பக்கங்கள்

24 நவம்பர் 2010

இலங்கைத் தமிழ் பெண் தற்கொலை செய்த விவகாரம் மீண்டும் சூடு!

தமிழ்நாடு மாநிலத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள ராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழ் யுவதி ஒருவர் கடந்த மார்ச் மாதம் பொலிஸாரால் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பின் தீக்குளித்து தற்கொலை செய்த விவகாரம் தற்போது மீண்டும் சூடு பெற்றுள்ளது.
பத்மாவதி (வயது-28) என்பவரே பொலிஸாரால் கற்பழிக்கப்பட்ட பின் தற்கொலை செய்தவர் ஆவார். இவரது கணவன் குமார்.
கரூரில் இருவருடங்களுக்கு முன் இரு குழந்தைகள் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தில் குமாரையும் பசுபதி பாளையம் பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இப்பொலிஸார் கடந்த மார்ச் 07 ஆம் திகதி பத்மாவதியை விசாரணைக்கு அழைத்துச் சென்று கற்பழித்து விட்டனர். முகாமுக்கு இரவு 7.00 மணியளவில் திரும்பி வந்த பத்மாவதி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீப்பற்ற வைத்துக் கொண்டார்.
ஏனைய அகதிகள் இவரை மீட்டு கரூர் அரச வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு 21 நாட்கள் தீவிர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட பத்மாவதி பலன் எதுவும் இல்லாமல் அதே மாதம் 28 ஆம் திகதி இறந்து விட்டார்.
இந்நிலையில் இவ்விவகாரம் சுமார் 07 மாதங்களுக்கு பின் மீண்டும் சூடு பிடித்துள்ளது. பத்மாவதியின் தாய் நீதி கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
மகளின் மரணம் தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவு பொலிஸாரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நட்டஈடாக இந்திய ரூபாய் ஐந்து இலட்சம் பெற்றுத் தர வேண்டும் என்றும் இவர் நீதிமன்றில் கோரி உள்ளார்.
இம்மரணம் தொடர்பாக இது வரை முறையான விசாரணை எதுவும் நடத்தப்ப்படவே இல்லை என்றும் மகளின் மரணத்துக்கு காரணமான பொலிஸார் தொடர்ந்தும் பொலிஸ் சேவையில் இருக்கின்றார்கள் என்றும் இவர் மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இவ்வழக்கு நீதிபதி கே.சுகுணா முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டது. இம்மனுவின் பிரதிவாதிகள் அடுத்த தவணைக்கு மன்றில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.