பக்கங்கள்

29 ஜூலை 2014

ஐ.நா.வில் "கெலும் மேக்றே"சாட்சியமளிப்பார்!

இலங்கையில் மெக்ரே
இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் ஆவணப்படங்களை வெளியிட்டு இலங்கைக்கு அனைத்துலக மட்டத்தில் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்திய சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடகவியலாளர் கெலும் மெக்ரே, ஐ.நா. விசாரணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது என ஊடகச் செய்திகள் தகவல் வெளியிட்டன. இலங்கை மீதான விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணைக்குழு தற்போது ஜெனீவாவில் சாட்சியங்களைத் திரட்டி வருகின்றது. இதன்போதே மெக்ரே சாட்சியமளிக்கவுள்ளார் எனவும் இதற்காக லண்டனிலிருந்து அவர் ஜெனீவா செல்லவுள்ளார் எனவும் தெரியவருகின்றது. தமது நிறுவனம் (சனல் - 4) வெளியிட்ட போர்க்குற்ற ஆதாரங்களின் நம்பகத்தன்மை, அதன் பின்னணி உட்பட மேலும் பல விடயங்களை ஐ.நா. விசாரணைக் குழுவின் முன்னிலையில் கெலும் மெக்ரே தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 'இலங்கையின் கொலைக் களம்', 'யுத்த சூனிய வலயம்' உள்ளிட்ட ஆவணப்படங்கள் மூலம் போர்க்குற்ற ஆதாரங்களை வெளிப்படுத்திய சனல் - 4 குழுவினர், கடந்த நவம்பர் மாதம் பொதுநலவாய மாநாட்டில் செய்தி சேகரிக்க வந்து வடக்குக்குச் சென்ற சமயம், அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமையால் அவர்களது பயணம் இடைநடுவில் கைவிடப்பட்டது. மேலும் பல ஆதாரப் படங்கள் வெளியிடப்படும் என கெலும் மெக்ரே அப்போதுதெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, போர்க்காலத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான முயற்சிகளுக்கான அனுசரணையாளராகப் செயற்பட்ட எரிக் சொல்ஹெய்மும் ஐ.நா. குழுவின் முன் சாட்சியமளிக்கத் தயாராகி வருகின்றார். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தொடரில் கடந்த மார்ச் மாதம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் கடந்த 15ஆம் திகதி முதல் இலங்கை மீதான விசாரணையை ஐ.நா. குழு ஒஸ்லோவில் ஆரம்பித்தது. தற்போது இரண்டாம் கட்டமாக அநத விசாரணை ஜெனீவாவில் நடைபெறுகின்றது. குறிப்பாக, யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் வெள்ளைக்கொடி ஏந்தியபடி சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று கூறப்படும் விவகாரம் பற்றி சாட்சியம் திரட்டுவதில் குறித்த குழு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.