பக்கங்கள்

16 ஜூன் 2014

கோண்டாவிலில் காடைக்கும்பலின் வாள்வெட்டில் இளைஞர் பலி!

கோண்டாவில் பகுதியில் காடைக் கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் சுகிர்தன் (வயது 21) என்ற இளைஞர் உயிரிழந்தார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது - இன்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் கொண்ட காடையர்கள் வீட்டின் முன்பாக நின்ற சுகிர்தனைத் தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்றபோது சுகிர்தனின் உறவினர்கள் அவர்களில் இருவரைப் பிடித்துத் தாக்கியுள்ளனர். மற்றைய இருவரும் தப்பிச் சென்றனர். தப்பிச்சென்றவர்கள் மீண்டும் வேறு இளைஞர்களுடன் கத்திகள், பொல்லுகள் சகிதம் இவர்களின் வீட்டுக்கு வந்து ரவீந்திரனை வாளால் வெட்டியுள்ளனர். அவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து மரணமானார். அவரது சகோதரனும் சகோதரியும் வாள்வெட்டுக் இலக்காகிக் காயமடைந்தனர். முற்பகையே இக்கொலைக்குக் காரணமெனத் தெரிவிக்கப்பட்டது. ரவீந்திரன் செந்தூரன் (வயது 23), ரவீந்திரன் இலக்கியா (வயது 26) ஆகியோரே காயமடைந்தவர்களாவர். இவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்கான யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை - இச்சம்பவத்தைத் தொடர்ந்து கோண்டாவில் பகுதி இளைஞர்களுக்கும் உரும்பிராய் மேற்குப் பகுதி இளைஞர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் உரும்பிராய் மேற்குப் பகுதியிலுள்ள வீடுகள் சில சேதமாக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்படுகிறது. நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர படைத்தரப்பும் பொலிஸாரும் இப்பகுதில் குவிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.