பக்கங்கள்

05 நவம்பர் 2012

சிகிச்சையில் குளறுபடியா?ஆஸ்பத்திரியில் இறந்த பெண்!!!

newsமட்டக்களப்பு, பழுகாமத்தில் இருந்து கை உடைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்த குடும்ப பெண்ணொருவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது: பழுகாமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சிவனேசன் சிவகலா (வயது30) மிகவும் வறுமை நிலையில் உள்ளவர். இந்தப் பெண் கடந்த புதன்கிழமை வீட்டில் வழுக்கி விழுந்ததால் அவரது கை மணிக்கட்டுப் பகுதியில் உடைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், மறுநாள் வியாழக்கிழமை அவருக்கு கை மணிக்கட்டுப் பகுதியில் சத்திரசிகிச்சை செய்யவென அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சத்திரசிகிச்சையின் போது குறித்த பெண் உயிரிழந் துள்ளார். சத்திரசிகிச்சையின் போது இடம்பெற்ற சில பிழையான சிகிச்சை காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என்று குடும்பத்தினரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நீதிபதி மரண விசாரணையை மேற்கொண்டதுடன், உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதால் கொழும்பில் இருந்து பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியர்களை வரவழைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிறந்த முகாமைத்துவ நடவடிக்கைகள் உள்ள போதும், ஒரு சிலரின் கவனயீனங்களால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.