பக்கங்கள்

31 ஆகஸ்ட் 2010

சுட வேண்டாம்.... சுட வேண்டாம் என்று மகேஸ்வரன் கத்தினார் ! நேரில் கண்ட சாட்சிகளில் ஒருவர் மன்றில் தெரிவிப்பு.


ஐ.தே.க வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் படுகொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ இவ்வழக்கை விசாரித்தார். இவ்வழக்கில் அரசுத் தரப்புச் சாட்சிகளாக மூவர் ஆஜராகி சாட்சியம் வழங்கினர்.
மகேஸ்வரனின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய சார்ஜண்ட் தர்மஸ்ரீ பெரேரா, காரைநகரை சொந்த இடமாகக் கொண்டவரான சோதிலிங்கம், கொட்டாஞ்சேனையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்தவரான நவரட்ணம் தினேஸ் சுபராஜா ஆகியோரே சாட்சியம் வழங்கினர்.
சாட்சிகளை அரச சட்டவாதி குமாரரட்ணம் நெறிப்படுத்தினார். இவ்வழக்கின் எதிரி கொலின் வெலண்டன். இவரின் சார்பில் சட்டத்தரணி எஸ்.ஜெயக்குமார் ஆஜரானார்.
அவர் இச்சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்தார். சார்ஜண்ட் தர்மஸ்ரீ பெரேரா சாட்சியம் வழங்கியபோது எதிரி சம்பவ தினம் அணிந்திருந்தார் என்று கூறப்படும் மேலாடையை அடையாளம் காட்டினார்.
எதிரி இச்சட்டையைத்தான் சம்பவதினம் அணிந்திருந்தார் என்று உறுதிப்படுத்தினார்.இம்மேலாடை வழக்கின் தடயப் பொருட்களில் ஒன்றாகும்.
அவர் சாட்சியத்தில் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:-
”எதிரி மீது எனது கைத்துப்பாக்கியால் சுட்டேன். இதனால் எதிரி காயமடைந்தார் அவர் நான் கடமையின்போது கைத்துப்பாக்கியையே பாவித்து வந்துள்ளேன். அதில் ஒரே தடவையில் ஆறு ரவைகளைப் போட்டு சுட முடியும்.
சம்பவதினம் நான் 15 தடவைகள் வரை எனது கைத்துப்பாக்கியால் சுட்டிருப்பேன். எனது கைத்துப்பாக்கியால் சுட்ட குண்டின் காரணமாகவே எதிரி காயமடைந்தார் .” அப்போது குறுக்கீடு செய்த எதிரி தரப்பு சட்டத்தரணி எஸ். ஜெயக்குமார்,
கடந்த தவணை சாட்சியமளித்த போது உங்களது துப்பாக்கிக் குண்டு பட்டு எதிரி காயமடைந்தாரா? என்பது குறித்து தெரியாது என தெரிவித்தீர்கள். தற்போது உங்களது ரிவோல்வர் குண்டினாலேயே எதிரி காயமடைந்தாரென பொய் சாட்சியம் கூறுகின்றீர்கள் என்று வினவினார். இதற்கு பதிலளித்த சாட்சி இல்லை, எனது ரிவோல்வர் குண்டினாலேயே எதிரி காயமடைந்தார் என்று தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து சாட்சியம் வழங்குகையில் எதிரி எந்த ஆயுதத்தால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்பதை கண்டிருக்கவில்லை என்றும் ஆனால்அவரது துப்பாக்கிச் சூட்டில் எதிரி கையில் காயமடைந்திருந்தமையை கண்டார் என்றும் தெரிவித்தார். எதிரியை சுடப் பயன்படுத்தினார் என்று கூறப்படும் ரிவோல்வரை சாட்சி மன்றுக்கு அடையாளம் காட்டினார். இந்த ரிவோல்வரும் தடயப் பொருட்களில் ஒன்றாகும்.
சோதிலிங்கம் அவரது சாட்சியத்தில் தெரிவித்தவை வருமாறு:-
”2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பல வானேஸ்வரர் ஆலயத்துக்கு காலை 6 மணியளவில் நான் சென்றேன். அங்கு இரண்டு மூன்று மணித்தியாலங்கள் வரை நின்றிருப்பேன். ஆலயத்துக்குள் மகேஸ்வரனும் நின்றிருந்தார். அவரது கடைசி மகள் , பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோருடன் வந்திருந்தார்.
சிறுவயதிலிருந்தே மகேஸ்வரனை நன்கு அறிவேன். எமது ஊரவர் ஆவார். ஆலயத்துக்கு அவர் வந்தால் சுற்றி கும்பிடுகின்றமை வழக்கமாகும். அதன்படி அன்றைய தினமும் அவர் ஆலயத்தைச் சுற்றி வந்தார்.
