பக்கங்கள்

01 பிப்ரவரி 2011

தமிழர்களை கொன்றழித்த காங்கிரசுக்கு பாடம் புகட்ட எவரையும் ஆதரிப்பேன்!

பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுடன் சீமான் கூட்டணியா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுடன் கூட்டணியில்லை. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட நான் யாரையும் ஆதரிப்பேன் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை தொடக்க விழா மற்றும் முத்துக்குமார் நினைவு வீரவணக்க நாள் நாகப்பட்டிணத்தில் நடந்தது. அதில் பேசிய சீமான் கூறியதாவது:
இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் 1.75 லட்சம் தமிழ்ச் சொந்தங்களை சிங்களவர்கள் கொன்றனர். 538 தமிழக மீனவர்களை தாக்கி படுகொலை செய்துள்ளனர். போராடியே வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு தமிழ் இனம் தள்ளப்பட்டுள்ளது.
தமிழின விடுதலை களத்தில் இளைஞர்களை ஒருங்கிணைப்பதற்காவே நாம் தமிழர் கட்சியின் சார்பில் இளைஞர் பாசறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழினம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்வு காண அனைவரும் ஆயுதம் ஏந்த வேண்டும். அந்த ஆயுதம், அரசியல் என்னும் அறிவு ஆயுதம்.
அதிமுகவை சீமான் ஆதரிப்பதாக பதறி துடிக்கிறார்கள். அதிமுகவை ஆதரிப்பதாக நான் சொல்லவில்லை. ஈழத் தமிழர் விடுதலைக்காக போராடிய பிரபாகரனை தூக்கில் போட சொன்ன ஜெயலலிதாவை நான் ஆதரிக்கவில்லை. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. காங்கிரசுக்கு பாடம் புகட்ட நான் யாரையும் ஆதரிப்பேன்.
என் இனத்தை கொன்று குவிக்க காரணமாக அமைந்த காங்கிரஸ் கட்சியை தான் எதிர்க்கிறேன். தந்தை பெரியார், அம்பேத்கார், முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்டவர்கள் எந்த காங்கிரஸ் கட்சியை ஒழிக்க நினைத்தார்களோ, என் தமிழ் இனத்தின் விடுதலையை வீழ்த்திய அந்த காங்கிரசை ஒழிப்பது தான் நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆகும்.
ஈழச் சொந்தங்கள் மாண்டு மடிந்த போது இங்குள்ளவர்கள் யாராவது கண்ணீர் வடித்ததுண்டா?. இந்தியா விரும்பிய போரைத்தான் இலங்கை நடத்தி முடித்திருக்கிறது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகிறார். இதற்கு இங்கு மறுமொழி ஏதாவது உண்டா?.
தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க உடனடியாக கச்சத்தீவை மீட்க வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களும் விடுவிக்கப்பட வேண்டும்.
ஆந்திராவில் தனி தெலுங்கானா கோரி போராடும் சந்திரசேகர ராவ் போல் தமிழகத்தில் தன்மான தமிழர்கள் அப்போது இருந்திருந்தால் நம்மிடம் இருந்து கச்சத் தீவு பறிபோயிருக்காது. கச்சத் தீவை இலங்கையிடமிருந்து மீட்பது மட்டுமே நம் மீனவ சொந்தங்களை பாதுகாப்பதற்கான வழி. இதற்காக தமிழர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும். நாம் அளிக்கும் வாக்கு நம்மை ஆளவா?, நம்மை நாமே ஆளவா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
வரும் சட்டசபை தேர்தல் எங்களுக்கு முக்கியமில்லை. நீண்ட பயணத்தின் இடையே இளைப்பாற கிடைத்த நீர்த்தேக்கமாகவே இந்த சட்டபேரவை தேர்தலை நாம் தமிழர் கட்சி கருதுகிறது.
சட்டமன்ற தேர்தல் மக்களின் அறிவாயுதம், வாக்கு அதற்கான கருவி. எனவே தேர்தலின் போது விழிப்போடு இருக்க வேண்டும். 2011லிருந்து 2016 வரை நாம் தமிழர் கட்சி பதுங்கும் புலியாக இருக்கும். இடையில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உண்டாகும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி அப்போது களம் காணும். அதுவரை பொறுத்திருக்கும். 2016ல் அப்போது திமுக- அதிமுகவுக்கு மிகச் சிறந்த மாற்றாக நாம் தமிழர் கட்சி உருவெடுக்கும்.
தமிழ் இனத்திற்கு சீமான் உண்மையாக இருக்கிறான் என்பதால் என் எதிரிகள் என்னை கொல்லத் துடிக்கின்றனர். நான் இருந்தால் ஒரு சீமான், செத்தால் இந்த மண்ணில் ஒரு லட்சம் சீமான்கள் உருவாகுவார்கள் என்பதை என் எதிரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஈழத்தில் நம் தமிழ்ச் சொந்தங்களும், இங்கே மீனவமக்களும் சிந்திய கண்ணீருக்கும், ரத்தத்திற்கும் சிங்களர்கள் பதில் சொல்லும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. சீமான் என்னென்ன வித்தைகள் காட்ட போகிறேன் என்பதை ஐந்து வருடம் பொருத்திருந்து பாருங்கள். எந்த லட்சியத்திற்காக முத்துக்குமார் தன் உடலில் நெருப்பை பற்ற வைத்துக் கொண்டானோ அந்த லட்சியத்தை நிறைவேற்றும் வரை நான் ஓயப்போவதில்லை.
அடக்குமுறைகளால் இங்குள்ள ஆட்சியாளர்கள் நம்மை அடக்கிவிட முயற்சிக்கின்றனர்.
அடக்குமுறை அதன் வாசலை பெரிதாக்குமே தவிர அடைத்து விடாது. எல்லா துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் என்று அத்பேத்கார் கூறியுள்ளார். அந்த ஆட்சி அதிகாரத்தை நாம் கைப்பற்றுவது தவிர நம் இன விடுதலைக்கு வேறு வாய்ப்பு இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.