பக்கங்கள்

10 அக்டோபர் 2013

கூட்டமைப்புக்குள் குழப்பம் வலுக்கிறது மாவைக்கு சுரேஷ் கடிதம்!

கௌரவ மாவை.சோ. சேனாதிராசா, பா.உ,
பொதுச்செயலாளர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
மாட்டின் வீதி
யாழ்ப்பாணம்
10.10.2013

அன்புடன் தமிழரசுக் கட்சி செயலாளர் அவர்கட்கு,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பபட்டு தழிரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வடமாகாணசபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பொ.ஐங்கரநேசன் என்பவர் தனிப்பட்ட முறையில் வடமாகாணசபைக்கான அமைச்சுப் பதவியைப் பெற்றதன் காரணமாகவும் தனக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் இந்த அமைச்சுப் பதவியானது தமிழரசுக் கட்சியினுடைய தலைமையின் பரிந்துரையின் பேரில், முதலமைச்சரினால் தனக்குத் தனிப்பட்டரீதியில் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். அதுவே உண்மையுமாகும். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான என்னுடன் பொ.ஐங்கரநேசன் அவர்கட்கு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பாக தமிழரசுக் கட்சியோ முதலமைச்சரோ எவ்விதக் கருத்துப் பரிமாற்றங்களையும் மேற்கொள்ள வில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு ஒரு அமைச்சுப் பதவியை நீங்கள் வழங்க விரும்பினால் அதனை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்குமாறு நான் கோரியிருந்தபோதிலும் என்னுடன் எவ்விதக் கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படாமல், முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனவே திரு பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளபடி, அவருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் எதிர்காலத்தில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைத் தங்களுக்குத் தெளிவு படுத்துவதுடன் அவர் கூறியது போன்றே அவருக்குக் கொடுக்கப்பட்ட அமைச்சுப் பொறுப்பானது தனிப்பட்ட முறையில் அவருக்கு வழங்கப்பட்டதென்ற அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து ஆறு ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு எந்தவிதமான அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை என்பதைத் தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எதிர்காலத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு ஓர் அமைச்சுப் பதவியை வழங்கியதாக தவறானதும் பொய்யானதுமான பரப்புரைகளைச் செய்ய வேண்டாமென்று கேட்டுக்கொள்வதுடன் செய்ய மாட்டீர்கள் என்றும் நம்புகின்றேன்.
நன்றி.
இப்படிக்கு
சுரேஷ். க.பிரேமச்சந்திரன், பா.உ.,
செயலாளர் நாயகம்,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.