பக்கங்கள்

19 ஜூலை 2011

உள்ளுராட்சி தேர்தலில் சில தமிழ் அதிகாரிகளின் துரோகத்தனம்!

நடைபெறவிருக்கின்ற உள்ளுராட்சி தேர்தல்களில் வடக்கு-கிழக்கில் உள்ள சில தமிழ் அரசாங்க அதிகாரிகள் தங்களது சுய நலனுக்காகவும், பதவியைக்காப்பாற்றிக் கொள்வதற்காகவும், பதவி உயர்விற்காகவும் தங்களது ஊழலை மறைப்பதற்காகவும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் முகவர்களாகவே மாறி தொழிற்படுகின்றனர். இவர்கள் தங்களது நாளாந்த கடமைகளை மறந்து அரசாங்கக் கட்சியின் வெற்றிக்கு உழைப்பதிலேயே அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
இந்த நாட்டின் அதிபர் தொடக்கம் அவர அமைச்சரவை சகாக்கள்வரை அனைவரும் சர்வதேச விசாரணைக்குப் பயந்து எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற்று தமிழ் மக்கள் எம்முடன் இருக்கிறார்கள் என்று காட்ட முற்படுகின்ற வேளையில், எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்களுக்கும் அநீதிகளுக்கும் நியாயம் பெற்றுத்தர வேண்டிய இந்த அதிகாரிகள் அரசாங்கக் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபடுவதை என்னவென்று சொல்வது?
லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கும், பல்லாயிரக்கணக்கானவர்கள் அங்கவீனமாவதற்கும், ஆயிரக்கணக்கான பிள்ளைகள் தாய், தந்தை உற்றார் உறவினரை இழந்து அனாதைகளாவதற்கும், ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போவதற்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதற்கும் ஏராளமான இளம் விதவைகள் உருவாவதற்கும் காரணமாக இருக்கும் இந்த ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துத்தான் தங்களது வயிறை வளர்க்க வேண்டுமா? தங்களது ஒரு குடும்பத்திற்காக ஆயிரக்கணக்கான குடும்பத்தினரை பலிகடாவாக்க வேண்டுமா? இதற்காகத்தான் இவர்கள் படித்து உயர்பதவிகளில் இருக்கின்றனரா? என்று பாதிக்கப்பட்ட மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
வன்னி உட்பட வடக்கு-கிழக்கில் ஒவ்வொரு குடும்பமும் சோகத்தைச் சுமந்து கொண்டிருக்கின்றது. இவர்களது உறவினர்களும்கூட இதற்குள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து அல்லது மண்டை விரைத்து மறத்துப்போன உணர்வுடன் எட்டப்பர்களாகவும் தமிழனத்தின் கோடாரிக் காம்புகளாகவும் மாறிவிட்ட இந்த அதிகாரிகள் இனியாவது திருந்த வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் உட்பட அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
வவுனியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் பிராந்திய உள்ளுராட்சி உதவியாணையாளராகக் கடமை புரியும் அச்சுதன் இதற்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கின்றார். இவர் முன்பு புலிகள் இருக்கும் காலத்தில் எங்களது குடும்பம் மாவீரர் குடும்பம் என்றும் தங்களது உறவினர்கள் இயக்கத்தில் இருக்கின்றனர் என்றும் மார்தட்டிக் கொண்டவர். இன்று ஆளுனரின் செல்லப்பிள்ளையாக மாறி அரசாங்கக் கட்சிக்கு ஆதரவு திரட்டுவதில் தனது கடமையை மறந்து செயல்படுகின்றார். துணுக்காயில் முகாமிட்டு இவர்போடும் ஆட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
நடைபெறுவது உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் இந்தத் தேர்தலில் அந்தத் திணைக்களத்தின் உயரதிகாரியாக இருக்கும் இவர் இப்படிச் செயல்படுவது சட்டத்திற்குப் புறம்பானது. உள்ளுராட்சி மன்றங்கள் சட்டப்படி நடக்கின்றனவா என்பதையும் அதற்கான வழிமுறைகளை வகுத்துக்கொடுத்து அதனைக் கண்காணிப்பதற்கும் பொறுப்பான இந்த அதிகாரியே சட்டத்தைமீறிச் செயற்படுகையில் இவர் நாளை எப்படி சபைகளின்மீது சட்ட நடவடிக்கை எடுப்பார் என்ற கேள்வியும் மக்களுக்கு எழுகின்றது.
துணுக்காய் பிரதேச செயலகத்தில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமைபுரியும் லோகசௌந்தரலிங்கம் பகீரதன் அடுத்ததாக இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்கவராவார். இவருடைய தந்தை லோக சௌந்தரலிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 2010ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் மகனின் இந்த தேசிய விரோதச் செயல் அவரையும் பாதித்துள்ளது. பகீரதன் அவர்கள் இப்பொழுது அரசாங்கக் கட்சியை வெல்ல வைப்பதற்கு பகீரதப்பிரயத்தனம் செய்கிறார். தனது பதவியைப் பயன்படுத்தி கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவிகளைக் கூட்டி அச்சுதன் மற்றும் சிறீரங்கா ஆகியோரிடம் கையளித்து அரசாங்கக் கட்சிக்கு வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஏதோ உதவிகள் செய்யப்போவதாக அறிவித்து கிராமத் தலைவர்களை அழைத்துவிட்டு இப்படிச் செய்ததால் தலைவர்கள் மிகவும் கோபமுற்று இந்தத் தொழில் செய்வதைவிட உங்கள் அலுவலக வாசலில் துண்டுவிரித்து நீங்கள் பிச்சை எடுக்கலாம் என்று ஏசிச்சென்றுள்ளனர்.
மேற்குறிப்பிட்டவர்கள் ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் திருந்தவில்லையெனில், ஒவ்வொருவரின் அந்தரங்கமும் வெளியிட வேண்டிவரும். பட்டியல் தொடரும்.

முள்ளிவாய்க்காலில் பாதிப்புக்குள்ளான தமிழன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.