010

இந்து ஆலயத் திருவிழாவை நடத்த வேண்டாமென மிரட்டல்.


மட்டக்களப்பில் தமிழ் மக்களால் பாரம்பரியமாக திருவிழாக்கள் நடாத்தப்பட்டு வழிபட்டு வரும் ஆலயமொன்றின் திருவிழாவை நடத்த வேண்டாம் என்று கூறி பொலிஸாரும் தொல்பொருள் ஆய்வு அதிகாரியும் ஆலயத் தலைவரை அச்சுறுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கரடியனாறு குசலாந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் மூன்றாம் திகதி ஆரம்பமாக இருக்கும் நிலையில் குறித்த ஆலயத்தின் தலைவரும் நிர்வாக சபையினரும் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக இந்த ஆலயத்தின் நிர்வாக சபையினர் தமிழ். சி. என். என் செய்திச் சேவைக்கு தெரிவித்த விடயங்கள் வருமாறு, வருடா வருடம் ஆலய உற்சவம் இடம் பெறுவது வழமை.
இம் முறையும் வருடாந்த தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் உற்சவ ஆயத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தோம். அப்போது இங்கு பொலிஸாருடன் வந்த ஒருவர் தன்னை தொல் பொருள் ஆய்வுத் திணைக்கள அதிகாரி பண்டார என்று அறிமுகம் செய்து கொண்டு வந்தார். அவர் ஆலயத்தில் உற்சவம் நடத்த முடியாது.
இங்கு தொல்பொருள் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என கட்டளையிட்டுதுடன் ஆலயத்தில் எவ்வித புனரமைப்பு வேலைகளும் செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆலயத் தலைவரான என்னை பொலிஸார் அழைத்துச் சென்று திருவிழா செய்தால் 10 வருடம் சிறையில் அடைப்போம் என்று எச்சரித்தார்கள்.
வருடா வருடம் பாரம்பரியமாக திருவிழா செய்து வரும் எம் மக்களிடையே இச் செயற்பாடானது கடும் கவலையையும் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டும் இடையூறுகள் வந்தன. இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதற்கான பதாதைகளும் அச்சடிக்கப்பட்டுவிட்டது. இத் திருவிழாவுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழமை. இவ் வேளையில் இவர்கள் இப்படிக் கூறுவதன் நோக்கம் என்ன என்று புரியவில்லை. நாங்கள் இவ் விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர். நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
அமைச்சர்கள். மாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவித்துள்ளோம். இதற்குரிய பதிலை எதிர் பார்த்துள்ளோம் . இப் பிரதேசத்தில் மக்கள் குடியேறியதிலிருந்து இந்த ஆலயத்தை மக்கள் தரிசித்து வருகின்றனர். எனவே திருவிழாவுக்கான நாட்களும் நெருங்குவதால் இந்தப் பிரச்சினைக்கு முடிவைப் பெற்றுத்தர உரிய அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்கள்.
இவ் ஆலயம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கரடியனாறு கிராமத்தில் மலை ஒன்றின் மேல் அமைந்துள்ளது. இங்கு பண்டைய கால எச்சங்கள் காணப்படுகின்றது. இந்த மலையில் முருகன் வேல் உருவமும் செதுக்கப்பட்டுள்ளதுடன், குகைகளும் கற் தூண்களும், பழமை வாய்ந்த கட்டிடங்களின் எச்சங்களும் உள்ளன. இத் தொன்மை வாய்ந்த ஆலயத்தை மக்கள் பக்தியுடன் தரிசித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.