பக்கங்கள்

04 ஜூன் 2010

புலிகளின் ஆயுதக் கடத்தலை முறியடிக்க கடற்படை உஷார் நிலை அவசியம்.-கோத்தபாய.



புலிகளின் மரபு ரீதியான இராணுவப் பலம் நிர்மூல மாக்கப்பட்டிருப்பினும் எத்தகைய சவாலையும் எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் இலங்கைக் கடற்படை இருக்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதில் அவர் தெரிவித் தவை வருமாறு :
புலனாய்வு அமைப்புகளுடன் கடற்படை நெருக்கமாக இருக்க வேண்டும். ஏனென்றால் கடற்படைதான் புலிகளிடம் இருந்து புதிதாக ஏற்படக்கூடிய முதற்கட்டப் பாதுகாப்புச் சவாலை முறியடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
புலிகளின் செயற்பாடுகளைத் தோற்கடிக்க அபிவிருத்தி மற்றும் கூட்டிணைவான நடவடிக்கைகளை முன்னெடுப்பது மட்டுமன்றி பிராந்தியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதும் மூலோபாய ரீதியாக முக்கியமானது.
கடல்வழியாக ஆயுதங்களையோ, கருவிகளையோ, பயிற்சிபெற்ற போராளிகளையோ இலங்கைக்குள் கடத்தும் முயற்சிகளை முறியடிப்பதற்குத்தான் போருக்குப் பின்னரான காலத்தில் நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளது.
சோமாலியக் கடற்கொள்ளையர்களைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இன்று அவர்கள் சர்வதேச நெருக்கடியாக மாறியுள்ளனர். அவர்களிடம் எந்த ஆயுதபலமும் கிடையாது ஆனால் புலிகளிடம் கப்பல்கள், போர்ப் படகுகள், வெடிமருந்தேற்றிய படகுகள் இருந்தன.
விடுதலைப் புலிகளைச் சுதந்திரமாகச் செயற்பட அனுமதித்தால் அவர்கள் சர்வதேசக் கடற்பயணங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடுவர்.
தற்போது கடற்படையின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நவீன "ராடர்'' கருவியும் தரையில் பொருத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.