பக்கங்கள்

28 ஜூன் 2014

முக்கொலையாளியை விடுவிக்க வேண்டாம்-மன்றில் கோரிக்கை!

அச்சுவேலியில் மூன்று கொலைகளைச் செய்த தனஞ்சயனை விடுவிக்க வேண்டாம் என்றும் அவனுக்கு உரிய தண்டனை வழங்கி சிறையில் அடைக்குமாறும் தனஞ்சயனின் வாள்வெட்டுக்கு இலக்காகிய யசோதரன் நேற்று நீதிமன்றில் தெரிவித்தார். யாழ்ப்பாணம் அச்சுவேலி கதிரிப்பாயில் கடந்த மே 4 ஆம் திகதி இடம்பெற்ற முக்கொலை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கொலையுண்ட மதுசாவின் கணவரான யசோதரன் மன்றில் சாட்சியமளித்தார். கொலைகள் நடைபெற்ற அன்று தான் பிறிதொரு அறையில் படுத்திருந்ததாகவும் ‘எங்களை வெட்டுகின்றான் காப்பாற்றுங்கள்” என்ற அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்தபோது தனக்கும் வெட்டு வீழ்ந்ததாகவும் இதனால் தான் சுயநினைவிழந்தமையினால் அதன் பின்னர் நடந்தமை தெரியவில்லையெனவும் தெரிவித்தார். மேலும் தனக்கும் தனஞ்சயனுக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லாத போதும் எனது மனைவி குடும்பத்திற்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தமையினைத்தான் அறிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். முக்கொலை குற்றவாளியான தனஞ்சயனை எதிர்வரும் ஜூலை மாதம் 11ம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா நேற்று உத்தரவிட்டார். தர்மிகாவின் சகோதரியும் இந்த வாள்வெட்டில் பலியாகியிருந்தவருமான மதுசாவினை இரண்டாவதாகத் திருமணம் செய்ய முடியாத நிலையிலே தனஞ்சயன் (தர்மிகாவின் கணவர்) மேற்படி படுகொலையினைச் செய்திருந்தார். ஏற்கெனவே தனஞ்சயனின் மனைவியான தர்மிகா கடந்த 13ம் திகதி நீதிமன்றில் ஆஜராகி தனது முதலாவது சாட்சியத்தினைப் பதிவு செய்தார். இந்நிலையில் இன்று கொலையுண்ட மதுசாவின் கணவரான யசோதரன் தனது சாட்சியினைப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.