பக்கங்கள்

29 ஜனவரி 2011

மகிந்தவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு!

இறுதிக்கட்ட யுத்தத்தில் கண்மூடித்தனமான படுகொலைகளை மேற்கொண்டதற்கு எதிராக 30 மில்லியன் டொலர்களை நஷ்டஈடாக வழங்க வேண்டுமென்று கோரி ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மற்றும் இன்னும் வேறு இரண்டு சந்தர்ப்பங்களில் கண்மூடித்தனமான படுகொலைகள் மூலம் தமது உறவினர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்து அமெரிக்காவில் வாழும் மூன்று தமிழர்கள் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்திலேயே நேற்று (28) இவ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபரும், பிரபல வழக்கறிஞருமான புரூஸ் பெய்ன் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து பதில் கிடைக்காது விட்டால், அவர் தரப்பு இல்லாமலேயே வழக்கை முன்கொண்டு செல்ல தாம் தயாராக இருப்பதாக புரூஸ் பெயின் அறிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீரென நாட்டுக்குத் திரும்புவதற்கான காரணமும் இந்த வழக்கு குறித்த பயம் தான் என்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
1991ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்ட நபர்களுக்கெதிரான சித்திவதைகள் மற்றும் துன்புறுத்தல்கள், படுகொலைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள் அமெரிக்கா வரும் பட்சத்தில் கைது செய்வதற்கான அதிகாரம் அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு உண்டு.
ஜனாதிபதிக்கெதிரான வழக்கும் அந்தப் பிரிவின் கீழ் தொடரப்படுவதால், அமெரிக்க அரசாங்கத்தினால் எதுவிதத் தலையீட்டையும் மேற்கொள்ள முடியாது போய்விடும் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை முக்கிய அதிகாரிகள் சிலர் வழங்கிய ஆலோசனையின் பிரகாரமே ஜனாதிபதி மஹிந்த உடனடியாக நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி சுதந்திர தினமான பெப்ரவரி நான்காம் திகதிக்கு முந்திய நாள் அதாவது பெப்ரவரி மூன்றாம் திகதியளவிலேயே நாடு திரும்புவதாக முன்னர் உத்தேசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதிக்கெதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கானது வெறுமனே ஊடகப் பரபரப்புக்கான ஒரு ஏமாற்று வித்தை என்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர இன்று தெரிவித்துள்ளார்.
புலிகளின் ஆதரவாளர்கள் பணத்துக்காக இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ள போதிலும், அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தப்போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.