பக்கங்கள்

12 மே 2011

மாணவியை அறிவுறுத்திய ஆசிரியை பணிநீக்கம்.புங்குடுதீவில் சம்பவம்.

அரசின் கொழும்பு மேதினக் கொண்டாட்டங்களுக்குச் சென்ற மாணவியின் முறைப்பாட்டினையடுத்து அவருக்கு பாடம் கற்பித்து வந்த ஆசிரியை பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு விடுத்த உத்தரவையடுத்தே, இப்பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது. புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆசிரியை யொருவருக்கே இப்பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
கடந்த மேதின அரசின் கொண்டாட்டங்களுக்காக, யாழ்ப்பாணத்திலிருந்தும் ஈ.பி.டி.பி. பொதுமக்களை அழைத்துச் சென்றுள்ளது. கைச்செலவுக்கு பண உதவியுடன், இலவச போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், பலரும் குடும்பம குடும்பமாக தீவகப் பகுதியிலிருந்து கொழும்பு சென்று திரும்பியிருந்தனர்.
குறித்த மாணவியும் தனது தாய், தந்தையருடன் கொழும்பு சென்று நீண்ட நாட்களின் பின்னரே வீடு திரும்பி பாடசாலை சென்றுள்ளார்.இம்முறை சாதாரண தரப்பரீட்சையில் இம்மாணவி தோற்றவுள்ள நிலையில், வரவு சீரில்லையெனக்கூறி குறித்த ஆசிரியை மாணவியை தண்டித்துள்ளார். அத்துடன் பெற்றோர் மேதினத்துக்கு செல்கின்ற நிலையில், மாணவியான நீ படிப்பினை குழப்பக்கூடாதெனவும் அறிவுரை கூறியுள்ளார்.
இது தொடர்பில் குறித்த மாணவி பெற்றோருக்குக் கூற ஆசிரியை தாக்கியதால் தனது மகள் மயக்கமுற்றுவிட்டதாக அவர்கள் ஈ.பி.டி.பி.க்கும் அமைச்சருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்தே ஆலோசனை கூறிய ஆசிரியை அமைச்சரின் உத்தரவினில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.