பக்கங்கள்

19 ஜனவரி 2012

இணையங்களுக்கான விதிமுறை எனும் பெயரில் ஸ்ரீலங்கா பிறப்பித்திருக்கும் தடையுத்தரவு!

சிறிலங்கா அரசின் உத்தரவுக்கமைய பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து சிறிலங்காவின் தகவல் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் தகவல் ஊடகத்துறை அமைச்சு 27 இணையத்தளங்களுக்கு மாத்திரமே செயற்படுவதற்கான அனுமதிப்பத்திரத்தை இதுவரையில் வழங்கியுள்ளது.
செய்திகளை வெளியிடும் இந்த இணையத்தளங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து நேற்று அறிவித்துள்ள தகவல் ஊடகத்துறை அமைச்சு, இதற்கமைய இணையதளங்கள் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இணையத்தளங்களுக்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் முக்கியமானவை சில.
* இணையத்தளங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்களும், ஊடகவியலாளர்களும் தாங்கள் வெளியிடும் செய்தி தகவல்கள் நூற்றுக்கு நுறு வீதம் உண்மையானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
* இணையத்தளத்தில் சேர்த்துக் கொள்ளும் படம் மாற்றி வடிவமைக்கப்படலாகாது.
* இணையத்தளத்தின் ஆசிரியர் ஒரு தவறான செய்தியை வெளியிட்டோம் என்று தெரிந்து கொண்டால் அதை திருத்தி மீண்டும் செய்தியில் சேர்த்துக் கொண்டு இதனால் பாதிக்கப்பட்டவ ரிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும்.
* ஒரு செய்தி செய்தி தொடர்பாக இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நிலைப்பாட்டை இணையத்தளத் திற்கு தெரிவிப்பதற்கு நியாயபூர்வமான சந்தர்ப்பத்தை அளிக்க வேண்டும். ஒருவரின் மதிப்பிற்கும், உணர்விற்கும், இரகசியத்தன்மைக்கும் ஏற்புடைய வகையில் இணையத்தளங்கள் நடந்து கொள்ள வேண்டும்.
* சமூகப் பிரச்சினைகளை பொறுத்தவரை வன்முறைகள், கலவரங்கள், போதைப்பொருள் பாவனை, சித்திரவதை, மற்றவர்களை வேதனைப்படுத்தி இன்பம் காணுதல், பாலியல் ரீதியிலான தரக்குறைவான படங்களையும் தகவல்களை வெளியிடாமல் இணையத்தளங்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.
* குற்றச்செயல்கள், பாலியல் ரீதியிலான குற்றச்செயல்கள், சிறுவயதினர் மீதான குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் சுமத்தப்படும் வழக்குகள் ஆகியவற்றை பொறுத்தவரை சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதை- குறிப்பாக 16 வயதிற்குட்பட்டவர்களின் பெயர்களை தவிர்க்க வேண்டும்.
* ஒருவரின் இன,சாதி, மத, பால்நிலை அல்லது அவரின் வலதுகுறைவு தன்மை, மனோநிலை பாதிப்பு போன்றவற்றை இணையத்தளத்தில் அறிவிப்பதும் தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
* தற்கொலை சம்பவங்கள் பற்றி அறிவிக்கும் போது ஒருவர் எவ்விதம் தற்கொலை செய்து கொண்டார் போன்ற சம்பவங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
* ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், அவரது இல்லம், அவரது உடல்நிலை பற்றிய செய்திகளை வெளியிடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
* சிறுவயதினர் தங்கள் பாடசாலை காலத்தை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்கு அநாவசியமான இடையூறுகளை ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
* தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தடை செய்த இணையத்தளங்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தடை செய்யப்பட்ட இணையத்தளங்கள், தரங்குறைந்த பாலியல் உணர்வைத்தூண்டும் படங்களை பிரசுரிக்கும் இணையத்தளங்களுடன் எவ்வித தொடர்பும் இருக்கலாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.