பக்கங்கள்

09 டிசம்பர் 2011

சண்.சீ.கப்பலில் சென்ற இளைஞருக்கு கனடா அகதி அந்தஸ்து.

கனடாவிற்கு எம்.வி.சன்சியில் சென்ற ஈழத்தமிழ் இளைஞர் ஒருவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி 492 ஈழ அகதிகளுடன் எம்.வி.சன்சி என்ற கப்பல் கனடா பிரிட்டிஸ் கொலம்பியா மகாணத்தில் உள்ள விக்ரோரியா துறைமுகத்தை சென்றடைந்தது.
தாய்லாந்தில் இருந்துபுறப்பட்ட இக்கப்பலை 2010 மே மாத முற்பகுதியில் தாய்லாந்து கடற்படையினர் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு இடைமறித்து தமது கட்டுப்பாட்டுக்குள் 20 மணித்தியாலங்களுக்கு மேல் வைத்திருந்தனர். பின்னர் ஒருவாறாக அகதிகள் கப்பலை விடுவித்திருந்தனர்.
இந்நிலையில்; சீனக்கடற்பகுதியில் இருந்து யூலை ஐந்தாம் திகதி கனடா நோக்கி புறப்பட்ட எம்வி சன்சி அகதிகள் கப்பல் ஓகஸ்ட் 13 ஆம் திகதி கனடாவைச்சென்றடைந்தது.
இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என 492 பேர் கனடாவை சென்றடைந்துள்ளனர். இக்கப்பலில் பயணம் செய்த நேசன் என்றழைக்கப்படுபவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.
கப்பலில் சென்ற அகதிகள் அனைவரையும் கனடா அரசு சிறையில் தடுத்து வைத்திருந்தனர். இதில் பெரும்பாலானர்கள் விடுதலைப்புலிகள் என கூறி வந்த கனடிய அரசு பின்னர் பல கட்ட விசாரணைகளின் விடுதலை செய்திருந்தது.
இந்நிலையிலேயே டிசம்பர் 05 , 2011 அன்று நடைபெற்ற அகதி வழக்கிலேயே ஈழத்தமிழ் இளைஞருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கப்பலில் சென்ற பலருக்கு அகதி வழக்குக்கான அனுமதிக்கடிதங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை மனித உரிமை விடயங்களில் தற்பொழுது அதிக அக்கறை செலுத்திவரும் கனடிய அரசு கனடாவிற்கு சென்ற தமிழ் அகதிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.