பக்கங்கள்

15 ஜூன் 2010

சட்டவாளர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும்.-பழ.நெடுமாறன்.


மதுரை ஒத்தக்கடையில் நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டுவரவேண்டும் என்று 6 வழக்கறிஞர்கள் 8வது நாளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக அமல்படுத்தக் கோரி வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கோரி மதுரை வழக்கறிஞர்கள் 6 பேர் சாகும்வரை உண்ணா நோன்பு போராட்டத்தை கடந்த 8 நாட்களாக நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக மதுரை வழக்கறிஞர்கள் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உண்ணாநோன்புப் போரில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களில் சிலரின் உடல் நிலை சீர்கெட்டு இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்தப் போராட்டத்தின் நியாயத்தைத் தமிழக அரசு கொஞ்சமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. 2006ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடுமொழியாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இது தொடர்பாக மத்திய அரசு எத்தகைய முடிவும் எடுக்காமல் இத்தீர்மானத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது. தமிழக அரசும் ஒப்புக்காக இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பிவிட்டதோடு தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறது.
ஆனால் தமிழகத்திற்குச் சட்டமன்ற மேலவை அமைக்கப்படவேண்டும் என்றத் தீர்மானத்தை சில மாதங்களுக்கு முன்னால் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய கையோடு முதலமைச்சர் தில்லிக்குச் சென்று அதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறார். அதில் காட்டிய வேகத்தை ஏன் இந்த பிரச்சினையில் காட்டாமல் நான்காண்டு காலமாகக் கடத்திக்கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு
மட்டும் புரிந்த ரகசியமாகும்.
மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக விளங்கும்போது அதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக ஆக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திதான் மதுரை வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
உடனடியாக முதலமைச்சரோ அல்லது சட்ட அமைச்சரோ தில்லிக்குச் சென்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனே பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் வழக்கறிஞர்களின் போராட்டம் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் கூடிய மக்கள் போராட்டமாக மாறும்’’என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.