பக்கங்கள்

19 டிசம்பர் 2011

கோத்தபாயவின் உத்தரவுக்கமையவே சரணடைந்த புலிகள் கொல்லப்பட்டனர்.

சரணடைந்த விடுதலைப் புலிகளைக் கொன்று விடும்படி சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா இராணுவத்தின் களமுனைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக, சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
உயிருக்குப் பயந்து சிறிலங்காவை விட்டு வெளியேறிய அவர், தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி ரெலிகிராப்‘ நாளிதழ் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவை விட்டுத் தப்பிச் செல்ல முன்னர் இந்த அதிகாரி மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டதாகவும், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து சாட்சியமளித்துள்ள சிறிலங்காவின் உயர்மட்ட படைஅதிகாரி இவரே என்றும் ‘ரெலிகிராப்‘ கூறியுள்ளது.
சக்திவாய்ந்த நபர்கள் சிலருக்கும் சிறிலங்கா இராணுரவ அதிகாரிகள் சிலருக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்ததாகவும், அவர்களுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தாகவும் அந்த மேஜர் ஜெனரல் கூறியுள்ளார்.
இவரது இந்தச் சாட்சியம், சிறிலங்காப் படையினர் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என்று அண்மையில் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு முரணாக இருப்பதாகவும் ‘ரெலிகிராப்‘ குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்காப் படையினரால் பொதுமக்கள் துன்புறுத்தப்பட்ட சில தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ள ஆணைக்குழுவின் அறிக்கையில், உயர்மட்ட கட்டளையை பின்பற்றாத படையினர் சிலராலேயே இந்த மீறல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள மேஜர் ஜெனரல், களமுனைத் தளபதி ஒருவருக்கு சிறிலங்காப் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சில கட்டளைகளை பிறப்பித்ததாகவும், சரணடையும் புலிகளை வழக்கமான நடைமுறைகள் எதுமின்றி கொன்று விடுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
"சிறிலங்கா பாதுகாப்புச் செயலரிடம் இருந்து அந்த உத்தரவு வந்தபோதிலும், அதில் சிறிலங்கா அதிபரும் தொடர்புபட்டிருக்க வேண்டும். அவரும் அதுபற்றி அறிந்திருந்தார். தளபதிகளால் அந்த முடிவை எடுக்க முடியாது." என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது பாதுகாப்புக் கருதி பெயரை வெளியிட விரும்பாத அந்த மேஜர் ஜெனரல், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளார்.
இது சிறிலங்கா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலருக்கு எதிராக போர்க்குற்ற வழக்கு அழுத்தங்களை கொடுக்கும் என்று தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த மேஜர் ஜெனரல் தனது முதலாவது சாட்சியத்தை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட புலனாய்வு இணையம் ஒன்றுக்கு வழங்கியிருந்தார்.
2005 ல் பாதுகாப்புச் செயலராக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர் கொழும்பு நகர வீதிகளில் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்படுவோர் என்று சந்தேகிக்கப்படுவோரை களையெடுக்க வெள்ளை வான் 'தாக்குதல் அணி' யொன்றை உருவாக்கினார் என்றும் அந்த மேஜர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இதுகுறித்து கருத்து வெளியிடுள்ள அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறிலங்கா விவகார ஆய்வாளர் யொலன்ட் போஸ்டர், சிறிலங்கா அரசாங்கம் குற்றவாளிகளை நீதியின் நிறுத்தும் என்பது சந்தேகம் தான் என்று கூறியுள்ளார்.
ஆனால் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.