பக்கங்கள்

27 மார்ச் 2011

இளம் வயதிலேயே காதலித்து திருமணம் செய்வது யாழில் அதிகரிப்பு.

14 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் பெற்றோர்களுக்குத் தெரியாமல் தாம் விரும்பியவர்களைக் காதலித்துப் பின்னர் அவர்களுடன் சென்று தங்கிவிடுகின்றனர். இதனால் பெற்றேர்கள் தமது பிள்ளையைக் காணவில்லை எனப் பொலிஸில் முறைப்பாடு செய்கின்றனர். இவ்வாறான சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைள் குறித்து அதிக கவனம் எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.இவ்வாறு ஆலோசனை கூறுகிறார் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்புப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி கே.எ.வி.எஸ்.பத்மசிறி. இளம்வயதினர் தவறான வழிகளில் செயற்பட்டு வருகின்ற சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளன. 14 வயதுக்கும் 18 மற்றும் 20 வயதுக்கும் இடைப்பட்ட இளம் வயதினர் தாம் விரும்பியவர்களைக் காதலித்துப் பின்பு அவர்களுடன் ஓடிச்சென்று தங்கி விடுகின்றனர். இதனை அறியாத பெற்றோர்கள் தமது பிள்ளைகளைக் காணவில்லை எனப் பொலிஸில் முறைப்பாடு செய்கின்றனர். நாமும் முறைப்பாட்டை ஏற்று அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்பிக்கும் மறுநாள் தமது பிள்ளை, விரும்பியவருடன் தங்கியிருக்கிறார் மீட்டுத்தாருங்கள் எனக் கேட்கின்றனர் பெற்றோர். இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மூன்று மாதங்களில் இவ்வாறான 9 முறைப்பாடுகள் யாழ்ப்பாணப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. இவ்வாறு ஏனைய பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன. பொலிஸில் முறைப்பாடு செய்யப்படாத இவ்வாறான பல சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே பெற்றோர்கள் விழிப்பாகச் செயற்படவேண்டும். பிள்ளைகளின் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் அதிக கவனம் செலுத்தவேண்டும். பாட சாலை நேரங்களில், ரியூசன் நேரங்களில் பிள்ளை வேறு எங்காவது செல்கின்றனரா என அவதானிக்கவேண்டும். பிள்ளையுடன் கூடத் திரியும் நண்பர்கள் குறித்தும் பெற்றோர்கள் அறிந்திருக்கவேண்டும். பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு நல்ல புத்திமதி கூறி வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள். பாடசாலை, ரியூசன் தவிர்ந்த நேரங்களில் வெளியிலும் உறவினர் வீடுகளுக்கும் செல்வதாகவும் சுற்றுலா செல்வதாகவும் கூறி விட்டுத் தவறான செயல்களில் இளம்வயதினர் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே பெற்றோர்கள் விழிப் படைவதன் மூலமே இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க அல்லது குறைக்க முடியும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.