பக்கங்கள்

07 நவம்பர் 2013

வவுனியாவில் சிசுவை கொன்று புதைத்த தாய்!

பிறந்தவுடனேயே கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ஆண் சிசுவொன்றின் சடலத்தினை வவுனியா, கல்மடு, பூம்புகார் பிரதேசத்திலிருந்து பொலிஸார் தோண்டி எடுத்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவில் புதைக்கப்பட்ட இந்த சிசுவின் சடலம் இன்று பிற்பகல் பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிசுவைப் பிரசவித்த தாய் மற்றும் அப்பெண்ணின் தாயார் ஆகியோரே அச்சிசுவை கொன்று புதைத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பூம்புகார் பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் வேளாங்கண்ணி (வயது 25) என்ற பெண்ணே இந்த சிசுவை பிரசவித்துள்ளார். இப்பெண் திருமணமாகாதவர். கள்ள உறவில் உருவான அச்சிசுவை தனது தாயாரான தங்கவேலு காளியம்மா (வயது 63) என்பவருடன் இணைந்தே கொன்று புதைத்துள்ளார். சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சிவகுமார் வேளாங்கண்ணி இன்று அதிகாலை 4 மணியளவில் அவரது வீட்டு மலசலகூடத்துக்கு அருகில் வைத்து சிசுவை பிரசவித்துள்ளார். பின்னர் அவரே தான் பிரசவித்த சிசுவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அது தொடர்பில் தனது தாயாரான காளியம்மாவிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரும் இணைந்து தங்களது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்கருகில் சுமார் ஒன்றரை அடி ஆழத்தில் குழியொன்றை வெட்டி அதில் சிசுவின் சடலத்தை போட்டு புதைத்துள்ளனர். குழந்தையைப் பிரசவித்த வேளாங்கண்ணிக்கு அதிகளவில் இரத்தோட்டம் ஏற்பட்டதால் அவர் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து வைத்தியசாலை அதிகாரிகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவரை விசாரித்ததில் உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சிசுவைப் பிரசவித்த பெண் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து சிசுவின் தாய் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.