பக்கங்கள்

10 அக்டோபர் 2013

வட மாகாணசபை உறுப்பினர்கள் நாளை பதவியேற்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் பதவியேற்பு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை காலை வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் பெரு வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முதலமைச்சராக க.வி.விக்னேஸ்வரனைத் தெரிவு செய்தது. முதலமைச்சர் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­ முன்பாகச் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றிருந்தார். இந்த நிலையில் ஏனைய 29 உறுப்பினர்களும் நாளை வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் முன்பாகவே இவர்கள் பதவியேற்கவுள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு யாழ். நகரிலுள்ள தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர், இவர்கள் யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு அழைத்துவரப்படவுள்ளனர். இதன் பின்னர் மாகாணசபை உறுப்பினர்கள் 29 பேரும் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டு தமது மாகாணசபை உறுப்பினர் பதவியை ஏற்கவுள்ளனர்.அடுத்து அமைச்சர்கள் நான்கு பேரும் தமக்கான பதவிப் பிரமாணத்தை செய்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் மற்றும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.