பக்கங்கள்

13 ஜனவரி 2012

சுழிபுரம்,தீவகப் பகுதிகளிலும் காணிகளை கோரும் படையினர்!

சுழிபுரம், திருவடிநிலை கடற்கரைப் பிரதேசத்தை அண்டிய பகுதிகளிலுள்ள தனியார் காணிகளைக் கடற்படைக்குத் தருமாறு கோரி வடபிராந்திய கடற்படைத் தலைமையகத்தால் சங்கானைப் பிரதேச செயலர் பிரிவுக்கு கடந்த மாதம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இருப்பினும் இதற்கான பதில் கடற்படையினருக்கு இன்னமும் வழங்கப்படவில்லை.
மேலும் ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்குட்பட்ட பகுதியிலுள்ள மெலிஞ்சிமுனை பிரதேசத்தில் 5 ஏக்கர் அரச காணி படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் அந்தக் காணி நில அளவை செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவில், குடியிருப்பு பகுதியிலுள்ள கடற்படை முகாமை வேறிடத்துக்கு மாற்றம் செய்வதற்காக கடற்படையினர் மக்களின் தோட்டக்காணிகளை வழங்குமாறு கோரியுள்ளனர். காணி சுவீகரிப்பு செய்வதனால் அதற்குரிய வழிமுறையூடாக கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்று வேலணை பிரதேச செயலகத்தால் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.