பக்கங்கள்

21 மே 2013

நாடாளுமன்றம் செல்வது போன்று 4 ஆம் மாடிக்கும் செல்லும் நிலை!

பா.அரியநேந்திரன் 
ஒரு மாதத்துக்கு இரண்டு தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்வது போன்று மாதத்துக்கு ஒரு தடவையாவது 4 ஆம் மாடிக்குச் செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்லுவது போல அடிக்கடி 4 ஆம் மாடிக்கும் செல்கின்றனர். இதுவரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிதரன், அரியநேத்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் உட்பட வேறு சிலரும் 4 ஆம் மாடிக்கு சென்றுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை 4 ஆம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாங்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்வது போல 4 ஆம் மாடிக்கும் சென்று வருகின்றோம். எப்போது தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை கிடைக்கின்றதோ அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். எத்தனை வருடங்கள் சென்றாலும் தமிழ் தேசிய விடுதலைக்கான பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுடப்பட்டார்கள். அவர்களின் இடத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே நியமிக்கப்பட்டார்கள். அதற்காக தமிழ் தேசியத்தை அழித்து விடவில்லை. இன்னுமொரு இனத்தை அழித்து விழா கொண்டாடுவது வெற்றி விழாவா? ஒரு நாட்டுக்கு எதிராக போர் செய்து அதில் வெற்றி பெற்று விழா கொண்டாடுவதுதான் வெற்றி விழாவாகும். அரசு வெற்றி விழா கொண்டாடுவதானது இன்னும் மக்கள் அடிமைகளாக இருப்பதையே காட்டுகின்றது. முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு பிரார்த்தனை செய்யக்கூட முடியாத அடக்கு முறைக்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றார். எப்போது தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை கிடைக்கின்றதோ அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.