ஆலயத்தைச் சுற்றி அவர் வந்தபோது நான் அவருக்கு முன்பாக வந்து வெளிவாசலை அடைந்தேன். அப்போது அவர் என்னிலிருந்து 20 அடி தூரத்தில் நின்றிருந்தார். நான் பிரதான வாசலால் வெளியே வந்தபோது துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டன. சுட வேண்டாம்.... சுட வேண்டாம் என மகேஸ்வரன் கத்தியமை எனக்கு கேட்டது.
ஆனால் அவர் யாருடையதாவது பெயரைச் சொல்லி கத்தினாரா? என்பது எனக்கு தற்போது ஞாபகமில்லை . துப்பாக்கிச் சூட்டு சத்தத்தை அடுத்து உள்ளிருந்த பக்தர்கள் முட்டி மோதிக்கொண்டு வெளியே வந்தனர். இதன்போது நானும் வெளியே வந்தேன்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது இரத்தம் தோய்ந்த நிலையில் மகேஸ்வரன் கீழே விழுந்து கிடந்தார்.” நவரட்ணம் தினேஷ் சுபராஜா அவரது சாட்சியத்தில் கூறியவை வருமாறு:- ”10 வருடங்களாக நான் கொழும்பில் தங்கியிருக்கிறேன்.
2008 ஜனவரி மாதம் முதலாம் திகதி நான் சங்கமித்தை மாவத்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தேன். சம்பவதினம் 8 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையில் எமது கடைக்கு முன்னால் ஒருவர் விழுந்து கிடக்கிறாரென தெரிவித்தனர். அவருக்கு நீர் வழங்க வேண்டும் என்று சிலர் கூறினர். நான் தண்ணீர் எடுத்துக்கொண்டு அங்கு சென்றபோது சேட்டும், டவுசரும் அணிந்த ஒருவர் கீழே விழுந்திருந்தார்.
அவரது முகத்தின் ஒரு பக்கத்தில் இரத்தம் காணப்பட்டது. அவர் அணிந்திருந்த சேட்டின் நிறம் எனக்கு ஞாபகமில்லை. அப்போது அவ்வழியால் பொலிஸ் ஜீப் ஒன்று வந்தது. மக்கள் அந்த இடத்தில் கூடி நின்றமையினால் என்ன நடந்தது? என பொலிஸார் கேட்டனர். நாம் ஒருவர் விழுந்து கிடக்கின்றார் எனக் கூறியபோது அனைவரும் விலகிச் செல்ல வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது முச்சக்கர வண்டியில் வந்த இருவர் விழுந்து கிடப்பவர் நன்கு தெரிந்தவர் எனக் கூறி ஆட்டோவில் அவரை ஏற்றிச் சென்றனர். கோவிலில் அமைச்சர் ஒருவருக்கு வெடி வைத்து விட்டனர் என்று பின்னர் சிலர் அவ்விடத்தில் பேசிக் கொண்டனர்.
எமது கடைக்கு முன்னால் விழுந்திருந்தவரை அப்போது நான் அடையாளம் கண்டிருக்கவில்லை.” நவரட்ணம் தினேஸ் சுபராஜாவிடம் நீதிபதி கேள்விகள் கேட்டார். சுபராஜ் பதில் வழங்கினார்.
அவற்றின் தொகுப்பு வருமாறு:-
நீதிபதி: விழுந்து கிடந்தாரென நீங்கள் தெரிவித்திருக்கும் நபர் இந்த நீதிமன்றத்தில் எங்காவது இருக்கின்றாரா?
சாட்சி: (எதிரிக்கூண்டில் இருந்த எதிரியைக் காண்பித்து ) இவர்தான் அவர். நீதிபதி
கேள்வி: அவர் அணிந்திருந்த சேட்டின் நிறம் தெரியுமா?
சாட்சி: அரைக்கை சேட்டே அணிந்திருந்தார். சம்பவம் இடம் பெற்று ஓரிரு தினங்களில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் என்னிடம் விசாரணை நடத்தினர். கடைக்கு முன்னால் விழுந்திருந்த இளைஞனை அடையாளம் காட்ட முடியுமா? எனக் கேட்டனர். இதனையடுத்து குற்றப்புலனாய்வுப் பொலிஸ் தலைமையகத்துக்கு சென்ற நான் அங்கு வாக்கு மூலம் அளித்தேன். எதிரியையும் அடையாளம் காட்டினேன். அத்துடன் விழுந்து கிடந்த நபரை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற மற்றொருவரையும் நான் அங்கு அடையாளம் காட்டினேன் என்று தெரிவித்தார்.
இச்சாட்சியங்களை அடுத்து நீதிபதி இவ்வழக்கை ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். மகேஸ்வரனின் சகோதரர்களான தியாகராஜா பரமேஸ்வரன், தியாகராஜா துவாரகேஸ்வரன், ஆகியோரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.