பக்கங்கள்

23 மே 2013

பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர்-மன்னார் ஆயர்

தேசியத் தலைவர் 
"பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு முளைத்துள்ளது. இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.'' இவ்வாறு கடும் ஆவேசத்துடன் தெரிவித்தார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்.
"இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமை களையும் வழங்கவேண்டும். அதேவேளை, வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுபலசேனாவின் தலைமை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர், "நாட்டில் மீண்டும் பிரிவினை வாத சக்திகள் தலைதூக்குகின்றன. அடுத்த பிரபாகரனாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயற்படுகின்றார். ஆகவே, சிங்கள மக்கள் வீதியில் இறங்கி 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடவேண்டும். மாகாணசபைத் தேர்தல் என்பது தனி ஈழத்திற்கான முதற்படியாகும். எனவே, இந்தத் தேர்தலை அரசு நடத்தக்கூடாது'' என்று தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மன்னார் ஆயர் மேற்கண்டவாறு கருத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று உதயனிடம் தெரிவித்தவை வருமாறு: "முகவரி எதுவும் இல்லாத பொதுபலசேனா என்னைப் பிரபாகரனுடன் ஒப்பிட்டுக் கூறி யுள்ளது. பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். நான் அவருக்கு ஒப்பானவர் அல்லர். நான் சமயவாதி; அரசியல்வாதி அல்லது ஆயுதப் போராளி அல்ல. சமாதானத்தை விரும்புபவன். ஒருபோதும் நான் தனி ஈழத்தைக் கோரவில்லை. தமிழ் மக்கள் ஏனைய மக்களைப் போல சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்நிலையில், இனவாத அமைப்பான பொதுபலசேனா என் மீது வீண்பழி சுமத்துகின்றது. பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இந்த இனவாத அமைப்பு முளைத்துள்ளது. இந்த அமைப்பு ஊடகங்கள் மூலமாகத் தனக்கு முகவரி தேட முற்படுகின்றது. எனவே, இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறியவேண்டும். தமிழர்களும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள். இந்த நாடு பல்லின மக்களைக் கொண்டது; கலாசாரத்தைக் கொண்டது. எனவே, முதலில் நாட்டின் வரலாற்றைப் படித்துவிட்டு பொதுபலசேனா அரசியலில் இறங்கவேண்டும். நாட்டின் அரசமைப்பை இல்லாதொழிக்குமாறு கூறுவதற்கு பொதுபலசேனா என்ற இந்த அமைப்புக்கு எந்த அருகதையும் கிடையாது. எனவே, இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கவேண்டும். அதேவேளை, தமிழர்கள் பரந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.