பக்கங்கள்

25 ஏப்ரல் 2013

புலிகளின் காலத்தில் தமிழர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருந்தது-சிறீதரன்

தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் தமிழர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருந்தது. இன்று எங்கள் வீட்டினுள் வந்து எங்களை எழுப்பிக் கலைக்கக் கூடிய நிலைமையே காணப்படுகின்றது. நாங்கள் போராடுவதன் மூலமே எங்கள் நிலத்துக்குச் செல்ல முடியும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக வலி.வடக்கு மக்கள் நடத்திய போராட்டத்தின் முடிவில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாஸ்கரா: அதன் பின்னர் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னனியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா, இந்த அரசு வடக்கில் மட்டுமல்ல தமிழர்கள் வாழும் கிழக்கிலும், மலையகத்திலும் காணிகளைச் சுவீகரித்து வருகின்றது என்றார்.
விக்கிரமபாகு: தொடர்ந்நு உரையாற்றிய நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண, தமிழ் மக்களின் சொத்துக்களை இந்த அரசு கபளீகரம் செய்கின்றது. இந்த அரசு தமிழ் மக்களை விடுவிப்பது என்ற பெயரில் இன அழிப்புப் போரை நடத்தியது. இங்கு, இராணுவ சிங்கள ஆளுநர் ஆட்சி செய்து கொண் டிருக்கின்றார். அப்படியாயின் எப்படி சிவில் நிர்வாகம் இங்கே நடக்கும் என்றார்.
பாக்கியசோதி: இதன் பின்னர் உரையாற்றிய மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கையில் போர் முடிவுக்கு வந்தாலும் முரண்பாடுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றார்.
கஜேந்திரன்: தொடர்ந்து உரையாற்றிய தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், இங்கு நடக்கின்ற காணி சுவீகரிப்பைத் தடுத்து நிறுத்தவும் இன அழிப்பைத் தடுக்கவும் இடைக்கால நிர்வாகமே தீர்வு என்றார்.
ஐங்கரநேசன்: இதன் பின்னர் உரையாற்றிய சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் இப்போது துப்பாக்கிச் சத்தங்கள்தான் கேட்கவில்லையே தவிர எங்கள் குரல் வளைகள் இன்னமும் நெருக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றார். சிவாஜிலிங்கம்: தொடர்ந்து உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.சிவாஜிலிங்கம், எதிர்வரும் 29 ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேசசெயலகத்துக்கு முன்பாக நடத்தப்படும் போராட்டம், 1961 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கில் மாவட்ட செயலகங்களை முடக்கி நடத்தப்பட்ட போராட்டங்களைப் போன்று அமைய வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.