பக்கங்கள்

25 ஜனவரி 2012

பிள்ளையானை சந்திக்கப் போகிறாராம் சம்பந்தர்!

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், பிள்ளையானுக்கும் இடையே முக்கிய சந்திப்பு ஒன்று இன்னும் சில தினங்களில் இடம்பெற உள்ளதாக தெரியவருகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் முதல்வர் சி. சந்திரகாந்தன் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனுக்கு எழுதிய கடிதத்தினை அடுத்தே இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கமைய சந்திப்புக்கான திகதி உட்பட சில முக்கிய விடயங்கள் உள்ளடங்கிய பதில் கடிதம் ஒன்றை சம்பந்தன், முதல்வர் சந்திர காந்தனுக்கு அனுப்பி வைப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாகாண சபைகளுக்கான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக முதல்வர் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதன் காரணமாகவே அவர் விடுத்த அழைப்பை கூட்டமைப்பின் தலைமைப் பீடம் சாதகமாக பரிசீலித்துள்ளது எனத் தெரிய வருகிறது.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு கிழக்கு மாகாண முதல்வர் எழுதிய கடிதத்தில் 'மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பாக நானும் எனது தலைமையிலான கட்சியும் தங்களுடன் ஒருமித்த கருத்துடனையே உள்ளோம்.
வடக்கு கிழக்கு இணைப்பின் சாத்தியப்பாடு குறித்தும் அதில் கிழக்கு மாகாண மக்களின் அபிலாசைகள் பற்றியும் தங்களுடன் விரிவாக கலந்துரையாட நாம் தயாரக உள்ளோம். எனவே இந்த விடயங்கள் உட்பட முக்கிய சில விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு இக் கடிதம் கிடைக்கப்பெற்று 15 நாட்களுக்குள் தங்களிடமிருந்து ஆக்கபூர்வமான பதிலை எதிர்பார்த்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பிள்ளையானை கூட்டமைப்பு சந்திக்கக் கூடாதென கிழக்கு மாகாணத்தில் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது.அதையும் மீறி கூட்டமைப்பினர் பிள்ளையானை சந்தித்தால் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை எதிர்நோக்க நேரிடலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.