பக்கங்கள்

18 ஜூன் 2014

மிருகபலியை தடுக்க கலந்துரையாடல்!

வலிகாமத்திலுள்ள சில ஆலயங்களில் வேள்வி என்ற பெயரில் நடத்தப்படுகின்ற மிருகபலி தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு பின்புறம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள சைவ மகா சபையின் தலைமைகத்தில் நடைபெறவுள்ளது. சைவ மகா சபையும் சனாதன யுவ விழிப்புணர்வுக் கழகமும் இணைந்து இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளன. சைவ மகா சபையின் தலைவர் சிவத்திரு இ.கலியுகவரதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்து விவகாரங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான சிவத்திரு சீனித்தம்பி யோகேஸ்வரன் விசேட பிரதிநிதியாக கலந்துகொள்ளவுள்ளார். எதிர்காலத்தில் மிருகபலியை நிறுத்துவதற்கு நாடாளுமன்ற ரீதியிலும் மாகாண சபை ரீதியிலும் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்படவுள்ளது. எனவே, இந்தக் கலந்துரையாடலுக்கு இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய தர்மகத்தாக்கள், பரிபாலன சபைகளின் பிரதிநிதிகள், ஜீவகாருண்ய ஆர்வலர்கள் போன்றோரைக் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்குமாறு வைச மகா சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.