பக்கங்கள்

12 மார்ச் 2011

புதைக்கப்பட்ட இரட்டை சிசுக்கள் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டன!

அக்கராயன்குளத்தில் வீட்டு சமையல் அறையில் புதைக்கப்பட்டிருந்த இரட்டைச் சிசுக்களின் சடலங்கள் நேற்றுத் தோண்டி எடுக்கப்பட்டன. கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் பெ.சிவகுமார் முன்னிலையில் இந்தச் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.
யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன், வவுனியா குற்றத்தடுப்புப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் உபாலி சாந்த ஆகியோரும் அங்கு பிரசன்ன மாகியிருந்தனர்.
பிரஸ்தாப சிசுக்களின் தாயார் கடந்த வியாழக்கிழமை சிசுக்களைப் பிரசவித்தவுடன் உயிருடன் போர்வையால் மூடிப் போர்த்தி வீட்டின் சமையல் அறையில் புதைத்தாகக் கூறப்படுகிறது. இந்த விடயம் அம்பலமாகியதை அடுத்து பொலிஸார் பிரஸ்தாப பெண்ணை விசாரணைக்கு உட்படுத்தினர்.
அந்தப் பகுதிக் கிராம சேவையாளர், சுகாதாரத் தொண்டர்கள் குறித்த பெண்ணை விசாரித்தபோது உண்மைநிலை தெரியவரவே, அவரது வீட்டில் சோதனை செய்தபோது சிசுக்களைப் புதைத்த விடயம் வெளிவந்தது.
இதையடுத்து நேற்று சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணை மேற்கொண்டு இரு சிசுக்களும் மீட்கப்பட்டன.
பிரஸ்தாப பெண் இரத்தப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்குமாறு உத்தரவிட்ட நீதிவான் அவரை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார். பிரஸ்தாப பெண் யாழ்.ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.