பக்கங்கள்

23 டிசம்பர் 2011

சிறுபான்மை இனத்தவர் ஆட்சிக்கு வர முடியாத நிலை கவலையளிக்கிறது என்கிறார் திசாநாயக்க.

நூற்றுக்கு ஒரு சதவீதம் மட்டுமாக இருக்கின்ற சீக்கியர் ஒருவர் இந்தியாவில் பிரதமராக பதவி வகிக்க முடிந்த போதும் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் இலங்கையின் தலைமைத்துவத்திற்கு வர முடியாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
கண்டி மடவளை வை.எம்.எம்.ஏ. இயக்கத்தினர் மடவளை மதீனா தேசிய பாடசாலையில் ஒழுங்கு செய்த கூட்டம் ஒன்றில் மடவளை வை.எம்.எம்.ஏ. இயக்கத்தினர் நடத்தும் பாலர் பாடசாலைகளில் வருடாந்த கலைவிழா நேற்று வியாழக்கிழமை மாலை மடவளை மதீனா தேசிய பாடசாலையின் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் உரையாற்றுகையில்:
'நாங்கள் எமது நாட்டை இன மத பேதமற்ற நாடாக மாற்ற வேண்டும். ஆசியாவில் மிகவும் கூடிய கல்வி தரத்தை கொண்ட ஒரு நாடாக மாற்ற முடிந்த எமக்கு இது கடினமான விடயம் அல்ல.
இந்தியாவில் 274 மதங்கள் இருக்கின்றன. பிரதான மதங்கள் 72 இருக்கின்றன. இன்றும் இந்தியாவின் ஆட்சி புரியும் கட்சியின் தலைவியாக இருப்பவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர். இந்தியாவின் பிரதமர் நாட்டின் ஒரு சதவீதம் மட்டும் இருக்கின்ற சீக்கிய இனத்தவர் ஒருவர். ஆனால் இது எதுவும் இந்திய மக்களுக்கு பிரச்சினை அல்ல.
ஆனாலும் இலங்கையில் சிங்களவர் அல்லாத ஒருவருக்கு தலமைத்துவத்திற்கு வர முடியுமா என்று கேட்டால் அது இயலாதது என்று தான் பதில் கூற வேண்டும் இது கவலைக்குரிய விடயமாகும்.
நாங்கள் பல்கலைக்கழகங்களை ஒரு போதும் இன மத அடிப்படையில் பிரிக்க மாட்டோம். ஆனாலும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கு 90 சத வீதமான மாணவர்கள் முஸ்லிம்களாவர். மட்டகளப்பு பல்கலைக்கழகத்தில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம் மாணவர்கள். நாட்டின் மற்றைய பல்கலைக்கழகங்களில் சன விகிதாசாரத்திற்கும் சிறிதளவு அதிகமான முஸ்லிம் மாணவர்கள் இருக்கின்றார்கள்.
இன்று கூடுதலான அபிவிருத்தி நடப்பது வட கிழக்கு மாகாணங்களுக்கே. நாட்டின் அபிவிருத்தி வேகம் எட்டு சதவீதம். வட கிழக்கில் அபிவிருத்தி வேகம் 24 சத வீதம். நாங்கள் வரலாற்றில் தவறிழைத்து விட்டோம். அந்த தவறை மீண்டும் செய்ய கூடாது' எனவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.