பக்கங்கள்

15 ஜூலை 2014

தமிழ்மக்களுக்கு எதிரான பிரித்தானியாவின் கறைபடிந்த போர்!

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில், பிரித்தானியாவின் பங்களிப்பை விபரிக்கும், ஆய்வு அறிக்கை ஒன்று லண்டனில் வெளியாகியுள்ளது. தமிழ்மக்களுக்கு எதிரான பிரித்தானியாவின் கறைபடிந்த போர் – 1979- 2009 என்ற தலைப்பில், பிரித்தானிய ஆய்வாளரான, பில் மில்லர் (Phil Miller ) இந்த ஆய்வறிக்கையை எழுதியுள்ளார். பிரீமென் அனைத்துலக மனித உரிமைகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, பிரித்தானிய தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் சுதந்திரமாக பெறப்பட்ட தகவல்கள், மற்றும் பொதுமக்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக, பில் மில்லர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையின் முதல் மூன்று பகுதிகளிலும், 1979ம் ஆண்டு தொடக்கம், 1989ம் ஆண்டு வரையான காலத்தில், சிறிலங்காப் படைகளுக்கு பிரித்தானியா வழங்கிய உதவிகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் முன்னாள் படையினர், காவல்துறையினர், அளித்த பயிற்சிகள் குறித்தும், 1987இல் இந்தியப்படைகளுக்கு ஆலோசனை வழங்கியது குறித்தும் இதில் விபரிக்கப்பட்டுள்ளது. அடுத்த பகுதியில், 1990 தொடக்கம், 2002 வரையான காலப்பகுதியில், சிறிலங்கா படை அதிகாரிகளுக்கான பயிற்சி உதவிகள் பிரித்தானியாவினால் விரிவாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் சிறிலங்காவில் இராணுவ கட்டளை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி உருவாக்கப்பட்டதாகவும், அதில் பிரித்தானியாவின் தீவிரமான பங்கு இருந்ததாகவும், பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் சிலர் நிரந்தரமாக அங்கு தங்கியிருந்து பணியாற்றியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இறுதிப் பாகத்தில், 2002 தொடக்கம், 2009 வரையான காலப்பகுதியில், பிரித்தானியாவின் பங்கு குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த இந்தக் காலப்பகுதியில், ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடைசெய்வதற்கு பிரித்தானியா கருவியாக செயற்பட்டது குறித்தும், சிறிலங்காவுக்கு ஆயுதங்கள் விற்றது குறித்தும் இந்தப் பகுதியல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பிரீமென் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில், 2013ம் ஆண்டு டிசெம்பரில் பில் மில்லர் அளித்த சாட்சியத்தின் விரிவான விளக்கமாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.