பக்கங்கள்

12 ஆகஸ்ட் 2010

ஏழாலையில் கடத்தப்பட்ட இளைஞர் சாதுரியமாகத் தப்பிவந்தார்.



குடாநாட்டில் தொடர்ந்தும் பல கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் ஏழாலையில் உள்ள அம்மன் கோயில் சப்பரத் திருவிழாவுக்குச் சென்று விட்டு ஒரு இளைஞர் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை அவரை இனந்தெரியாத இருவர் கடத்திச் சென்றுள்ளனர். 21 வயதான கஜன் எனப்படும் குறிப்பிட்ட இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குப் புறப்படத் தயாரானபோது, அவரது மோட்டார் சைக்கிளில் பின்புறமாக ஏறிய கடத்தல்காரர் இருவரும் குறித்த இளைஞனின் வாயைப் பொத்திக் கட்டியதுடன் மோட்டார் சைக்கிளை உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திற்கு அண்மையாக உள்ள கட்டுவன்புலம் பாடசாலைக்கு அருகில் கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர்.பின்னர் அவரது கழுத்தை "வயர்' கொண்டு திருக முயற்சித்தவேளை இளைஞர் தனது கைக்கட்டையும் வாய்க்கட்டையும் ஒருவாறு அவிழ்த்துக் கொண்டு சத்தமிட்டுள்ளார். சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் உள்ளவர்கள் ஓடிவரவே குறித்த நபர்கள் இருவரும் தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்த தகவல் அறிந்த தெல்லிப்பழை பொலிஸார் இளைஞனை மீட்டு சுன்னாகம் பொலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.